search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • கருவேப்பிலை, மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்த்து தினமும் தடவி வருவது நல்ல பலனை தரும்.
    • தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக இயற்கையான சீயக்காய் பயன்படுத்தலாம்.

    இன்றைய சூழலில் இளநரையால் ஆண்கள், பெண்கள், ஐந்து வயது குழந்தைகூட பாதிப்புக்குள்ளாகிறது. இளநரைக்கு மரபைவிட பிற காரணிகளே முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. உதாரணமாக ஊட்டச்சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுமுறை காரணங்களாகும். இதில் மரபு சார்ந்து இளநரை ஏற்பட்டால், அதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது.

    * தலைமுடிக்கு தினமும் எண்ணெய் வைத்து பராமரித்தால், இளநரையை எளிதில் தடுக்கலாம். தலை வழுக்கையாவதையும் தடுக்கலாம். தலைமுடியும் அடர்த்தியாகும்.

    * உணவில் கடுக்காய், சுண்டைக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

    * தினம் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாறு பருகுவது தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லது. 

    * சீரகம், வெந்தயம், மிளகை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் இளநரை குறையும்.

    * கருவேப்பிலை, மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்த்து தினமும் தடவி வருவது நல்ல பலனை தரும்.

    * நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வாரம் இருமுறை தலையில் தடவி வர இளநரை குறையும்.

    * கரிசலாங்கண்ணி சாறு, கடுக்காய் தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.

    * கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயம் உணவில் சேர்த்துக் கொள்வது இளநரை ஏற்படாமல் காக்கும்.

    * தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக இயற்கையான சீயக்காய் பயன்படுத்தலாம்.

    * மிளகு தூளை தயிரில் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளித்து வரலாம்.

    * அவுரிப் பொடியை மருதாணியுடன் சேர்த்து தலைக்கு தடவி குளிப்பதால் இளநரை நிறம் மாறத்தொடங்கும்.

    • செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது.
    • செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன.

    குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    கோடை வெயில் நேரத்தில் குளிர்பானங்கள் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்றாலும் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். 

    குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.

    செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இது பற்களில் பாக்டீரியாக்கள் வளர வழிவகுக்கும். இந்த பாக்டீரியாக்கள் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இது பற்சிதைவுக்கு வழிவகுக்கும்.

    குளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது.

    செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன. இது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

    மேலும் சில ஆய்வுகள் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பது சில வகையான புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைக்கின்றன. செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீர், பழச்சாறு, லஸ்ஸி, மோர் போன்ற பானங்களை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

    • நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
    • அளவோடு வெற்றிலை சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும்.

    வாய் சிவப்பதற்காக பயன்படுத்தக்கூடிய வெற்றிலையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வெற்றிலை கொடி வகையை சேர்ந்தது. வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' அதிகம் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது.

    * 2 ஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டுவர நரம்புகளுக்கு பலம் கிடைக்கும்.

    * உடலுக்கு வெப்பம் தரும் வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது.

    * வெற்றிலையை போடுவதால் ஈறுகளில் இருக்கின்ற வலி, ரத்த கசிவை நீக்கி, பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது.

    * வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.

    * வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது.

    * நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

    * அளவோடு வெற்றிலை சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும்.

    * வெற்றிலை வாய் துர்நாற்றத்தை போக்கும். வெற்றிலை சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாக பிரியும்.

    * கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும்.

    * 2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும்.

    • முடி உதிர்தல் பிரச்சனை இருப்பர்கள் தலையில் சீப்பை பயன்படுத்த மாட்டார்கள்.
    • தலைமுடியை வாராமல் விடும்போது முடி சிக்கலாகும்.

    தலைமுடியை தினமும் முறையாக வாருவது பல நன்மைகளை அளிக்கிறது. ஆரோக்கியமான முடியை பெற தினமும் தலைமுடியை வாருவது அவசியமாகும்.

    முடி உதிர்தல் பிரச்சனை இருப்பர்கள் தலையில் சீப்பை பயன்படுத்த மாட்டார்கள். தலைமுடியை வாருவதற்கு சீப்பு பயன்படுத்துவது பாதுகாப்பு நடைமுறை மட்டுமல்ல அறிவியல் ரீதியான நன்மைகளையும் கொண்டுள்ளது. தலைமுடியை வாருவதால் கிடைக்கும் நன்மைகள்:

    * தலைமுடியை வாரும்போது சீப்பு மண்டை ஓட்டுப்பகுதியில் உராய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

    * தலையில் இயற்கையான எண்ணெய் உற்பத்தியாகவும் அது அனைத்து பகுதியில் சீராக பரவவும் உதவும்.

