search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவு.
    • இரவு 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    மாலை வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில், நேற்றிரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இந்நிலையில், நேற்று இரவு 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, 13 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் மொத்தம் 64.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

    மாநில வாரியாக விவரங்கள்:

    அசாம் 81.61 சதவீதம்

    பீகார் 58.18 சதவீதம்

    சத்தீஸ்கர் 71.06 சதவீதம்

    தாத்ரா, டயு மற்றும் டாமன் 69.87 சதவீதம்

    கோவா 75.20 சதவீதம்

    குஜராத் 58.98 சதவீதம்

    கர்நாடகா 70.41 சதவீதம்

    மத்திய பிரதேசம் 66.05 சதவீதம்

    மகாராஷ்டிரா 61.44 சதவீதம்

    உத்தரப்பிரதேசம் 57.34 சதவீதம்

    மேற்கு வங்காளம் 75.79 சதவீதம்

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.

    இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

    இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியான அனிமேஷன் வீடியோவை உடனடியாக நீக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

    • ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
    • நீதிமன்ற காவல் வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம், நீதிமன்ற அனுமதியுடன் சிபிஐ ஜெயிலில் வைத்து விசாரணை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக சிபிஐ அவரை கைது செய்துள்ளது.

    திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவலை நீதிமன்றம் வருகிற 20-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது கே. கவிதா பத்திரிகையாளர்களிடம் "பிரஜ்வல் ரேவண்ணா போன்றோரை விசாரணை அமைப்புகள் விட்டுவிடுகின்றன. எங்களை போன்றோரை கைது செய்கிறது" என ஆவேசமாக தெரிவித்தார்.

    இதே வழக்கில் அரவிந்த கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 14-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கில் ஜாமின் கேட்டு கவிதா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மார்ச் 15-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அதன்பின் சிபிஐ ஏப்ரல் 11-ந்தேதி கைது செய்தது.

    • இன்று நாட்டின் எல்லா பகுதியிலும் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
    • தலித்கள், பழங்குடியினர்கள், பிற்படுத்தப்பட்டோர்கள், சிறுபான்மையினர்கள் பயங்கரமான பாகுபாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள்.

    மக்களவை தேர்தலில் இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இன்று நாட்டின் எல்லா பகுதியிலும் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொண்டு வருகிறார்கள். பெண்கள் அட்டூழியங்களை (கொடுமைகள்) எதிர்கொண்டு வருகிறார்கள். தலித்கள், பழங்குடியினர்கள், பிற்படுத்தப்பட்டோர்கள், சிறுபான்மையினர்கள் பயங்கரமான பாகுபாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா ஆகியவற்றின் நோக்கத்தால் இந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை பெற வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் வெறுப்புணர்வை வளர்த்துள்ளனர். அனைத்து வகையிலான வளர்ச்சிக்கும், உரிமைகள் பறிக்கப்பட்டவர்களின் நீதிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் மற்றும் நான் எப்போதுமே போராடி வருகிறோம்.

    அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அர்ப்பணித்துள்ளது. அனைவருடைய சிறந்த எதிர்காலத்திற்காகவும், ஒன்றிணைந்து வலுவான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை கட்டமைக்க காங்கிரஸ்க்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு சோனியா காந்தி அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

    • அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிய அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்றால், தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் குறித்து பரிசீலனை செய்யப்படும். இது தொடர்பாக இரு தரப்பினரும் மே 7-ந்தேதி (இன்று) தயாராக வரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அதன்படி இன்று மதியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இது தரப்பினரும் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். வாதங்கள் முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கவில்லை.

    கெஜ்ரிவால் தொடர்பான வழக்கு நாளை மறுதினம் அல்லது அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வருகிற 20-ந்தேதி வரை நீட்டித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

    • வீடியோ இணையத்தில் வைரலாகி 96 லட்சம் விருப்பங்களை குவித்தது.
    • வீடியோவை பார்த்த பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா சிறுவனுக்கு உதவ முன் வந்தார்.

    டெல்லியின் கிழக்கு விஹார் போலீஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் ரொட்டிக்கடை நடத்தும் 10 வயது சிறுவன் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிது.

