வழிபாடு

மாசி மாத அமாவாசை: பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி தர்ப்பணம்

Published On 2025-02-27 09:40 IST   |   Update On 2025-02-27 10:43:00 IST
  • 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
  • அதிகாலை முதல் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

குறிப்பாக ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று அதிகாலை முதல் திரளான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் குவிந்து புனித நீராடி பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

பின்னர் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. மகா சிவராத்திரி திருவிழாவில் இன்று காலை சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் எழுந்தருளினர். மாலையில் தங்க ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

Tags:    

Similar News