என் மலர்
- மியான்மரில் நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.
- தாய்லாந்திலும் அதிர்வுகள் உணரப்பட்டது.
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் தரையில் இருந்து 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உணரப்பட்டது. அங்கு சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தப்படி வெளியே ஓடி வந்தனர். பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. ஆனால் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அதிக சேதங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திலும் உணரப்பட்டது.
- சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
- குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
* மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக, இதுவரை 800-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கிக் கொல்லப்பட்டு உள்ளனர்.
இப்போது வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. குஜராத் மற்றும் இதர மாநில மீனவர்களைப் போலவே, ஒன்றிய அரசின் பிரதமர், தமிழக மீனவர்களையும் சமமாகக் கருதித் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
* பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது. புதிய விமான நிலையத்தை யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லாத வண்ணம், விவசாய நிலங்களை, நீர்நிலைகளை, இயற்கைச் சூழல்களை அழிக்காமல், வேறு இடத்தில்தான் அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
* அனைத்து மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்தப் பள்ளியிலும் படிக்கலாம், எந்த மொழியையும் கற்கலாம். அது அவரவரின் தனிப்பட்ட உரிமை என்பதில் தமிழக வெற்றிக்கழகம் உறுதியாக உள்ளது. ஆனால், கூட்டாட்சி உரிமையை மீறி, மாநில சுயாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையைக் கேள்விக் குறியாக்கி, வேற்று மொழியை வலுக்கட்டாயமாக அரசியல் ரீதியாகத் திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. முரட்டுப் பிடிவாதத்துடன் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டுக்கு எப்போதும் இருமொழிக் கொள்கை தான் என்பதை இப்பொதுக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.
* மாநிலங்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் தொகுதிகளான 543 என்ற எண்ணிக்கையே காலவரையின்றி தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். எனவே தொகுதி மறுசீரமைப்பு முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
* ஜி.எஸ்.டி. மூலம் நிதி அதிகாரத்தையும், நீட் மூலம் கல்வி அதிகாரத்தையும், மும்மொழித் திணிப்பின் மூலம் மொழி அதிகாரத்தையும், தொகுதி மறு சீரமைப்பு என்ற முறையில் மாநில அரசுகளிடையே பிளவினை ஏற்படுத்த முயல்வதையும், வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் கொள்கைகளை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறிப்பதையும் இப்பொதுக் குழு கண்டிக்கிறது. அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவியாமல், மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருடக் கணக்காகப் போராடி வருகின்றது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம், தன் மனப்பூர்வமான ஆதரவை இப்பொதுக்குழு வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறது.
* ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்த இயலாத தி.மு.க. அரசு, தன் பொறுப்பற்ற தன்மையை ஒப்புக்கொண்டு, மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
* டாஸ்மாக் முறைகேடு குறித்து, முறையான விசாரணை நடத்தி, உண்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, பாரபட்சமின்றித் தண்டிக்க வேண்டும்.
* சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல், சமூக நீதி, இடஒதுக்கீடு என்று ஆளும் தி.மு.க.வினரும், பா.ஜ.க.வினரும் மேடைக்கு மேடை பேசி, மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கபட நாடகமாடுவதை நிறுத்தி விட்டு, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்.
* இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகத் தங்கள் நாட்டிலேயே வாழ்வதற்கும், அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கும் நிரந்தரத் தீர்வு காண, ஐ.நா. சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக சமுதாயத்திற்கு இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
* சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு பகுதியில், தமிழக அரசால் பெரும் பொருட்செலவில், உலகத் தர வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள பன்னாட்டு அரங்கத்திற்குத் தந்தை பெரியாரின் பெயரைச் சூட்டிப் பெருமை சேர்க்க வேண்டும்.
* தமிழக வெற்றிக் கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோர் காட்டிய கொள்கை வழியில் சமரசமின்றி மக்கள் பணியில் ஈடுபடுவதே முக்கியக் கடமையாகும்.
* தலைவருக்கே முழு அதிகாரம். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவையும், பேரன்பையும் பெற்றுள்ள நம் கழகத் தலைவர், தன்னுடைய மக்கள் சந்திப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்கும், பரிபூரண அதிகாரத்தையும் உரிமையையும் நம் கழகத் தலைவருக்கு அளிப்பது என இப்பொதுக்குழு முழு மனதுடன் முடிவெடுக்கிறது.
* தலைமைக் கழக நிர்வாகிகள், கழக விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக விதிகளின்படி கழகத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைத்து நிர்வாகிகளுக்கும் இப்பொதுக்குழு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
* திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி என்கிற பி.அந்தோணி சேவியர் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட மாணவரணித் தலைவர் யு.பி.எம்.ஆனந்த் ஆகியோரின் மறைவுக்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
* பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை. மாநில அரசுக்குச் சுமார் 50 ஆயிரம் கோடி வருமானம் வரும் டாஸ்மாக் நிறுவனத்தினாலும், கட்டற்ற போதைப் பொருட்களின் புழக்கத்தினாலும் தமிழகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி வருகிறது. பள்ளிச்சிறார்களே போதைக்கு அடிமையாகி, வளரும் தலைமுறையே போதையால் சீரழிந்து வருகிறது. இந்தப் போதைப் பொருட்களால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளன.
* மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்காமல், போதைப் பொருட்கள் தமிழகத்தில் சரளமாகப் புழங்கும் நிலையை உரு வாக்கியுள்ள தி.மு.க. அரசை தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
* பாலியல் புகார்களை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். அதில் முன்னாள் பெண் நீதிபதிகள் மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் இடம் பெற வேண்டும்.
* குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள், 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
* தற்போதைய அரசு இதைச் செய்யத் தவறும் பட்சத்தில், இந்த அரசுக்குத் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அமையும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தனித்துறை உருவாக்கப்படும் என இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
* இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துகளைப் பதிவு செய்து வெளிப்படைத் தன்மையுடன் நிர்வகிப்பது என்ற காரணத்தைக் கூறி, வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திடீரெனக் கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கூட்டுக் குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விட, ஆளும் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு பலமாக இருந்த காரணத்தினால் புதிய திருத்தங்களைக் கூட்டுக்குழு ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து, கூட்டுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், வக்பு சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டன. இதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய நிபந்தனைகளை உருவாக்கி, இஸ்லாமிய மக்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும், இதுவரை அவர்கள் பயன்படுத்தி வந்த உரிமைகளை நசுக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் சட்டசபைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளன. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வக்பு சட்டத் திருத்த மசோதா வழியாகச் சிறுபான்மை மக்களை அச்சத்தில் ஆழ்த்தக் கூடாது என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மக்களை சந்திக்கும் முன்பே த.வெ.க.வின் வாக்கு சதவீதம் 20 விழுக்காடு இருக்கும் என கூறுகிறார்கள்.
- தலைவர் விஜய் மக்களை சந்தித்தால், வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்?
சென்னை:
சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பொதுக்குழுவில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
ஊழல் அமைச்சர்கள், ஊழல் குடும்பத்தை தூக்கி எறிய தயாராகிவிட்டோம். பலமான உட்கட்டமைப்போடு தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மாநில அரசு மூட பார்த்தது.
டெல்லியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சிகிறார்கள்.
அண்ணாமலையை செட் செய்து தி.மு.க. வைத்துள்ளது. புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. எங்கள் கட்சியையும், தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டுவோம்.
மக்களை சந்திக்கும் முன்பே த.வெ.க.வின் வாக்கு சதவீதம் 20 விழுக்காடு இருக்கும் என கூறுகிறார்கள். தலைவர் விஜய் மக்களை சந்தித்தால், வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்?
இன்றுவரையும் மக்களால், கட்சியால் பாசமுடன் அழைத்த நம்முடைய தளபதியை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்.
எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தியது போல், தற்போது த.வெ.க. தலைவர் விஜயை இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க. பற்றிய உண்மை தெரியவந்த காரணத்தினால் தான் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.
Work From Home அரசியல் இல்லை. உங்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் அரசியல். உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம்.
என்ன சார் போராட்டம் நடத்துறாங்க? எல்லாம் நடிக்கிறாங்க! வெயிட் பண்ணுங்க... இன்னும் ரெண்டே மாசம்... உண்மையான போராட்டம்ன்னா என்னன்னு விஜய் காண்பிப்பார் என்றார்.
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி நேற்று மாலை வெளியானது. ரசிகர்கள் பலரும் காலை முதல் எதிர்ப்பார்த்து காத்து இருந்து படங்களை திரையரங்குகளில் பார்த்து கொண்டாடினர்.
திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் நேற்று மாலை காட்சியில் இருந்து தொடங்கினாலும் படம் நேற்று மட்டும் 3.25 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. தற்பொழுது திரைப்படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளதால் படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இந்த வார இறுதியில் திரைப்படம் பல கோடிகளை வசூலிப்பது உறுதி.
- தி.மு.க. அரசை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளுக்கு தான் அதிக வாய்ப்பு தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- மதுரை காவலர் கொலையில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் காவலர் கொலை தொடர்பாக அவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
* சட்டசபையில் என்ன பேச போகிறோம் என்பதை அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே சபாநாயகரிடம் கூற வேண்டும்.
* என்ன பிரச்சனை எழுப்பப் போகிறோம் என்பதை அ.தி.மு.க.வினர் சொல்லவில்லை.
* அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
* விதிகளை மீறி அ.தி.மு.க.வினர் பேச முற்பட்டனர்.
* அ.தி.மு.க.வினர் சட்டமன்றத்தை அவமரியாதை செய்தனர்.
* தி.மு.க. அரசை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளுக்கு தான் அதிக வாய்ப்பு தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* காவலர் பணியில் இல்லாதபோது தனிப்பட்ட பகையில் மதுரையில் காவலர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
* மதுரை காவலர் கொலையில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
* பொதுமக்கள் இடையே அச்சத்தை உருவாக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
- கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியானது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.
ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
'எம்புரான்' படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனரும், நடிகருமான பிருத்வி ராஜ், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் 'எம்புரான்' நேற்று வெளியானது. கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியானது.

இந்த நிலையில், 'எம்புரான்' வெளியான முதல் நாளான நேற்று 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மலையால சினிமாவில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் முதல் இடத்தை எம்புரான் பிடித்துள்ளது.
இந்நிலையில் படத்தை குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியதை பற்றி பகிர்ந்துள்ளார் மோகன்லால். அதில் அவர் " கமல்ஹாசன் என்னை அழைத்து படத்தின் டிரெய்லரை பார்த்தேன் மிக அற்புதமாக இருக்கிறது. படத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் படம் கண்டிப்பாக வெற்றியடையும். அடிக்கடி நாங்கள் பேசிக்கொள்வது வழக்கம்" என கூறியுள்ளார்.
- போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- மக்களுக்காக சட்டமன்றம், சட்டமன்றத்திற்காக மக்கள் அல்ல.
சட்டசபையில் கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் அவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சட்டசபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து, காவலர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்களை வெறியேற்றினர்.
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜீரோ ஹவரில் பேச அனுமதி கேட்டபோது அனுமதி அளிக்கவில்லை.
* மதுரையில் காவலர் கொலை தொடர்பாக பேச அனுமதி அளிக்கவில்லை.
* தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை சுதந்திரமாக நடக்கிறது.
* காவலரையே கொல்லும் அளவிற்கு தமிழகத்தில் கஞ்சா போதை அதிகரித்துள்ளது.
* போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* காவல்துறையினர் இனியாவது காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும்.
* மக்களின் பிரச்சனைகளை பேச அனுமதிக்கவில்லை.
* துணை முதலமைச்சர் பேசும்போது இடையூறு இருக்கக்கூடாது என்பதற்காக வெளியேற்றம். இன்றைய தினம் திட்டமிட்டு எங்களை வெளியேற்றி உள்ளனர்.
* தமிழக அரசு மக்களை பற்றி கவலைப்படாத அரசு.
* மக்களுக்காக சட்டமன்றம், சட்டமன்றத்திற்காக மக்கள் அல்ல.
* தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
* சர்வாதிகார போக்கை சட்டமன்றத்தில் அரங்கேற்றி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாத மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- நிர்வாகிகள் தங்களின் செல்போன்களை மண்டபத்தின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை.
சென்னை:
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது.
தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக கட்சித் தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்கவிழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை முதலே பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் திருவான்மியூருக்கு வரத் தொடங்கினார்கள். காலை 7 மணிக்கெல்லாம் நிர்வாகிகள் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் குவிந்னர். அவர்கள் அனைவரும் தோளில் கட்சி நிற துண்டு அணிந்திருந்தனர்.
