search icon
என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • ஒரு விசைப்படகை கரையேற்ற எந்திரம் மட்டுமல்லாமல் அதனுடன் சேர்ந்து 15 முதல் 20 பேர் வரை மனித உழைப்புகள் தேவைப்படுகிறது.
    • இந்த ஆண்டு வெப்ப அனல் காற்று அதிகமாக வீசுவதால் வெயிலில் நின்று வெல்டு செய்யும் போது அதிக அனல் ஏற்படுகிறது.

    நாகப்பட்டினம்

    மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடலோர மாநில மீனவர்களுக்கு 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்கத்தடை விதிக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த மீன்பிடி தடைகாலம் கடந்த 15 தேதி அதிகாலை முதல் அமலுக்கு வந்தது.

    நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கல்லார், கீச்சாங்குப்பம், செருதூர், கோடியக்கரை, நம்பியார் நகர், நாகூர், புஷ்பவனம், ஆறுகாட்டுதுறை, வேதாரணி யம் உள்ளிட்ட 27 மீனவ பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை துறை முகங்களில் கட்டி பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் படகில் உள்ள வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பழுது நீக்கும் பணியில் மீனவர்கள், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழுது நீக்கம் செய்து வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து மீனவர்கள் கூறும்போது :-

    ஒரு விசைப்படகை கரையேற்ற எந்திரம் மட்டுமல்லாமல் அதனுடன் சேர்ந்து 15 முதல் 20 பேர் வரை மனித உழைப்புகள் தேவைப்படுகிறது. இரும்பு விசைப்படகின் பழுதான சில பாகங்களை கேஸ் கட்டர் மூலம் வெட்டி எடுப்போம். அதேபோல் புதிய இரும்பினை பழுதான இடங்களில் பொருத்தும் போது ஆர்க் வெல்டு செய்வது வழக்கம்.

    இந்த வேலை கடும் வெப்பத்தை ஏற்படுத்தும். அதிலும் இந்த ஆண்டு வெப்ப அனல் காற்று அதிகமாக வீசுவதால் வெயிலில் நின்று வெல்டு செய்யும் போது அதிக அனல் ஏற்படுகிறது. அவ்வப்போது தண்ணீரை மேலே ஊற்றிக் கொண்டும் ஈரத்துணியை சுற்றிக்கொண்டும் எங்கள் பணியை தொடர்கிறோம் என்றனர்.

    • வீட்டின் மேற்பகுதியில் தீ பிடித்ததால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை.
    • வீட்டின் உரிமையாளர்கள், விஏஓ கொடுத்த புகாரின்பேரில் 3 வழக்குகள் பதிவு செய்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலையொட்டி பட்டாசுகள், மேளதாளங்கள் முழங்க கட்சியினர், தங்களது ஆதரவு வேட்பாளரை உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்.

    நாகை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஜி.எம். ரமேஷ் நேற்று காலை நாகூர் சிவன் தேரடி தெருவில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து நாகூர் பட்டினச்சேரி, நாகூர் பஸ் நிறுத்தம், நாகை காடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து நாகை மேட்டுபங்களாவில் அவர் பிரசாரத்தை முடித்து விட்டு புதிய நம்பியார் நகருக்கு செல்ல தொடங்கினார். அப்போது நாகை நகராட்சி அலுவலகம் அருகே மெயின் ரோட்டில் பா.ஜனதாவினர் பட்டாசு வெடித்து வேட்பாளர் ரமேசுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பட்டாசு வெடித்ததில் அதிலிருந்து தீப்பொறிகள் பறந்து அருகில் உள்ள ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பக்கிரிசாமி(வயது 61) என்பவரது கூரை வீட்டில் விழுந்ததில், அவரது கூரை வீட்டில் தீப்பற்றி எரிந்தது. பின்னர் தீயானது காற்றின் வேகம் காரணமாக மளமளவென எரிய தொடங்கியது.

