search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம்தான். அதற்காக ஐஸ் போல் குளிர்ந்த நீர் வேண்டாம்.
    • அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வீட்டிலோ, ஆபீசிலோ கையில் ஒரு பாட்டில் நீர் வைத்துக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக கட்டாயம் குடிக்க வேண்டும்.

    கோடை வெயில் கொளுத்துகின்றது என்று சுட்டெரிக்கும் கோடையில் வருடா வருடம் பேசிதான் நாமும் வாழ்ந்து வருகின்றோம்.

    இக்காலத்தின் விழிப்புணர்வுக்கு ஏற்ப சில தவிர்ப்பு முறைகள், தடுப்பு முறைகள் இவற்றினை பின்பற்றித்தான் வருகின்றோம்.

    ஆனால் 2024 ஏப்ரல், மே மாத கோடை வெப்ப தாக்குதலோ வரலாறு காணாத அளவில் உள்ளது.

    இந்த கடும் வெயிலில் குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள், பெண்கள் இவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகின்றன.

    * சன் ஸ்கிரீன் உபயோகிப்பது மிக அவசியமாகிவிட்டது.

    * தலைக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்க தொப்பி, குடை இல்லாமல் செல்லக்கூடாது என நன்கு அறிவோம்.

    * கொளுத்தும் வெயிலில் குறிப்பாக உச்சி வெயிலில் சுற்றாமல் இருக்க வேண்டும்.

    * வெளிர் நிற உடை, பருத்தி ஆடை அணிவது அவசியம்.

    * இறுக பிடிக்காத ஆடைகளை அணிய வேண்டும்.

    * தினமும் இரு வேளை குளிப்பதும், உடைகளை மாற்றுவதும் அவசியம்.

    * குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம்தான். அதற்காக ஐஸ் போல் குளிர்ந்த நீர் வேண்டாம்.

    * டப் அல்லது அகன்ற தொட்டி இவற்றில் கழுத்து வரை மூழ்கி 20 நிமிடங்கள் இருக்கலாம்.

    ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். குளியல் என்பது தலை முதல் நீர் ஊற்றி குளிப்பது


    தான் முறை. ஆனால் பலருக்கு இது ஒத்துக் கொள்ளாது. அத்தகையோர் முதலில் நீரை நன்கு தலையில் தெளித்துக் கொண்டு பிறகு உடலில் ஊற்றி குளிக்க வேண்டும். இங்கு நீர் என குறிப்பிடப்படுவது சாதாரண நீர்தான். சுடு நீர் அல்ல.

    * உடல் சூடு சருமத்தின் வழியாகத்தான் வெளியேற வேண்டும்.

    * உடலில் சிறிது நேரம் தண்ணீரில் நனைத்த துணியினை பிழிந்து உடலில் சுற்றி உட்காரலாம்.

    * சவர் முறை குளியல் சுமார் 10 நிமிடங்கள் எடுத்தாலும் உடல் குளிரும்.

    * அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வீட்டிலோ, ஆபீசிலோ கையில் ஒரு பாட்டில் நீர் வைத்துக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக கட்டாயம் குடிக்க வேண்டும்.

    * நம்மை அறியாமலேயே உடலில் நீர் வற்றும்.

    * நா வறட்சி ஏற்படும். சோர்வும், மயக்கமும் ஏற்படும். கவனம் தேவை.

    * எண்ணை, காரம், புளி இல்லாத எளிதில் செரிக்கக் கூடிய உணவுகள் அவசியம்.

    * பச்சை காய்கறிகள், கீரை வகைகள், நீர் சத்து சிறந்த பழங்கள், கிர்னி, தர்பூசணி, ஆரஞ்சு, தக்காளி, ஆப்பிள், கறுப்பு திராட்சை, நீர் மோர், லெசி, நாகப்பழம் என கிடைக்கும் பழங்களை சாப்பிடலாம்


    ரொம்பவும் சூடாக இருந்தால் பாதம், கைகள் இவற்றினை சாதா நீரில் சிறிது நேரம் மூழ்கி இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். உடல் சூடு தணியும்.

    * மது என்பதினை அடியோடு தவிர்த்து விடலாம்.

    * தூங்க செல்வதற்கு முன் குளிக்கலாம்.

    * தூங்க செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் நீர் அருந்தலாம்.

    (சிறு குழந்தையினை வைத்திருப்பவர்கள், தாய் பால் கொடுப்பவர்கள் உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி குழந்தைக்கு பால் அளிக்கும் நேர அளவினை மற்றும் சற்று கூடுதல் எண்ணிக்கையாக தாய் பால் அளிக்கலாம். ஆனால் கண்டிப்பாய் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

    மற்ற தாய்மார்கள் குழந்தைகளுக்கு எந்த அளவு நீர் கொடுக்க வேண்டும் என்ற மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இது இந்த கால கட்டத்திற்கு அவசியம் என்பதனை தாய்மார்கள் உணர வேண்டும்.

    * நடை பயிற்சி என்பதனை காலை, மாலை நேரத்தில் வைத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி, யோகா இவற்றினை வீட்டினுள் காற்றோட்டமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

    * ஜன்னல்கள் மூலம் சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் இல்லாமல் இருக்க துணி ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.

    * அதிக வெயில் நேரத்தில் ஜன்னல்களை மூடி வைக்கலாம்.

    * அவசியம் என்றால் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.

    * அதிக வெயில் தாக்குதலால் தலை சுற்றல், தலை வலி, சதை பிடிப்பு ஏற்படலாம்.

    * அதிக வியர்வை, உடல் தொடுவதற்கு குளிர்ந்து இருக்கும்.

    * வயிற்றுப் போக்கு, வேகமாக மூச்சு விடுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.


    ஹீட் ஸ்ட்ரோக்:

    அதிக வெப்பத்தில் உடலால் தன்னை குளுமைப்படுத்தும் திறன் இழக்கும்போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகின்றது. கோடையில் மிக அதிகமாக வெயிலில் இருப்பவர்களுக்கு இந்நிலை ஏற்படுகின்றது. இது ஆபத்தானது. அவசர சிகிச்சை தேவைப்படுவது. இதன் அறிகுறிகளாக

    * வியர்வையற்ற சூடான சருமம்

    * மயக்கம்

    * குமட்டல், வாந்தி, தலைவலி ஆகியவை வரும். உடனடி சிகிச்சை அவசியம்.

    உடனடியாக மருத்துவமனையினை அணுக வேண்டும். முதல் உதவி செய்தோம் சரியாகிவிட்டது என அலட்சியமாக இருந்து விடக் கூடாது. ஆகவேதான் இங்கு முதல் உதவி பற்றி குறிப்பிடவில்லை. அவரவர் குடும்ப மருத்துவர் மூலம் இதன் தவிர்ப்பு முறைக்கும், யாருக்கேனும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முறைகள் பற்றியும் உடனடியாக கேட்டறியவும்.

    வெயிலில் இருந்து தப்பிக்க இதெல்லாம் கூட செய்யலாம்.

    சிறிதளவு அரிசி மாவுடன் உப்பில்லா மோர் கலந்து கொள்ள வேண்டும். குளிக்கும் போது உடலில் நீர் ஊற்றி இந்த கலவையினை மிருதுவாக முகம் முதல் பாதம் வரை தேய்க்கவும். மென்மையாய் செய்யவும். பிறகு நன்கு நீரில் குளித்துவிட்டால் சருமம் சுத்தமாய் எண்ணை, வியர்வை பிசுபிசுப்பின்றி இருக்கும். இதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சளும் சேர்த்துக் கொள்ளலாம்.

    சிறிது வெள்ளரி துறுவி துணியில் பிழிந்து அத்துடன் சிறிது புதினா சாறு கலந்து சிறிய ஸ்பிரே பாட்டிலில் போட்டு அவ்வப்போது முகம், கைகளில் சிறிது ஸ்பிரே செய்து கொள்ளலாம்.

    கண்களை மூடி வெள்ளரி சாறில் நனைத்த பஞ்சினையோ அல்லது வெள்ளரி துண்டினையோ வைத்துக் கொள்ளலாம். இது மிக சிறந்த முறை.

    பாதாம் பிசின் கடைகளில் கிடைக்கும். இதனை சிறிதளவு எடுத்து நன்கு கழுவிய ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீர் ஊற்றி இரவில் ஊற வைத்து விடுங்கள். காலையில் இது ஊறி மிருதுவாய் நிறைய இருக்கும்.

    பொதுவில் இதில் தேவையான அளவு நீர் சேர்த்து காலையில் எடுத்துக் கொண்டாலே உடலுக்கு பல நன்மைகளை தர வல்லது. ஆனால் பலர் இதில் பால் கலந்து சர்க்கரை போட்டு எடுத்துக் கொள்வர். வெறும் நீரில் குடித்தாலே பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் எடை கூடி விடும்.

    அதிகமான வெப்பம் உடல் நல பாதிப்புகளை கண்டிப்பாய் ஏற்படுத்தும். 'ஹீட் ஸ்ட்ரோக்' என்பதனைப் பற்றி நாம் பார்த்தோம். அதிக வியர்வை காரணமாக நீர்சத்து மற்றும் தாது உப்புகள் குறைபாடு ஏற்படும். இதன் விளைவாக சதைகளில் வலி, அடி வயிறு வலி, கால் வலி, தோள்பட்டை வலி, சோர்வு, மயக்கம் ஆகியவை ஏற்படலாம்.

    தாங்க முடியாத தலைவலி, வாந்தி, வயிற்று பிரட்டல், வேகமான இதயத் துடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.

    உடலில் நீர் குறைந்தால் மூளைக்கு செல்ல வேண்டிய ரத்த ஒட்டம் குறையும். சிலருக்கு மயக்கம், நினைவிழத்தல் கூட ஏற்படலாம். சிறுநீர் குறைவாக வெளியேறினாலோ அடர்ந்து சிறுநீர் சென்றாலோ நீர் சத்து குறைவு என்று கருதப்படும்.

    இந்த அறிகுறிகளில் கவனம் செலுத்தாமல் லேசாக இருந்து விடாதீர்கள். தவிர்ப்பு முறைகளே இதற்கு சிறந்த பாதுகாப்பு தரும்.


    * தண்ணீர், மோர், இளநீர், ஜூஸ் போன்றவை அருந்த வேண்டும்.

    * காய்கறி ஜூஸ் கூட அருந்தலாம்.

    * காபி, டீ போன்றவை உடலில் நீர் இழப்பினை அதிகரிக்கும். ஆகவே இவைகளை தவிர்த்து விடுவோம்.

    * புதினா சாறு கலந்த நீர் பருகலாம்.

    * கொத்தமல்லி தழை சாறு அல்லது தானியா விதையை கொதிக்க வைத்த நீர் அருந்தலாம்.

    உடலில் வேர்குரு, கட்டிகள் ஏற்படலாம். தகுந்த சுகாதாரம் பேணி காத்து மருத்துவ ஆலோசனை பெறுங்கள். சோப்பு கூட அவரவர் இஷ்டம்தான்.

    கூடுதல் கவனம்:

    கொளுத்தும் வெயிலில் காரை நிறுத்தாதீர்கள். காரில் குழந்தையை விட்டு கடைக்கு செல்லவேண்டாம். இது ஆபத்தாக முடியலாம்.

    கோடையும், வெப்பமும் நாம் வருடம் தோறும் அனுபவிக்கும் ஒன்றுதான். விழிப்புணர்வினை கூட்டி நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்போம்.


    இந்த கட்டுரையை எழுதிய நேரத்தில் தமிழ்நாட்டுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை வரப்போகிறது என்றும் எச்சரித்துள்ளனர். 37 டிகிரி செல்சியஸ் இருந்தால் 50 டிகிரி செல்சியஸ் போல் வெப்பம் உணரப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

    குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வர வேண்டாம். காலையிலும் குடை எடுத்துச் செல்லுங்கள். நனைத்து பிழிந்த துணியினை உடலின் மீது போட்டுக் கொள்ளுங்கள்.

    • மனித மூளை என்பது தீராத அதிசயம் தான்.
    • நம் உடம்பே தீராத அறிவியல் அதிசயம் தான்.

    அதிசய வாழ்க்கையை அனுபவித்து வாழக் காத்திருக்கும் வாசகர்களே! வணக்கம்!

    கல் தோன்றி, மண் தோன்றி, மலை தோன்றி, கடல் தோன்றி, மழை தோன்றி, அருவி தோன்றி, நதி தோன்றி, காற்றுத் தோன்றி, நெருப்புத் தோன்றி, மரம் செடிகொடி தோன்றி, வயல் தோன்றி, பயிர் தோன்றி மற்றும் உயிரினங்கள் எல்லாம் தோன்றிப் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இன்னும் உலகமும் உயிரினங்களும் புதுமைமாறாத அதிசயமாகவே தென்படுகின்றன.

    அதிசயம் என்பது, யாராலும் எவராலும் செய்ய முடியாதது; அப்படிச் செய்தாலும் அதைப் போன்றதொரு பிரதியை மீட்டுருவாக்கவும் முடியாது. அப்படிப் பார்க்கும்போது இயற்கையின் படைப்புகள் (மனிதர்கள் உட்பட) அத்தனையும் அதிசயமே. ஆயினும் மனிதர் உருவாக்கிய சில பிரம்மாண்டங்களை நாம் அதிசயங்கள் என்று பட்டியலிட்டு அவற்றை அதிசயத்தோடு உலகம் முழுவதும் சுற்றிப் பார்த்து வருகிறோம்.

