கல்லூரி பின்னணியில் ஒரு கிரைம் - சஸ்பென்ஸ் திரில்லர்.. 'ரெட் லேபிள்' திரைவிமர்சனம்

கல்லூரி பின்னணியில் அமைந்த கிரைம் – சஸ்பென்ஸ் திரில்லர் கதையை, பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.
கல்லூரி பின்னணியில் ஒரு கிரைம் - சஸ்பென்ஸ் திரில்லர்.. 'ரெட் லேபிள்' திரைவிமர்சனம்
Published on

கல்லூரி காலத்தில் அடிதடி, போலீஸ் வழக்குகள் என பிரச்சனைகளில் சிக்கியிருந்த நாயகன் லெனின், கல்லூரி முடிந்த பிறகு அந்த வாழ்க்கையை முழுமையாக விட்டு விட்டு, தொழில் மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தனது பழைய கல்லூரியில் நடைபெறும் மாணவர் தலைவர் தேர்தல் காரணமாக மீண்டும் கல்லூரிக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.

அடிதடியை தவிர்த்து அமைதியான முறையில் செயல்பட வேண்டும் என்ற முடிவுடன் கல்லூரிக்குள் வரும் லெனின், எதிர்பாராத விதமாக கல்லூரி வளாகத்திற்குள் ஒருவரை கொலை செய்து விடுகிறார். ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருப்பதால், இந்த கொலை குற்றம் அவரது எதிர்காலத்தை முற்றிலும் பாதிக்கும் என்பதால், அதிலிருந்து தப்பிக்க தனது காதலியின் உதவியுடன் ஒரு திட்டத்தை உருவாக்குகிறார். இதற்கிடையில், கொலை செய்யப்பட்டவரை தேடி போலீசும், அவரது ஆதரவாளர்களும் கல்லூரி வளாகத்திற்குள் நுழைகிறார்கள்.

இறுதியில்  லெனின் தனது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி தப்பித்தாரா? அவர் யாரை, எதற்காக கொலை செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் லெனின், அறிமுக நடிகர் என்ற அடையாளம் தெரியாத அளவுக்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கல்லூரி மாணவர் காலகட்டமும், அதன் பிந்தைய வாழ்க்கையும் என இரண்டு விதமான மனநிலைகளை தோற்றத்திலும் நடிப்பிலும் வேறுபடுத்திக் காட்ட முயன்றிருப்பது திரையில் தெரிகிறது.

நாயகியாக நடித்துள்ள அஸ்மின், தோற்றத்தில் பெரிதாக ஈர்க்காதபோதிலும், அளவான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்தை நேர்மையாக செய்திருக்கிறார். திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் அவரது கேரக்டர், இறுதியில் கவனம் ஈர்க்கிறது.

காமெடி கலந்த வில்லத்தனத்துடன் திரையில் தோன்றும் ஆர்.வி.உதயகுமார், தனது நடிப்பால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். முனீஷ்காந்த், அனுமோகன் ஆகியோர் குறைந்த காட்சிகளில் வந்தாலும், தங்களுக்கான இடத்தை சரியாகப் பிடித்துள்ளனர்.

கல்லூரி பின்னணியில் அமைந்த கிரைம் – சஸ்பென்ஸ் திரில்லர் கதையை, பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார் பொன். பார்த்திபன். குறிப்பிட்ட பட்ஜெட்டில், புதுமுகங்களை வைத்து எந்த இடத்திலும் தொய்வின்றி படத்தை நகர்த்தியுள்ள இயக்குநர் கே.ஆர். வினோத், இரண்டாம் பாதியை எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக கையாண்டிருக்கிறார்.

ஒரே கல்லூரி வளாகத்தை மையமாகக் கொண்டு கதை நகர்ந்தாலும், வெவ்வேறு கேமரா கோணங்கள் மூலம் காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன். கைலாஷ் மேனின் இசை, பாடல்களாகவும் பின்னணி இசையாகவும் கதைக்கு துணையாக பயணிக்கிறது. 

மாலைமலர் ரேட்டிங்: 2.5 / 5

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com