பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆன்லைனில் திருப்புதல் பயிற்சி வழங்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக பிளஸ்-2 மாணவர்கள் தவிர அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 23-ந்தேதி யுடன் செய்முறை தேர்வு முடிந்துள்ளது.
தற்போது பிளஸ்-2 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்கள் இனி பள்ளிக்கு வர வேண்டாம். பொதுதேர்வுக்கு வந்தால் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் தொடர் பயிற்சிகளையும், சிறிய அளவிலான தேர்வுகளையும் நடத்தி வருகின்றன. ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டதை போல தங்களுக்கும் விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையின் போது பல்வேறு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு வேலை நாட்கள் குறைவாகவே உள்ளது. அதிலும் தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் நடைபெற்றதால் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.
எனவே அரசின் அறிவிப்பு வரும் வரை அரசு பள்ளி ஆசிரியர்கள் தினமும் உரிய நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும். முழு வேலை நாட்களிலும் பள்ளிக்கல்வித்துறை வழங்கும் பணிகளை கவனிக்க வேண்டும்.
ஒருவேளை அரசின் அறிவிப்பு வந்து ஆசிரியர்கள் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆன்லைனில் திருப்புதல் பயிற்சி பாடங்களை நடத்த வேண்டும். பிளஸ்-2 வகுப்புகளுக்கு ஏற்கனவே பாடம் நடத்தப்பட்டு இருப்பதால் பொதுத்தேர்வு வரை பாடங்களை மீண்டும் எடுத்து மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க ஆசிரியர்கள் உதவ வேண்டும். இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலமாகவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.