மார்ச் 1, 2-ந் தேதிகளில் தமிழகம் முழுவதும் 627 சிறப்பு பஸ்கள் இயக்கம்
- தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்புப் பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்கு வரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வார இறுதி நாள்களான வருகிற சனிக்கிழமை (1-ந்தேதி), ஞாயிற்றுக்கிழமை (2-ந் தேதி) ஆகியவற்றை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 245 பஸ்களும், சனிக்கிழமை 240 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கோய்மபேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு (வெள்ளிக்கிழமை) 51 பஸ்களும், சனிக்கிழமை 51 பஸ்களும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடா்ந்து, மாதவரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை 20 பஸ்களும், சனிக்கிழமை 20 பஸ்களும் என மொத்தம் 627 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதுபோல, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்புப் பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.