    சரப்ஜித் சிங் என்ற உணவு பதிவர் ஒருவர் அந்த கடைக்கு சென்றுள்ளார். கடையில் இருந்த 10 வயது சிறுவன் ஜஸ்பிரீத்திடம் உனது தந்தை எங்கே என்று கேட்க... அதற்கு ஜஸ்பிரீத் எனது தந்தை சமீபத்தில் உடல் நலப்பாதிப்பால் உயிரிழந்து விட்டார். அதன் பிறகு எனது தாயார் என்னையும், எனது சகோதரியையும் தவிக்க விட்டு விட்டு சென்று விட்டார். இதனால் நானும், எனது சகோதரியும் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். பின்னர் வாழ்வாதாரம் கருதி எனது தந்தையின் கடையை நானே நடத்த தொடங்கி விட்டேன். என் தந்தையிடம் இருந்து எக்ரோல் மற்றும் சிக்கன் ரொட்டி வகைகளை செய்ய பழகி இருந்தேன். தற்போது பல்வேறு வகையான ரொட்டி வகைகளை விற்பனை செய்கிறேன். வருபவர்கள் எல்லோருமே நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர் என கூறுகிறார்.

    அவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 96 லட்சம் விருப்பங்களை குவித்தது. வீடியோவை பார்த்த பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா சிறுவனுக்கு உதவ முன் வந்தார். இது தொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தைரியம், உன் பெயர் ஜஸ்பிரீத். ஆனால் அவரது கல்வி பாதிக்கப்பட கூடாது. யாரேனும் அவரது தொடர்பு எண்ணில் இருந்தால் பகிரவும். ஜஸ்பிரீத்தின் கல்விக்கு ஆதரவு அளிப்பதற்கான வாய்ப்புகளை எனது அறக்கட்டளை செய்யும் என கூறியுள்ளார்.

    • ஒவ்வொரு நாளும் மக்களுக்காக உழைக்கப்போகிறேன்.
    • ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு நான் ஒரு நாள் கூட வீணடிக்கமாட்டேன்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் பற்றி வழக்கமாக வெளிநாடுகள் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கும். ஆனால் இந்த தடவை அதில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது.

    இந்திய தேர்தலை சீர்குலைக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்கின்றன. ஆனால் அந்த வெளிநாட்டு சக்திகளின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. அவர்களால் இந்த விசயத்தில் வெற்றிபெற இயலாது.

    இந்திய மக்கள் மத்தியில் வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கம் ஒருபோதும் எடுபடாது. நெருக்கடி நிலைக்கு பிறகு இந்தியாவில் குறிப்பாக ஏழைகள் ஜனநாயகத்தை பாதுகாக்கி றார்கள். அவர்கள் வெளி நாட்டு சக்திகளின் சதிக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள்.

    இந்த தடவை தேர்தலில் ஜெயித்தால் நான் சர்வாதிகாரி ஆகி விடுவேன் என்று சிலர் திட்டமிட்டு பிரசாரம் செய்கிறார்கள். அவர்களுடைய ஆட்சியை யும், அவர்களது மூதாதை யர்கள் செய்ததையும் எனது ஆட்சியையும் ஒப்பிட்டு பார்க்கட்டும். அவருடைய (ராகுல்காந்தி) பாட்டி என்ன செய்தார்? அவருடைய பெரிய தாத்தா என்ன செய்தார்?

    மோடி கட்சியின் ஆட்சியில் என்ன செய்யப்பட்டது? இதை ஒப்பிட்டு பார்த்தால் யார் சர்வாதிகாரி என்பது தெரிந்து விடும். இதுபற்றி யாராவது விவாதிப்பது உண்டா?

    அரசியல் சட்டத்தில் நேரு முதல் முதலில் பெரிய மாற்றங்கள் செய்தார். இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது என்னவெல்லாம் நடந்தது? இப்போது எனது ஆட்சியில் 10 ஆண்டுகளில் என்ன நடந்தது?

    காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தவறுகள் அனைத்தை யும் பட்டியலிட முடியும். எனது ஆட்சியில் அத்தகைய தவறுகள் ஒன்றைகூட சுட்டிகாட்ட முடியாது. ஜன நாயகம் என்பது எங்களது ரத்த நாளங்களில் ஓடியது. எனவே சர்வாதிகாரி என்ற பேச்சுக்கே இடமில்லை.