    அப்போது வீட்டில் இருந்த பக்கிரிசாமி, அவரது மனைவி பானுமதி, மகள் ஸ்ரீபிரியா, அவரது மகள் ஸ்ரீலேகா, மருமகள் ரேவதி ஆகியோர் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    வீட்டின் மேற்பகுதியில் தீ பிடித்ததால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை. இது குறித்து நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    ஆனாலும் வீட்டில் இருந்த 2 டி.விக்கள், 2 பிரிட்ஜ்கள், 2 கட்டில்கள், வாஷிங் மெஷின், 6 பீரோக்கள், 6 மின்விசிறிகள், பாத்திரங்கள் மற்றும் புத்தகங்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து வீடு தீப்பற்றி எரிந்ததை கண்டுகொள்ளாமல் சென்றதாகக்கூறி, பா.ஜனதாவினரை கண்டித்து பக்கிரிசாமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ராஜா சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த பா.ஜனதா மாவட்ட தலைவர் கார்த்திகேயன், பக்கிரிசாமி வீட்டுக்கு வந்து சேதங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு தருவதாக பக்கிரிசாமியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் பிரசாரத்தின்போது வெடி வெடித்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரத்தில் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வீட்டின் உரிமையாளர்கள், விஏஓ கொடுத்த புகாரின்பேரில் 3 வழக்குகள் பதிவு செய்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தடை செய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    • நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார்
    • பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார்

    நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். அவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் இன்று அவர், புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார். அப்போது பா.ஜ.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    எஸ்.ஜி.எம். ரமேஷை வரவேற்க வைத்த பட்டாசுகள் வெடித்ததில் 2 குடிசை வீடுகள் தீக்கிரையானது. இதில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் அலுவலர், வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

    நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் எரிந்த வீடுகளை பார்வையிட வந்த நிலையில், அவரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    • பூக்கடைக்கு சென்று கூவி கூவி பூ விற்பனை செய்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • பல்வேறு இடங்களுக்கு சென்று நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா நூதன முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அவர் சிக்கல், ஆரியூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று மைக் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி ஒரு கடையை நோக்கி சென்றார். அங்கு பெண்மணியிடம் இஸ்திரி பெட்டி வாங்கி துணிகளுக்கு இஸ்திரி செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து அருகில் இருந்த பூக்கடைக்கு சென்று கூவி கூவி பூ விற்பனை செய்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது என்னை வெற்றி பெற செய்தால் தொகுதி மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என கூறினார்.

    இதையடுத்து அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
    • நாகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல்,

    நாகப்பட்டினம்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து நாகை மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கி விட்டனர்.

    இதற்காக நாகை மாவட்டத்தில் 9 பறக்கும் படை, 9 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வெற்றாற்று பாலம் அருகே பறக்கும் படை தாசில்தார் வடிவழகன் தலைமையிலான அதிகாரிகள் வாகனங்களை மறித்து சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 400 எடுத்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காரைக்காலில் தனியார் பள்ளியில் கணக்கராக பணிபுரிந்து வரும் வெளிப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பதும், பள்ளி மாணவர்களின் கட்டண தொகையை எந்தவித ஆவணங்களும் இன்றி மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வெங்கடேசனிடமிருந்து ரூ.1,53,400-யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நாகை தலைமை இடத்து துணை தாசில்தார் தனஜெயனிடம் ஒப்படைத்தனர்.

    நாகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மீனவர்கள் காங்கேசன்நகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவர்கள் அவ்வாறு மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மற்றும் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதன்படி காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமிநகரை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 13-ந்தேதி நாகப்பட்டினம் டாடா நகரை சேர்ந்த சேகர், மயிலாடுதுறை புதுக்கோட்டையை சேர்ந்த சந்துரு, மோகன், காரைக்காலை சேர்ந்த முருகானந்தம், இரும்பன், பாபு, பரசுராமன், முருகன், சுந்தரவேல், வடிவேல் உள்ளிட்ட 15 பேர் விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்கள் நேற்று யாழ்பாணம் அருகே மயிலட்டி என்ற பகுதியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்தாக கூறி மீனவர்கள் 15 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் மீனவர்கள் காங்கேசன்நகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்னர் அவர்கள் யாழ்பாணம் மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.
    • நோன்பு காலம் தொடங்கியதை அடுத்து உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாதத்தின் இறுதி நாளில் சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் வகையில் ரமலான் பண்டிகை கொண்டாட ப்படுகிறது.

    அதன்படி, பிறை தென்பட்டதால் வளைகுடா நாடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார். அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.

    நோன்பு காலம் தொடங்கியதை அடுத்து உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும், வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.