    ஓர் அழகிய கிராமம். அங்குள்ள பழம்பெருமை மிக்க ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு சிறுமி ஐந்தாம் வகுப்புப் படித்து வந்தாள். எதையும் அறிவுபூர்வமாக அணுகிப் பார்ப்பதும், நூலறிவை நம்பாமல் சொந்த அறிவுகொண்டு ஆழ்ந்து பார்ப்பதும் அவளது இயல்பான குணம்.

    ஐந்தாம் வகுப்பை முடித்ததும் அவள் மேல்படிப்பிற்காக கிராமத்திற்குப் பக்கத்தில் இருந்த பெரிய நகரத்துப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள். அது ஆங்கிலவழிப் பள்ளிக்கூடம். நகரத்திலேயே பெரிய பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம். அறிவிலும் கெட்டி சுட்டிகளான பிள்ளைகள் அவர்கள்.

    பள்ளி திறந்து ஆறாம் வகுப்பின் முதல் பாடவகுப்பிற்கு, வகுப்பாசிரியர் வந்து நின்றார். ஒவ்வொரு குழந்தையையும் எழுந்து நிற்கச் சொல்லி, பெயர், ஊர், இதற்குமுன் படித்த பள்ளிக் கூடத்தின் பெயர் அனைத்தையும் கனிவோடு விசாரித்தார். அந்தக் கிராமத்துச் சிறுமியைத் தவிர மற்ற எல்லோருமே நகரத்துப் பள்ளிக் கூடங்களில் ஆங்கில வழியில் படித்தவர்கள்.

    எல்லோரும் அவரவர் நோட்டையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் ஆசிரியை; எடுத்துக்கொண்டதும், "உங்களது பொது அறிவைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். உலக அதிசயங்கள் எத்தனை? அவை என்னென்ன? எங்கே பதில்களை எழுதி ஐந்து நிமிடங்களில் என்னிடத்தில் தாருங்கள்!" என்றார்.

    எல்லாக் குழந்தைகளும் வெகு ஆர்வத்துடன் தங்களது நோட்டுகளை எடுத்து மளமளவென்று பதில்களை எழுதத் தொடங்கினர். அந்தக் கிராமத்துச் சிறுமிமட்டும் நோட்டில் எதுவுமே எழுதாமல் எதையோ சிந்திப்பதுபோல் சும்மா உட்கார்ந்திருந்தாள். அவள் பதில் தெரியாமல்தான் விழிக்கிறாள் என்று நினைத்து அவளருகில் வந்த ஆசிரியை," பயப்படாதே! தெரிந்த பதிலை மட்டும் எழுது! ஏழு அதிசயங்களையும் எழுத வேண்டுமென்பதில்லை; நினைவில் உள்ளதை மட்டும் எழுது. மொத்தமாகப் பதில் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. மனம் தளர்ந்துவிடாதே!; போகப் போகப் படித்துவிடலாம்! இவர்களுக்கு இணையாகவும் நீ வந்து விடலாம்!" என்று ஆறுதல் சொன்னார். " இல்லை மிஸ்! எழுதிவிடுகிறேன்" என்று நோட்டில் எழுதத் தொடங்கினாள் சிறுமி.

    எல்லார் நோட்டுகளையும் வாங்கிய வகுப்பாசிரியை அங்கேயே திருத்தவும் தொடங்கினார். அந்தக் கிராமத்துச் சிறுமி தவிர்த்து மற்ற எல்லா மாணவர்களும் உலகத்தின் ஏழு அதிசயங்களின் பெயர்களையும் மிகச் சரியாகவே எழுதியிருந்தனர். கடைசியாகச் சிறுமியின் நோட்டைத் திறந்து பார்த்த ஆசிரியை அதிசயித்துப் போனார். அந்தச் சிறுமி நோட்டில் எழுதியிருந்த ஏழு அதிசயங்கள் இவைதாம்: 1. பார்த்தல், 2.கேட்டல், 3. சுவைத்தல், 4. முகர்தல், 5. உணர்தல், 6.சிந்தித்தல், 7.அன்பு செய்தல்.

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    கிராமத்துச் சிறுமியை எல்லா மாணவர்களுக்கு முன்பாகவும் வரச்சொல்லி வாரியணைத்துக் கொண்ட ஆசிரியை, " நீ எழுதிய பதில்கள் அனைத்தும் அறிவுபூர்வமானவை!" என்றார். சிறுமியின் சிந்தனை நுட்பத்தைக் கண்ட அனைத்து மாணவர்களும் கைதட்டிப் பாராட்டினர்.

    இந்த உலகத்தில் நமக்குள்ளேயே அதிசயங்கள் குவிந்து கிடக்கும்போது அவற்றுக்கு அதிசயப்படாமல், வெளியில் உள்ள செயற்கை அதிசயங்களுக்கு நாம் ஏன் அலைய வேண்டும்?. செயற்கை நுண்ணறிவுக் காலம் வரை இப்போது நமது அறிவியல் வளர்ந்திருந்தாலும், இன்னமும் மனிதனைப் போலவே ஒரு படைப்பை அச்சு அசலாக உருவாக்க முடியவில்லையே!.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற அந்த ஐந்து பொறிகளுமே அதிசயங்கள் தாம். கண், காது, மூக்கு, வாய், உடல் என்கிற அந்தப் பொறிகள் மூலம் மனிதன் பெறுகிற புலன் உணர்வுகளும், அவற்றின் துணைகொண்டு, மூளையின் செயல்பாட்டால் அவன் நிகழ்த்துகிற செயல்பாடுகளும் அதிசயமோ அதிசயம்தான். எத்தனை அறிவியல் உபகரணங்கள் கொண்டு நமது பொறிகளை ஆராயப் புகுந்தாலும் முடிவுகள் அவற்றையும் தாண்டிய அதிசயங்களாகவே இருக்கும்.

    மனிதன் தனது மூளையைக் கொண்டே மூளைக்கு நிகரான கணினியை உருவாக்கினான்; தொழில்நுட்பம் வளர வளர, அக்கணினியை நவீனப்படுத்திக்கொண்டே போகிறான். ஆயினும் மூளைக்கு நிகரான கணினி இன்னும் உருவாக்கப்படவில்லை; இனிமேலும் உருவாக்கப்படுமா? என்பது கேள்விக் குறியே. அதுவரை மனித மூளை என்பது தீராத அதிசயம் தான்.

    மனிதனின் கைப்பிடியளவே உள்ள மூளைதான் மனித உறுப்புகளிலேயே அதிசயமான அதிசயம். மூளை வளர்ச்சி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது 25-வது வயதுவரை நிகழும். எந்தவொரு மனிதனின் மூளையிலும் சிலர் திட்டுவதைப்போலக் களிமண் இருப்பதில்லை; மூளையில் 60 சதவீதப் பகுதி கொழுப்பால் ஆனது. மனிதன் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறான் என்பது கட்டுக்கதையாம். பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை பெரியதாக இருக்கும்; சிந்தனை வீச்சு என்பது மூளையின் அளவைப் பொறுத்து அமைவதில்லை: பயன்படுத்தும் தன்மையைப் பொறுத்தே அமையும் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. மனிதன் விழித்திருக்கும் நேரத்தை விட உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்குமாம். அப்படியானால் மூளை சுறுசுறுப்படைய அவ்வப்போது உறங்குவதும் நல்லதோ?.

    நாம் உலகில் உள்ள அதிசயங்களைப் பற்றி அறிந்து கொள்வதிலும் அவற்றைப் பார்ப்பதிலும் காட்டுகிற ஆர்வத்தை நம் உடம்பின்மீது காட்டியிருக்கிறோமா?.

    நம் உடம்பே தீராத அறிவியல் அதிசயம் தான். நம் ஒவ்வொருவர் வாயிலும் சராசரியாக ஒருநாளைக்கு ஒரு லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறதாம்; உமிழ்நீரே நமக்கு உயிர்நீர் என்று கூறுமளவுக்கு, மினரல்களும், தூய நீரும், ரசாயன மாற்ற ஊக்கிகளும், நோய் எதிர்ப்புச் சக்திமிக்க பாக்டீரியாக்களும் உமிழ்நீரில் இருக்கின்றன. சுவைப்பொருளைக் கண்டவுடன் அதிகமாகச் சுரந்து, உண்டு சுவைக்கும்போது பொருள் சீரணமாக உதவுகிற வேதிப்பொருளாகவும் உமிழ்நீர் உதவுகிறது.

    ஒவ்வொரு மனிதனின் உடம்புக்குள்ளும் இயங்குகிற ரத்தநாளங்களை நீட்டி அளந்தால், அது பூமத்திய ரேகையை நான்குமுறை சுற்றிக் கட்டக்கூடிய அளவுக்கு நீளமானதாக இருக்குமாம். மனித எடையில் 8 சதவீத எடையை அவனது உடம்பில் ஓடிக்கொண்டிருக்கும் குருதி கொண்டிருக்கிறதாம். ஒவ்வொரு மனித உடம்பிலிருந்தும் கண்களால் காணமுடியாத அளவுக்கு மெலிதான ஒளிவெளிச்சம் வெளிவந்து கொண்டிருக்கிறதாம். இதைத்தான் மேலும் நன்மைப்படுத்தி ஒளிதேகம் ஆக்கவேண்டும் என்று வள்ளல் பெருமான் கூறினாரோ?.

    மனிதனின் தொப்பையில் உள்ள தொப்புளில் 67 வகையான பாக்டீரியாக்கள் தங்கியுள்ளன. ஒவ்வொரு மனிதனும் தனது உடம்புத் தோலிலிருந்து ஓராண்டிற்கு 4கிலோகிராம் அளவிலான தோல் செல்களை உதிர்க்கிறான். பிறந்து ஒருமாதம் வரை குழந்தை அழுதாலும் கண்ணீர் வருவதில்லையாம். காரணம் தெரியாமல் அழும்போது எதற்குக் கண்ணீரை வீணடிக்க வேண்டும் என்கிற நல்லெண்ணமோ என்னவோ!.

    வாழ்நாளில் ஒவ்வொரு மனிதனுக்கும் 3 பில்லியன் முறைகளுக்கும் மேல் இதயம் துடிக்கிறது. டிரில்லியன் வகைகளுக்கும் மேற்பட்ட வாசனைகளை வேறுபடுத்தி நுகரும் வல்லமை நமது மூக்குக்கு இருக்கிறதாம். சுறா மீன்களின் பற்களின் வலிமைக்கு நிகரான வலிமையானவை மனிதனின் பற்கள். நம்மால் ஒரு பல்லை நமக்கிருப்பதற்கு நிகராகச், செயற்கையாக உருவாக்க முடியுமா?.

    நமது உடம்பின் உறுப்புகள் தவிர, கைகள், தோள்கள், கால்கள், விரல்கள் ஆகிய அங்கங்களின் உதவியோடு காட்டைத் திருத்திக் கழனிகள் ஆக்குவதும், நாட்டைத்திருத்தி நகரங்கள் ஆக்குவதும், மண்ணைப் பொன்னாக்குவதும், இயந்திரங்கள் ஆயுதங்கள் எனக் குண்டூசி முதல் ராக்கெட் வரை தொழில்நுட்பத்தில் வானளாவி நிற்பதும் தீராத அதிசயங்கள் தாம்.

    இயற்கையைப் பாருங்கள்!. "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!" என்று மகாகவி பாரதி பாடியது, அவர் இயற்கையின் அதிசயங்களைக் கண்டு மகிழ்ந்ததன் அடையாளம்தான்.

    காற்றைப் பாருங்கள். அதைப் பார்க்க முடியாது; உணர மட்டுமே முடியும். உணர்வதினும், நம் மூக்கின் வழியே காற்று உட்புகுவது, வெளியேறுவதுமாக நிகழும் சுவாச ஜாலங்களை கவனித்துப் பாருங்கள். தியான முறையில் இதுவும் ஒன்று என்கிறார்கள். தூய உயிர் வளியாக உடம்பின் உள்ளே புகுந்து, உயிர்வாழ்வதற்குத் தேவையான உதவிகளையெல்லாம் உடம்பினுள் புரிந்து, கரியமில வாயுவாக வெளியேறும் காற்று பயன்தரும் அதிசயம்தான்.

    மண்ணைப் பாருங்கள். மண்ணில்தான் எத்தனை வகைகள்?. எத்தனை பயன்கள்?. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வாழிட மண்புலம் பகுத்து வாழ்வியல் ஒழுங்குகளை வகுத்தது தமிழர்களின் அதிசயம். மண்ணில் விளைந்து வரும் புல் தொடங்கி, பெரிய ஆலமரம்வரை ஒவ்வொரு செடிகொடியும் அதிசயம். அவற்றில் பூக்கும் மலர்களின் வண்ணப் புதுமைகளை இன்னமும் பார்க்கப் பார்க்க அதிசயம்தான்.

    வானம் என்று ஒன்றுமில்லை என்றாலும் அதில் நொடிதோறும் நிகழ்கிற அதிசயங்கள் எண்ணிலடங்காதவை. எந்தக் கடிகாரத்தில் அலாரம் வைத்துக்கொண்டு நேரந்தவறாமல், நாள்தோறும் சூரியனும் சந்திரனும் வந்து ஒளி செய்கின்றன?. வானில் மிதக்கும் மேகங்கள் கறுத்து மழையாகும் அதிசயத்தை என்னவென்று சொல்வது? மழையின் கருணையை ஏதென்று புகழ்வது?. விண்ணில் சிறகு விரித்துப் பறக்கின்ற பறவையினங்கள் வழங்கும் சுதந்திரச் செய்திகள் தாம் எத்தனை? எத்தனை?

    நாம் அதிசயம்!

    நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் அதிசயம்!

