search icon
என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
    • ஏற்றுமதியை தொடரலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே லட்சக்க ணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசாவின் ரபா நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளது. ரபா நகருக்குள் இஸ்ரேல் டாங்கிகள் நுழைந்துள்ளன. எகிப்து உடனான ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் கொண்டு வந்துள்ளது.

    இதற்கிடையே லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள ரபா நகரம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதை இஸ்ரேல் ஏற்கவில்லை. ரபா நகரம் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் தொடங்கும் சூழல் உள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக தெற்கு காசா நகரமான ரபா மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தும் முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளதால் குண்டுகள் அனுப்புவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

    ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்துவதற்கான முடிவு கடந்த வாரம் எடுக்கப்பட்டது. ஏற்றுமதியைத் தொடரலாமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.

    • சுதா ரெட்டியின் ஸ்டைலான உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
    • சுதா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலை மற்றும் பேஷனின் தீவிர ஆர்வலராக தன்னை விவரித்துள்ளார்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் மெட்காலா எனும் பேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்- நடிகைகள், பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து பலரும் பங்கேற்ற நிலையில், அவர்கள் அணிந்து வந்த ஆடைகள் மற்றும் நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. நிகழ்ச்சியில் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வரும் ஐதராபாத்தை சேர்ந்த கோடீஸ்வரரான மேகா கிருஷ்ணாரெட்டியின் மனைவியான சுதா ரெட்டி, ஐவெரி பட்டு கவுன் அணிந்து பங்கேற்றார். அவரது ஸ்டைலான உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    சுதா ரெட்டி 180 காரட் வைர நெக்லசை அணிந்திருந்தார். அதில் 25 காரட் இதய வடிவ வைரமும், மேலும் மூன்று 20 காரட் இதய வடிவிலான வைரங்களும் அணிந்திருந்தார். இதுதவிர 23 காரட் வைர சாலிடர் மோதிரத்தையும், 20 காரட் வைர சொலிடர் மோதிரத்தையும் அணிந்திருந்தார். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.165 கோடி என கூறப்படுகிறது.

    சுதா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலை மற்றும் பேஷனின் தீவிர ஆர்வலராக தன்னை விவரித்துள்ளார்.


    • சிறுவனின் மனித நேயத்தை பாராட்டும் வகையில் அவனுக்கு உயர்தர ஓட்டலில் உணவு வாங்கி கொடுத்தும் விளையாட்டு பொருட்களையும் பரிசளித்துள்ளார்.
    • சிறுவனின் செயல் என்னை வெகுவாக கவர்ந்தது என கருத்துடன் இதுகுறித்தான சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டார்.

    சிறுவன் ஒருவன் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவருக்கு தன்னிடம் இருந்துள்ள ஒரு டாலரை கொடுத்த அவனுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருந்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மேட் புஸ்பைஸ். கோடீஸ்வரரான இவர் தன்னுடைய வீட்டில் திடீரென தீப்பிடித்தற்கான அலாரம் ஒலிக்கப்பட்டதால் சாதாரண உடையுடன் வீட்டைவிட்டு வெளியேறி சாலையில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற 9 வயது சிறுவன் ஒருவர் மேட் புஸ்பைசை பிச்சைக்காரன் என தவறாக எண்ணியது மட்டுமின்றி தன்னிடம் இருந்த ஒரு டாலர் பணத்தை மேட்டிடம் கொடுத்துள்ளார்.

    ஆனந்தம் கலந்த அதிர்ச்சியுடன் அந்த பணத்தை பெற்று கொண்ட மேட், தான் யார் என அந்த சிறுவனுக்கு விளக்கி உள்ளார். பின்னர் அவனின் மனித நேயத்தை பாராட்டும் வகையில் அவனுக்கு உயர்தர ஓட்டலில் உணவு வாங்கி கொடுத்தும் விளையாட்டு பொருட்களையும் பரிசளித்துள்ளார். சிறுவனின் செயல் என்னை வெகுவாக கவர்ந்தது என கருத்துடன் இதுகுறித்தான சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட அமெரிக்க மீடியாக்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளவாசிகள் சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்து வைரலாகி வருகின்றனர்.