    நாகை மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் நடைபெற்ற தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    • மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.
    • தொடர் போராட்டத்தால் ரூ.10 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    கடல் வளத்தை அழிக்கும் இழுவை மடியை தடை செய்ய வேண்டும். மீன்பிடி சட்டம் 1983 பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்டம் கீழ்வேளூர், நாகை தாலுகாவை சேர்ந்த 19 கிராம பைபர் படகு மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று மீனவர்களின் போராட்டம் 12-வது நாளாக நீடித்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஏராளமான மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர் போராட்டத்தால் ரூ.10 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் ரேசன், ஆதார் கார்டுகளை ஒப்படைத்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

    • விசைப்படகு மீனவர்களின் இழுவை மடி வலையை பயன்படுத்துவதால் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
    • மீனவர்களின் வேலைநிறுத்தத்தால் சுமார் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட இழுவைமடி வலையை பயன்படுத்தி ஒரு சில விசைபடகு மீனவர்கள் மீன்பிடிப்பதால் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    இதனால் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் வாணவன் மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள பைபர் படகு மீனவர்கள் கடந்த 28-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் விசைப்படகு மீனவர்களின் இழுவை மடி வலையை பயன்படுத்துவதால் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

    எனவே நாகை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட இழுவை மடிவலையை பயன்படுத்துவதை தடுக்க மீன்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து இழுவை மடிவலையை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 9-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதியில் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆயக்காரன்புலத்தில் சொந்தமாக மர பர்னிச்சர் ஷோரூம் திறந்தார்.
    • சிங்கப்பூர் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரும் வந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த சண்முகராஜன் 14 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று அங்கு ஒரு மர பர்னிச்சர் கம்பெனியில் பணிபுரிந்தார்.

    அங்கு 14 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி அந்த கம்பெனிக்கு நல்ல வருவாயை ஈட்டி கொடுத்து, அனைத்து தொழில் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.

    இதனால் இனி சொந்த ஊரில் தொழில் தொடங்க முடிவு செய்தார். இதற்காக சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆயக்காரன்புலத்தில் சொந்தமாக மர பர்னிச்சர் ஷோரூம் திறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சிங்கப்பூர் பர்னிச்சர் நிறுவன உரிமையாளர் கோலிஞ்சி உடனே சண்முகராஜனை தொடர்பு கொண்டு நீங்கள் தொடங்கி உள்ள பர்னிச்சர் ஷோரூமை பார்க்க இந்தியாவுக்கு வருவதாக கூறினார்.

    இதையடுத்து அவர் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அவருடன் சிங்கப்பூர் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரும் வந்தனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் கார் மூலம் ஆயக்காரன்புலம் வந்தனர். அவர்களை வித்தியாசமான முறையில் அழைத்து செல்ல சண்முகராஜன் முடிவு செய்தார்.

    அதன்படி சிங்கப்பூர் நிறுவன உரிமையாளர் கோலிஞ்சி, ஊர்வலமாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரை குதிரை சாரட்டு வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக சுமார் மூன்று கிலோமிட்டர் தூரம் மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் பர்னிச்சர் ஷோரூமுக்கு அழைத்து சென்றார். அங்கு அருள்வாக்கு சித்தர் கலிதீர்த்தான் தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்து, பூரண கும்ப மரியாதை அளித்து பூக்கள் தூவி வரவேற்றனர்.

    பின்னர் சண்முகராஜன் தொடங்கியுள்ள மர பர்னிச்சர் ஷோரூமை பார்வையிட்டு அவரை கட்டி தழுவி மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது கோலிஞ்சி கூறும்போது, என்னிடம் வேலை சண்முகராஜன் மர பர்னிச்சர் ஷோரூமை சிறப்பாக நடத்தி தொழிலதிபராக மாறி இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    சிங்கப்பூரிலிருந்து உரிமையாளர், தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளியின் ஷோரூமை பார்க்க வந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகில் உள்ள ஒரு வீட்டின் சுவற்றின் மீது மோதியது.
    • கோகுல கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட திருமேனி செட்டி தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 20). தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு இவர் தனது நண்பருடன் புத்தூரில் உள்ள கடையில் டீ குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது பைகரா வளைவில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகில் உள்ள ஒரு வீட்டின் சுவற்றின் மீது மோதியது.

    இதில் கோகுல கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்தவர்கள் அவர்களை நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்தில் இளைஞர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் முன்பகுதி முற்றிலும் சேதமானது. இதுகுறித்து நாகை நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்ற வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
    • ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

    நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இலுவைமடிவலை மீன்பிடி முறையை தடை செய்ய வேண்டும், நேற்று நடைபெற்ற கோஷ்டி மோதலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், கடலில் மாயமான மீனவரை தேடி கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை புஷ்பவனம் வாணவன்மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    இதனால் ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் வேதாரண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ×