உள்ளூர் செய்திகள் (District)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

Published On 2024-09-29 09:20 GMT   |   Update On 2024-09-29 09:20 GMT
  • சுபமுகூர்த்த நாட்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது.
  • பக்தர்கள் வசதிக்காக பல இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

திருச்செந்தூர்:

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இங்கு குறிப்பாக எதிரிகளை வீழ்த்தும் சத்ரு சம்ஹார பூஜை நடைபெறுவதால் ஏராளமானோர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். சுபமுகூர்த்த நாட்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது.

தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கம். அதற்காக பக்தர்கள் இங்கு வந்து ஒரே இடத்தில் முருகப்பெருமானையும், பெருமானையும் தரிசிக்க வாய்ப்பு உளளதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதாலும் பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

வழக்கம் போல் இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டு 4.30மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக பல இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. 

Tags:    

Similar News