தமிழ்நாடு (Tamil Nadu)

இனிய சந்திப்பை மகிழ்ச்சி மற்றும் பயனுள்ளதாக பிரதமர் மாற்றுவாரா? - மு.க.ஸ்டாலின்

Published On 2024-09-27 08:00 GMT   |   Update On 2024-09-27 08:00 GMT
  • பிரதமர் மோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
  • மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டிய 3 கோரிக்கைகளை பிரதமரிடம் மனுவாக அளித்துள்ளோம்.

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சாணக்கியாபுரத்தில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்.

இன்று காலையில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சென்று சந்தித்தார்.

 

பிரதமருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார். அதன் பிறகு பிரதமருடன் அமர்ந்து பேசினார்.

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பரிசளித்தார். பிரதமர் மோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.

நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழைநார் கூடை, பனை ஓலை பெட்டியை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார்.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி இன்னும் கிடைக்காததை சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் நிதியை விடுவிக்க உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* பிரதமருடனான சந்திப்பு இனிய சந்திப்பாக அமைந்தது. மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமர் மோடியிடம் தான் உள்ளது.

* மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டிய 3 கோரிக்கைகளை பிரதமரிடம் மனுவாக அளித்துள்ளோம்.

* மெட்ரோ 2-வது கட்ட பணிகளுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.

* ஒருங்கிணைந்த கல்வி நிதியையும் உடனடியாக வழங்க வலியுறுத்தி உள்ளோம்.

* மத்திய அரசு 60%, தமிழக அரசு 40% நிதியுடன் இணைந்து செயலாற்றும் கல்வி திட்டத்திற்கான நிதியும் தரப்படவில்லை.

* மத்திய அரசின் நிதியை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News