கெங்கவல்லி அருகே ரைஸ் மில் உரிமையாளர் வீட்டில் கொள்ளை
- நோட்டமிட்ட கொள்ளையர்கள் கூடமலை பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
- கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை பகுதியில் வசிப்பவர் தனபால் (வயது 50). இவர் அதே பகுதியில் மாடர்ன் ரைஸ் மில் வைத்து, அரிசி வியாபார கடையும் நடத்தி வருகிறார். இவரது மகன் மற்றும் மகள் வெளியூரில் படித்து வருவதால் தனக்கு சொந்தமான ரைஸ் மில்லில் தங்கி விட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று இரவு வழக்கம் போல் தனபால் வீட்டை பூட்டிவிட்டு ரைஸ் மில்லுக்கு சென்றார். இதைநோட்டமிட்ட கொள்ளையர்கள் கூடமலை பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 3 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இன்று காலை ரைஸ் மில்லில் இருந்து வீடு திரும்பிய தனபால், தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ரைஸ் மில் உரிமையாளர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.