என் மலர்tooltip icon
    • ஆட்டோ டிரைவர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.
    • நகரில் முக்கிய இடத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்த சதி நடந்திருப்பதற்கான பரபரப்பு தகவல் தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூரு சம்பிகேஹள்ளி அருகே தனிச்சந்திராவில் உள்ள ஒரு ஓட்டலில் அப்துல் ரகுமான் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை செய்தார். அவரிடம், ஆதார் அடையாள அட்டை கொடுக்கும்படி உரிமையாளர் கேட்டு வந்துள்ளார். ஆனால் அப்துல் ரகுமான் கொடுக்காமல் இருந்ததால், அவரது உடைமைகள் இருந்த பையில் சக ஊழியர் ஆதார் அட்டையை தேடிய போது ஒரு கையெறி குண்டு சிக்கி இருந்தது.

    கடந்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி இந்த சம்பவம் நடந்திருந்தது. இதையடுத்து, ஓட்டல் ஊழியர் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கையெறி குண்டு செயலிழக்க செய்யப்பட்டது. அதே நேரத்தில் கையெறி குண்டுவின் உதிரி பாகங்கள் தடய அறிவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. கைதான அப்துல் ரகுமானை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.

    மேலும் மத்திய விசாரணை அமைப்பினர், அப்துல் ரகுமானிடம் தீவிரமாக விசாரித்தார்கள்.

    அப்போது பெங்களூரு அரண்மனை மைதானத்தில் வைத்து ஒரு நபர் தன்னிடம் கையெறி குண்டை கொடுத்து, அரண்மனை அருகே உள்ள ஒரு கடையில் வைக்கும்படி கூறியதாக அப்துல் ரகுமான் கூறியுள்ளார். இதன்மூலம் நகரில் முக்கிய இடத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்த சதி நடந்திருப்பதற்கான பரபரப்பு தகவல் தெரியவந்துள்ளது.

    மேலும் அரண்மனை மைதானத்தில் இருந்து தனிச்சந்திராவுக்கு ராஜண்ணா என்பவர் தான் ஆட்டோவில் அழைத்து சென்றதாகவும், மேலும் 2 பேரின் பெயர்களையும் அப்துல் ரகுமான் கூறியதாக சொல்லப்படுகிறது. அதுபற்றி ஆட்டோ டிரைவர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். அவர்கள் அப்துல் ரகுமான் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து, கையெறி குண்டுவை அப்துல் ரகுமானுக்கு கொடுத்த நபரை பிடிக்க சம்பிகேஹள்ளி போலீசார் மற்றும் மத்திய விசாரணை அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • நவிமும்பை விமான நிலையத்தில் ஜூன் மாதம் முதல் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • மும்பை- நவிமும்பையை இணைக்கும் வகையில் ‘அடல்சேது’ கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது.

    மும்பை:

    நவிமும்பையில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நவிமும்பை விமான நிலையத்தில் ஜூன் மாதம் முதல் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் நவிமும்பை விமான நிலையம்- தானே இடையே 26 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் சாலை அமைக்க சிட்கோ (நகர மற்றும் தொழில் மேம்பாட்டு கழகம்) திட்டமிட்டுள்ளது.

    மும்பை- நவிமும்பையை இணைக்கும் வகையில் 'அடல்சேது' கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் நவிமும்பை விமானநிலையத்தை தானேயுடன் இணைக்கும் வகையில் ரூ.8 ஆயிரம் கோடி செலவில் பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி திகா பத்னி மைதானம் அருகில் உள்ள தான் நிரான்கரி சவுக்கில் இருந்து வாஷி பாம் பீச் வரை 17 கி.மீ.க்கு பறக்கும் சாலை அமைக்கப்படுகிறது.

    அதன்பிறகு பாம் பீச் ரோட்டில் இருந்து நவிமும்பை விமான நிலையத்துக்கு நேரடியாக இரட்டை பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளது.

