இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை வருகை - சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு
- மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
- சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்திலிருந்து கடந்த டிசம்பர் 23-ந்தேதி 13 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். நள்ளிரவில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் வந்து மீனவர்களின் விசைப்படகை மடக்கிப்பிடித்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி 13 மீனவர்களையும் கைது செய்தது.
இதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி 26ந்தேதி 14 மீனவர்கள் விசைப்படகு ஒன்றில் கடலுக்குச்சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த இலங்கை கடலோர காவல்படையின் ரோந்து கப்பல், ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி 14 மீனவர்களையும் கைதுசெய்து, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 14 பேரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவங்களை கண்டித்து மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதி, கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடம் மீனவர்கள் 27 பேரும், விடுவிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
உடனடியாக தூதரக அதிகாரிகள், மீனவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர். 27 மீனவர்களுக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்களை, தூதரக அதிகாரிகள் வழங்கினர். அதோடு மீனவர்களுக்கு விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தனர்.
இதை அடுத்து நேற்று இரவு, இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 27 மீனவர்களும், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை வந்தடைந்த மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம், மீனவர்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.