search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவ பக்தியால் உயர்ந்த மானக்கஞ்சாறர்
    X

    சிவ பக்தியால் உயர்ந்த மானக்கஞ்சாறர்

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் சிவபெருமானிடம் கொண்டிருந்த பக்தியை கீழே விரிவாக பார்க்கலாம்.
    மானக்கஞ்சாற நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் கஞ்சாறு என்னும் வளம் மிகுந்த ஊரிலே பிறந்தார். இவர் பிறந்தது, பரம்பரை, பரம்பரையாக அரசருக்கு சேனாதிபதியாக பதவி வகிக்கும் குடியில் ஆகும். அந்தப் பதவியில் மானக்கஞ்சாற நாயனாரும் இருந்தார். மேலும் அவர் விவசாயத்திலும் விளைச்சல் கண்டு செல்வ வளம் பொருந்தியவராக வாழ்ந்து வந்தார். செல்வ வளம் மிக்கவராக இருந்தாலும், மெய்ப்பொருளான, சிவபெருமானை போற்றிப்புகழும் பணிவுடையவராக இருந்தார். தான் ஈட்டிய பொருளையெல்லாம், சிவனடியார்களுக்காக செலவிட்டு வந்தார்.

    இருப்பினும் மானக்கஞ்சாற நாயனாருக்கு ஒரே ஒரு மனக்குறை இருந்து வந்தது. அதாவது அவருக்கு குழந்தைச் செல்வம் இல்லை. இதனால் அவர் சிவபெருமானை, தினமும் தொழுது, தனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டி பிரார்த்தித்து வந்தார். இறைவனின் அருளால், மானக்கஞ்சாறரின் மனைவி கருவுற்றார். அவருக்கு பெண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தை, ஒளி மிகுந்த பேரழகுடன் காணப்பட்டது. அந்தக் குழந்தையையும் சிவனின் மீது அன்பு கொண்டவளாகவே வளர்த்து வந்தார் மானக்கஞ்சாற நாயனார்.

    மானக்கஞ்சாற நாயனாரின் மகள் வளர்ந்து திருமணப் பருவத்தை எட்டினாள். அவளுக்கு ஏற்ற மணமகளைத் தேடினார் அவளது தந்தை. இறுதியில் கஞ்சாறரைப் போலவே சேனாதிபதி குடியில் தோன்றிய ஏயர்கோன் கலிக்காமர் என்ற சிவனடியாரை, தனது செல்ல மகளுக்கு மணம் பேசி முடித்தார். திருமண நாள் வந்தது. கஞ்சாறு திருத்தலமே மணக்கோலமும், திருவிழாக் கோலமும் பூண்டிருந்தது. மணமகனாக கலிக்காமர் மணமுரசொலிக்க கஞ்சாறூர் எல்லையை வந்தடைந்தார்.

    மணமகன் வந்த திருமண ஊர்வலம், கஞ்சாறு ஊருக்குள் நுழைவதற்குள், சிவபெருமான், மானக்கஞ்சாற நாயனாரின் வீட்டில் சிவனடியார் வேடத்தில் எழுந்தருளினார். நெற்றியில் திருநீற்றுப் பூச்சு, உச்சியில் குடுமி, காதில் வெண்முத்துக் குண்டலம், மார்பில் மயிர்க்கயிற்றுப் பூணூல், கையில் திருநீற்றுப் பை, பஞ்ச முத்திரை பதித்த திருவடி என்பதாக இருந்தது, ஈசனின் சிவனடியார் வேடம். தனது மகளின் திருமணம் நடைபெறும் வேளையில், தன் வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் எழுந்தருளியதைக் கண்டு மனம் மகிழ்ந்து போனார் மானகஞ்சாற நாயனார்.

    சிவனடியாரை அன்போடு பணிந்து, வீழ்ந்து கும்பிட்டு, இன்மொழி கூறி ஆசனம் அளித்து அமரச் செய்தார்.

    சிவனடியாரோ, ‘இங்கு நடைபெறும் மங்கள நிகழ்ச்சி என்ன?’ என்று வினவினார்.

    ‘ஐயனே! என்னுடைய மகளின் திருமணம் நடைபெற உள்ளது’ என்று பதிலளித்தார் மானக்கஞ்சாறர்.

    ‘அப்படியா! மங்களம் உண்டாகட்டும்’ என்று வாழ்த்திய சிவனடியாரின் காலில் விழுந்து வணங்கினார், கஞ்சாறரின் மகள்.

    அப்போது அந்த இளம்பெண்ணின் கருமேகம் போன்ற கூந்தலைக் கண்ட சிவனடியார், ‘இது நமது பஞ்சவடிக்கு (மயிர்கற்றையால் செய்யப்படும் பூணூல்) சரியாக இருக்கும்’ என்று கூறினார்.

    அவரது வார்த்தையைக் கேட்ட மானக்கஞ்சாறர், சிவனடியார் ஆசைப்பட்டு விட்டதை கொடுக்கும் பொருட்டு, அருகில் இருந்த கத்தியை எடுத்து, தனது மகளின் நீண்ட கூந்தலை அடியோடு அரிந்து அடியவரிடம் கொடுத்தார்.

    அதனை வாங்கச் சென்ற அடியவர், அப்படியே மறைந்து ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், பார்வதியுமாக காட்சி கொடுத்தார். அதைக் கண்டு மானக்கஞ்சாறர் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் உள்ளம் நெகிழ்ந்தனர்.

    ‘கஞ்சாறரே! நீர் என் மீது வைத்துள்ள மெய்யன்பை உலகம் அறியச் செய்யவே, யாம் வந்தோம்’ என்று கூறி மறைந்தார்.

    கஞ்சாறருக்கு அருள் செய்து இறைவன் மறைந்த நேரத்தில், ஏயர்கோன் கலிக்காமர் மணமகளைக் கைப்பிடிக்க வந்து சேர்ந்தார். அவர் அங்கு நிகழ்ந்த அற்புதத்தைக் கேட்டறிந்தார். அவ்வற்புதத்தைக் காணாமல் போனதை எண்ணி மனம் தளர்ந்தார். பின்னர் இறைவனின் அருள்மொழியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து இறைவனின் அருளால் வெட்டப்பட்ட நீண்ட கூந்தல், மீண்டும் வளரப் பெற்ற மானக்கஞ்சாற நாயனாரின் மகளை மணந்து இறை தொண்டு புரிந்து வந்தார்.

    Next Story
    ×