    அதுபோல நான் முஸ் லிம்களுக்கு எதிரானவன் என்பது போல சித்தரிக்கி றார்கள். வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே ராமர் கோவில் கட்டுவது, 370-வது சட்ட பிரிவை நீக்குவது, பொது சிவில் சட்டம் கொண்டுவருவது என்று தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டது. அதைத்தான் நாங்கள் இப்போது நிறைவேற்றி உள்ளோம்.

    பா.ஜ.க. அரசின் கொள்கை திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். ஒரு கிராமத்தில் 50 பேருக்கு வீடு தேவை என்றால் 50 பேருக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும். ஜாதி, மதம் பார்த்து எதுவும் நடக்காது.

    அனைத்து ஜாதி, மத மக்களும் அனைத்துவிதமான திட்ட பயன்களும் பெறுவார்கள். இதுதான் சமூகநீதியின் உத்தரவாதம். 2002-ம் ஆண்டு குஜராத்தில் மத கலவரம் ஏற்பட்டபோது நாங்கள் திட்டமிட்டு அதை ஒடுக்கினோம். அதன் பிறகு இன்று வரை மத கலவரம் ஏற்படவில்லை.

    முஸ்லிம்கள் நன்கு சிந்தித்து பார்க்க வேண்டும். நமது நாடு வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இதில் முஸ்லிம்களுக்கு எந்தவிதத்தில் இடையூறு ஏற்பட்டு இருப்பதாக கருத முடியும். முஸ்லிம்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஒவ்வொரு இஸ்லாமியன ரும் இந்தியாவின் எதிர்காலத்தை சிந்தித்து பார்க்க வேண்டும். எந்தஒரு மதத்தை சார்ந்தவரும் கொத்தடிமை போல் வாழ்வதை நாங்கள் அனு மதிக்க மாட்டோம். என்றா லும் சிலர் பயம் காரணமாக திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள்.

    வாரணாசி தொகுதிக்கு 2014-ம் ஆண்டு சென்ற போது நான் அங்கு போட்டியிடுவது என்று கடைசி நிமிடத்தில்தான் முடிவு செய்யப்பட்டது. அங்கு மனுதாக்கல் செய்து முடித்த பிறகு மக்கள் மத்தியில் பேசினேன். அப்போது நான் எனது பேச்சுக்கான குறிப்புகளை தயார் செய்திருக்கவில்லை.

    வாரணாசி மக்கள் மத்தியில் பேசுகையில், `என்னை யாரும் இங்கு அனுப்பவில்லை. கங்கை தாய் என்னை வரவழைத்து தத்து எடுத்து இருக்கிறாள்' என்று கூறினேன். அதை வாரணாசி மக்கள் ஏற்றுக் கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

    கடந்த 10 ஆண்டுகளாக நான் வாரணாசியில் தொடர்ந்து இருக்கிறேன். நான் பேசும்போதெல்லாம் எனது வாரணாசி என்று தான் குறிப்பிடுவேன். எனக்கும், வாரணாசி தொகுதிக்கும் இருக்கும் தொடர்பானது ஒரு தாய்க்கும், மகனுக்கும் இருக்கும் தொடர்பு போன்றது.

    வாரணாசி போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு நான் குஜராத்தில் உள்ள வீட்டுக்கு சென்றபோது எனது தாய் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார். அவர் 2 விசயங்களை என்னிடம் குறிப்பிட்டார். ஒன்று-எப்போதும் ஏழைகளுக்காக உழைத்துக் கொண்டே இரு. 2-வது எந்த காரணத்தை கொண்டும் ஊழலுக்கு இடம் கொடுக்காதே என்று கூறினார்.

    இந்த இரண்டையும் நான் இப்போதும் கடை பிடித்து வருகிறேன். ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் வேட்புமனு தாக்கலுக்கு முன்பு எனது தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்று வருவதை வழக்கத்தில் வைத்திருந்தேன்.

    எனது தாயாரிடம் ஆசி பெறாமல் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பது இப்போதுதான் முதல் தடவை. அதே சமயத்தில் 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் கோடிக்கணக்கான தாய்கள் இருந்து என்னை ஆசிர்வதிக்கிறார்கள்.

    அந்த ஆசியுடன் நான் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்.

