மக்கள் வழிதடத்தை மூடி புதுவை கவர்னர் மாளிகையை சுற்றி பாதுகாப்பு சுவர் எதற்கு?
- எதிர்கட்சித்தலைவர் சிவா கேள்வி
- புதுவை அரசு அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. தொழிலாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் ஓதியம்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் சம்பள உயர்வு மற்றும் போனஸ் வழங்கக் கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:-
புதுவை தொழிலாளர் துறை தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காண வேண்டும். புதுவை அரசு அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. தொழிலாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக கவர்னர் மாளிகையில் வீசிய பெட்ரோல் குண்டு பற்றி காவல்துறை தெளிவாக கூறிவிட்டது. புதுவை கவர்னர் ஊரில் இல்லா விட்டாலும், கவர்னர் மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அப்படி என்ன மிரட்டல் உள்ளது? மக்கள் வழித்தடங்களை மூடி வைத்துள்ளனர்.
அதை முதலில் திறந்து விடுங்கள். சுற்றியுள்ள பூங்கா நுழைவு பகுதியை ஏன் மூடி வைத்துள்ளீர்கள்? முதலில் அதை திறந்து விடுங்கள்.
இவ்வாறு சிவா பேசினார்.