search icon
என் மலர்tooltip icon
    • காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும், கேட்ட நிதியை கொடுத்ததில்லை.
    • பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.

    சேலம்:

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இதுவரை தமிழக அரசு கேட்டநிதியை மத்திய அரசு கொடுத்ததில்லை.

    * காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும், கேட்ட நிதியை கொடுத்ததில்லை.

    * மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோதும், கேட்ட நிவாரண நிதி கிடைக்கவில்லை.

    * பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிகமான இடங்களில் வெற்றி பெறும். தேர்தல் சுமுகமாக நடைபெற்றது.

    * வெப்பம் அதிகரித்ததால் தமிழகத்தில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்று கூறினார்.

    • சில வீடியோக்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில வீடியோக்கள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன.
    • டெல்லியில் ஒருவர் வித்தியாசமான முறையில் ரீல்ஸ் எடுத்ததால் தற்போது கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இன்றைய உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் பதிவிடப்படுகின்றன. இவற்றில் சில வீடியோக்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில வீடியோக்கள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன.

    அந்த வகையில், டெல்லியில் ஒருவர் வித்தியாசமான முறையில் ரீல்ஸ் எடுத்ததால் தற்போது கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கைதான நபர் வெளியிட்டுள்ள வீடியோவில், சாலையில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில் சாலையின் நடுவே இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதன் அருகே ஒரு நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து அந்நபர் வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் ரீல்ஸ் எடுத்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

    • ஸ்டார் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வௌியாகவுள்ளது.
    • யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் நடித்துள்ள படம் "ஸ்டார்". யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கியிருந்தார்.

    ஸ்டார் படத்தில், கவின், லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் பாடல்கள், மேக்கிங் வீடியோ ஆகியவை சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வௌியாகவுள்ளது.

    இந்நிலையில், ஸ்டார் படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது.  டிரெயிலரில் மிக அற்புதமாக நடித்து இருக்கிறார் கவின். ஒரு வளர்ந்து வரும் நடிகன் படும் அவமானங்கள், கஷ்டங்கள் அதனால் அவன் இழக்கும் நட்பு , காதல். சமூகம் ஒரு கலைஞனை எப்படி பார்க்கிறது போன்ற காட்சிகள் டிரெயிலரில் இடம் பெற்றுள்ளது. டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்திலும் கவின் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு  ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.எஸ்.சி. டேட்டா அறிவியல் பாடப் பிரிவும் எம்.ஏ. தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் உணவு பதப்படுத்துதல் இளங்கலை பட்டப்படிப்பையும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
    • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருள் அறிவியல் மற்றும் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் பாடங்களை வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    வருகிற கல்வி ஆண்டில் இந்த புதிய பாடத்திட்டங்களை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டேட்டா அறிவியலுடன் பி.எஸ்.சி. கணினி அறிவியலையும், ஏ.ஐ. உடன் பி.எஸ்.சி. கணினி அறிவியலையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. சில கல்லூரிகள் பி.பி.ஏ., பி.எஸ்.சி. உளவியல் பாடப் பிரிவுகளில் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்து உள்ளன.

    மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியலை டேட்டா அறிவியல் பாடத்துடன் தொடங்கவும் சமூக பணி முதுநிலை பாடப் பிரிவை புதிதாக தொடங்கவும் திட்டமிட்டு உள்ளது. வருகிற கல்வியாண்டில் 'பி.காம் கார்ப ரேட் செகரட்டரிஷிப் படிப்பை' தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முதல்வர் வில்லியன் ஜாஸ்பர் தெரிவித்தார்.

    ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.எஸ்.சி. டேட்டா அறிவியல் பாடப் பிரிவும் எம்.ஏ. தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் உணவு பதப்படுத்துதல் இளங்கலை பட்டப்படிப்பையும் தொடங்க திட்டமிட்டுள்ளது.

    டேட்டா அறிவியல் தொடர்பான படிப்புகளுக்கு மாணவர்களிடம் அதிக தேவை உள்ளது என்றும் பல்கலைக் கழகத்தின் ஆய்வுக்கு பிறகு பாடநெறி கிடைக்கும் என்றும் ஸ்டெல்லா மேரி கல்லூரி யின் முதல்வர் ஸ்டெல்லா மேரி கூறினார்.

    டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் ஏற்கனவே உள்ள படிப்புகளை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. டேட்டா அறிவியல் படிப்புக்கான இன்டர்ன்ஷிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் இருந்து 2 கிரெடிட் படிப்புகளை மாணவர்கள் படிக்க வைப்போம் என்று முதல்வர் சந்தோஷ் பாபு தெரிவித்தார். அடிப்படை அறிவியல் படிப்புகளை ஊக்குவிக்கவும் கல்லூரி திட்டமிட்டுள்ளது.

    கணினி தொடர்பாக படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதால் எதிர்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    இதுகுறித்து சென்னை கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் பால் வில்சன் கூறுகையில், "வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருள் அறிவியல் மற்றும் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் பாடங்களை வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார்.

    • 2015ல் இருந்து ரூ.1.5 லட்சம் கோடி கேட்டுள்ளோம், ஆனால் ரூ.7000 கோடி தான் கொடுத்துள்ளனர்.
    • மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பாராமுகமாக செயல்படுகிறது.

    சென்னை

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    யானைப் பசிக்கு சோளப்பொறி போல புயல் பாதிப்பிற்கு நிவாரணம் மத்திய அரசு வழங்கி உள்ளது.

    2015ல் இருந்து ரூ.1.5 லட்சம் கோடி கேட்டுள்ளோம், ஆனால் ரூ.7000 கோடி தான் கொடுத்துள்ளனர்.

    வட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் வாரி வழங்குகிறார்கள்.

    மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பாராமுகமாக செயல்படுகிறது.

    தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் நடத்துகிறது என்று கூறினார்.

    • கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் வந்தனா சிங் விசாரணை நடத்தினார்.
    • இரண்டு பேராசிரியர்கள் லஞ்சமாக பணம் வாங்கிக் கொண்டு மதிப்பெண் வழங்கியது தெரியவந்தது.

    உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் உள்ளது. கடந்த வருடம் பி.பார்ம் செமஸ்டர் தேர்வின் முடிவுகள் கடந்த ஆகஸ்டில் வெளியாகின. இதில் நன்கு படிக்கும் மாணவர்களை விட அதிகமாக 4 பேருக்கு 50 சதவீதம் முதல் 54 சதவீதம் வரை மதிப்பெண் கிடைத்துள்ளது.

    இதில் சந்தேகம் எழுந்ததால் அந்த 4 மாணவர்களின் விடைத்தாள்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வாங்கி பார்க்கப்பட்டது. இதில் 4 மாணவர்களுமே விடைகளுக்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான், ஜெய் பஜ்ரங்பலி போன்ற வாசகங்களை எழுதி பக்கங்களை நிரப்பியிருந்தனர். இன்னொரு மாணவர், கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதியிருந்தார். இந்த விவகாரத்தில் விசாரணை கோரி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் திவ்யான்ஷூ சிங் புகார் அளித்தார். இது தொடர்பாக கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் வந்தனா சிங் விசாரணை நடத்தினார்.

    இதில் இரண்டு பேராசிரியர்கள் லஞ்சமாக பணம் வாங்கிக் கொண்டு மதிப்பெண் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து வினய்வர்மா, ஆஷிஷ்குப்தா என்ற 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இதற்கு முன் பல மாணவர்களை தேர்வில் காப்பியடிக்க அனுமதித்ததாக புகார்கள் வெளியாகின.

    • கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிச்சாங் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே.

    மதுரை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.115 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ.160.61 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிச்சாங் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி.

    பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம் என்று தெரிவித்துள்ளார்.


    • வெள்ள பாதிப்பிற்கு ரூ.160 கோடி நிவாரணம் அறிவிப்பு.
    • ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க உத்தரவு.

