உள்ளூர் செய்திகள் (District)
ஏர்போர்ட்டில் ரூ.19.12 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
- திருச்சி விமான நிலையத்தில்ரூ .19.12 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
- பெண்களுக்கான ஹேண்ட்பேக்கில் மறைத்து கடத்தி வந்தவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை
கே.கே.நகர்,
திருச்சி விமான நிலையத்திற்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் வெளியேற அனுமதி அளித்தனர். அப்போது துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த பெண்களுக்கான கைப்பையில் ரூ.19.12 லட்சம் மதிப்பிலான 318 கிராம் குச்சி வடிவிலான தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விசாரணை நடத்தி, தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது