என் மலர்
செய்திகள்
- கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்து பேசுவார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 6.50 மணிக்கு டெல்லி சென்றார். டெல்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இன்று டெல்லியில் தங்கி இருக்கும் அவர் மத்திய மந்திரிகளை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22-ந்தேதி தென்மாநில கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த இருக்கிறார். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர் டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்து பேசுவார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இன்று முழுவதும் டெல்லியில் இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை மாலை சென்னை திரும்புகிறார்.
- லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
- பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பின்மையால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து விவாதிக்க விஜய் வசந்த் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
வேலையின்மை காரணமாக லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இளைஞர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் என, இதன் பாதிப்புக்கு உள்ளாகி திணறும் மக்கள் ஏராளம்.
குறிப்பாக கிராமப்புறங்களில் வேலையின்மை மிக அதிகமாக ஏற்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஏற்ற தாழ்வை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.
மேலும் படித்து பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர். மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முன்வரவில்லை.
இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள இளைஞர்கள் வேலையின்றி அலைவது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மேலும் வேலை வாய்ப்புகள் இல்லாதது பல சமூக சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
இந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமையும் வண்ணம் அவர்களது திறனை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்க வேண்டியது அரசின் கடமை.
மேலும் தொழில் முனைவோர்களையும் ஊக்கபடுத்தி அவர்கள் தொழில்கள் தொடங்கவும் அவர்கள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டியது கட்டாயம்.
நாட்டில் இன்று நிலவி வரும் இந்த மிக முக்கியமான மக்கள் பிரச்சனையை குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது.
- அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை :
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 27.1.2025 அன்று உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது.
எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும் பொது இடங்களிலும் வைத்துள்ள கழகக் கொடிக் கம்பங்கனை மதுரை உயர்நீதிமன்ற கினை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்கு அகற்றிட வேண்டுமெனவும் அவ்வாறு அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
- சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார்.
- மனைவி, சந்தீப்பை கன்னத்தில் அரைத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தவர் சந்தீப். இவரது மனைவி குஞ்சன்.
கடந்த பல ஆண்டுகளாக சந்தீப்புக்கும் அவரது மனைவி குஞ்சனுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக இருவரும் ஒருவரையொருவர் சந்தேகித்தனர். குஞ்சனிடம் இருந்து சந்தீப் விவாகரத்து பெற விரும்பினார். அவர் ஒரு வழக்கறிஞரைக் கூட அணுகியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மதியம், சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார். ஆனால் குஞ்சன் அதை சாப்பிட மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதத்தில் சந்தீப் மனைவியை தாக்கத்தொடங்கினார்.
மனைவியும் சந்தீப்பை கன்னத்தில் அரைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தீப் மனைவியின் கழுத்தை நெரித்தில் அவர் மயங்கி விழுந்தார்.
பின் தனது மகன்களை கூப்பிட்டு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொன்னார். அவர்கள் சென்றதும் சந்தீப் மனைவியை கொன்றதாக கூறி போலீசில் சரணடைந்தார். குஞ்சன் இறந்துவிட்டதாக மருத்துவர்களும் அறிவித்தனர். சந்தீப்பை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
- ஜாகிர் உசேன் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கொலை வழக்கு மட்டுமல்ல எந்த குற்றத்தில் ஈடுபட்டாலும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டபகலில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த கொலைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் சட்டசபையிலும் இன்று எதிரொலித்தது.
சட்டசபையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது ஜாகீர் உசேன் கொலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
* ஜாகீர் உசேன் பிஜிலி வழிமறித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
* 3 மாதங்களுக்கு முன் உயிருக்கு ஆபத்து என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்படவில்லை.
* ஜாகிர் உசேன் புகார் அளித்த போதே விசாரணை செய்திருந்தால் கொலை நடந்திருக்காது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஜாகிர் உசேன் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதற்கு விளக்கம் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை வழக்கில் ஏற்கனவே 2 பேர் சரண் அடைந்துள்ளனர்.
* ஜாகீர் உசேன் வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருகிறோம்.
* கொலைக் குற்றவாளிகள், பின்னணியில் உள்ளோர் என அனைவரும் நீதியின் முன்பு நிறுத்தப்படுவர்.
* கொலை வழக்கு மட்டுமல்ல எந்த குற்றத்தில் ஈடுபட்டாலும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது.
* சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை தி.மு.க. அரசு அனுமதிக்காது என்றார்.
- ஓய்வுபெற்ற போலீஸ் SI ஜாகீர் உசேன் (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
- ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டிய சமூக ஆர்வலரான ஜகபர் அலி (வயது 58) ஜனவரி மாதம் 17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலையின் பரபரப்பு அடங்குவதற்குள்ளே நெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ஏற்கனவே வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனில் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதனால் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.