    நாம் வாழுகிற வாழ்க்கையும் அதிசயம்!

    வாருங்கள் அதிசயித்து வாழ்வோம்!

    அதிசயங்கள் புரிந்து மகிழ்வோம்!

    தொடர்புக்கு 9443190098

    • வண்ண வண்ண சேலை கட்டி தலைநிறைய பூ வைத்து காலத்துக்கு ஏற்ற வகையில் இளம் பெண்களுக்கே உரித்தான துள்ளல் காட்சிகள்.
    • ளவுத்துறை உற்சாகதுறையாக எங்களுக்கு அமைந்தது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிசியாக இருந்த நேரம்.

    எதிர்பாராத இடத்தில்...

    எதிர்பாராத நேரத்தில்...

    எதிர்பாராத நண்பர்களை சந்திக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்...?

    அந்த சந்திப்பையும், அனுபவத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படி ஒரு அனுபவத்தை நானும் சந்தித்தேன் கோவாவில்.

    விஜயகாந்த் சாருக்கு ஜோடியாக உளவுத்துறை படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அந்த படத்தில் பெரும்பகுதி ஷூட்டிங் சென்னையில் தான் நடந்தது.

    அந்த படத்தில் ஒரு வெகுளிப் பெண் பாத்திரத்தில் நடித்தேன். படிக்காத பெண்ணான நான் விஜயகாந்த் சாரை திருமணம் செய்திருப்பேன். கடற்படை உளவுத்துறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் கடல், படகு சார்ந்த காட்சிகள் நிறையவே உண்டு.

    கோவாவில் படப்பிடிப்பு. படக்குழுவினர் எல்லோரும் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தோம்.


    ஒரு நாள் அந்த ஓட்டல் அறையில் இருந்து வெளியே வந்தேன். சற்று தூரத்தில் எனது நெருங்கிய தோழியான நடிகை மகேஸ்வரியை பார்த்ததும் ஆச்ச ரியத்தில் அப்படியே நின்று விட்டேன். ஒரு வரை ஒருவர் பார்த்தும் இருவருக்குமே இன்ப அதிர்ச்சி. சினிமா காட்சிகளில் வருவது போல் தான் அப்போது நாங்களும் நடந்து கொண்டோம்.

    அவள் என்னை பார்த்து ஓடிவர... நான் அவளை பார்த்து ஓட இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கொண்டோம்.

    'ஏய்... நீ எப்படி இங்கே?' என்று நான் கேள்வி எழுப்பவும், அவளும் அதே கேள்வியை என்னை பார்த்து கேட்கவும் நான் உளவுத்துறை படத்தில் நடிக்க வந்திருப்பது பற்றியும் ஹீரோ விஜயகாந்த் என்றும் சொன்னேன்.

    அவள் 'உல்லாசம்' என்ற படத்தில் நடிக்க வந்ததாகவும், அதே ஓட்டலில் தான் தங்கி இருப்பதாகவும் கூறினாள்.

    மகஸ்வரியும், நானும் நெருங்கிய தோழிகள். சென்னையில் இருந்தால் நேரில் சந்திப்பதை தவற விடமாட்டோம்.

    ஆனால் அந்த காலகட்டத்தில் பட வாய்ப்புகள் அதிகம் இருந்ததால், ஓய்வெடுக்க கூட நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருந்தேன். அப்படியிருக்கும் போது நாங்கள் சந்திக்க ஏது நேரம்?


    ஆனால் எதிர்பாராத இடத்தில் அன்று சந்தித்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சி. இருவரும் படப்பிடிப்பில் எவ்வளவு உல்லாசமாக இருந்தோமோ தெரியாது. ஆனால் நாங்கள் இருவரும் அவ்வளவு உல்லாசமாக கிடைத்த நேரத்தில் பொழுது போக்கினோம்.

    தினமும் படப்பி டிப்பு முடிந்து ஓட்டலில் தங்கியிருக்கும் போது ஒன்றாக நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்வது, ஒன்றாக சாப்பிட செல்வது... அப்பப்பா.... அப்படி ஒரு சந்தோசம்!

    பொதுவாக படப்பிடிப்புகளில் இருக்கும் போது நண்பர்கள், உறவி னர்கள் என்று பேசி மகிழ்வது, பொழுது போக்குவது இயலாது. படக்காட்சிகளை பற்றிய சந்தினை, அதற்கான ஏற்பாடுகளில் தான் கவனமாக இருப்போம்.

    இந்த மாதிரி வாய்ப்புகள் எப்போதாவது கிடைக்கும். எங்களை பார்த்த படக்குழுவினர் 'மேடம், யார் எந்த குழுவில் இருக்கிறீர்கள் என்று கிண்டல் செய்வார்கள்.

    விஜயகாந்த் சாரோடு நடிப்பதே திரில் லிங்கா இருக்கும். இந்த படத்திலும் கோவா கடலில் அதிவிரைவு படகில் அழைத்து சென்றார். படகின் வேகமும், அது தண்ணீரை கிழித்தபடி பாய்ந்து சென்றதை இப்போது நினைத்தாலும் மனசுக்குள் திக்.. திக்.. என்று இருக்கும். திரில்லிங்கான அந்த அனுபவம் என்றும் மறக்க முடியாதது.

    படத்தில் கதாபாத்திரத்துக்கும் 'மீனா' என்று என் நிஜப்பெயரையே பெயரையே சூட்டியிருந்தார்கள். படம் முழுவதும் 'மீனா... மீனா..' என்று ஒவ்வொருவரும் டயலாக் பேசுவதை கேட்டதும் அது ஒரு சந்தோசம்.

    அதை விட என் பெயரில் ஒரு பாடலே வைத்திருந்தார்கள்.

    'மீனா உன் கண்ணுக்குள்ள

    மின்னலென்ன...' என்ற பாடலுக்கு நானும் விஜயகாந்த் சாரும் ஆடுவோம். என் பெயருக்கேற்ற துடுக்குத்தனமான பாட்டு. அந்த பாடலுக்கு ஏற்ப ரசித்து ரசித்து நடித்தேன்.


    அந்த பாடல் காட்சி முழுவதும் வண்ண வண்ண சேலை கட்டி தலைநிறைய பூ வைத்து காலத்துக்கு ஏற்ற வகையில் இளம் பெண்களுக்கே உரித்தான துள்ளல் காட்சிகள். எனவே அந்த ஷூட்டிங் நட்பு ரீதியான சந்தோ சமான அனுபவத்தை கொடுத்தது. அதே போல் எனக்கு கலா மாஸ்டர், மகேஸ்வ ரிக்கு பிருந்தா மாஸ்டர். அவர்களும் இருவரும் ஒரே இடத்தில் தங்கி இருக்க நேர்ந்ததால் அக்களும்-தங்கையும் தனியாக கூட்டணி போட்டிருந்தார்கள்.

    ஆக, உளவுத்துறை உற்சாகதுறையாக எங்களுக்கு அமைந்தது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிசியாக இருந்த நேரம். ஆனா லும் தெலுங்கில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா சாரோடு நடித்த தில்லை. இந்த நிலையில் அவரோடு ஒரு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது.

    கால்ஷீட் நெருக்கடி யாகத்தான் இருந்தது. இருந்தாலும் அந்த வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்று முடிவு செய்தேன். படத்தின் கதையும் எனக்கு பிடித்து இருந்தது.


    அந்த படத்தின் டைரக்டரை பற்றி செல்ல வேண்டுமென்றால் அவர் 'பாடல் ஸ்பெச லிஸ்ட்' என்று சொல்லலாம். தெலுங்கு பட உலகில் அவரது படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டாக இருந்தது.

    எனவே அந்த படத்தில் எப்படி யாவது நடிக்க வேண்டும்!

    அது என்ன படம்? நடந்தது என்ன என்பதை பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்..

    (தொடரும்...)

    • நம் மூளையின் செயல்திறன் நன்றாக இருக்க வேண்டுமெனில் ஆழ்ந்த இரவு உறக்கம் கொள்ள வேண்டும்.
    • நான் நலமாக இருக்கிறேன், இன்றைய நாளை நான் மகிழ்ச்சியாக எதிர்கொள்வேன் என்று நமக்கு நாமே ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    நம் வாழ்க்கையின் வெற்றி என்பது மூளையின் நலனில்தான் உள்ளது. இந்த மூளையை நலமாக வைத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். உங்கள் மூளையின் நலத்திற்கான 10 திறவுகோல்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

    1. ஆழ்ந்த இரவு உறக்கம்

    2. தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்வது

    3. சூரிய உதயத்தைப் பார்த்தல்

    4. உடல் மற்றும் மனத்திற்கான பயிற்சி

    5. சரிவிகித உணவு

    6. நாளும்புதியவற்றைக் கற்றுக்கொள்ளுதல்

    7. மனத்தை ஒருங்கிணைத்து வாழ்தல்

    8. சமூக வலைத்தளங்களை அளவாகப் பயன்படுத்துதல்

    9. உறங்கச் செல்லும் முன் தன்னாய்வு செய்தல்

    10. நேர்மறை எண்ணங்கள்

    ஆழ்ந்த இரவு உறக்கம்:

    மூளையின் நலனுக்கான முதல் திறவுகோல் இதுதான். ஆம்! நாம் உறங்கும்போதுதான் நம் மூளையில் நினைவுத்திறன் வலுப்படுத்தப்படுகிறது.

    நம் மூளையின் செயல்திறன் நன்றாக இருக்க வேண்டுமெனில் ஆழ்ந்த இரவு உறக்கம் கொள்ள வேண்டும்.

    இரவு 11 மணி முதல் காலை 4 மணிவரை நம் மூளைக்கு ஓய்வு கொடுத்தால்தான் நம் மூளையில் உள்ள கடிகாரம் (Circadian Clock) நன்முறையில் இயங்கும்.

    நம் நாளமில்லாச் சுரப்பிகள் நன்றாக இயங்குவதற்கும் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதற்கும் மறுநாள் நாம் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும், இந்த இரவு உறக்கம் அவசியமானது.


    தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்வது:

    காலையில் எழுந்தவுடன் முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பிறகு கண்ணாடி முன் நின்று நான் என்னை விரும்புகிறேன் என்று புன்னகையுடன் கூற வேண்டும்.

    நான் நலமாக இருக்கிறேன், இன்றைய நாளை நான் மகிழ்ச்சியாக எதிர்கொள்வேன் என்று நமக்கு நாமே ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இதைத் தான் Self suggestion என்று கூறுகிறோம். இதை நாளும் செய்து பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சூரிய உதயத்தைப் பார்த்தல்:

    காலையில் தோன்றும் செந்நிறக் கதிரவனை முதல் மூன்று நிமிடங்கள் பார்க்கும்போது, அக்கதிர்களானது ரெட்டினாவில் விழும்போது ரெட்டினாவிலிருந்து ரெட்டினோ ஹைப்போதலாமிக் வழியாக அது நம் மூளையில் உள்ள மூன்றாவது கண் என்றழைக்கப்படும், பீனியல் சுரப்பியைச் சென்றடைகிறது.

    இப்பகுதிதான் நன்கு உறக்கம் வருவதற்கும், உள்ளுணர்வுகளைத் தூண்டுவதற்கும் அவசியமானது. நிறையச் செயல்களில் நாம் வெற்றி பெறுவதற்கு நமக்குள் தோன்றும் உள்ளுணர்வு மிகவும் முதன்மையானது.

    அதற்கு நாம் கதிரோன் தோன்றுவதை அல்லது மறைவதை ஒன்று முதல் மூன்று நிமிடங்களாவது இடைவெளி விட்டு விட்டுக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.



    உடல் மற்றும் மனத்திற்கான பயிற்சி:

    நாளும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாம் செய்யும் அந்த ஒரு மணி நேரப் பயிற்சியை, உடலுக்கான பயிற்சி, மனத்திற்கான பயிற்சி என்று பிரித்துக்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சிகள் மூளையின் இணைப்புகளை வலுப்படுத்துகின்றன.

    சரிவிகித உணவு:

    நாம் என்ன உடலுக்குக் கொடுக்கிறோமோ, அதுதான் நாம் யார் என்பதை உறுதிசெய்கிறது. வயிறு தான் நம் இரண்டாவது மூளை என்பதைப் பற்றியும், நம் மூளைக்கு Neurotransmitters எனப்படும் நரம்பியக் கடத்திகளின் உருவாக்கத்திற்கும், நாம் உண்ணும் உணவுதான் மூலக்கூறு.

    அறிவுத் திறனுக்கு அசிடைல்கோலின் என்னும் நரம்பியக் கடத்திகள் வேண்டும். அசிடைல்கோலின் நன்றாக இருந்தால்தான் நினைவுத்திறன் நன்றாக இருக்கும். அசிடைல்கோலின் குறைவாக இருந்தால் டெமன்டியா என்னும் நினைவு மறதி நோய் வந்துவிடும். நாளும் இரண்டு பழங்களாவது உண்ண வேண்டும். அதில் தான் மூளையின் நலனுக்கான வைட்டமின்கள் உள்ளன.

    எதைச் சாப்பிட்டாலும் அரைவயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடமாக வைத்துக்கொள்ளுங்கள். அப்படி வைத்திருந்தால் நம் மூளையின் நலம் காக்கப்படும்.

    நாளும் புதியவற்றைக்கற்றுக்கொள்ளுதல்:

    "கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்" என்பது பழமொழி. எதையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிடாமல் நாம் நாளும் புத்தம்புதிய தகவல்களைக் கற்றுக்கொள்ள முயல வேண்டும்.

