search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வாழ்க்கையின் அதிசயங்கள்!
    X

    வாழ்க்கையின் அதிசயங்கள்!

    • மனித மூளை என்பது தீராத அதிசயம் தான்.
    • நம் உடம்பே தீராத அறிவியல் அதிசயம் தான்.

    அதிசய வாழ்க்கையை அனுபவித்து வாழக் காத்திருக்கும் வாசகர்களே! வணக்கம்!

    கல் தோன்றி, மண் தோன்றி, மலை தோன்றி, கடல் தோன்றி, மழை தோன்றி, அருவி தோன்றி, நதி தோன்றி, காற்றுத் தோன்றி, நெருப்புத் தோன்றி, மரம் செடிகொடி தோன்றி, வயல் தோன்றி, பயிர் தோன்றி மற்றும் உயிரினங்கள் எல்லாம் தோன்றிப் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இன்னும் உலகமும் உயிரினங்களும் புதுமைமாறாத அதிசயமாகவே தென்படுகின்றன.

    அதிசயம் என்பது, யாராலும் எவராலும் செய்ய முடியாதது; அப்படிச் செய்தாலும் அதைப் போன்றதொரு பிரதியை மீட்டுருவாக்கவும் முடியாது. அப்படிப் பார்க்கும்போது இயற்கையின் படைப்புகள் (மனிதர்கள் உட்பட) அத்தனையும் அதிசயமே. ஆயினும் மனிதர் உருவாக்கிய சில பிரம்மாண்டங்களை நாம் அதிசயங்கள் என்று பட்டியலிட்டு அவற்றை அதிசயத்தோடு உலகம் முழுவதும் சுற்றிப் பார்த்து வருகிறோம்.

    ஓர் அழகிய கிராமம். அங்குள்ள பழம்பெருமை மிக்க ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு சிறுமி ஐந்தாம் வகுப்புப் படித்து வந்தாள். எதையும் அறிவுபூர்வமாக அணுகிப் பார்ப்பதும், நூலறிவை நம்பாமல் சொந்த அறிவுகொண்டு ஆழ்ந்து பார்ப்பதும் அவளது இயல்பான குணம்.

    ஐந்தாம் வகுப்பை முடித்ததும் அவள் மேல்படிப்பிற்காக கிராமத்திற்குப் பக்கத்தில் இருந்த பெரிய நகரத்துப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள். அது ஆங்கிலவழிப் பள்ளிக்கூடம். நகரத்திலேயே பெரிய பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம். அறிவிலும் கெட்டி சுட்டிகளான பிள்ளைகள் அவர்கள்.

    பள்ளி திறந்து ஆறாம் வகுப்பின் முதல் பாடவகுப்பிற்கு, வகுப்பாசிரியர் வந்து நின்றார். ஒவ்வொரு குழந்தையையும் எழுந்து நிற்கச் சொல்லி, பெயர், ஊர், இதற்குமுன் படித்த பள்ளிக் கூடத்தின் பெயர் அனைத்தையும் கனிவோடு விசாரித்தார். அந்தக் கிராமத்துச் சிறுமியைத் தவிர மற்ற எல்லோருமே நகரத்துப் பள்ளிக் கூடங்களில் ஆங்கில வழியில் படித்தவர்கள்.

    எல்லோரும் அவரவர் நோட்டையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் ஆசிரியை; எடுத்துக்கொண்டதும், "உங்களது பொது அறிவைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். உலக அதிசயங்கள் எத்தனை? அவை என்னென்ன? எங்கே பதில்களை எழுதி ஐந்து நிமிடங்களில் என்னிடத்தில் தாருங்கள்!" என்றார்.