    2019-ம் ஆண்டு தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களை பாரதீய ஜனதா பெற்றது. இந்த தடவை ஆந்திரா, ஒடிசா, வடக்கு கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது. எனவே 400 இடங்களை நிச்சயம் எட்டி பிடிப்போம்.

    கர்நாடகாவில் பிரஜ்வால் ரேவண்ணா மீதான குற்றச் சாட்டுகள் தொடர்பாக நான் மவுனமாக இருப்பதாக விமர்சிக்கிறார்கள். இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

    பிரஜ்வால் போன்றவர்க ளின் செயல்களை ஒருபோ தும் பொறுத்துக் கொள்ள இயலாது. என்றாலும் அவர் தொடர்பான ஆயிரக்க ணக்கான வீடியோக்கள் ஒரே நாளில் திட்டமிட்டு வெளியிடப்பட்டதுதான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    காங்கிரஸ் கட்சியினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வீடியோக்களை தொகுத்து உள்ளனர். தேர்தல் சமயத்தில் சதிதிட்டத்துடன் அந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    3-வது முறை பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. அதற்கான திட்டமிடலில் நான் ஈடுபட்டுள்ளேன். தேர்தலுக்கு பிறகு நான் மிக முக்கியமான பெரிய முடிவுகளை எடுக்க உள்ளேன். அந்த முடிவு களில் இருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை.

    ஆட்சி அமைத்ததும் முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய திட்டப்பணிகள் குறித்து வரையறை செய்யப்பட்டுவிட்டது. ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு நான் ஒரு நாள் கூட வீணடிக்கமாட்டேன். ஒவ்வொரு நாளும் மக்களுக்காக உழைக்கப்போகிறேன்.

    எனது நாடு எந்த ஒரு சிறிய விசயத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். கொள்கை முடிவுகளை செய்வதில் ஏற்பட்ட தாமதங்களால்தான் இந்தியாவில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இனி அத்தகைய நிலை இருக்காது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி 14-ந்தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
    • தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26, மே 7, 12, 20 25, மற்றும் ஜூன் 1-ந்தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணை யம் அறிவித்தது.

    அதன்படி கடந்த மாதம் 19 மற்றும் 26-ந்தேதிகளில் முதல் 2 கட்ட தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. இன்று (மே 7-ந்தேதி) 3-வது கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் நடந்து வருகிறது.

    அடுத்து 4-வது கட்ட தேர்தல் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. 96 தொகுதிகளில் 4-வது கட்ட தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    வருகிற சனிக்கிழமை 96 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது. இந்த நிலையில் 5-வது, 6-வது கட்டங்களுக்கான தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் இறுதி 7-வது கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை இன்று (செவ்வாய்க்கிழமை) தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன் காரணமாக 57 தொகுதிகளில் 7-வது கட்ட தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    7-வது கட்ட தேர்தல் நடக்கும் 57 தொகுதிகளில் பீகாரில் 8 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்ட் டில் 3 தொகுதிகள், ஒடிசா வில் 6 தொகுதிகள், பஞ்சாப் பில் 13 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகள், சண்டிகரில் ஒரு தொகுதி இடம் பெற்று உள்ளன.

    இந்த 8 மாநிலங்களில் பஞ்சாப்பில் 13 தொகுதி களுக்கும், இமாச்சல பிரதே சத்தில் 4 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த 8 மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவுக்கு இப்போதே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 7-வது கட்ட தேர்தலுக்கான 57 தொகுதிகளிலும் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 14-ந்தேதி கடைசி நாளாகும். 15-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 17-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.

    பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி 7-வது கட்ட ஓட்டுப்பதிவில் இடம் பெற்றுள்ளது. அங்கு இன்று சில சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    பிரதமர் மோடி மனுதாக்கலுக்கு கடைசி நாளான 14-ந்தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். அதன் பிறகு 18 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறும்.

    • 4 இடங்களை வகிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
    • ராஜஸ்தான் ராயல்சும், டெல்லி கேப்பிட்டல்சும் இன்று மல்லுகட்டுகின்றன.

    புதுடெல்லி, மே 7-

    ஐ.பி.எல். போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையி லான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமை யிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளி கள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

    ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 12 ரன்னில் ராஜஸ்தானிடம் தோற்று இருந்தது. அதற்கு டெல்லி கேப்பிடல்ஸ் பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி டெல்லியை மீண்டும் வீழ்த்தி 9-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்று ஆர்வத்தில் உள்ளது.இந்த ஆட்டத்தில் ராஜஸ் தான் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் முதல் அணியாக இருக்கும். இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் 15-ல், டெல்லி 13-ல் வெற்றி பெற்றுள்ளன.