    புதிய செய்திகள் மூளையை நன்கு தூண்டும். நான் என்னை உயர்த்திக் கொள்வதற்காக நாளும் முயல்கிறேன் என்று இரவு உறங்கச் செல்வதற்கு முன் மனத்திற்குள் சொல்ல வேண்டும்.


    மனத்தை ஒருங்கிணைத்து வாழ்தல்:

    இப்போதெல்லாம் எல்லாரிடமும் மனஅழுத்தம் மற்றும் எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாக உள்ளன. கடவுளிடம் வேண்டும் போது கூட, இது நடக்குமா நடக்காதா என்று நம்பிக்கை இன்றி வேண்டத் தொடங்கி விட்டோம்.

    மனத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியே இந்த Mindful Living. அதாவது இந்த நிமிடம் நாம் என்ன வேலை செய்கிறோமோ அதில் மட்டுமே கவனம் வைத்து வேலை செய்வது. எடுத்துக்காட்டுக்கு, சாப்பிட்டால் அதை மட்டும் செய்வது. படித்தால் முழுக்கவனத்துடன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது. இப்படி எந்த வேலை செய்தாலும் அதில் மட்டுமே கவனம் செலுத்தினால் நம்முடைய மூளையின் நலன் மேம்படுத்தப்படும்.

    ஒரு நாளைக்கு நமக்கு 60,000 எண்ணங்கள் வந்து சென்றாலும், நாம் செய்யும் வேலையை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்களைச் செய்ய வேண்டும். இதைத்தான் Mindful Living என்றோம்.

    சமூக வலைத்தளங்களை அளவாகப் பயன்படுத்துதல்:

    நாம் தூங்குவதற்கு முன்னால் அலைபேசி மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது இயல்பாகி விட்டது (வாட்ஸ்ஆப் ஃபேஸ்புக் யூடியூப்). இவையனைத்துமே நமக்கு நன்மைகள் செய்கின்றன என்று நினைக்கிறீர்களா? ஒரு விழுக்காடு இதில் நன்மை இருக்கலாம். ஆனால் மீதமுள்ள 99 விழுக்காடு நம்மை இயல்பு வாழ்க்கையில் இருந்து திசைத் திருப்புபவையே.

    இவற்றை ஒதுக்கிட வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால், அளவோடும் எச்சரிக்கையோடும் பயன்படுத்த வேண்டும். Mindful Living எந்த அளவிற்கு அவசியமோ, அதேபோல் இவைகளை எச்சரிக்கையோடு பயன்படுத்துவதும் தேவைதான்.

    எடுத்துக்காட்டுக்கு நாம் ஒரு வேலை செய்ய வேண்டும் என்று அலைபேசியை எடுப்போம். அப்போது ஒரு தகவல் வந்திருந்தால் அதைப் பார்த்துவிட்டு, பார்க்க வந்த வேலையை மறந்து விடுவோம்.

    சில நேரங்களில் எதற்காக அலைபேசியை எடுத்தோம்? என்பதே நினைவுக்கு வருவதில்லை. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், சமூக வலைத்தளங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும்.


    உறங்கச் செல்லும் முன் தன்னாய்வு செய்தல்:

    இரவு உறங்குவதற்கு முன்பு காலையிலிருந்து இரவு வரை நடந்தவற்றைத் தன் ஆய்வு செய்ய வேண்டும்.

    நம்மை அதிகமாக ஆட்கொண்ட உணர்வு நிலை எது? அது நம் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியதா? இல்லை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியதா? என்பதைப் பற்றித் தன் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் மூளை நம்மைச் சரி செய்துவிடும்.

    நேர்மறை எண்ணங்கள்:

    நேர் மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய 10 திறவுகோல்களும் நம் மூளையின் நலனுக்கு மிகவும் இன்றியமையானவை. உடல் மற்றும் மனம் இரண்டும் நலமாக இருக்க மூளையைப் பேணிப்பாதுகாக்க வேண்டியது மிகவும் நன்று என்பதை உணர்ந்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள்.

    • திருமணம் நடப்பதற்கும் இந்தக் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்? பெருமாளுக்கு இங்கே தினசரி கல்யாணம் நடப்பது ஏன்?
    • திருவிடந்தையில் மூலவர் தன் திருநாமத்திலேயே நித்ய கல்யாணப் பெயரைக் கொண்டுள்ளதால், திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா? கிழக்கு கடற்கரை சாலைக்கு வெறும் ஜாலியாக மட்டும் செல்லாமல், திருவிடந்தை சென்று ஆறரை அடி உயரத்தில் பிரமாண்டமாக அருளாட்சி புரியும் நித்திய கல்யாணப் பெருமாளை தரிசனம் செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை ஒளி பொருந்தியதாக மாறும்.

    திருவிடந்தை கோவில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்திலும் அமைந்திருக்கிறது. பிராட்வேயில் இருந்து பிபி-19, தி.நகரிலிருந்து ஜி-19 பஸ்கள் செல்கின்றன.

    இந்த ஊரின் பெயர் நித்திய கல்யாணபுரி. கடவுளின் பெயர் நித்ய கல்யாணப் பெருமாள். கோவில் விமானமோ கல்யாண விமானம். திருக்குளத்தின் பெயர், கல்யாண தீர்த்தம்.

    ஆதிவராகப் பெருமாளும் அகிலவல்லி நாச்சியாரும் கோமளவல்லித் தாயாரும் தினசரி காட்சி தருவதும் கல்யாணக் கோலத்தில் தான். ஆலயத்தின் தலமரமோ, மணவிழாவிற்கு உகந்த புன்னை.

    பெருமாளுக்கு இங்கே தினந்தோறும் கல்யாணம் நடக்கிறது. 'கல்யாணம் ஆகாதவங்க ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இங்கு சென்று பெருமாளை தரிசனம் செய்தால் போதும், ஒரு மாதத்துலயே கல்யாணம் நிச்சயம் ஆயிடும். வரவங்க ரெண்டு மாலைகளை வாங்கிட்டு வரணும். அர்ச்சனை பண்ணி ஒரு மாலையைப் பெருமாளுக்குச் சாத்துவார்கள். இன்னொண்றை கழுத்துல போட்டுக்கிட்டு, சம்பந்தப்பட்டவங்க பிரகாரத்தைச் சுற்றிவரணும். அப்புறமா அந்த மாலையை வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போய், சாமி படத்துக்கிட்ட வச்சு வணங்கினாப் போதும். கல்யாணம் நிச்சயமாயிடும்.

    திருமணம் நடப்பதற்கும் இந்தக் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்? பெருமாளுக்கு இங்கே தினசரி கல்யாணம் நடப்பது ஏன்?


    அதற்கான புராண வரலாறு வருமாறு:-

    பண்டைய காலத்தில் திருவிடந்தைக்கு அக்காலத்தில் மேகநாதன் என்ற அசுரன் இருந்தான். அவனது மகன் பலிச்சக்கரவர்த்தி.

    இந்த பலிச்சக்கரவர்த்தி உலகினைத் தர்ம சாஸ்திரத்தின்படி, முறையாக ஆட்சிபுரிந்து வந்தான். இவனது நண்பர்களான மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூவரும் தேவர்களுக்கு எதிரான போரில் தோல்வியடைந்து பலிச்சக்கரவர்த்தியிடம் சென்று அடைக்கலம் புகுந்தனர். தனது நண்பர்களுக்காக பலிச்சக்கரவர்த்தி தேவர்களுக்கு எதிராக போரிட நேரிட்டது.

    இதனால் ஏற்பட்ட பாவத்தினைப் போக்க பலிச்சக்கரவர்த்தி திருவிடந்தையில் தவம் புரிந்தான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பலியின் முன்பு தோன்றி அவனுக்கு வேண்டிய வரம்களை அளித்தார். இவ்வூரின் அழகில் மயங்கிய இறைவன் திருவிடந்தையிலேயே தங்கிவிட்டார்.

    திருவிடந்தையில் மூலவர் தன் திருநாமத்திலேயே நித்ய கல்யாணப் பெயரைக் கொண்டுள்ளதால், திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    இந்த நிலையில் முனிவர் ஒருவரும், அவரது பெண்ணும் சொர்க்கம் அடையத் தவம் இருந்தனர். இதில் முனிவரின் பெண் முதலில் சொர்க்கம் அடையத் தகுதி பெற்றார். அவர் திருமணமாகாத பெண் என்பதால் சொர்க்கம் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

    நாரதர் பூலோகத்தில் இருந்த முனி புங்கவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினார். காலவ ரிஷி என்ற முனிவர் அவளை மணந்து கொண்டார்.

    முனிவருக்கு ஒரே வருடத்தில் 360 பெண் குழந்தைகளைப் பெற்றுத் தந்துவிட்டு சொர்க்க லோகம் சென்றுவிட்டாள் அவரது மனைவி. அத்தனை பெண் குழந்தைகளை வைத்து, காப்பாற்றச் சிரமப்படும் முனிவர், இறுதியில் இந்த திருவடந்தைக்கு வந்தார்.

    இங்கே அருள்பாலிக்கும் வராக மூர்த்தியை வணங்கினார். தேவர்களுடன் போரிட்டதால் சாபம் பெற்ற பலி மன்னனுக்கும் காட்சி தந்து ரட்சித்த வராகர், இவர் தான் என்பதால், தன் மகள்களுக்கும் இவரே நல்வாழ்க்கையை அமைத்துத் தருவார் என்று நம்பினார் காலவ மகரிஷி.

    முனிவரின் கவலையைத் தீர்க்க, வராகப் பெருமாள், பிரம்மசாரி உருவெடுத்து பெண் கேட்டு வந்தார். தினம் ஒரு கன்னிகை வீதம் 360 நாட்களுக்கு ஒவ்வொருவராகத் திருமணம் செய்து கொண்டார். பெருமாள். கடைசி தினத்தில் 360 மனைவிகளையும் ஒன்றாகச் சேர்த்து அனைத்து ஒரே பெண்ணாக ஆக்கி தன் இடத்து பக்கத் திருத் தொடையில் வைத்துக் கொண்டு வராகப் பெருமாளாக அனைவருக்கும் காட்சியளித்தார். (இப் போதும் அதே காட்சியை நாம் தரிசிக்கலாம்).

    360 கன்னிகள் சேர்ந்து ஒருங்கே உருவானதால், வராகரின் இடபாகத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லித் தாயார் என்றும் வருடம் பூராவும் திருமணம் செய்து கொண்டதால், வராகருக்கு நித்யகல்யாணப் பெருமாள் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. 360 பெண்களில் மூத்தவளின் பெயர் கோமளவள்ளி என்பதால், இங்கே தனிக் கோவிலில் காட்சி தரும் தாயாருக்கும் கோமளவள்ளிஎன்றே பெயர். 'திரு' (லட்சுமியை) தனது இடது பக்கத்தில் பெருமாள் வைத்துக் கொண்டதால் இந்த ஊருக்கு 'திருஇடவெந்தை' என்ற பெயர் ஏற்பட்டது.

    தினந்தோறும் திருமணம் செய்து கொண்ட பெருமாளை தரிசனம் செய்வதால், இங்கே வரும் பக்தர்களுக்கும் விரைவில் திருமணம் நடைபெற்று விடுகிறது.

    திருமணம் ஆகாத ஆண் அல்லது பெண் தங்களது பெற்றோர் அல்லது உறவினர்களுடன் இந்த ஆலயத்திற்கு வரவேண்டும்.


    இரண்டு மாலைகள் வாங்க வேண்டும். ரோஜா மாலையாக இருந்தால் நல்லது. அர்ச்சகர் அந்த மாலைகளை தாயாருக்கு அணிவித்து பரிகாரம் செய்யப்பட வேண்டியவரின் பெயரில் அர்ச்சனை செய்வார். பிறகு இரண்டு மாலைகளில் ஒரு மாலையை மட்டும் எடுத்து வந்து தருவார்.

    அதை திருமணத்துக்கு உரியவர் தானே தனது கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு ஆலயத்தை 9 முறை சுற்றி வரவேண்டும். பிரகாரத்தை வலம் வரும்போது விரைவில் தனக்கு நல்ல இடத்தில் திருமணம் கைக்கூட வேண்டும் நித்திய கல்யாணப்பெருமாளிடம் மனமுருக வேண்டிகொள்ள வேண்டும்.

    9 தடவை பிரகாரத்தை சுற்றி முடித்ததும், கொடிமரம் அருகில் வந்து சாஷ்டாங்மாக விழுந்து வழிபட வேண்டும். பிறகு அந்த மாலையை தானே கழற்றி எடுக்கவேண்டும். அதை ஒரு பைக்குள் பத்திரமாக வைத்து வீட்டிற்கு எடுத்து செல்ல வேண்டும். வீட்டில் அந்த மாலையை பூஜை அறை விசாலமாக இருந்தால் அங்கே வைத்துவிடலாம். அல்லது சுற்றில் அணியில் அடித்து அதில் தொங்கவிட்டுவிடலாம்.

    தினமும் பூஜை அறையில் விளக்கேற்றி சாமிக்கும்பிடும் போது குலதெய்வத்தை வணங்கிவிட்டு நித்தியகல்யாணப்பெருமாளையும் மனத்திற்குள் நினைத்து வழிபட வேண்டும். அந்த பெருமாளின் அருளால் நிச்சயம் விரைவில் திருமணம் கைக்கூடிவிடும். குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பாக திருமணம் நடைபெறும். பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்வில் இது நடந்து உள்ளது.