    • கலையரங்க மேடைக்கு செல்வதற்கான படிக்கட்டுகளில் ஏற முடியாமல் தடுமாறி நின்று கொண்டிருந்தார்.
    • வீடியோ தற்போது வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த ஆண்டின் மெட் காலா நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடந்தது. இந்த நிகழ்வில் சர்வதேச சினிமா பிரபலங்கள், பாப் மற்றும் ராப் இசை கலைஞர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், கோடீஸ்வர பணக்காரர்கள் ஆகியோர் கண்ணை கவரும் வகையில் விதவிதமான ஆடைகளை அணிந்தவாறு போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பர். இந்த மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாப் பாடகி ஒருவரை பாதுகாவலர்கள் ஒன்று சேர்ந்து அலேக்காக தூக்கிய சம்பவம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி டைலா. பல்வேறு வெற்றி பாடல்களை பாடியுள்ள இவர் முதன்முறையாக மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனத்தினரின் ஆடையை அவர் அணிந்திருந்தார். கடற்கரை மணலை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்தவாறு அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

    அப்போது கலையரங்க மேடைக்கு செல்வதற்கான படிக்கட்டுகளில் ஏற முடியாமல் தடுமாறி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை அலேக்காக தூக்கினர். பின்னர் படிக்கட்டுகளில் டைலாவை ஏந்தி சென்று மேடையில் விட்டனர். அப்போதும் அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தவாறே இருந்துள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.

    • தற்போது 3-வது முறையாக மீண்டும் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தார்.
    • விண்வெளி ஏவுதளத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் நிறுவனத்துக்கு சொந்தமான விண்கலம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பப்பட இருந்தது.

    வாஷிங்டன்:

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இணைந்தார்.

    இதனையடுத்து அங்கு விண்வெளிக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன்படி இவரது முதல் பயணம் 2006-ம் ஆண்டிலும், 2-வது விண்வெளிப் பயணம் 2012-ம் ஆண்டிலும் வெற்றிகரமாக அமைந்தது.

    இதன் மூலம் மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி உள்ள அவர் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.

    இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக மீண்டும் அவர் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தார். இவருடன் ஸ்டார்லைனர் வில்லியம்ஸ் (58), புல்ச் வில்மோர் ஆகியோரும் செல்ல இருந்தனர்.

    இதற்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கனாவெரலில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் நிறுவனத்துக்கு சொந்தமான விண்கலம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பப்பட இருந்தது.

    இந்த நிலையில், இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புல்ச் வில்மோர் ஆகியோர் பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் திடிடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கடைசி நேரத்தில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    • கலிபோர்னியா மாவட்ட கல்வி கண்காணிப்பாளராக இருந்து வருபவர் மரியன் கிம் பெல்ப்ஸ்.
    • மரியன் கிம் பெல்ப்ஸ் விழாவில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் கலிபோர்னியா மாவட்ட கல்வி கண்காணிப்பாளராக இருந்து வருபவர் மரியன் கிம் பெல்ப்ஸ். இவரது மகள் விளையாட்டில் சிறந்து விளங்கினார்.

    இதை பாராட்டி அவருக்கு அங்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மரியன் கிம் பெல்ப்சும் கலந்து கொண்டார்.

    மகள் விழா மேடையில் கவுரப்படுத்தும்போது அங்கு திரண்டு இருந்த மாணவ-மாணவிகள் பெரிய அளவில் கைத்தட்டி உற்சாகப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் மரியன் கிம் பெல்ஸ் கடும் ஆத்திரம் அடைந்தார். உடனே அவர் விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கல்வி அதிகாரிகளிடம் புகார்கள் கொடுத்தனர். இதையடுத்து அவரை பணி நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • வெள்ளை மாளிகைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை.
    • சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஓட்டுனரை மீட்க முயன்றனர்.

    அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையின் வெளிப்புற வாயில் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், ஓட்டுனர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "நேற்று இரவு 10:30 மணியளவில் அதிவேகமாக வந்த கார் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற சுவற்றில் மோதியது. இதனால், வெள்ளை மாளிகைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஓட்டுனரை மீட்க முயன்றனர். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.

    ரகசிய சேவை, கொலம்பியா மாவட்டத்தின் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து, இந்த அபாயகரமான விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் அந்தோனி குக்லீல்மி தெரிவித்தார்.

    முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற வாயிலில் வாகனம் மோதிய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • இறந்தவர்கள் முதியோர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் சக நர்சுகள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
    • இன்சுலின் வழங்கிய 19 நோயாளிகளில் 17 பேர் நீரிழிவு நோய் இல்லாமலே அளவுக்கு அதிகமாக இன்சுலின் வழங்கியதால் இறந்துள்ளது போலீசாரையே அதிர வைப்பதாக இருந்தது.

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் 41 வயதான ஹீதர் பிரஸ்டீ. இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அங்குள்ள நான்கு மாவட்டங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றி வந்த மறுவாழ்வு மையங்களில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து 17க்கும் அதிகமான நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது, அடிக்கடி முதியோர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இறந்தவர்கள் முதியோர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் சக நர்சுகள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

    ஆனால் ஒரு கட்டத்தில் நர்ஸ் ஹீதர் பிரஸ்டீயின் நடத்தை, அவர் நோயாளிகளை அலட்சியப்படுத்து மற்றும் அவர்களை இழிவான முறையில் கடுமையாக திட்டுவது போன்றவை சக நர்சுகளை சந்தேகப்பட வைத்தது.

    இதனையடுத்து, நர்ஸ் ஹீதர் பிரஸ்டீவை பிடித்து விசாரணையில் நடத்தியதில் அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்துள்ளார். நோயாளிகளின் நீரிழிவு அளவை பொருட்படுத்தாமல் அதிகப்படியான இன்சுலின் வழங்கியதாக அவர் கூறியதை கண்டு சக நர்சுகள் அதிர்ந்து போயினர்.

    இன்சுலின் வழங்கிய 19 நோயாளிகளில் 17 பேர் நீரிழிவு நோய் இல்லாமலே அளவுக்கு அதிகமாக இன்சுலின் வழங்கியதால் இறந்துள்ளது போலீசாரையே அதிர வைப்பதாக இருந்தது.

    இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ள நர்ஸ் ஹீதர் பிரஸ்டீ, தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் நோயாளிகளிடமும், மற்றவர்களிடமும் கோபமாக நடந்துகொண்டதாக கூறினார்.

    ஆரம்பத்தில் இந்த குற்றங்களை மறுத்து வந்த நர்ஸ் ஹீதர் பிரஸ்டீ, கடந்த பிப்ரவரி மாத விசாரணையின்போது, தனது வழக்கறிஞர்களிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து, 41 வயதான ஹீதர் பிரஸ்டீக்கு, மூன்று ஆயுள் தண்டனையும், 380-760 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி பட்லர் நகர நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • விட்டிலிகோ பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நிறம் படிப்படியாக மாறி தற்போது முழுவதும் வெள்ளை நிறமாகி உள்ளது.
    • புகைப்படங்களை ரெடிட் தளத்தில் பதிவிட, அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    சில அரிதான நோய்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளையும் தாக்கும். அதுபோன்று ஒரு அரிதான நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் 2 ஆண்டுகளில் முழுவதும் வெள்ளையாக மாறி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    தோல் அதன் இயற்கையான நிறத்தை இழந்து வெளிறிய வெள்ளை நிறமாக மாறும் நிலைக்கு விட்டிலிகோ என்று பெயர். இந்த வகை அரிய நோயால் சில மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியை சேர்ந்த ஸ்மித் என்பவர் வளர்த்து வரும் பஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த 4 வயது நாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதும் கருப்பு நிறத்தில் இருந்தது. இந்நிலையில் விட்டிலிகோ பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நிறம் படிப்படியாக மாறி தற்போது முழுவதும் வெள்ளை நிறமாகி உள்ளது.