    இரு அணிகளும் வெற்றிக் காக கடுமையாக போராடு வார்கள் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப் பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மே 10-ந்தேதி விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் விவரம் வெளியிடப்படும்.
    • விண்ணப்பங்களை திரும்பப் பெற மே 17-ந்தேதி கடைசி நாளாகும்.

    96,317 கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஏலம் ஜூன் மாதம் 6-ந்தேதியில் இருந்து நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸின் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றன. இந்த மூன்று நிறுவனங்களும் விண்ணப்பத்துள்ளன.

    கடந்த 2022-ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதானி குரூப் நிறுவனம் விண்ணப்பத்திருந்தது. தற்போது புதிதாக எந்த நிறுவனமும் ஏலத்திற்காக விண்ணப்பிக்கவில்லை.

    800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெரட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ், 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளின் அனைத்தும் ஸ்பெக்டரம் ஏலத்தின் ஒரு பகுதியாகும். மொத்த அலைவரிசைகள் அடிப்படை விலை 96317 கோடி ரூபாய் ஆகும்.

    இந்த ஸ்பெக்ட்ரம் 20 வருடத்திற்கு ஒதுக்கப்படும். ஏலம் எடுத்த நிறுவனம் 20 சம வருடாந்திர தவணையில் பணத்தை செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் 10 வருடம் முடிவடைந்த நிலையில், வரவிருக்கும் ஏலத்திற்காக சரண்டர் செய்யும் வாய்ப்பை தகவல்தொடர்பு துறை வழங்கியுள்ளது.

    மே 10-ந்தேதி விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் விவரம் வெளியிடப்படும். விண்ணப்பங்களை திரும்பப் பெற மே 17-ந்தேதி கடைசி நாளாகும். மே 20-ந்தேதி ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

    • தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து நிதி பெற்றதாக கவர்னருக்கு புகார் வந்துள்ளது.
    • பா.ஜனதாவின் கட்டளையின்படி மேலும் ஒரு சதி- ஆம் ஆத்மி

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் கிடைக்காமல் உள்ளார்.

    இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (Sikhs for Justice) இடம் இருந்து அரசியல் நிதி பெற்றதாக வந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் என்ஐஏ விசாரணைக்கு டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்துள்ளார்.

    இது பா.ஜனதாவின் உத்தரவு அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு எதிரான சதி என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    கவர்னர் மாளிகை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், "கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தேவேந்திர பால் புல்லர் விடுதலையை எளிதாக்குவதற்கான காலிஸ்தான் குரூப்பிடம் இருந்து 16 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றதாக, கவர்னருக்கு புகார் வந்துள்ளது. புகார்தாரரால் சமர்ப்பிக்கப்பட்ட மின்னணு ஆதாரங்களுக்கு தடயவியல் பரிசோதனை உட்பட விசாரணை தேவைப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.

    டெல்லியில் 1993-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தேவேந்திர பால் புல்லர். இவருக்கு தண்டனை வழங்கப்பட்டு அமிர்தசரஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தடா நீதிமன்றம் இவருக்கு 2001-ம் ஆண்டு மரண தண்டனை வழங்கியது. அதை உச்சநீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனையாக குறைத்தது.

    • குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ள நிலையில், சூரத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ்குமார் சந்திரகாந்த் போட்டியின்றி தேர்வானார்.
    • கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் ஏற்கனவே 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் (ஏப்.19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, இரு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன.

    3-வது கட்டமாக, அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தாத்ரா-நகர்ஹவேலி மற்றும் டாமன்-டையூ, ஜம்மு-காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும். மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

    குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ள நிலையில், சூரத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ்குமார் சந்திரகாந்த் போட்டி யின்றி தேர்வானார். மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

    கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் ஏற்கனவே 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இம்மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் நிறைவடைந்தது.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா (காந்திநகர்), மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (குணா), சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் (மெயின்புரி), மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே (பாரமதி) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாவர். இத்தேர்தலில் மொத்தம் 1,351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    ×