புதுச்சேரி

கோப்பு படம்.

போதைப்பொருட்கள் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும்

Published On 2023-10-28 09:14 GMT   |   Update On 2023-10-28 09:14 GMT
  • வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
  • ரெஸ்டோ பார்களிலும் தடை செய்யப்பட்ட கஞ்சா, அபின், கொக்கைன் உட்பட போதை பொருட்கள் விற்கப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநில இளைய சமுதாயத்தை பற்றி அரசு சிறிதும் கவலைப்பட வில்லை. இதனால் உலகில் உள்ள அனைத்துவிதமான தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் புதுவையில் தடையின்றி புழக்கத்தில் உள்ளது.

போதை பொருட்களுக்காகவே புதுவைக்கு பலர் சுற்றுலா வந்து செல்கின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் எதையும் கண்டு கொள்வதில்லை.

புதுவை ஆம்பூர் சாலையில் உள் ரெஸ்டோபாரில் தடை செய்யப்பட்ட, இளைய சமுதாயத்தை சீரழிக்கும் போதைப்பொருளான கஞ்சா 3 ½ கிலோ தற்போது கைப்பற்றப் பட்டுள்ளது. இங்கு வரும் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்பட்டுள்ளது.

இதேபோலவே புதுவையில் உள்ள அனைத்து ரெஸ்டோ பார்களிலும் தடை செய்யப்பட்ட கஞ்சா, அபின், கொக்கைன் உட்பட போதை பொருட்கள் விற்கப்படுகிறது.

இதற்கு முதல அமைச்சர் என்ன பதில் கூறப்போகிறார்?

இந்த போதை கலாச்சாரம் புதுவையின் எதிர்கால நலனுக்கு உகந்தது அல்ல என்பதை உணர்ந்து போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுத்து இளைய சமுதாயத்தை காப்பாற்ற இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News