    எல்லாக் குழந்தைகளும் வெகு ஆர்வத்துடன் தங்களது நோட்டுகளை எடுத்து மளமளவென்று பதில்களை எழுதத் தொடங்கினர். அந்தக் கிராமத்துச் சிறுமிமட்டும் நோட்டில் எதுவுமே எழுதாமல் எதையோ சிந்திப்பதுபோல் சும்மா உட்கார்ந்திருந்தாள். அவள் பதில் தெரியாமல்தான் விழிக்கிறாள் என்று நினைத்து அவளருகில் வந்த ஆசிரியை," பயப்படாதே! தெரிந்த பதிலை மட்டும் எழுது! ஏழு அதிசயங்களையும் எழுத வேண்டுமென்பதில்லை; நினைவில் உள்ளதை மட்டும் எழுது. மொத்தமாகப் பதில் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. மனம் தளர்ந்துவிடாதே!; போகப் போகப் படித்துவிடலாம்! இவர்களுக்கு இணையாகவும் நீ வந்து விடலாம்!" என்று ஆறுதல் சொன்னார். " இல்லை மிஸ்! எழுதிவிடுகிறேன்" என்று நோட்டில் எழுதத் தொடங்கினாள் சிறுமி.

    எல்லார் நோட்டுகளையும் வாங்கிய வகுப்பாசிரியை அங்கேயே திருத்தவும் தொடங்கினார். அந்தக் கிராமத்துச் சிறுமி தவிர்த்து மற்ற எல்லா மாணவர்களும் உலகத்தின் ஏழு அதிசயங்களின் பெயர்களையும் மிகச் சரியாகவே எழுதியிருந்தனர். கடைசியாகச் சிறுமியின் நோட்டைத் திறந்து பார்த்த ஆசிரியை அதிசயித்துப் போனார். அந்தச் சிறுமி நோட்டில் எழுதியிருந்த ஏழு அதிசயங்கள் இவைதாம்: 1. பார்த்தல், 2.கேட்டல், 3. சுவைத்தல், 4. முகர்தல், 5. உணர்தல், 6.சிந்தித்தல், 7.அன்பு செய்தல்.

    சுந்தர ஆவுடையப்பன்

    கிராமத்துச் சிறுமியை எல்லா மாணவர்களுக்கு முன்பாகவும் வரச்சொல்லி வாரியணைத்துக் கொண்ட ஆசிரியை, " நீ எழுதிய பதில்கள் அனைத்தும் அறிவுபூர்வமானவை!" என்றார். சிறுமியின் சிந்தனை நுட்பத்தைக் கண்ட அனைத்து மாணவர்களும் கைதட்டிப் பாராட்டினர்.

    இந்த உலகத்தில் நமக்குள்ளேயே அதிசயங்கள் குவிந்து கிடக்கும்போது அவற்றுக்கு அதிசயப்படாமல், வெளியில் உள்ள செயற்கை அதிசயங்களுக்கு நாம் ஏன் அலைய வேண்டும்?. செயற்கை நுண்ணறிவுக் காலம் வரை இப்போது நமது அறிவியல் வளர்ந்திருந்தாலும், இன்னமும் மனிதனைப் போலவே ஒரு படைப்பை அச்சு அசலாக உருவாக்க முடியவில்லையே!.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற அந்த ஐந்து பொறிகளுமே அதிசயங்கள் தாம். கண், காது, மூக்கு, வாய், உடல் என்கிற அந்தப் பொறிகள் மூலம் மனிதன் பெறுகிற புலன் உணர்வுகளும், அவற்றின் துணைகொண்டு, மூளையின் செயல்பாட்டால் அவன் நிகழ்த்துகிற செயல்பாடுகளும் அதிசயமோ அதிசயம்தான். எத்தனை அறிவியல் உபகரணங்கள் கொண்டு நமது பொறிகளை ஆராயப் புகுந்தாலும் முடிவுகள் அவற்றையும் தாண்டிய அதிசயங்களாகவே இருக்கும்.

    மனிதன் தனது மூளையைக் கொண்டே மூளைக்கு நிகரான கணினியை உருவாக்கினான்; தொழில்நுட்பம் வளர வளர, அக்கணினியை நவீனப்படுத்திக்கொண்டே போகிறான். ஆயினும் மூளைக்கு நிகரான கணினி இன்னும் உருவாக்கப்படவில்லை; இனிமேலும் உருவாக்கப்படுமா? என்பது கேள்விக் குறியே. அதுவரை மனித மூளை என்பது தீராத அதிசயம் தான்.

    மனிதனின் கைப்பிடியளவே உள்ள மூளைதான் மனித உறுப்புகளிலேயே அதிசயமான அதிசயம். மூளை வளர்ச்சி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது 25-வது வயதுவரை நிகழும். எந்தவொரு மனிதனின் மூளையிலும் சிலர் திட்டுவதைப்போலக் களிமண் இருப்பதில்லை; மூளையில் 60 சதவீதப் பகுதி கொழுப்பால் ஆனது. மனிதன் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறான் என்பது கட்டுக்கதையாம். பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை பெரியதாக இருக்கும்; சிந்தனை வீச்சு என்பது மூளையின் அளவைப் பொறுத்து அமைவதில்லை: பயன்படுத்தும் தன்மையைப் பொறுத்தே அமையும் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. மனிதன் விழித்திருக்கும் நேரத்தை விட உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்குமாம். அப்படியானால் மூளை சுறுசுறுப்படைய அவ்வப்போது உறங்குவதும் நல்லதோ?.

    நாம் உலகில் உள்ள அதிசயங்களைப் பற்றி அறிந்து கொள்வதிலும் அவற்றைப் பார்ப்பதிலும் காட்டுகிற ஆர்வத்தை நம் உடம்பின்மீது காட்டியிருக்கிறோமா?.

    நம் உடம்பே தீராத அறிவியல் அதிசயம் தான். நம் ஒவ்வொருவர் வாயிலும் சராசரியாக ஒருநாளைக்கு ஒரு லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறதாம்; உமிழ்நீரே நமக்கு உயிர்நீர் என்று கூறுமளவுக்கு, மினரல்களும், தூய நீரும், ரசாயன மாற்ற ஊக்கிகளும், நோய் எதிர்ப்புச் சக்திமிக்க பாக்டீரியாக்களும் உமிழ்நீரில் இருக்கின்றன. சுவைப்பொருளைக் கண்டவுடன் அதிகமாகச் சுரந்து, உண்டு சுவைக்கும்போது பொருள் சீரணமாக உதவுகிற வேதிப்பொருளாகவும் உமிழ்நீர் உதவுகிறது.

    ஒவ்வொரு மனிதனின் உடம்புக்குள்ளும் இயங்குகிற ரத்தநாளங்களை நீட்டி அளந்தால், அது பூமத்திய ரேகையை நான்குமுறை சுற்றிக் கட்டக்கூடிய அளவுக்கு நீளமானதாக இருக்குமாம். மனித எடையில் 8 சதவீத எடையை அவனது உடம்பில் ஓடிக்கொண்டிருக்கும் குருதி கொண்டிருக்கிறதாம். ஒவ்வொரு மனித உடம்பிலிருந்தும் கண்களால் காணமுடியாத அளவுக்கு மெலிதான ஒளிவெளிச்சம் வெளிவந்து கொண்டிருக்கிறதாம். இதைத்தான் மேலும் நன்மைப்படுத்தி ஒளிதேகம் ஆக்கவேண்டும் என்று வள்ளல் பெருமான் கூறினாரோ?.

    மனிதனின் தொப்பையில் உள்ள தொப்புளில் 67 வகையான பாக்டீரியாக்கள் தங்கியுள்ளன. ஒவ்வொரு மனிதனும் தனது உடம்புத் தோலிலிருந்து ஓராண்டிற்கு 4கிலோகிராம் அளவிலான தோல் செல்களை உதிர்க்கிறான். பிறந்து ஒருமாதம் வரை குழந்தை அழுதாலும் கண்ணீர் வருவதில்லையாம். காரணம் தெரியாமல் அழும்போது எதற்குக் கண்ணீரை வீணடிக்க வேண்டும் என்கிற நல்லெண்ணமோ என்னவோ!.