ஒருபக்கம் பட்டப்பகலில் கொலைகள் அரங்கேற மறுபக்கம் தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே சாதி ரீதியிலான மோதல்கள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக திருநெல்வேலியில் கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலியில் 285 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக 60 இளம் சிறார்கள் உட்பட 1045 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 392 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாக்குறுதி வெறும் வார்த்தையில் மட்டும் தான் உள்ளதோ என்ற கேள்வி எழுகிறது.
போலீஸ் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்புக் கரம் கொண்டு இத்தகைய பிரச்சனையை தடுப்பார் என்ற மக்களின் எதிர்பார்ப்பில் இன்றுவரை ஏமாற்றமே பதிலாக கிடைத்துள்ளது.
ஜாகிர் உசேனின் படுகொலை 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு.
- அவரது பெயர் மற்றும் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை.
பெங்களூரு:
துபாயில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யாராவ் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து வரலாறு காணாத வகையில் தற்போது பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கத்தாரில் இருந்து நேற்று கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த ஒரு பெண்ணின் உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அதில் 3.2 கிலோ எடை கொண்ட கோகைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.38.4 கோடி ஆகும். இதையடுத்து அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தி வந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவரது பெயர் மற்றும் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை. பெங்களூருவில் அவர் யாரிடம் சேர்க்க போதைப்பொருள் கடத்தி வந்தார் என்றும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
தங்க கடத்தல் வழக்கு பரபரப்பு அடங்குவதற்குள் ரூ.38.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கி இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோப்புகளில் உள்ளவற்றைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று தெரிவித்தார்.
- கியூபா அல்லது சோவியத் யூனியனுக்குத் இடம்பெயர அனுமதி கோரினார் என்பதைக் குறிக்கிறது.
அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த ஜான் எஃப் கென்னடி, 1963-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி டெக்ஸாஸ் மாகாணத்தில் கார் அணிவகுப்பின்போது ஆஸ்வால்டு என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனாலும் அவருடைய படுகொலை குறித்து பல்வேறு கருத்துகள், அதன் பின்னணி போன்றவை குறித்த சந்தேகங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகிறது.

இது தொடர்பான அலுவல் ரீதியான கோப்புகளை அமெரிக்க அரசாங்கம் ரகசியமாக பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதாக அதிபர் டிரம்ப் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 80 ஆயிரம் பக்க ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்த ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு காணக்கிடைக்கிறது.
கோப்புகளில் உள்ளவற்றைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று வெள்ளை மாளிகையின் துணை ஊடகச் செயலாளர் ஹாரிசன் ஃபீல்ட்ஸ் கூறினார். ஆவணங்கள் எந்தவித திருத்தங்களும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புதிதாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் குறிப்பிடத்தக்க பகுதிகள் கொலையாளி லீ ஹார்வி ஆஸ்வேலடின் செயல்பாடுகளை விவரிக்கின்றன.
படுகொலைக்கு சில வாரங்களுக்கு முன்பு மெக்சிகோவில் உள்ள சோவியத் மற்றும் கியூப தூதரகங்களுக்கு ஆஸ்வேல்டு மேற்கொண்ட பயணங்களை CIA குறிப்புகள் கோடிட்டுக் காட்டுகின்றன. அவர் கியூபா அல்லது சோவியத் யூனியனுக்குத் இடம்பெயர அனுமதி கோரினார் என்பதை இது குறிக்கிறது.
படுகொலைக்கு ஒரு வருடம் கழித்து, அதிபர் லிண்டன் பி ஜான்சன் விசாரிக்க நிறுவிய வாரன் கமிஷன், ஆஸ்வேல்டு தனியாக செயல்பட்டதாகவும், சதித்திட்டத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் முடிவு செய்தது.

ஆனால் தற்போது வெளியாகி உள்ள கோப்புகளில் உள்ள அறிக்கைகள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில் அந்த வாதம் பொருந்தவில்லை. இந்த ஆவணங்கள், கென்னடியின் வாகன அணிவகுப்புக்கு அருகில் உள்ள ஒரு உயரமான பகுதியான புல்வெளி மேட்டில் இருந்து மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று கூறுகின்றன. எனவே ஆஸ்வேல்டு தனியாக செயல்பட்டார் என்பதில் இருந்து இது முரண்படுகிறது.