    இதுதொடர்பான புகைப்படங்களை ரெடிட் தளத்தில் பதிவிட, அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • நடுவானில் பறந்த போது விமானத்தின் என்ஜின் செயல்படாமல் போனது.
    • சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

    அமெரிக்காவின் நியூ யார்க் பகுதியில் உள்ள செடார் கடற்கரையில் ஒற்றை என்ஜின் கொண்ட செஸ்னா 152 எனும் சிறிய விமானம் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    விமானம் கடற்கரையில் தரையிறங்கிய நிலையில், விமானி மற்றும் பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. கடற்கரையில் தரையிறங்கியதால் விமானத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டது. விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கியதாக விமானி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    "ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று செடார் கடற்கரையில் அவசரமாக தரையிறங்கியது. நடுவானில் பறந்த போது விமானத்தின் என்ஜின் செயல்படாமல் போனது. இதன் காரணமாக விமானத்தை இயக்கிய 60 வயது விமானி, கடற்கரையில் தரையிறக்கினார்," என்று அமெரிக்க வான்வழி கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 


    • கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

    லாஸ்ஏஞ்செல்ஸ்:

    பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராகவும், காசா போரை உடனே நிறுத்த வேண்டும் எனக்கோரியும் அமெரிக்காவின் நியூயார்க், கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கொலம்பியா, ஹார்வர்ட், டெக்சாஸ் பல்கலைக்கழகங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பல்கலைக்கழக நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி அவர்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் கூடாரம் அமைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் நகர கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் கூடாரங்களை அகற்றி மாணவர்களை அங்கிருந்து ஒரே இரவில் போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

    இந்த நிலையில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல்கலைக்கழகத்தில் திடீரென புகுந்த இஸ்ரேல் ஆதரவாளர்கள் மாணவர்கள் அமைத்திருந்த கூடாரங்களை அகற்றி அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளால் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பல்கலைக்கழகம் கலவர பூமியாக மாறியது. இதையடுத்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதன்பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. மோதலில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது அந்நாட்டு போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமி சமீபகாலமாக தனது படுக்கை அறையில் பேய் போன்ற உருவம் காணப்படுவதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.
    • அடுத்தடுத்த நாட்களிலும் அந்த சிறுமி தனது படுக்கை அறையில் உள்ள அலமாரியில் ஏதோ இருப்பதாக கூறிக்கொண்டே இருந்தார்.

    அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள சார்லோட் பகுதியில் பண்ணை வீட்டில் வசித்து வரும் ஆஸ்லே மாசிஸ் கிளாஸ் என்ற பெண்ணுக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி சமீபகாலமாக தனது படுக்கை அறையில் பேய் போன்ற உருவம் காணப்படுவதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.

    முதலில் பெற்றோர் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. திரைப்படங்களை பார்ப்பதால் சிறுமி கற்பனையாக கருதி இருக்கலாம் என நினைத்தனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களிலும் அந்த சிறுமி தனது படுக்கை அறையில் உள்ள அலமாரியில் ஏதோ இருப்பதாக கூறிக்கொண்டே இருந்தார்.

    இதனால் சிறுமியின் பெற்றோர் அந்த வீட்டில் வெப் கேமரா பொருத்தி ஆய்வு செய்தனர். அப்போது தான் சிறுமியின் படுக்கை அறையில் ஒரு பெரிய தேன் கூடு இருப்பதை கண்டனர். இதுகுறித்து பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு தெரிவித்தனர். அதன்படி வீட்டிற்கு வந்த தேனீ வளர்ப்பாளர், சிறுமியின் படுக்கை அறையில் இருந்து சுமார் 55 ஆயிரம் முதல் 65 ஆயிரம் தேனீக்கள் கொண்ட 45 கிலோ எடை உடைய தேன் கூட்டை அகற்றி உள்ளார்.

    ×