கடலில் பலத்த காற்று: நாகை மாவட்ட மீனவர்கள் 5 ஆயிரம் பேர் மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யம்:
வங்க கடலில் கடந்த சில நாட்களாக சூறைகாற்று வீசிவருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் குறைந்த அளவிலேயே கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நாகை மாவட்டம் நாகை, ஆறுக்காட்டுத்துறை வேதாரண்யம், கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானமன் மாதேவி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் இன்று பலத்த காற்று வீசிவருகிறது. கடலிலும் காற்று அதிவேகமாக வீசுவதால் மீனவ கிராமங்களில் இருந்து மீன்பிடிக்க செல்லும் 75 சதவீத மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
25 சதவீத மீனவர்கள் கடலோர பகுதியில் வலை வீசி மீன்பிடித்து வருகின்றனர். சுமார் 2 ஆயிரம் படகுகள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 5 ஆயிரம் மீனவர்கள் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதன் காரணமாக கடலோர பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. #Fishermenboat