    • யானைகள் ரெயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டது.
    • 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு - கேரள வனப்பகுதிகளில் தண்டவாளங்களை கடக்க முற்படும்போது ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க கோரியும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ளக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தெற்கு ரெயில்வே தரப்பில் ஆஜரான வக்கீல் ராம்குமார், 'ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறையுடன் இணைந்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் கோவை, பாலக்காடு ஒட்டிய வனப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

    யானைகள் ரெயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில் 9 இடங்களில் சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தண்டவாளங்களுக்கு அடியில் யானைகள் கடந்து செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல போத்தனூர் - மதுக்கரை பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் யானை நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் 2 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இந்த நவீன கேமராக்கள் யானைகள் ரெயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள 150 மீட்டர் தூர சுற்றளவுக்குள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள ரெயில் நிலைய மேலாளர் மற்றும் ரெயி்ல் ஓட்டுநர்களுக்கு தகவல்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

    தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பாலக்காடு - போத்தனூர் வழித்தடத்தில் கடந்த 27 மாதங்களாக ரெயில் மோதி ஒரு யானை கூட சாகவில்லை.'' என்று கூறினார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

    • இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ரோமானிய நாணயம் ஆகும்.
    • நாணய சேகரிப்பில் தீவிர ஆர்வம் கொண்ட ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் அதனை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    லண்டன்:

    இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பிராந்தியம் கிங்ஸ்வின்போர்டைச் சேர்ந்தவர் ரான் வால்டர்ஸ் (வயது 76). கடந்த ஆண்டு இவர் அங்குள்ள வால் ஹீத் நகரில் பழங்கால தங்க நாணயம் ஒன்றைக் கண்டெடுத்தார். பின்னர் நடைபெற்ற ஆய்வில் அது ஆலஸ் விட்டெலியஸ் என்ற மன்னர் காலத்தைச் சேர்ந்த ரோமானிய நாணயம் என்பது தெரிய வந்தது.

    1,900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இதுவே இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ரோமானிய நாணயம் ஆகும். இதனை தற்போது வால்டர்ஸ் விற்க முடிவு செய்தார். அதன்படி ஸ்டோர்பிரிட்ஜ் நகரில் நடைபெற்ற ஏலத்தின்போது அந்த நாணயம் சுமார் ரூ.5 லட்சத்துக்கு விற்பனையானது. நாணய சேகரிப்பில் தீவிர ஆர்வம் கொண்ட ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் அதனை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்கிராம், மிட்செல் மார்ஷ் களமிறங்கினார். இதில் மிட்செல் மார்ஷ் முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் நிதானமாக விளையாடினார். ரிஷப் பண்ட் 2 ரன்னில் வெளியேறினார். பூரன் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது.

    20 ஒவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பூரண் 44 ரன்களும், ஆயுஷ் பதோனி 41 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்களில் வெளியேறினார். பிரப்சிம்ரன் சிங் 69 ரன்கள் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்களும், நேஹால் வதேரா 43 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இறுதியில் பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே.
    • தமிழில் 2019 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடித்த 100% காதல் படத்தில் நடித்து அறிமுகமானார்.

    2017 ஆம் ஆண்டு சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பு பலரால் பேசப்பட்டது.

    அதை தொடர்ந்து மஹாநதி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் 2019 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடித்த 100% காதல் படத்தில் நடித்து அறிமுகமானார்.

    அதை தொடர்ந்து பல இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அவர் திரைத்துறையின் தொடக்கத்தில் நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்தார். அதில் அவர் " நான் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் நடித்து முடித்துவிட்டு ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்தேன். அப்பொழுது எனக்கு 23 வயதே ஆனது. அப்பொழுது அந்த படத்தின் இயக்குனர் நான் கேரவனில் உடை மாற்றிக் கொண்டு இருக்கும் போது அவர் கதவை தட்டாமலே உள்ளே நுழைந்தார்.

    எனக்கு என்ன செய்வது என தெரியாமல் அவரை கண்மூடித்தனமாக திட்டினேன். இந்த திரைத்துறையில் அதன் பிறகுதான் என்னை காப்பாற்றிக் கொள்ள யார் யாருக்கு எந்த இடத்தை தரவேண்டும் என புரிந்தது. அதை நானே கற்றுக் கொண்டேன். நான் நல்ல மனிதர்கள் மற்றும் ஆண்களுடன் பணியாற்றியுள்ளேன். பல மோசமான மனிதர்களுடனும் வேலை செய்துள்ளேன்" என அவரது அனுபவத்தை பகிர்ந்தார்.

    சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டப்பா கார்டல் வெப் தொடரில் நடித்து இருந்தார். அடுத்ததாக தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லிக் கடை திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதயராஜ் மற்றும் நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதயராஜ் மற்றும் நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், மு.க.ஸ்டாலின் என்றால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம் என தெரிவித்தார்.