    வாழ்நாளில் ஒவ்வொரு மனிதனுக்கும் 3 பில்லியன் முறைகளுக்கும் மேல் இதயம் துடிக்கிறது. டிரில்லியன் வகைகளுக்கும் மேற்பட்ட வாசனைகளை வேறுபடுத்தி நுகரும் வல்லமை நமது மூக்குக்கு இருக்கிறதாம். சுறா மீன்களின் பற்களின் வலிமைக்கு நிகரான வலிமையானவை மனிதனின் பற்கள். நம்மால் ஒரு பல்லை நமக்கிருப்பதற்கு நிகராகச், செயற்கையாக உருவாக்க முடியுமா?.

    நமது உடம்பின் உறுப்புகள் தவிர, கைகள், தோள்கள், கால்கள், விரல்கள் ஆகிய அங்கங்களின் உதவியோடு காட்டைத் திருத்திக் கழனிகள் ஆக்குவதும், நாட்டைத்திருத்தி நகரங்கள் ஆக்குவதும், மண்ணைப் பொன்னாக்குவதும், இயந்திரங்கள் ஆயுதங்கள் எனக் குண்டூசி முதல் ராக்கெட் வரை தொழில்நுட்பத்தில் வானளாவி நிற்பதும் தீராத அதிசயங்கள் தாம்.

    இயற்கையைப் பாருங்கள்!. "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!" என்று மகாகவி பாரதி பாடியது, அவர் இயற்கையின் அதிசயங்களைக் கண்டு மகிழ்ந்ததன் அடையாளம்தான்.

    காற்றைப் பாருங்கள். அதைப் பார்க்க முடியாது; உணர மட்டுமே முடியும். உணர்வதினும், நம் மூக்கின் வழியே காற்று உட்புகுவது, வெளியேறுவதுமாக நிகழும் சுவாச ஜாலங்களை கவனித்துப் பாருங்கள். தியான முறையில் இதுவும் ஒன்று என்கிறார்கள். தூய உயிர் வளியாக உடம்பின் உள்ளே புகுந்து, உயிர்வாழ்வதற்குத் தேவையான உதவிகளையெல்லாம் உடம்பினுள் புரிந்து, கரியமில வாயுவாக வெளியேறும் காற்று பயன்தரும் அதிசயம்தான்.

    மண்ணைப் பாருங்கள். மண்ணில்தான் எத்தனை வகைகள்?. எத்தனை பயன்கள்?. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வாழிட மண்புலம் பகுத்து வாழ்வியல் ஒழுங்குகளை வகுத்தது தமிழர்களின் அதிசயம். மண்ணில் விளைந்து வரும் புல் தொடங்கி, பெரிய ஆலமரம்வரை ஒவ்வொரு செடிகொடியும் அதிசயம். அவற்றில் பூக்கும் மலர்களின் வண்ணப் புதுமைகளை இன்னமும் பார்க்கப் பார்க்க அதிசயம்தான்.

    வானம் என்று ஒன்றுமில்லை என்றாலும் அதில் நொடிதோறும் நிகழ்கிற அதிசயங்கள் எண்ணிலடங்காதவை. எந்தக் கடிகாரத்தில் அலாரம் வைத்துக்கொண்டு நேரந்தவறாமல், நாள்தோறும் சூரியனும் சந்திரனும் வந்து ஒளி செய்கின்றன?. வானில் மிதக்கும் மேகங்கள் கறுத்து மழையாகும் அதிசயத்தை என்னவென்று சொல்வது? மழையின் கருணையை ஏதென்று புகழ்வது?. விண்ணில் சிறகு விரித்துப் பறக்கின்ற பறவையினங்கள் வழங்கும் சுதந்திரச் செய்திகள் தாம் எத்தனை? எத்தனை?

    நாம் அதிசயம்!

    நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் அதிசயம்!

    நாம் வாழுகிற வாழ்க்கையும் அதிசயம்!

    வாருங்கள் அதிசயித்து வாழ்வோம்!

    அதிசயங்கள் புரிந்து மகிழ்வோம்!

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×