    * தலைப்பகுதியில் உள்ள இறந்த செல்களை நீக்க இது உதவும். இதனால் புது செல்கள் உற்பத்தியாகி தலைமுடி நன்கு வளரும்.

     

    * சிலர் விடுமுறை நாள்களில் போட்ட பின்னலை (அ) கொண்டையை அவிழ்க்கவே மாட்டார்கள். தலைமுடியை வாராமல் விடும்போது முடி சிக்கலாகும். மேலும் வியர்வை தேங்கி, பிசுபிசுப்பு உண்டாகும்.

    * தலைமுடியை வாராமல் இருப்பதால் பொடுகுத்தொல்லை, பேன் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

    • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆளி விதைகளை சாப்பிடலாம்.
    • ஆளி விதையில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து உள்ளது.

    ஆளி விதைகளை பச்சையாக சாப்பிடுவதை விட வறுத்து சாப்பிடுவது நல்லது. ஆளி விதைகளை வறுப்பதால் அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பைடிக் அமிலம் நீக்கப்படுகிறது. முளைக்க வைத்து சாப்பிடுவதும் நல்லது. ஆளி விதைகளை சாப்பிட்ட பின்னர் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால் மலச்சிக்கல் பிரச்சனை வர வாய்ப்புள்ளது.

    * ஆளி விதைகளை ஓட்ஸ், சாலட்கள், ஸ்மூத்திகள் அல்லது விரும்பும் பிற உணவுகளில் சேர்த்து உண்ணலாம்.

    * ஆளி விதைகளில் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன. அவை நமது பெரிய குடலை சேதப்படுத்தாமல் பாதுகாக்கின்றன. கொழுப்பை கரைக்கிறது. சர்க்கரையை குறைக்கிறது.

    * ஆளி விதை ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.

    * உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆளி விதைகளை சாப்பிடலாம்.

    * ஆளி விதையில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து உள்ளது. அவை நீண்ட நேரம் பசி உணராமல் தடுக்கின்றன.

    * உடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஆளி விதைகளை உண்பதால் உள் ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது.

    * தோல் வெடிப்பு, அரிப்பு, வீக்கம், வலி மற்றும் எரியும் தன்மையைப் போக்க ஆளி விதைகளை உண்ண வேண்டும். ஆளிவிதைகள் இந்த பிரச்சனைகளை விரைவில் நீக்கும்.

    * ஆளி விதைகளில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆல்பா-லினோலெனிக் அமிலம் என்று அழைக்கப்படுகின்றன. இவை மூளையை ஆரோக்கியமாக்கும்.

    * ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து, பைட்டோஸ்டெரால்கள் மற்றும் ஒமேகா-3 இதயத்தை பலப்படுத்துகிறது. இதயத்தை ஆரோக்கியமாக்கும்.

    * தலைமுடி நீளமாக வளர, வலுவாக இருக்க ஆளி விதைகளை சாப்பிடலாம்.

    • செவ்வாழையில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் கருவுறுதல் மற்றும் ஆண்மை தன்மைக்கு நலம் சேர்க்கும்.
    • செவ்வாழை பழத்தில் வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் இருக்கின்றன.

    தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட செவ்வாழை பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்டது. இந்த பழத்தை சாப்பிட உகந்த நேரம் காலை 6 மணி. அது சாத்தியமில்லை என்றால் காலை 11 மணி அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடலாம் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதேவேளையில் உணவு சாப்பிட்ட உடன் செவ்வாழை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சோம்பல் உணர்வை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலிலும் சிக்கல் நேரும்.

    செவ்வாழையில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் கருவுறுதல் மற்றும் ஆண்மை தன்மைக்கு நலம் சேர்க்கும். இதில் டெஸ்டோஸ்டிரோன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமான துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. துத்தநாகம் புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு உதவும். உடல் ஆற்றலையும் வலுப்படுத்தும்.

    லுடீன் மற்றும் பீட்டா கரோட்டினாய்டுகள் நிறைந்திருப்பதால் வயது தொடர்பான மாகுலர் சிதைவு, இரவு பார்வை இழப்பை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தையும், பார்வை திறனையும் மேம்படுத்த செவ்வாழை உதவும்.

     

    செவ்வாழை பழத்தில் வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் இருக்கின்றன. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும், தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும். போதுமான அளவு கொலாஜன் இருப்பது தசைகளை பலப்படுத்தும். கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்தும்.

    செவ்வாழையில் வைட்டமின் பி6 இருப்பது, ரத்த சிவப்பணு உருவாக்கத்திற்கு உதவும். ரத்தத்தை சுத்திகரிக்கவும், ரத்த சோகைக்கு தீர்வு காணவும் துணை புரியும்.

    செவ்வாழையை சரியான நேரத்தில் சாப்பிடுவது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை உறுதி செய்யும். கூடுதல் நன்மைகளை வழங்கும்.

    • பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள்.
    • ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம்.

    ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

    அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை.

    தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர்.

    ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.

    "முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது" என்கின்றனர் மருத்துவர்கள்.

    மேலும், "பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு 'நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை."

    ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும்.

     

    ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது.

    ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது.

    உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம்.

    உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. 'எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்' என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.

    உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். 'மெடிட்டரேனியன் டயட்' எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை.

    பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

    குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம்.

    "உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும்.

    அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது.

    இதுபோன்ற வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் இரத்த அழுத்ததினால் வரும் உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

    • நீங்கள் எந்தவகை மாம்பழம் வாங்கினாலும் அதில் சுவையான மாம்பழமாக பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.
    • மாம்பழத்தை ஊறவைக்காமல் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

    கோடைகாலம் வந்தாலே பல சிக்கல்களும், ஆரோக்கிய பிரச்சினைகளும் இலவச இணைப்புகளாக வரும். கோடைகாலத்தின் வெகுசில நன்மைகளில் ஒன்று ருசியான மாம்பழங்கள். கோடைகாலத்தில்தான் சுவையான மாம்பழங்கள் சாப்பிட கிடைக்கும். மாம்பழங்கள் கிடைத்தாலும் அதில் சரியானவற்றை தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது கடினமான விஷயமாகும்

    பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம் கோடைகாலத்தின் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. நீங்கள் எந்தவகை மாம்பழம் வாங்கினாலும் அதில் சுவையான மாம்பழமாக பார்த்து வாங்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் பகிரப்படும் குறிப்புகள் நீங்கள் மாம்பழம் வாங்கும் போது ஏமாறாமல் சுவையான மாம்பழத்தை வாங்க உதவும்.


    நன்றாக பழுத்த மற்றும் இனிப்பு மாம்பழங்களைப் பறிப்பதற்கான எளிதான வழி பாரம்பரிய வழியில் செல்வது. மாம்பழத்தை எடுத்து உங்கள் கைகளால் உணருங்கள். பழுத்த மாம்பழம் மென்மையாகவும், பழுக்காத மாம்பழம் உறுதியான தோலுடனும் இருக்கும். நீங்கள் மாம்பழத்தை மெதுவாக அழுத்தலாம் ஆனால் அளவிற்கு அதிகமாக அழுத்த வேண்டாம். எல்லா பக்கங்களிலிருந்தும் பழங்களை மெதுவாக அமுக்கி, அனைத்து பக்கங்களிலும் மென்மையான மாம்பழங்களைத் தேர்ந்தெடுங்கள். வாசனை சோதனை மாம்பழத்தின் பழுத்த தன்மையை சரிபார்க்க மற்றொரு எளிதான சோதனை வாசனையை சோதனை செய்வதாகும். முழுமையாக பழுத்த மாம்பழம் எப்போதும் தண்டுக்கு அருகில் வலுவான மற்றும் இனிமையான வாசனையுடன் இருக்கும், அதே சமயம் பழுக்காத மாம்பழத்தில் வாசனை இருக்காது அல்லது மிகவும் குறைவாக இருக்கும்.

    நல்ல மாம்பழம் பந்து வடிவத்தில் இருக்க வேண்டும், எனவே நீங்கள் முழுமையான, குண்டான மற்றும் வட்டமான மாம்பழங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், குறிப்பாக தண்டைச் சுற்றி. சில நேரங்களில் பழுத்த மாம்பழங்களில் பழுப்பு நிற புள்ளிகள் இருக்கும், இது முற்றிலும் இயல்பானது.

    தட்டையான அல்லது மெல்லிய மாம்பழங்களை எடுக்க வேண்டாம், ஏனெனில் அவை சுவையற்றதாக இருக்கும். அதேசமயம் சுருக்கம் அல்லது சுருங்கிய தோல் கொண்ட மாம்பழங்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை இனி பழுக்காது.