காலை 7.30 மணிக்கு நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை பரிசோதித்து உள்ளே அனுப்புவதற்காக 12 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 10 மாவட்டத்துக்கு ஒரு கவுண்டர் அமைக்கப்பட்டு இருந்தது.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் எந்த கவுண்டர் வழியாக உள்ளே செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு பலகை நுழைவு வாயிலிலேயே வைக்கப்பட்டு இருந்தது. நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கவுண்டர்கள் வழியாக உள்ளே சென்றனர்.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அனைவருக்கும் கியூ.ஆர். கோடுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. அந்த அடையாள அட்டை வைத்திருந்த நிர்வாகிகள் மட்டுமே பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று உள்ளே சென்றனர். கூட்டத் தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 2,500 பேர் பங்கேற்று உள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மாவட்ட செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு இணை செயலாளர், 2 துணை செயலாளர்கள், 10 பொதுக்குழு உறுப்பினர்கள், ஒரு பெண் பிரதிநிதி என மொத்தம் 16 பேர் வந்தனர்.

மாவட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாத மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகள் தங்களின் செல்போன்களை மண்டபத்தின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. இதையடுத்து செல்போன்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு சென்றனர்.
பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்குள் ஆண்கள் மற்றும் பெண்கள் அமர தனி வரிசை ஒதுக்கப்பட்டு இருந்தது. மாவட்ட செயலாளர்களுக்கு தனி வரிசையும், மாநில நிர்வாகிகளுக்கு தனி வரிசையும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சித் தலைவர் விஜய் பனையூரில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்கு வந்தார். அவர் பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு காரில் வந்தபோது வழிநெடுக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் திரண்டு நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மேலும் மண்டப நுழைவு வாயிலில் விஜய்க்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட 82 கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் 2 குதிரைகளில் வீரர்கள் போல அமர்ந்திருந்த கட்சி தொண்டர்களும் வரவேற்பு அளித்தனர். மண்டபத்தின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 2 செயற்கை யானைகள் தும்பிக்கையை தூக்கியபடி விஜய்க்கு வரவேற்பு அளித்தது. பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தின் நுழைவு வாயில் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.
காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.
மேடையின் நடுவில் கட்சித்தலைவர் விஜய் அமர்ந்திருந்தார். மேலும் மேடையில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் வெங்கட்ராமன், இணை செயலாளர் தாஹிரா, துணை செயலாளர் சி.டி. நிர்மல் குமார், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், உறுப்பினர் சேர்க்கை பிரிவு செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

முதலில் கட்சியின் கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. அதன் பிறகு கட்சியின் கொள்கை தலைவர்கள் பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் உருவப்படத்துக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். அதன் பிறகு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் தாமு என்கிற தாமோதரன் வரவேற்றார்.
பின்னர் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பேசினார்கள். அதன் பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது பற்றி முறையாக விசாரித்து குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எனவே சட்டம்-ஒழுங்கில் தனி கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரந்தூர் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது. எனவே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என்பது உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு மட்டும் அல்ல, எந்த திணிப்பும் கொண்டுவர முடியாது.
- ஊர்தோறும் திட்டங்களை கொண்டு சேர்ப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை:
தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
* முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி எனது காரில் ஏறியபோது நான் ரூட் மாறமாட்டேன் என்றார். ஆனால் டெல்லியில் மாறிவிட்டார்.
* டெல்லியில் 3 கார்கள் மாறித்தான் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார்.
* பாசிஸ்டுகள் எத்தனை ரூட்டுகள் போட்டு அடக்க நினைத்தாலும் பட்ஜெட்டில் ஒரே ஒரு ரூ போட்டு அலற செய்தவர் முதலமைச்சர்.
* எதிர்க்கட்சி தலைவரானாலும் அவருடன் கூட்டணி வைக்க துடிப்பவர்களும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்க.
* தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு மட்டும் அல்ல, எந்த திணிப்பும் கொண்டுவர முடியாது.
* ஊர்தோறும் திட்டங்களை கொண்டு சேர்ப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* இந்திய ஜனநாயகத்தின் போர்க்குரல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* நான் பதில் சொல்லும் போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருப்பதில்லை என்றார்.
- சென்னை புறநகரில் மட்டும் 1.36 லட்சம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
- விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
* காலை உணவு திட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் பங்களிப்பு உள்ளது.
* இந்த ஆண்டு சுயஉதவி குழுவினருக்கு ரூ.37,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* சென்னை புறநகரில் மட்டும் 1.36 லட்சம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
* வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.O விரைவில் தொடங்கப்பட்டு விடுபட்ட ஒன்றியங்களும் சேர்க்கப்படும்.
* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும்.
* விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது என்றார்.