    திருவிடந்தை பெருமாளை தரிசனம் செய்தால் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்கு சமம் என்று கூறலாம். 108 திருப்பதிகளில் பெருமாள் வராகமூர்த்தியாக தரிசனம் தரும் திருப்பதியும் இது மட்டும்தான். தம்பதி சமதேராக ஆதிசேஷன், பெருமாள் திருவடியைத் தாங்கி சேவை சாதிப்பதால், இங்கே வந்து நித்ய கல்யாணப் பெருமாளை வணங்கினால் உங்கள் ராகு, கேது தோஷங்களும் நீங்கிவிடும். உற்சவர் பெருமாளுக்கும், தாயாருக்கும் தாடையில் திருஷ்டிப்பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளதால் அவர்களை வணங்கினால் இதுநாள் வரை உங்களுக்கு ஏற்பட்ட திருஷ்டிகளும் பறந்துவிடும்.

    • நாம் இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் மிகவும் உன்னதமானது.
    • எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் போது பயம் ஏற்படுகிறது.

    அன்பார்ந்த வாசகர்களே, கடந்த வாரம் துறவு என்பது எதையும் விட்டு விடுவது அல்ல, இருப்பதை அப்படியே ஏற்று கொண்டு வாழ்வது என்பது உண்மையான துறவின் இலக்கணம் ஆகும். இதை நிஷ்காமிய கர்மம் என்கிறது கீதை. இதை இன்னும் நாம் எளிமையாக புரிந்து கொள்ளும் விதமாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் "உறவிலே கண்ட உண்மை நிலை தெளிவு துறவு" என்கிறார்.

    எனக்கு எது எப்படி, எங்கு, எவ்வாறு அமைந்ததோ, அது இறைவன் சித்தம். அதை நான் ஏற்று கொள்கிறேன் என்கின்ற மன பக்குவத்தோடு வாழ வேண்டும். ஏனென்றால் நாம் யாரும், இந்த உலகத்திலே, நான் இந்த தாய், தந்தைக்கு மகனாகவோ, மகளாகவோ பிறக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது? பிறப்பு என்பதே நம் கையில் இல்லை. அப்படி என்றால் எதுவும் நம் கையில் இல்லை. அது, அது நடக்க வேண்டிய நேரத்தில் தானாக நடக்கிறது.

    எனவே, இந்த உலகில் யாரையும் மாற்றுவதற்காக நான் பிறக்கவில்லை. என்னை நானே முதலில் மாற்றி கொள்ள வேண்டும். என் மாற்றத்தை பார்த்து தான் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் மாறுவார்கள். ஆனால் நாம் மாறாமல், மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டு இருக்கிறோம். இதனால் குடும்பத்தில் சிக்கல்கள் வருகிறது.

    ஒன்றை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையானது, பிறக்கும் போது நம்மோடு சேர்ந்து வந்தது இன்பம், துன்பம் என்கின்ற இந்த இரண்டு உணர்வுகள். அதை அப்படியே ஏற்று கொள்வது தான் ஞான வாழ்க்கை. உண்மையான சந்நியாசம், இந்த நிலையில் இருந்து நாம் அறியப்படும் பொருளை அதாவது ஆன்மாவை அறிய முற்பட வேண்டும்.

    நாம் சாதாரண மனிதர்கள் அல்ல, நாம் மனம் கொண்ட ஈசனாய் இருப்பதால் தான் நமது பெயர் மனுசன். அந்த ஈசனுக்கு உடல் இல்லை. இந்த மனிதர் என்கின்ற ஈசனுக்கு உடல் உண்டு. எனவே, இந்த பிரபஞ்சம் என்பது ஒரு பிரம்ம பீடம்.

    நாம் இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் மிகவும் உன்னதமானது. நாம் இங்கு வந்திருக்கிறோம் என்றால், நம்மிடம் அதற்கான தகுதியும், தரமும் இறைவன் கொடுத்து தான் நம்மை ஒரு தாயின் வயிற்றில் கருவிலே உருவாக்கி இருக்கிறான். அந்த தகுதி நமக்கு இல்லையென்றால், நாம் இன்னும் பல பிறவிகள் ஓரறிவு தாவரம் முதல் ஐந்தறிவு விலங்காக தான் பிறவியில் இருப்போம்.

    எனவே நாம் ஒவ்வொருவரும் இறை தன்மை பெற்றவர்கள். இதை நாம் உணர்வதே, ஞான வாழ்வின் நோக்கம். இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மனித வாழ்வின் நோக்கம் அறநெறி படி வாழ்ந்து இறையுணர்வு பெறுதல் என்கிறார். இதற்கு முதல் வழி, தன்னையறிதல் ஆகும்.

    வாழும் காலத்திலே தன்னையறிதலுக்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று தவம் மற்றொன்று மவுனம் ஆகும். தவத்தின் வழியாக (தியானம்) புலன்களின் மூலமாக மனதை அறிய முடியும். ஆனால் மவுனத்திலே, மனதின் எஜமானாகிய ஆன்மாவை அறியமுடியும். இதை தான் திருமூலர் அவர்கள்,

    "தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை

    தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

    தன்னை அறியும் அறிவை அறிந்த பின்

    தன்னை தானே அர்ச்சித்தானே" - என்கிறார்.

    இதையே மகரிஷி அவர்கள், மனதை அறிந்தால் தான் அதன் மூலத்தை அறியலாம் என்கிறார். எனவே மனதை அறிவது தவம். அதை பற்றிய ஆய்வே மவுனம் ஆகும். எனவே உன்னில் தேட உள்ளது கிடைக்கும் என்று மகான்கள் கூறுகிறார்கள்.

    இந்த ஞான வாழ்க்கையை வேதத்திரி மகரிஷி அவர்கள், ஒரு மனிதர் வாழும் காலத்திலேயே முதலில் தன்னை உணர வேண்டும். அப்படி அறிந்தால் தான், தன் குறைகளை நம்மால் உணர முடியும். அப்படி உணர்ந்தால் தான் அந்த குறைகளை திருத்தம் பெற வழி செய்யமுடியும். அப்படி வழி செய்தால் தான் வகுத்தபடி வாழ முடியும் என்கிறார். இந்த நிலை வருவதற்கு நம்மை நாமே பக்குவபடுத்தி கொள்ள வேண்டும்.

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்




    ஏனெனில், வாழ்க்கையில் நாம் கற்பனை செய்வது ஒன்று, ஆனால் இறைவன் கொடுப்பது வேறு ஒன்று. ஆனால், வாழ்க்கையில் நமக்கு எது நடந்தாலும், சந்தோஷமாக இருக்க அல்லது மனம் சம நிலையில் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கிறது. ஆனால் அப்படி இல்லை என்று நமது பலவீனம் சொல்கிறது. அதாவது சாஸ்திரம் முடியும் என்கிறது. நமது பலவீனம் முடியாது என்கிறது. இதில் சாஸ்திரம் சத்தியமா? அல்லது நமது பலவீனம் சத்தியமா? நம்மை பொறுத்தவரை பலவீனம் தான் சத்தியம் என்று நாம் சொல்லுவோம்.

    ஏனெனில் எது நடந்தாலும், நம்மால் சந்தோஷமாக இருக்க முடிவது இல்லை. நாம் எல்லாம், நமது வாழ்க்கையிலே நாம் எதிர்பாப்பது போல் நடக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் எதுவும் நடப்பது இல்லை. நாளை ஏதோ ஒன்று கிடைக்க போகிறது என்கின்ற ஒரு எதிர்பார்ப்போடு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இறைவன் வேறு விதமாக நம்மிடம் விளையாடுகிறான். இதை சித்தர் பாடலிலே

    "உலகத்தை உருட்டி திரட்டியவன் அவன்

    எனக்கு உயிர் கொடுத்தவன் அவன்

    வாழும் காலத்திலே அகத்திலே உணராததால்

    வாழ்க்கை எனும் சக்கரத்திலே என்னை

    செக்கு மாடாய் சுழற்றியவன் அவன்" - என்கிறார்கள்.

    அதாவது செக்கு மாடு என்ன செய்யும்.. ஒரு செக்கு கடையை வைத்து இருக்கும் முதலாளி ஆனவர், அந்த செக்கு இயந்திரத்திலே தேவையான பொருட்களை போட்டு மாட்டை சுற்ற விடுவார், மாடு தானாக சுற்றாது. அதன் இரண்டு கொம்புகளுக்கு இடையே ஒரு கீரை கட்டை கட்டி விட்டு மாட்டை ஓட்டுவார். மாடு அந்த கீரை கட்டை பிடிப்பதற்கு நாக்கை மேல் நோக்கி நீட்டி கீரையை பார்த்து கொண்டே செல்லும். மாட்டின் கவனம் கீரையின் மேல்.. முதலாளியின் கவனம் செக்கு எண்ணெய் ஆட்டுவதிலே இருக்கும். அந்த எண்ணெய் தயாராகும் வரை மாட்டால் கீரையை தின்ன முடியாது. அது போல இறைவன் நம்மிடம் கீரை கட்டு போன்ற எதிர்காலம் என்கின்ற வாழ்வை நம் முன் காட்டி, அந்த மாயையில் சிக்க வைத்து, அதன் போக்கிலேயே நமது வாழ்க்கை செல்கிறது.

    கடந்த காலத்தை பற்றி நாம் பேசும் போது கர்வம் ஏற்படுகிறது. எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் போது பயம் ஏற்படுகிறது. இதனால், நிகழ்காலத்திலே, நமக்கு உள்ளே ஆனந்தம் என்கின்ற ஒன்று உள்ளதை அறியவிடாமல் மாயை மறைத்து விடுகிறது. இதுவே ஆன்மாவை உணர்வதற்கு தடையாக உள்ளது.

    எனவே வாழ்க்கையில் நமக்கு எது நடந்தாலும், இறைவனை தியானிப்பதை விட்டுவிடக் கூடாது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் கிராமத்திலே, தலையிலே தண்ணீர் குடம் ஒன்றையும், இடுப்பிலே தண்ணீர் குடம் ஒன்றையும் பெண்கள் வைத்துக் கொண்டு, தன் தலையில் இருக்கும் குடத்தை பிடிக்காமல், குழுவாக பேசி கொண்டே வருவார்கள். ஆனால் ஒரு துளி நீர் கூட கீழே சிந்தாது. அவர்கள் கண்கள் பாதையின் மீதும், புற உலகின் மீதும் இருந்தாலும், முழு கவனமும் தண்ணீர் குடத்தின் மீதே இருக்கும். அது போல நாமும், வாழ்க்கையில் எவ்வளவு துயரமும், துன்பமும் வந்தாலும், இறைவனை நினைப்பதை விடவே கூடாது. இதுவே ஞான வாழ்க்கையாகும்.

    அன்னை சாரதா தேவி வாழ்க்கையை படித்து பார்த்தால், நமக்கு தெரியும். அவர்கள் ராமகிருஷ்ணருடைய மனைவியாக இருந்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று. அது போல அன்னை லோகாம்பாளை பற்றி படித்தால், அவர்கள் வேதாத்திரி மகரிஷியினுடைய மனைவியாக இருந்தாலும் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று தெரியும். அவர்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் நாம் பார்க்கும் போது, நம் வாழ்வில் கஷ்டங்கள் ஒன்றும் பெரிது இல்லை என்பது விளங்கும்.

    வாழ்வில் எது வரும் என்று நமக்கு தெரியாது. வாழ்க்கை ஆனது எங்கோ ஆரம்பித்து, எங்கோ போய் முடியும். ஒரு சிலர் சிறு வயதிலேயே ஞான வாழ்க்கையை பற்றி பேசுவர். எதிர்காலத்திலே அவர் ஒரு சிறந்த ஞானியாக உருவாவார் என்று எதிர்பார்த்தால் அவர் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார். ஒரு சிலரோ சதாரண குடும்ப வாழ்க்கையிலே எந்த வித சலனமும் இல்லாமல் இருப்பார். எதிர்காலத்திலே ஞானியாக உருவெடுப்பார்.

    எனவே, ஞான வாழ்க்கையிலே அறியப்படும் இறைவனை, அறியவராகிய நாம், முதலில் வாழ்க்கையில் எதையும் எதிர்பார்ப்பதை நிறுத்திவிட வேண்டும்.

    சந்தோஷத்தை தவிர எதையும் நம்மால் வாங்க முடியும். வெளியே மனதை விட்டால், அது மாறிக் கொண்டே இருக்கும். மனக்கதவை திறந்து விட்டால், நாம் இறைவனிடம் கேட்க வேண்டியது எதுவும் இல்லை. ஏனெனில் நமக்கு தேவை என்பது இல்லை. அதற்கு காரணம், கேட்பதும், அதற்கு பதிலும் அவரே. அங்கு இரண்டு அல்ல , எல்லாம் அந்த ஒன்றே நடத்தும். அதில் நடப்பது நடக்கும். நாம் கடமைகளை மட்டும் செய்ய வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு ஆரோக்கியம் ஏற்படும். அது போல மனம் எந்த அளவிற்கு எண்ணங்கள் இல்லாமல் இருக்கிறதோ, அப்போது தான் மனதிற்கு ஆரோக்கியம்.

    இதற்கு முதல் தடையாக இருப்பது 'நான்' மற்றும் 'எனது' என்கின்ற நமது எண்ணங்களே. இந்த இரண்டிலும் நமக்கு இன்பம் மற்றும் துன்பத்தை தவிர வேறு அனுபவம் ஏற்பட்டு இருக்காது. எனவே ஞான வாழ்க்கை வாழ்வதற்கு, துன்பத்தை நீக்கி இன்பத்தை மட்டும் அறியும் வாழ்க்கை எப்படி என்பதை ஆராய்ச்சி செய்வோம்.