    பெரும்பாலான மக்கள் மாம்பழங்களை வாங்கும் போது நிறத்தைப் பார்த்தே வாங்குகிறார்கள். இது மாம்பழத்தின் முதிர்ச்சியை சரிபார்க்க சரியான வழி அல்ல. வெவ்வேறு மாம்பழ வகைகள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டுள்ளன, மேலும் மாம்பழம் பழுத்ததா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள நிறம் எந்த விதத்திலும் பயனுள்ளதாக இருக்காது.


    சாப்பிடுவதற்கு முன் மாம்பழங்களை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டியது அவசியம். இந்த பழமையான தெர்மோஜெனீசிஸ் செயல்முறை மூலம் மாம்பழங்களில் இருந்து வெப்பத்தை அகற்ற உதவுகிறது. மாம்பழத்தை ஊறவைக்காமல் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

    பழுத்த மாம்பழங்களை சேமிப்பதற்கும், பழுக்கும் செயல்முறையை மெதுவாக்குவதற்கும் சிறந்த வழி, அவற்றை குளிர்சாதன பெட்டியில் சேமிப்பதாகும். பழுத்த மாம்பழங்கள் குளிர்சாதன பெட்டியில் குறைந்தது 4-5 நாட்களுக்கு புதியதாக இருக்கும். நீங்கள் பழுக்காத மாம்பழங்களை வாங்கியிருந்தால், அவற்றை ஒரு காகித பையில் அல்லது செய்தித்தாளில் போர்த்தி அறை வெப்பநிலையில் சேமிக்கவும். இது அவற்றின் பழுக்க வைக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும், அதன்பிறகு அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.

    • புரதச்சத்து நிறைந்தது முட்டைகள் உயர்தர புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கிறது.
    • இரண்டு ஆக்ஸிஜனேற்றிகள் கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் அவசியம்.

    முட்டை என்பது பெரும்பாலான சமையலறையில் பொதுவாகக் காணப்படும் பொருட்களில் ஒன்றாகும். பல வழிகளில் சமைக்கக்கூடிய ஆரோக்கியமான மற்றும் சுவையான வெகுசில உணவுகளில் முட்டையும் ஒன்றாகும். பல வடிவங்களில் சமைக்கக்கூடிய, முட்டைகள் சீரான உணவின் ஒரு பகுதியாக தனித்து நிற்கின்றன.

    முட்டைகள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அவை நமது கோடைகால உணவில் அவசியம் இருக்க வேண்டும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவது முதல் எடையை பராமரிப்பது வரை, வெயில் காலத்தில் நாம் ஆரோக்கியமாக வாழ உதவும் பலவிதமான நன்மைகளை முட்டைகள் வழங்குகின்றன. உங்கள் உணவில் கோடைகாலத்தில் முட்டையை சேர்க்க வேண்டியதற்கான காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    புரதச்சத்து நிறைந்தது முட்டைகள் உயர்தர புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கிறது. உடலின் தசை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளன. தசை வலிமையை உருவாக்கவும், பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கவும் மற்றும் மனநிறைவை மேம்படுத்தவும் புரதம் தேவைப்படுகிறது. முட்டைகள் அதற்கு சிறந்த ஆதாரமாக இருக்கிறது. கண் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் கோடைகால நடவடிக்கைகள் பெரும்பாலும் சூரிய ஒளியின் வெளிப்பாடுகளை உள்ளடக்கியது. இது கண்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மூலமாகும். இந்த இரண்டு ஆக்ஸிஜனேற்றிகள் கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் அவசியம்.


    இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் முட்டை இதய ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம். அவற்றில் நிறைவுறா கொழுப்புகள் உள்ளன, குறிப்பாக அதிலுள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. ஆனால் முட்டையை குறிப்பிட்ட அளவிற்கு மேல் முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

    எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது முட்டைகள் வைட்டமின் டி-இன் நல்ல மூலமாகும், இது கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆரோக்கியமான மற்றும் வலுவான எலும்புகளை பராமரிக்க போதுமான அளவு வைட்டமின் டி அவசியம். இது எலும்பு முறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் தடுக்கிறது. எடையை நிர்வகிக்க உதவுகிறது கலோரிகளில் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், முட்டையில் அதிக புரதம் உள்ளது, இது உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கவும் கூடுதல் பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது, குறிப்பாக கோடை மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் போது எடையை நிர்வகிக்க முட்டை மிகவும் அவசியம்.