ரஷியாவின் உளவுத்துறையான KGB ஆஸ்வேல்டை கண்காணித்து வந்ததாக தற்போது வெளியான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க உளவுத்துறையான CIA அறிக்கை ஒன்று , 1963 இல் செப்டம்பரில் மெக்சிகோ நகரத்தில் உள்ள சோவியத் தூதரகத்தில் ஒரு KGB அதிகாரியுடன் ஆஸ்வேல்டு பேசியதைக் குறிக்கும் தொலைபேசி அழைப்பு ஒன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதன் மூலம் கேஜிபியுடன் ஆஸ்வேல்டின் ஒத்துழைப்பையோ அல்லது வழிநடத்துதலையோ உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் ஆஸ்வால்டை KGB நெருக்கமாகக் கண்காணிப்பது உறுதிப்படுத்த முடிகிறது.
இதுபோல பல்வேறு புதிய தகவல்கள் தற்போது வெளியான ஆவணங்களில் தெரியவந்துள்ளது. இந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணிகளில் அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஆர்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

- முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆந்திராவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
- ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் 27 பேர் 100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
திருப்பதி:
தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சொத்து விவரம் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்த ஆய்வு நடத்தியது.
இதில் நாட்டில் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆந்திராவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்துக்களுடன் 5-வது இடம் பிடித்துள்ளார்.
மந்திரி பி.நாராயணா ரூ.824 கோடியுடன் 6-வது இடத்திலும், முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ரூ.757 கோடியுடன் 7-வது இடத்திலும் பிரசாந்தி ரெட்டி எம்.எல்.ஏ என்பவர் ரூ.716 கோடியுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.
சந்திரபாபு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் ரூ.542 கோடி சொத்துக்களுடனும், நடிகர் பாலகிருஷ்ணா ரூ.482 கோடி மற்றும் மாதவி எம்.எல்.ஏ. ரூ.388 கோடியுடன் முதல் 20 பேர் கொண்ட பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
நாட்டில் உள்ள பணக்கார எம்.எல்.ஏ. க்களில் முதல் 20 பேரில் ஆந்திராவைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர். துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தேசிய சொத்து மதிப்பில் 66-வது இடத்தில் உள்ளார்.
ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் 27 பேர் 100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
சொத்து மதிப்பில் மட்டுமல்லாது குற்ற வழக்குகளிலும் ஆந்திராவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அதிகம் பேர் இடம்பெற்றுள்ளனர்.
ஆந்திராவில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 138 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தேர்தலில் மனுத்தாக்களின் போது தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் 9, தெலுங்கானா 82, பீகார் 158 ,மகாராஷ்டிரா 127, தமிழ்நாட்டில் 132 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
- 9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
- புதுச்சேரியில் அடுத்தம் மாதம் 14-ந்தேதி முதல் ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-மந்திரி ரங்கசாமி தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து 7-வது நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வட்டம் தொடங்கியதும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய முதல்-மந்திரி ரங்கசாமி, நியாய விலைக்கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், புதுச்சேரியில் அடுத்தம் மாதம் 14-ந்தேதி முதல் ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
- பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன.
- சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.
நாகர்கோவில்:
கருங்கல் அருகே உள்ள மாங்கரை தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 24), எலக்ட்ரீசியன். இவர் கடந்த 16-ந்தேதி வேலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள காட்டாற்று குளத்தில் சஜின் பிணமாக கிடந்தார்.
அவரது உடலை போலீ சார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன. எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.
இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் சஜினின் உறவினர்கள் இன்று காலை கருங்கல்-தொலையா வட்டம் சாலையில் மாங்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- அனுமதிக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
- சிலிண்டரை நுகர்வோர்கள் வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. ஆண்டுக்கு 12 கியாஸ் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆண்டுக்கு 15 சிலிண்டர் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யும் போது 'அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான பதிவை ஏற்க முடியாது. ஏனெனில் ஏற்கனவே இந்த ஆண்டு ஒதுக்கீட்டான 213 கிலோவை நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள்' என்று ஆயில் நிறுவனம் சார்பில் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.
இதனால் ஒரு ஆண்டுக்கு 15 கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஒருவருக்கு ஆண்டுக்கு 15 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வரை வழங்கப்படும். அதில் 12 சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்கும். எனவே அனுமதிக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஏனென்றால் அந்த சிலிண்டரை நுகர்வோர்கள் வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே 15 கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் வாங்க வேண்டும் என்றால் அதற்கான காரணத்தை விளக்கி கியாஸ் வினியோகம் செய்யும் நிறுவனத்திடம் கடிதம் கொடுத்தால் கூடுதல் சிலிண்டர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டாம். ஆனால் 15 சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்று கூறுவதால் பலர் பாதிக்கப்படலாம்.
எனவே ஒவ்வொரு முறை சிலிண்டர் வழங்கும் போதும் அது அந்த ஆண்டின் எத்தனையாவது சிலிண்டர் என்ற விவரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.