    போன்: 9444234348

    • பசுஞ்சாணத்தை வெய்யிலில் காயவைத்து நெருப்பிலிட்டுச் சாம்பலாக்கி திருநீறு தயாரிக்கப்படுகிறது.
    • முக்கியமாக நெற்றியில் திருநீறு அணிவதன் மூலம் தலையில் இருக்கும் ஈரம் உறிஞ்சப்பட்டு விடும். அதனால் சளி போன்ற தொந்தரவுகளிலிருந்து எளிதாக விடுபட முடியும்.

    வாழ்க்கை நிலையற்றது. என்றேனும் ஒருநாள் கட்டாயம் உடலை விட்டு உயிர் பிரிந்துவிடும். எனவே நாம் உயிருடன் இருக்கும்போதே தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும். இவ்விதம் வாழ்வின் நிலையாமையை வலியுறுத்தி நம்மை நன்னெறிகளில் தூண்டவே திருநீறு அணியப்படுகிறது.

    ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் திருநீற்றுச் சாம்பலைப் போலவே உடலும் சாம்பலாகும் என்பதை நினைவில் கொண்டு நற்சிந்தனைகளோடு வாழவேண்டும் என்பதை அணியும்போதெல்லாம் நினைவுபடுத்துகிறது புனிதமான திருநீறு.

    பசுஞ்சாணத்தை வெய்யிலில் காயவைத்து நெருப்பிலிட்டுச் சாம்பலாக்கி திருநீறு தயாரிக்கப்படுகிறது. திருநீறுக்குப் பல மருத்துவ குணங்கள் உண்டு.


    முக்கியமாக நெற்றியில் திருநீறு அணிவதன் மூலம் தலையில் இருக்கும் ஈரம் உறிஞ்சப்பட்டு விடும். அதனால் சளி போன்ற தொந்தரவுகளிலிருந்து எளிதாக விடுபட முடியும்.

    சைவ ஆலயங்களில் சிவ லிங்கத்திற்கும் முருகப் பெருமானுக்கும் சந்தனக் காப்பு சார்த்துவதைப் போல, விபூதிக் காப்பும் சார்த்துவதுண்டு. விபூதிப் பிரசாதத்தை வில்வ இலைகளிலும் வெற்றிலையிலும் வைத்து வழங்கும் வழக்கமும் சில ஆலயங்களில் கடைப் பிடிக்கப் படுகிறது.

    தமிழ் மூதாட்டி அவ்வையார் இயற்றிய நல்வழி என்ற நீதி நூலில் வரும் ஒரு நேரிசை வெண்பா திருநீறு இடாத நெற்றி பாழானது என்கிறது.

    `நீறில்லா நெற்றிபாழ்

    நெய்யில்லா உண்டிபாழ்

    ஆறில்லா ஊருக்கு

    அழகுபாழ் - மாறில்

    உடன்பிறப் பில்லா

    உடம்புபாழ் பாழே

    மடக்கொடி இல்லா மனை!'

    திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே உணவும், நதியினாலே ஊரும், உடன்பிறப்பால் உடல்நலமும், மனைவியினால் இல்லமும், சிறப்படையும் என்றும், இதெல்லாம் இல்லாவிட்டால் வாழ்க்கை பாழாகிவிடும் என்றும் சொல்கிறது இந்த வெண்பா.

    பதினெண் சித்தர்களுள் ஒருவரான மகான் திருமூலர் எழுதிய திருமந்திரம் என்ற ஞான நூல் திருநீற்றின் பெருமையைப் பேசுகிறது. திருநீறு அணிவதால் ஒருவன் செய்த தீவினைகள் யாவும் நீங்கி அவன் சிவபெருமானின் திருவடியைச் சென்று சேரலாம் என உறுதிபடக் கூறுகிறது திருமந்திரத்தில் வரும் ஒரு பாடல்:

    `கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

    மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்

    தங்கா வினைகளும் சாரும் சிவகதி

    சிங்கார மான திருவடி சேர்வரே!'

    கூன்பாண்டியனின் வெப்ப நோயைத் தீர்ப்பதற்காக அவன் உடல் முழுதும் திருநீறு பூசி திருநீற்றுப் பதிகம் பாடி சிவபெருமானைத் துதித்தார் சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர். திருநீற்றின் மகிமையால் வெப்ப நோய் முற்றிலுமாகத் தீர்ந்து பாண்டிய மன்னன் பூரண குணமடைந்தான்.


    `மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

    சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

    தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

    செந்துவர் வாயுமை பங்கன் திருஆல

    வாயன் திருநீறே!'

    என்ற முதல் பாடலுடன் தொடங்கும் திருநீற்றுப் பதிகம், திருநீற்றின் பெருமைகளை விரிவாகப் பேசுகிறது. அனைவரும் திருநீறு அணியுங்கள் என அறைகூவிச் சொல்கிறது.

    இன்றும் நெற்றியில் திருநீறு பூசி, ஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகத்தை நாள்தோறும் ஓதினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்பது அடியவர்கள் நம்பிக்கை.

    அறுபத்து மூவரில் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார் அடியவர்கள் அணியும் திருநீற்றுக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்து மதித்தவர். அவரைப் போரில் வெல்ல முடியாத முத்தநாதன், அவரது சிவபக்தியை அறிந்து அவரை ஏமாற்றிக் கொல்ல நினைக்கிறான்.

    திருநீறு பூசி அடியவர் போல் வேடமிட்டு வந்து இரவில் அவரைச் சந்திக்கிறான். அவனது திருநீற்றுக் கோலத்தைப் பார்த்து அடியவர் என்றே கருதி வணங்குகிறார் மெய்ப்பொருள் நாயனார். அவன் மறைத்து வைத்திருந்த வாளால் அவரைக் கொல்கிறான் என வளர்கிறது மெய்ப்பொருள் நாயனாரின் திருச்சரிதம்.

    `மெய்யெலாம் நீறு பூசி

    வேணிகள் முடித்துக் கட்டி

    கையிலே படைகரந்த

    புத்தகக் கவளி ஏந்தி

    மைபொதி விளக்கே அன்ன

    மனத்திடைக் கறுப்பு வைத்து

    பொய்த்தவ வேடம் கொண்டு

    புகுந்தனன் முத்த நாதன்'

    என முத்தநாதனின் பொய்த்தவ வேடத்தை விவரிக்கிறது பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய புலவரான சேக்கிழாரின் பாடல்.


    ஏனாதிநாத நாயனார் சரிதத்திலும் திருநீறு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அவரைக் கொல்ல நினைத்த அதிசூரன், திருநீறு தாங்கிய நெற்றி உடையோரை அவர் ஒருபோதும் கொல்ல மாட்டார் என்பதை அறிந்து கொள்கிறான்.

    தனித்துப் போர்புரிய வருமாறு அறைகூவி அவரை அழைக்கிறான். போரிட வந்தவர் முன் திருநீறு தரித்த நெற்றியோடு நிற்கிறான் அதிசூரன். அவனைக் கொல்லாது நின்ற ஏனாதிநாத நாயனாரை அவன் கொல்கிறான் என விரிகிறது ஏனாதிநாத நாயனார் திருச்சரிதம்.

    `தீங்கு குறித்தழைத்த தீயோன் திருநீறு

    தாங்கிய நெற்றியினார் தங்களையே

    எவ்விடத்தும்

    ஆங்கவரும் தீங்கிழையார் என்ப

    தறிந்தானாய்ப்

    பாங்கில் திருநீறு பண்டு பயிலாதான்

    வெண்நீறு நெற்றி விரவப் புறம் பூசி

    உள்நெஞ்சில் வஞ்சக் கறுப்பும்

    உடன்கொண்டு

    வண்ணச் சுடர்வாள் மணிப்பலகை

    கைக்கொண்டு

    புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன

    இடம் புகுந்தான்'

    என முன்னர் திருநீறு பூசாதவன் இப்போது நெற்றியில் நீறு பூசிப் போருக்கு வந்தான் என்று அவன் வந்த காட்சியை விவரிக்கிறார் சேக்கிழார் பெருமான்.

    சீர்காழியில் உண்ணாமுலை அம்மையின் மூலம் ஞானப்பால் அருளப்பெற்ற திருஞான சம்பந்தர் மூன்று வயதில் பாடிய தனது முதல் பாடலில் சிவபெருமானை சுடலைப் பொடியாகிய திருநீறைப் பூசிக்கொண்டு என் உள்ளம் கவர் கள்வன் எனப் போற்றுகிறார்.

    `தோடுடைய செவியன்

    விடையேறியோர்

    தூவெண் மதிசூடி

    காடுடைய சுடலைப்

    பொடிபூசி

    என் உள்ளம் கவர் கள்வன்

    ஏடுடைய மலரான்முனை

    நாட் பணிந்து

    ஏத்த அருள்செய்த

    பீடுடைய பிரமாபுரம்

    மேவிய

    பெம்மான் இவன் அன்றே`

    தலபுராண வேந்தர் என அழைக்கப்படும் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தாம் எழுதிய தலபுராணம் ஒன்றில் சிவபெருமானின் திருநீறை மையமாக வைத்து ஒரு கற்பனையைப் பின்னுகிறார். பிள்ளையவர்களின் அந்த அழகிய கற்பனை நம்மை வியக்க வைக்கிறது.

    சிவபெருமான் திருநீறணிய முற்பட்டார். அப்போது, அவர் தம் விரல்களில் எடுத்த அந்தத் திருநீற்றின் துகள் அவர் கழுத்திலிருந்த பாம்பின் கண்ணில் சிறிது விழுந்து விட்டதாம். அதனால் அந்தப் பாம்பு கோபம் கொண்டு சீறியதாம். பாம்பு ஏன் சீறுகிறது என்றறிய விழித்துப் பார்த்ததாம் நெற்றிக் கண்.

    நெற்றிக் கண் திறந்தால் நெருப்புப் பொறி தோன்றுமே? அப்படி நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட நெருப்புப் பொறி சிவபெருமான் தலையில் அணிந்திருந்த பிறை நிலவின் மேல் பட்டுவிட்டதாம்!

    அமுதைப் பொழியும் நிலவு என்றல்லவா அது சொல்லப்படுகிறது? அந்தப் பிறை நிலவு, நெருப்புப் பொறிபட்ட உஷ்ணத்தால் சற்று உருகியதாம். அப்போது அதன் அமுதத் துளி சிவபெருமான் இடையில் கட்டியிருந்த புலித்தோலில் பட்டதாம்.

    அமுதத் துளி பட்டால், உயிரிழந்தவை கூட உயிர் பெற்றுவிடுமே? அதன்பின் புலித்தோல் வெறும் தோலாகவா இருக்கும்? அமுதத்தால் அதற்கு உயிர் கிட்டிவிட்டது. எனவே புலித்தோல் உண்மையான புலியாகவே மாறி விடுகிறது!

    அந்த நிஜப் புலியைப் பார்த்த சிவபெருமானின் வாகனமான காளை மாடு மிரண்டு ஓடுகிறது என்று தன் கற்பனைச் சித்திரத்தைத் திருநீறில் தொடங்கி சிவன்மேல் வைத்துப் தீட்டியுள்ளார் தமிழ்த் தாத்தாவின் ஆசிரியரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

    சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவிக்கு இந்துமதச் சடங்குகளில் தீவிர ஈடுபாடும் நம்பிக்கையும் இருந்தன. சரஸ்வதி பூஜையன்று ஹோம குண்டத்தில் இருக்கும் திருநீற்றுச் சாம்பலை நெற்றியிலும் கைகளிலும் பூசிக் கொண்டு செருப்பணியாத பாதங்களோடு அவள் கொல்கத்தா நகர வீதிகளில் வெய்யிலில் நடந்து செல்வாள் என்பதை நிவேதிதையின் புனித வரலாறு நமக்குச் சொல்கிறது.

    எம்.பி. சிவம் எழுதி டி.எம். சவுந்தரராஜன் பாடியுள்ள பக்திப் பாடல் ஒன்று திருநீற்றின் பெருமைகளை விரிவாகப் பேசுகிறது.

    `கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி

    ஓடிவிடும்

    குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை

    நாடிவரும்

    சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திரு

    நீறணிந்தால்

    வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப்

    போய்விடுவாள்

    அந்தநேரம் பார்த்திருந்த அன்னை

    செல்வம் ஓடிவந்து

    சிந்தை குளிர வைத்து சொந்தம்

    கொண்டாடிடுவாள்

    மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை

    இருக்குதடா

    மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப்

    பெருக்குதடா

    தினம்தினம் நெற்றியிலே திருநீறு

    அணிந்திடடா

    தீர்ந்திடும் அச்சமெலாம் தெய்வம் துணை

    காக்குமடா!'

    நெற்றியில் திருநீறு அணிவதால், மூத்தவளான மூதேவி நம்மை விட்டு விலகிச் சென்று விடுவாள் என்றும் அந்த நேரத்தில் இளையவளான திருமகள் நம் இல்லம் தேடிவந்து நம் சிந்தையைக் குளிரவைப்பாள் என்றும் சொல்கிறது இந்தப் பாடல்.

    வாரியார் சுவாமிகள் நெற்றி நிறையத் திருநீறு பூசும் வழக்கமுடையவர். அவர் தோற்றமே அவர் சிவனடியார் என்பதைப் புலப்படுத்தும்.

    ஒருவன் அவரிடம் நெற்றியில் வெள்ளை அடித்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே எனக் குறும்பாய் வினவினான்.