    மூளை செயல்பாடு முட்டைகளில் ஏராளமாக காணப்படும் கோலின், மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். குறிப்பாக கருவின் வளர்ச்சி மற்றும் குழந்தை பருவத்தில் இது நரம்பியக்கடத்தி தொகுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் மூளையில் உள்ள செல் சவ்வுகளின் கட்டமைப்பு ஒருமைப்பாட்டை பராமரிக்க உதவுகிறது. சரும ஆரோக்கியம் வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ, செலினியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட முட்டைகளில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள், செல் மீளுருவாக்கம், ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாத்தல் மற்றும் கொலாஜன் உற்பத்தியை ஆதரிப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கின்றன. கோடைகாலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளைத் சரிசெய்ய முட்டை அவசியமானது.

    • சிலருக்கு தொண்டையில் உள்ள ரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகும்.
    • கார்னியல் நரம்பின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படும்.

    கோடை காலத்தில் பலரும் குளிர்ச்சியான உணவுகள் மற்றும் குளிர் பானங்களை ருசிப்பதற்கு தொடங்கிவிடுவார்கள். கடுமையான வெப்பத்தில் இருந்து உடலை காப்பதற்கு குளிர்சாதன பெட்டியில் இருக்கும் ஐஸ்கட்டிகளை தண்ணீரில் போட்டு பருகுவார்கள்.

    தண்ணீர் பாட்டில்களை குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து அதனை குளிர்ச்சியடைய வைத்து அந்த நீரை பருகவும் செய்வார்கள். அத்தகைய ஐஸ் நீரை பருகுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து பார்ப்போம்.


    ஐஸ் நீரை அதிகமாக குடிப்பது உடலுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தும். குறிப்பாக செரிமான மண்டலம் பாதிக்கப்படலாம். இதனால் வயிற்று வலியும் ஏற்படலாம். சிலருக்கு தொண்டையில் உள்ள ரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகும். அதன் காரணமாக தொண்டைப்புண், எரிச்சல் ஏற்படக்கூடும்.

    ஐஸ் நீரை குடிக்கும்போது முதுகு தண்டுவட பகுதியிலுள்ள பல நரம்புகள் குளிர்ச்சியடையும். அதன் காரணமாக மூளையின் செயல்பாடு பாதிப்படையும். அது தலைவலியாக வெளிப்படும். அதிலும் ஒற்றைத்தலைவலி பிரச்சினை கொண்டவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள். அடிக்கடி சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    கோடையில் தினமும் ஐஸ் நீரை குடித்து வந்தால் தொண்டையில் வீக்கம் மற்றும் அசவுகரியம் ஏற்படும். சாப்பிட்ட பிறகு ஐஸ் கட்டி கலந்த குளிர்ந்த நீரை குடித்தால் தொண்டையில் சளி படிந்துவிடும். அடிக்கடி சளி, காய்ச்சல், ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்களாக இருந்தால் நிலைமையை மோசமாக்கும்.


    ஐஸ் நீரை அதிகமாக உட்கொண்டால் இதயத் துடிப்பு குறையும். கார்னியல் நரம்பின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படும். இதுதான் இதயத் துடிப்பை ஒழுங்குபடுத்தும் தன்மை கொண்ட நரம்பு மண்டலத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது.

    ஐஸ் நீரை அடிக்கடி உட்கொள்ளும் போது பற்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு பற்கள் குளிர்ச்சியடைவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். எந்த பொருளையும் மென்று உட்கொள்வதற்கு கடினமான நிலைமையை உருவாக்கும். பற்களின் எனாமலை அரித்து, அவற்றை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றும். குளிர்ச்சியாக எந்த பொருளை உட்கொண்டாலும் பல் கூச்சம், பல் குளிர்ச்சி அடைவது போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

    • தாமதமாக தூங்குவதும், காலையில் அவசர அவசரமாக எழுந்து வேலைக்கு புறப்பட்டு செல்வதும் பலருடைய வாடிக்கையாக இருக்கிறது.
    • போதிய தூக்கமின்மை காரணமாக உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்கள் உண்டாகக்கூடும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இரவு தூங்க செல்வதற்கு முன்பு செல்போனிலும், சமூக ஊடகங்களிலும் பொழுதை போக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரவு 10 மணியை கடந்த பின்பும் செல்போனில் மூழ்குபவர்களும் இருக்கிறார்கள்.