    சமீபத்தில் நடந்த த.வெ.க. பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.... மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. செயலையும், ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே என காட்டமாகத் தெரிவித்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சத்யராஜ் மேற்கண்டவாறு கூறியுள்ளார் என கருதப்படுகிறது.

    • கச்சத்தீவை திரும்பப்பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம்.
    • இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும்.

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை கச்சத்தீவை திரும்பப்பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார்.

    இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

    • திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது.
    • மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா எனக்கூறி கண்டித்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் சந்த்கபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

    ராதிகாவுக்கு ஏற்கனவே தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் இருந்து வந்தது. திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது. பப்லு வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி காதலர்கள் இருவரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த விஷயம் அரசல் புரசலாக உறவினர்களுக்கு தெரியவந்தது. இது பற்றி அவர்கள் பப்லுவிடம் தெரிவித்தனர். அவரும் மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா? எனக்கூறி கண்டித்தார். ஆனால் ராதிகாவோ காதலனை தன்னால் மறக்க முடியவில்லை என தெரிவித்தார்.

    இதனால் வேறு வழியின்றி, காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்தார். தனது விருப்பத்தை அவர் மனைவி மற்றும் கிராம மக்களிடம் கூறினார். முதலில் இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் பின்னர் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். காதலர்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து, கோர்ட்டில் வைத்து ராதிகாவுக்கும், காதலனுக்கும் பப்லு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், உறவினர்கள் கண் முன் ராதிகாவும், காதலனும் மாலை மாற்றிக்கொண்டனர்.

    திருமணம் முடிந்ததும் பப்லு தனது மனைவியிடம் 2 குழந்தைகளையும் தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ராதிகாவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 8 ஆண்டு தன்னுடன் குடும்பம் நடத்திய மனைவியை பப்லு காதலனுடன் அனுப்பி வைத்து விட்டு 2 குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

    இந்நிலையில், காதலனுடன் சென்ற ராதிகாவை அவரது புதிய மாமியார் திருப்பி அனுப்பியுள்ளார். ராதிகா தனது முதல் கணவருடன் பெற்ற இரு குழந்தைகளுக்காக வருத்தப்படுவதாகவும், அவர்கள் தங்கள் தாயின் அன்பைப் பெறுவதை உறுதிசெய்ய விரும்புவதாகவும் கூறி ராதிகாவை திருப்பி அனுப்பினார்.

    இதையடுத்து, வீட்டுக்கு வந்த ராதிகாவை ஏற்றுக்கொண்ட பப்லு, இனிமேல் அவளுக்கு என்ன நடந்தாலும் அதற்கு நான்தான் பொறுப்பு என தெரிவித்தார்.

    • நிக்கோலஸ் பூரன் 44 ரன்னும், படோனி 41 ரன்களும் சேர்த்தனர்.
    • அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் விளாசிய மிட்செல் மார்ஷ், தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் நிதானமாக விளையாடினார். மார்கிராம் அதிரடியாக விளையாட முயற்சித்தார். இருந்தாலும் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2 ரன்னில் வெளியேறினார்.

    இதனால் லக்னோ 35 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது திணறியது. 4-வது விக்கெட்டுக்கு பூரன் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. வாய்ப்பு கிடைக்கும்போது பூரன் பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினார்.

    அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பூரன் 30 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 11.3 ஓவரில் 89 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து வந்த மில்லர் 19 பந்தில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு ஆயுஷ் படோனி உடன் அப்துல் சமாத் ஜோடி சேர்ந்தார். அப்துல் சமாத் அதிரடியாக விளையாட லக்னோ அணி 150 ரன்னைக் கடந்தது. அர்ஷ்தீப் வீசிய 18-ஆவது ஓவரில் லக்னோ 20 ரன்கள் விளாசியது.

    யான்சன் வீசிய 19-ஆவது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 19 ஓவரில் 164 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 2-ஆவது பந்தில் படோனி ஆட்டமிழந்தார். அவர் 33 பந்தில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    4-ஆவது பந்தில் அப்துல் சமாத் ஆட்டமிழந்தார். இவர் 12 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். கடைசி 2 பந்தில் ஒரு வைடு உடன் 3 ரன்கள் அடிக்க இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.

    பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பெர்குசன், மேக்ஸ்வெல், யான்சன், சாசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ×