ஆற்றில் சட்ட விரோதமாக மண்புழு கொள்ளை
- அரசு தடுத்து நிறுத்த மீன்பிடி தொழில் புரிவோர் கோரிக்கை
- சட்ட விரோதமாக கொள்ளையடித்து, கிலோ ரூ.1500 முதல் 2000 ரூபாய் வரை இறால் பண்ணைகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மீன்வளத்துறை, வனத்துறை, கடலோர காவல் படை அதிகாரி களிடம் புதுச்சேரி மாநில ஆற்றில் மீன்பிடி தொழில் புரிவோர் கூட்டமைப்பு அளித்துள்ள மனு வில் கூறியிருப்பதாவது;-
அரியாங்குப்பம் பெரிய ஆற்றில் பாரம்பரிய கடல் சார்ந்த மீனவர்களும், உள்நாட்டு மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆற்றில் கலப்பதால் கருப்பு நிற புள்ளி இறால், வெள்ளை இறால், களி நண்டு போன்றவை உயிரினங்கள் அழிந்த நிலையில், எஞ்சியுள்ள ஒரு சில மீன் இனங்களே உயிர் வாழ்கின்றன.
இந்நிலையில், ஆற்றில் உள்ள மீன்கள் உணவாக உட்கொள்ள கூடிய மண் புழுக்களை சிலர் சட்ட விரோதமாக கொள்ளையடித்து, கிலோ ரூ.1500 முதல் 2000 ரூபாய் வரை இறால் பண்ணைகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்கின்றனர்.
இதனால் ஆற்றில் மீன்வளம் பாதிக்கப்படுகிறது மேலும் ஆற்றில் மீன் பிடி தொழில் புரியும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.
எனவே மண்புழு கொள்ளையை தடுக்கவும், மீன்வளத்தை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்படுள்ளது.
இந்த மனு அளிக்கும் போது அரியாங்குப்பம் உள்ளாட்டு மீனவர் அமைப்பு, புதுச்சேரி 10 ரூபாய் இயக்கம், மீன் வளம் காப்போம் மக்கள் இயக்கம், தேசிய மீனவர் பேரவை நிர்வாகிகள் உடனிருந்தனர்.