    `நன்கு கட்டப்பட்ட வீட்டுக்குத்தான் வெள்ளையடிப்பார்கள், உன்போன்ற குட்டிச் சுவருக்கு வெள்ளை அடிக்க மாட்டார்கள்!` என்று சொல்லி வாரியார் சுவாமிகள் அவன் வாயை அடக்கினார்!

    எல்லா மங்கலங்களையும் தரவல்ல திருநீற்றை நெற்றியில் அணிந்து, இறைவனை வழிபட்டு, அதன்மூலம் மனத்தில் சாந்தியும் நிம்மதியும் அடைவோம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • சர்வதேச விளக்கங்களும் நாட்டுக்கு நாடு மாறுபடும்.
    • நமது கூட்டு முன்னுரிமைகள் மிகத் தெளிவாக உள்ளன என்று நான் நம்புகிறேன்.

    வெறுப்புப் பேச்சு என்பதற்கு ஒற்றை வரையறை இல்லை.

    "இனம், மதம், பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலை போன்றவற்றின் அடிப்படையில் ஒரு நபர் அல்லது குழுவிற்கு எதிரான வெறுப்பை வெளிப்படுத்தும் அல்லது வன்முறையை ஊக்குவிக்கும் பொதுப் பேச்சு" என்று கேம்பிரிட்ஜ் அகராதி கூறுகிறது.

    "பொதுவாக இனம், நிறம், தேசியத் தோற்றம், பாலினம், இயலாமை, மதம் போன்றவற்றின் காரணமாகத் தனிநபரை அல்லது ஒரு குழுவை இழிவுபடுத்தும் தகவல்தொடர்புகளை உள்ளடக்கியதே வெறுப்புப் பேச்சு!" என்கிறது அமெரிக்க அரசியலமைப்பின் கலைக்களஞ்சியம் பேச்சு சுதந்திரம், வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வெறுப்பு பேச்சுச் சட்டம் பற்றி உலகெங்கிலும் நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட ஒருவர் சிவில் மற்றும் குற்றவியல் சட்டம் அல்லது இரண்டின் கீழும் பரிகாரம் தேடலாம்.

    இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாசிசம் "மீள் எழுச்சி" பெற்றுவிடாமல் தடுக்க ஜெர்மனியில் வெறுப்பூட்டும் பேச்சு தண்டனைக் குற்றமாக்கப்பட்டது. இது தொடர்பாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பல்வேறு சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளை நடைமுறைப்படுத்தி உள்ளன.

    ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்து வருகின்றன. 1948ல் ஐ.நா பொதுச் சபையால் உருவாக்கப்பட்ட "மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம்" மிக அடிப்படையான ஆவணங்களில் ஒன்று. ஆனால் வெறுப்புப் பேச்சு கருத்துச் சுதந்திரம் ஆகாது.

    இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்த பிறகு இணையத்தில் வெறுப்புப் பேச்சை உருவாக்குவதற்கும் அது நிலைத்திருப்பதற்கும் ஏராளமான வழிகள் தோன்றின. குறைந்த செலவு மற்றும் முயற்சியுடன் வெறுப்புப் பேச்சைப் பரப்புவதற்கு இணையத்தின் பரவலான பயன்பாடு மற்றும் அணுகல் வசதியை ஏற்படுத்தியது.

    இணையத்தின் போலி அநாமதேயத் தன்மை காரணமாக நிஜ வாழ்வின் பின்விளைவுகளுக்குப் பயந்தவர்கள் வெறுப்புப் பேச்சைப் பரப்பும் துணிச்சல் பெற்றனர். அத்தகைய நச்சுக் கருத்துகள் இன்டர்நெட்டின் முக்கிய உள்ளடக்கம் ஆனது.

    அரசாங்கங்களும் நிறுவனங்களும் இணைய வெறுப்புப் பேச்சை எதிர்த்துப் போராட முயற்சி செய்தன. ஆனால் ஆன்லைனில் அடையாளங்களைச் சரிபார்ப்பதில் உள்ள சிரமங்கள் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை.

    வெறுப்பு பேச்சு என்பதற்கு சட்டரீதியான துல்லிய வியாக்கியானம் இல்லை. சர்வதேச விளக்கங்களும் நாட்டுக்கு நாடு மாறுபடும். அமெரிக்காவில் நிறஅடிப்படையிலான அவதூறு வெறுப்புப் பேச்சாகக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில் அது மதஅடிப்படையிலான அவதூறு.

    வெறுப்புப் பேச்சை அடையாளப்படுத்த ஒரு சர்வதேச கருத்தரங்கு 16. 12. 2020-ல் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. வெறுப்பு பேச்சின் வரி வடிவத்தை கணினி மூலம் உள்ளீடு செய்து அறியும் இயந்திர வாசிப்பு அதில் இறுதி செய்யப்பட்டது. அதற்கு "வரிசை வகைப்பாடு மாதிரி" என்று நிபுணர்கள் பெயர் சூட்டினார்கள்.

    வெறுப்புப் பேச்சுகள் அடங்கிய திறவுகோல் வார்த்தை அகராதி உருவாக்கப்படுகிறது பிறகு வீடியோ வடிவத்திலும் வரி வடிவத்திலும் சர்ச்சைக்குரிய வெறுப்புப் பேச்சு உள்ளீடு செய்யப்படுகிறது.

    அதில் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் சாதாரண விமர்சனப் பேச்சு, வெறுப்புப் பேச்சு, அதி தீவிர வெறுப்புப் பேச்சு, உள்நோக்கத்துடன் கூடிய வெறுப்புப் பேச்சு என்று பல்வேறு விதமாக வகைப்படுத்தப்படுகின்றன. இது கணினி நிபுணர்களால் "கணக்கிட்டு நுண்ணறிவு" என்று அழைக்கப்படுகிறது

    இந்திய அரசமைப்பில் வெறுப்புப் பேச்சு சட்டங்கள் உள்ளன. இனம், மொழி, பண்பாடு, வாழும் பகுதி, சமூகம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்காகக் கேலி பேசுபவர்கள் மற்றும் ஏசுபவர்கள் இந்தியாவில் தண்டிக்கப்படுவார்கள். சமய நம்பிக்கைகளைப் புண்படுத்துவோர் குற்றவாளிகள்.

    "வெறுப்புப் பேச்சாளர்களின் நோக்கமே அவர்களின் வெறுப்பின் இலக்குகள் வாழ்வதற்காக வேறொரு உலகத்தை உருவாக்குவது தான்!" என்று ஜெர்மி வால்ட்ரான் தனது புத்தகமான "வெறுப்புப் பேச்சின் தீமைகள்" (The Harm in Hate Speech) என்ற நூலில் கூறுகிறார்.

    வெறுப்புப் பேச்சின் ஆதரவாளர்கள் சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ்வதை கடினமாக்குகிறார்கள். யதார்த்தத்தை எதிர்மறையாக மாற்றும் நிகழ்வே வெறுப்புப் பேச்சு என்கிறார் ஜெர்மி.

    சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் பிரதமர் மோடியின் பல்வேறு தேர்தல் பரப்புரைப் பேச்சுகளின் சாராம்சங்கள் என்னென்ன?

    தராசு ஷ்யாம்

    தராசு ஷ்யாம்

    *காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவார்கள். அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் பிரித்துக் கொடுத்து விடுவார்கள்.

    *இந்திய அரசமைப்பில் பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு அதை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. இது நகர்ப்புற நக்சல் சிந்தனை.

    *என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலியை கூட இவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள்.

    *சுதந்திர போராட்ட காலத்தில் முஸ்லிம் லீக்குக்கு இருந்த அதே சிந்தனையைக் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது.

    பிரதமர் மோடி ஆதாரமாகக் காட்டுவது 18 வருடங்களுக்கு முன் 2006-ல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் ஆற்றிய பின்வரும் உரை:

    *நமது கூட்டு முன்னுரிமைகள் மிகத் தெளிவாக உள்ளன என்று நான் நம்புகிறேன்.

    *விவசாயம், நீர்வளங்கள், கல்வி, கிராமப்புற முதலீடுகள், பொது உள்கட்டமைப்பு முதலீடுகள் ஆகியவற்றுடன் தலித், பழங்குடி, பிற்படுத்தப் பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளின் நலன்களே நமது முன்னுரிமை''.

    *தேச வளர்ச்சியின் பலன்கள் சிறுபான்மை மக்களுக்கும் போய்ச் சேரும் வகையில் பொருத்தமான முறையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

    உரையின் தொடர்ச்சியாக, ''அவர்கள் நமது வளங்களில் முன்னுரிமை பெறுகின்றனர்'' என்று நிறைவு செய்துள்ளார் மன்மோகன்சிங். இங்கு ''அவர்கள்'' என்று அவர் குறிப்பிட்டது: "அனைத்து தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரையும் சேர்த்துத்தான்!" இது மிகத் தெளிவாக பதிவாகியிருக்கிறது.

    ஆனால் பிரதமர் மோடி தனது ராஜஸ்தான் உரையில் மன்மோகன் சிங் அன்றைக்குப் பேசியது முஸ்லிம் மக்களுக்காக மட்டுமே என்று திரித்துக் கூறுகிறார்.

    தேர்தல் பிரசாரத்தில் ஒருவர் பேசாத விஷயத்தை பேசியதாகச் சொல்வது கேவலம். அதுவும் மன்மோகன்சிங் மாதிரியான ஒரு மென்மையான அரசியல்வாதி சொல்லாத கருத்துகளைத் திணிப்பது அபத்தம். அதற்குப் பொது மேடைகளில் எதிர்வினை ஆற்றும் உடல்நிலையில் கூட மன்மோகன் இல்லை.

    வெறுப்புப் பேச்சுகளுக்கான சமீபத்திய எடுத்துக்காட்டுகள்:

    ஹரித்வார் நகரில் 'தர்ம் சன்சத்' நடத்தப்பட்டது. அதில் பங்கெடுத்தவர்கள் சரமாரியாக வெறுப்புப் பேச்சுகளை நடத்தினார்கள். இனப்படுகொலைக்கான அழைப்புகளும் விடப்பட்டன. இந்த விவகாரம் தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

    சுதர்சன் டிவி என்ற தனியார் தொலைக்காட்சி "இலவச பேச்சு" என்ற நிகச்சியை நடத்தி வந்தது. யு.பி.எஸ்.சியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் மத்திய அரசுப் பணிகளில் தேர்ச்சி பெற்ற முஸ்லீம் வேட்பாளர்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துகள் அதில் வெளியிடப்பட்டன. இதுவும் நீதிமன்ற வழக்காக இப்போது உள்ளது.

    "முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு" தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மீது உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் சிவில் உரிமைகளுக்கான சங்கம் புகார் அளித்துள்ளது. ஆனால், இதுவரை எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை.

    வெறுப்பு பேச்சுக்கு எதிராக பங்கேற்று ஐபிசி 153 A, 294, 295, 505 போன்ற பல பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். சமூக வேறுபாடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் பரஸ்பர வெறுப்பை வளர்க்கும் வகையில் அரசியல்வாதிகள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் நடத்தை விதிகள் தெளிவாகக் கூறுகின்றன

    பிரதமரின் வெறுப்பு பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார்கள் தரப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்திற்கும் தாவா எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

    வேலை இன்மை, பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு போன்ற முக்கியப் பிரச்சினைகளைத் திசை திருப்பவே இரண்டாம் கட்டப் பரப்புரைகளின்போது பிரதமர் மோடி மதரீதியான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார் என்ற பார்வையும் உள்ளது.

    பன்முகத் தன்மை கொண்ட நாடு இந்தியா. வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் நாட்டின் அழகே.

    முப்பது கோடி முகமுடையாள்

    உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்

    இவள் செப்பு மொழிபதினெட்டுடையாள்

    எனில் சிந்தனை ஒன்றுடையாள்!

    -(பாரதி)

    மகாகவியின் மேற்படிப் பாடலை "மன் கி பாத்" நிகழ்ச்சியில் (24.9.2019) மேற்கோள் காட்டிச் சிலாகித்தார் பிரதமர் மோடி.

    ஒற்றுமை வலியுறுத்தல் வானொலிக்கு மட்டுந்தானா? தேர்தல் மேடைக்குக் கிடையாதா?

    தேர்தல்கள் வரும்.. போகும். தோற்றவர்கள் திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு. ஆனால் பரப்புரைகள் நிரந்தரப் பிளவுக்கு வித்திட்டுவிடக் கூடாது.

    அது அபாயத்தின் கட்டியம், பிரதமர் அவர்களே!

    • முலாம் பழத்தை உண்டுவர மூலநோய், மலச்சிக்கல் நீங்கும்.
    • கோடைக்காலத்தில் பகல் தூக்கத்தை தவிர்த்தல் நல்லது. இரவில் கண்விழித்தல் கூடாது.

    காலம் பருவங்கள் மாறுதல் அடைவதற்கு ஏற்ப நம் உடலும் அதற்கேற்றவாறு மாறுதல் அடைகிறது.

    கோடை காலங்களில் அதிகரித்த வெப்பநிலை சரி செய்வதற்கான உணவு, உடை, பானங்கள், பழக்கவழக்கங்கள் சீர் செய்வதன் மூலம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

    கோடை காலம் என்பது மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை உள்ள காலமாகும். இக்காலத்தில் பூமியானது வெப்பம் அதிகரித்து காணும். அதற்கு ஏற்ப உடலின் தட்ப வெப்ப நிலையானது மாறுபட்டு பல இன்னல்களை நமக்கு அளிக்கிறது.