    இரவு 11 மணியை தாண்டிய பிறகுதான் தூங்குவது பற்றி சிந்திக்கிறார்கள். அப்படி தாமதமாக தூங்குவதும், காலையில் அவசர அவசரமாக எழுந்து வேலைக்கு புறப்பட்டு செல்வதும் பலருடைய வாடிக்கையாக இருக்கிறது.

    தினமும் இரவு 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், தினமும் 7-9 மணி நேரம் தூங்குவதற்கு பரிந்துரைக்கிறது. ஆனால் நிறைய பேர் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அது தொடர்ந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?


    தூங்கும் நேரம் குறைவது நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினைக்கு வழிவகுக்கும். இதய ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். போதிய தூக்கமின்மை காரணமாக உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்கள் உண்டாகக்கூடும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தூக்கத்தின் போது உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும். குறிப்பாக ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, ரத்த சர்க்கரை அளவுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும்.

    ''உங்களுக்கு போதுமான தூக்கம் வராதபோது, உங்கள் உடல் அதிக மன அழுத்த ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அது ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வைத்துவிடுகிறது. தூக்கத்தின் போது, உங்கள் இதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைகிறது. சுவாசம் சீராக நடப்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது.


    இந்த செயல்முறை இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்கவும், அன்றைய நாளின் மன அழுத்தத்தில் இருந்து மீளவும் வழிவகை செய்கிறது. அதேவேளையில் உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காவிட்டாலோ அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லாவிட்டாலோ இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வாய்ப்பில்லாமல் போய்விடும். நாளடைவில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும். இதய அமைப்பை சேதப்படுத்தும்'' என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் வழக்கம் தொடர்ந்தால் இதய நோய் அபாயங்களுக்கு மட்டுமின்றி நீரிழிவு நோய்க்கும் வழிவகுத்துவிடும்.

    • இதயத்தில் நோய் இருந்தால் நெஞ்சில் வலி ஏற்படுவது தான் ஒரே அறிகுறி எனும் தவறாக புரிதல் பலரிடம் உள்ளது.
    • கொழுப்புச்சத்து, சோடியம், இனிப்பு உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

    மனித உடலில் இன்றியமையாத உறுப்பு இதயம் ஆகும். உடல் முழுவதும் குருதியை விநியோகம் செய்யும் பிரதான உறுப்பான இதயத்திற்கு வரும் ஆபத்துகளில் பெரும்பாலானவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும். உண்ணும் உணவும், வாழ்க்கை முறையுமே இருதய நோய்களை கட்டுப்படுத்தும் கருவிகளாகும்.

    எல்லா வகையான இருதய நோய்களுக்கும் அறிகுறிகள் தெளிவாக புலப்படுவதில்லை. அப்படியிருக்க, நம் இதயம் ஆரோக்கியமாக துடிக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது? குறிப்பிட்ட இடைவெளிகளில் உடற் பரிசோதனை செய்வதன் மூலம் இருதய நோய் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.


    இதயத்தில் நோய் இருந்தால் நெஞ்சில் வலி ஏற்படுவது தான் ஒரே அறிகுறி எனும் தவறாக புரிதல் பலரிடம் உள்ளது. இருதய நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சு வலி மட்டுமல்லாது மேலும் பல அறிகுறிகள் தென்படலாம். அவை கீழ்வருமாறு:

    சீரற்ற இதயத்துடிப்பு

    நெஞ்சில் அசௌகரியம்

    உடலின் இடப்புறத்தில் தோன்றும் வலி

    மயக்க உணர்வு

    தலைசுற்றல்

    தொண்டை அல்லது தாடை வலி

    உடற்சோர்வு

    தீராத இருமல்

    கால்கள், கணுக்கால், அடிவயிறு ஆகியவற்றில் வீக்கம்

    குறட்டை மற்றும் தூக்கக் கோளாறு


    துவக்கத்திலேயே கண்டறிந்தால் இருதய நோய்களை குணப்படுத்துவது எளிது. எனவே, இருதய நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். ஆரோக்கியமான உணவுடன் போதியளவு உடற்பயிற்சியும் மேற்கொண்டால் இதயம் நலமுடன் துடிக்கும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பயறு வகைகள் ஆகியவற்றை போதியளவு எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச்சத்து, சோடியம், இனிப்பு உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. சீரான உடல் எடை பேணுவதுடன், புகைப்பதை தவிர்த்து, மன இறுக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு ஆகியவை இருதய நோய்களுக்கு வழிவகுக்கலாம் என்பதால் அவற்றை கட்டுக்குள் வைக்கவேண்டியது அவசியமாகும்.

    ×