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.115 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ.160 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பிரிந்துரையின் அடிப்படையில் நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

    மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    • விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால் காய்கறி மண்டிகளுக்கு காய்கறி வரத்து மிகவும் குறைந்து வருகிறது.
    • காய்கறி மண்டிகளில் விற்கப்படும் அனைத்து வகை காய்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலுக்கு அடுத்தபடியாக மலைத் தோட்ட காய்கறிகள்தான் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த சில வாரங்களாக கோடை அனல் வெயில் கொளுத்தி வருவதால் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தோட்டங்களில் பயிரிட்டு உள்ள விளைபொருட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச இயலாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கு விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால் காய்கறி மண்டிகளுக்கு காய்கறி வரத்து மிகவும் குறைந்து வருகிறது.

    இதனால் நீலகிரி மாவட்டத்துக்கு சமவெளி பகுதியில் இருந்து மட்டுமே காய்கறிகள் வரத்து இருப்பதால், அங்கு காய்கறிகளின் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200, அவரை-ரூ.180, கேரட்-ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.80, முருங்கைக்காய் ரூ.200, ப்ரக்கோலி ரூ.240 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறி மண்டிகளில் விற்கப்படும் அனைத்து வகை காய்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.


    இனிவரும் நாட்களில் கடும் வறட்சி ஏற்பட்டு வெயில் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளதால் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். நீலகிரி மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளதால், கவலை அடைந்து உள்ள இல்லத்தரசிகள், தமிழக அரசு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சடலங்களை பாதுகாக்க முடியாமல் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    • குளிர் சாதன வசதி இல்லாததால் இந்த சடலங்கள் அழுகிப்போய் துர்நாற்றம் வீசுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிணவறை உள்ளது. இங்கு விபத்து, கொலை, தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் உடல்களை பிணவறையில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து காவல் துறை விசாரணை முடிந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பது வழக்கம்.

    அதன்படி புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நேரத்தில் 24 சடலங்களை குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்து பாதுகாக்க வசதி உள்ளது. இதுபோன்ற சூழல்களில் தற்போது அடிக்கும் வெயிலில் பிணவறையில் அமைக்கப்பட்ட குளிர்சாதன எந்திரங்கள் திணறுவதால், குளிரூட்டப்படுவது குறைகிறது.

    இதனால் சடலங்களை பாதுகாக்க முடியாமல் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து சடலங்கள் அழுகுவது, துர்நாற்றம் வீசுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்குள்ள 3 குளிர்சாதன எந்திரங்களை சரி பார்க்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு குளிர்சாதன எந்திரங்கள் பழுது பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் நிலைமை சீராக வில்லை. குறிப்பாக புதுச்சேரிக்கு வந்து ஆதரவற்றவர்களாக இறந்து கிடப்போரின் சடலங்களை உறவினர்கள் உரிமை கோருவதற்கு வசதியாக 15 நாட்கள் வரை வைத்திருக்க வேண்டியுள்ளது.

    தற்போது பிணவறையில் ஆதரவற்றவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு போதுமான குளிர் சாதன வசதி இல்லாததால் இந்த சடலங்கள் அழுகிப்போய் துர்நாற்றம் வீசுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி கூறியதாவது:-

    தற்போது கடும் வெயிலால் பிணவறையில் குளிர் சாதன எந்திரங்கள் திணறுகிறது. மேலும் வெளிப்புற வெப்பமும் பிணவறைகளில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் சீதோஷ்ண நிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    தொழில் நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, எந்திரங்களை சர்வீஸ் செய்துள்ளோம். தற்போது ஓரளவு நிலைமை சீராகியுள்ளது. இருப்பினும் சடலங்கள் அழுகுவது என்பது, ஆதரவற்றவர்களின் சடலங்களால்தான் நிகழ்கிறது.

    இத்தகைய சடலங்கள் இறந்து, 10 நாட்கள் அல்லது அதற்கு மேல்தான் கண்டுபிடிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஏற்கனவே அழுகிய நிலையில், ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் இத்தகைய சடலங்களை உறவினர்கள் உரிமை கோருவதற்கு வசதியாக விதிப்படி 15 நாட்களுக்கு பாதுகாக்க வேண்டும்.

    அப்படி நீண்ட நாட்கள் பாதுகாக்கப்படும்போது சடலங்கள் மேலும் அழுகி விடுகிறது. இருப்பினும் வெளிப்புற சீதோஷ்ண நிலை உள்ளே பாதிக்காத வகையில் உள் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றார்.

    ×