    உணவு:

    * அதிக புளிப்பு, உப்பு, கார்ப்பு சுவைகளை நீக்க வேண்டும். திரவ வடிவம் உள்ளதும் எளிதில் சீரணம் ஆகும் உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அறுசுவை உணவு சிறந்தது எனினும் கோடை காலத்தில் கசப்பு, இனிப்பு, துவர்ப்பு சுவையுள்ள பொருட்களை அதிகம் சேர்ப்பதனால் பித்தம் சமப்படும்.

    * குளிர்காலங்கள் போல் அல்லாமல் கோடை காலங்களில் பசி குறைவாக காணப்படுவதால் உணவில் கார்போஹைட்ரெட் அளவு குறைத்து நீர் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * இதன் மூலம் நீர் சத்து மட்டுமல்லாமல் உப்பு சத்துக்களான சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் கிடைத்து தாது உப்பு சத்து சீராக இருக்கும்.

    தர்பூசணி:

    நீர் சத்து அதிகமாக உள்ளது உடல் சூட்டை குறைக்கும். இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள இரும்பு சத்தின் அளவு 0.2 மி.கி. வைட்டமின் ஏ, சி, பி1, பி6, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன.

    * சிட்ருலின் என்ற புரதச்சத்து தர்பூசணியில் அதிக அளவில் உள்ளது. இது ரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

    * இதில் உள்ள சிட்ருலின் வேதியல் மாற்றம் அடைந்து அர்ஜினைன் என்ற வேதிப்பொருளாக மாறுகிறது. அது இதயத்தையும் ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.

    முலாம்பழம்:

    * முலாம்பழம் நல்ல அளவு நீர் சத்து கொண்ட சிறந்த பழங்களில் ஒன்றாகும். முலாம் பழத்தை உண்டுவர மூலநோய், மலச்சிக்கல் நீங்கும். சிறுநீர் தாரை எரிச்சல், நீர் கடுப்பு நீங்கும்.

    இளநீர்:

    * இளநீர் உடலில் உள்ள பி.எச். அளவை சமன் செய்கிறது. அமிலத்தன்மை, நெஞ்செரிச்சலை குறைக்கும்.

    வெள்ளரிக்காய்:

    * முகம், கண்கள், கழுத்து பகுதியில் வெள்ளரிக்காய் மசித்த விழுதை தடவி 5 முதல் 10 நிமிடம் வரை விட்டு குளிர்ந்த நீரில் கழுவி எடுத்தால் சருமத்தில் சுருக்கங்களை தடுக்கிறது.

    பானங்கள்:

    வெப்பத்தின் அளவு அதிகரித்து உள்ளதால் உடலின் நீர் சத்தானது குறைந்து காணும். இதனால் மயக்கம், நாவறட்சி, சருமம் வறட்சி, சோர்வு, பசியின்மை, தலைவலி, அதிக தாகம், அடர்ந்த சிறுநீர் போன்ற உபாதைகள் காணும்.

    * ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைக்கேற்ப தண்ணீர் அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

    * நீர் மட்டுமே அதிக அளவு எடுத்துக்கொள்வதை தவிர்த்து பழச்சாறு வகைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். காபி, மதுபானம் உட்கொள்ளும்போது அவை சிறுநீர் அளவை அதிகரித்து உடலில் நீர் அளவை குறைக்கிறது. அதிக அளவு காபி உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும்.

    * வெட்டிவேர் சேர்ந்த குடிநீர் எடுத்துக் கொள்ளலாம்.

    * அதிக குளிர்ச்சி நிறைந்த பானம் எடுத்துக்கொள்ளும்போது அவை ரத்த நாளங்களை சுருங்க செய்வதால் குளிர்ச்சி நிறைந்த பானங்களை தவிர்க்க வேண்டும். மிதமான சூடு உள்ள நீரை பருகலாம். இவை ரத்த நாளங்களை விரிவடைய செய்யும் வியர்வையை வெளியேற்றி உடல் வெப்பநிலையை குறைக்கும்.

    * மோர், இளநீர், எலுமிச்சை, பானகம், பழச்சாறு போன்றவற்றை சேர்க்கவும்.

     


    நீர் மோர்- தயிரை நன்றாக கடைந்து வெண்ணெய் எடுத்தபின் தெளி நீருடன் உப்பு சேர்த்து நீர்மோராக பருக உடல் சூடு, வயிற்று வலி சரியாகும்.

    பானகம்- பனை வெல்லம், இலவங்கபட்டை, ஏலக்காய், சுக்கு இவற்றை தண்ணீரில் கலந்து பானையில் தண்ணீரை ஊற்றி பயன்படுத்தவும். இதனால் உடலில் நீரிழப்பு தவிர்க்கப்படும்.

    ரசாலா - தயிரை நன்றாக கடைந்து சர்க்கரை சேர்த்து அதில் மிளகுத்தூள் கலந்து பருகவும்.

    பானக மஞ்சாசரா - உலர் திராட்சை, பேரிச்சம்பழம் சம அளவு ஏலக்காய், வாழை இலை, தண்ணீர் இவற்றை மண் பானையில் போட்டு புளிக்க வைத்து மறுநாள் வடிகட்டி பயன்படுத்தவும்.

    பார்லி தண்ணீர் - பார்லியுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனோடு தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். இதில் தாதுக்காரம், வைட்டமின்கள் உள்ளது. நீரிழப்பால் ஏற்பட்ட திரவங்களை இதன் மூலம் மீட்டெடுக்கலாம்.

    ஓ.ஆர்.எஸ். கரைசல் - தண்ணீர் 4 கப், உப்பு ½ டீஸ்பூன், சர்க்கரை 6 டீஸ்பூன் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து அவ்வப்போது குடித்து வர உடலின் உப்பு மற்றும் சர்க்கரை அளவை சரி செய்யும்.

    எலுமிச்சை சாறு - இது நீரிழிவால் ஏற்படும் பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் அளவு குறைப்பாட்டை சரி செய்யும்.

    நீராகாரம்- நீராகாரத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சத்து, வைட்டமின் B காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் E போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் முடி மற்றும் முக பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. நீராகாரத்துடன் சின்ன வெங்காயம், கிச்சிலி காய் மற்றும் நாரத்தை ஊறுகாய்களை சேர்த்து பருகும்போது உடல் சூட்டை தணிக்கும்.

    கேழ்வரகு கூழ் - கேழ்வரகில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோபிளவின் ஆகியவை உள்ளன. இதில் உள்ள கால்சியம் நம் எலும்பு, பற்கள் உறுதிக்கு உதவும். மோருடன் கலந்து இந்த கூழை அருந்தும்போது உடலை குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு அருமருந்து. இதில் இருக்கும் நார்ச்சத்து நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.

    கம்பு கூழ் - கோடை காலங்களில் ஏற்படும் உடல் சூட்டால் முகம் மற்றும் அந்தரங்கப் பகுதியில் சீழ் கலந்த கட்டிகள் ஏற்படும். இந்த உடல் சூட்டை குறைப்பதற்கு கம்பு கூழை குடிக்கலாம். கம்பு உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் வழங்கும்.

    வெந்தய நீர், கஞ்சி - வெந்தயத்தை வறுத்து நீருடன் கலந்து அருந்துவதன் மூலம் அல்லது வெந்தயம் ஊறிய குடிநீரை அருந்துவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம். வெந்தய கஞ்சி உட்கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும் மற்றும் ரத்த விருத்தி ஆகும்.

    சீரகத் தண்ணீர் - சீரகத்தை நீரில் போட்டு காய்ச்சி குடிக்க இக்காலத்தில் அதிகரிக்கும் பித்தம் குறைந்து, பித்தத்தால் உண்டாகும் நோய்களான மூலநோய், பவுத்திரம், ஆசனவாயில் ஏற்படும் கட்டிகள், வேர்க்குரு, வயிற்றுப் புண்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

    * இரவில் கருப்பு உலர்ந்த திராட்சையை ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட உடல் அனல் தணிந்து ரத்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.

    மண்பானை நீர் - மண்பானையில் இயற்கையாகவே சில தாது உப்புக்கள் நிறைந்திருப்பதால் அதில் சேகரித்த நீரை பருகும்போது உடல் குளிர்ச்சி அடைந்து உப்புக்களின் சத்தும் நமக்கு கிடைக்கும். மண்பானையில் நீர் விட்டு அதில் வெட்டிவேர், நன்னாரி வேர் சேர்த்து பருக உடல் குளிர்ச்சி அடையும்.

    ஆடைகள்: கோடை காலத்தில் மிக இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். கருப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்டதால் அவைகளை தவிர்த்து, வெள்ளை மற்றும் லேசான நிறங்களில் உடைகளை அணியலாம்.

    * பருத்தி ஆடைகளை அணிவது சிறப்பு. பருத்தி உடையானது காற்றோட்டமாகவும், உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவும். பருத்தியில் உள்ள வைட்டமின், ஆன்டி ஆக்சிடென்ட், ஒமேகா-3 பேட்டி ஆசிட் சருமத்தை மிருதுவாகவும் அலர்ஜி போன்றவைகளில் இருந்து நம்மை காக்கும். பருத்தி உடைகள் உடலுக்கு குளிர்ச்சியை தந்து வியர்வையை உறிஞ்சி கொள்கிறது.

    * உள்ளாடைகளும் பருத்தி உடைகளாக இருக்க வேண்டும். அவற்றை நல்ல வெயிலில் காயவைத்து உலர்த்தி பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதை இந்த கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது.

    ஜன்னல் திரை: வெயிலை சமாளிக்க வீடுகளில் மூங்கில் திரை பயன்படுத்தலாம். வெட்டிவேர் திரை காற்றை குளிர்விக்கும் தன்மை உடையது.

    மெத்தை: கோரைப்பாய், பனை ஓலை பாய், பருத்தி மெத்தை பயன்படுத்தலாம். போம் மெத்தை தவிர்ப்பது நல்லது.

    கோடைக்காலத்தில் பகல் தூக்கத்தை தவிர்த்தல் நல்லது. இரவில் கண்விழித்தல் கூடாது.

    அஞ்சனம்: சித்த மருத்துவத்தில் குறிப்பிட்டுள்ள அஞ்சனம் (கண்மை தீட்டுதல்) பல நோய்களுக்கு தற்காப்பாக உள்ள ஒன்று. இதற்கு கரிசாலையால் செய்யப்பட்ட இயற்கையான மை சிறந்தது.

     

    இயற்கை மருத்துவர் நந்தினி, 95006 76684

    இயற்கை மருத்துவர் நந்தினி, 95006 76684

    உடற்பயிற்சி:

    * கடினமான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். அதிகாலையில் அல்லது மாலை நேரங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உடலில் உள்ள நீர் சத்து வெளியேறுவதால் அதற்கு ஏற்ப பானங்கள் உட்கொள்ள வேண்டும்.

    * கோடை காலத்தில் எப்பொழுதும் ஏசி அறையில் அடைந்து கிடக்காமல் சிறிது நேரம் மர நிழல் அதிகமாக உள்ள இடங்களில் காலார நடப்பது, புங்கன் மர நிழலில் இளைப்பாறுவது இயற்கையாகவே நம் உடல் சூட்டை தணிக்கும்.

    வேனில் கட்டி, பொடுகு தடுக்கும் முறை:

    * உடலில் வெப்பம் அதிகரிப்பதால் பொதுவாக தலையில் கட்டி அல்லது பொடுகு ஏற்படுகிறது. அவற்றிற்கு சீரகம், பசும் பால், மிளகு இவற்றை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கவும்.

    * இரவில் உறங்குவதற்கு முன்பு இரண்டு உள்ளங்கால்களில் பசு நெய் தடவி உறங்கவும். இதனால் உடலின் வறட்சி நிலை குறையும். வாரம் இரு முறை எண்ணெய் குளியல் எடுப்பதன் மூலம் வேனில் கட்டி பொடுகு வருவதை தடுக்கலாம். எண்ணெய் குளியல் செய்வதற்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். மேலும் மா, நெல்லி இலைகள் ஊறிய நீரினை குளிப்பதற்கு பயன்படுத்தலாம். உடலை தேய்த்து குளிப்பதற்கு நலங்குமா பயன்படுத்தலாம்.

    நலங்குமா பாசிப்பயிறு, வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு, கார்போகி அரிசி, விலாமிச்சு வேர் சேர்த்து செய்யப்படுகிறது. வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தனம் இருப்பதால் உடலுக்கு நன்கு குளிர்ச்சி தருகிறது.

    அது மட்டுமன்றி உடலின் வியர்வையின் மூலம் வரும் கற்றாழை நாற்றத்தை போக்கும். நன்னாரி, நுங்கு, இளநீர் போன்றவற்றை பருகுவதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு வேர்க்குரு வருவதை தடுக்கும்.

    * உடலில் ஏற்படும் வேர்க்குருவிற்கு இளநீர் வழுக்கை, நுங்கு ஆகியவற்றை தோலில் பூசலாம்.

    * தேங்காய் பால் தேய்த்து குளிக்கலாம். அதில் உள்ள எண்ணெய் பசை காரணமாக தோல் வறட்சி அடைவதை தடுக்கும்.

    ஹீட் ஸ்ட்ரோக்:

    * கோடை காலத்தில் உள்ள வெப்பத்தின் தாக்கத்தால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. உடல் வெப்பநிலை உயர்வு, குழப்பமான மனநிலை, வேர்வையில் மாற்றம், குமட்டல், வாந்தி, வேகமான இதய துடிப்பு, சருமம் நிறமாற்றம், தலைவலி போன்ற அறிகுறிகள் தோன்றும். இதனை தடுக்க வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தளர்வான ஆடைகளை அணியலாம்.

    அதிக அளவு நீர் சத்துள்ள பழம் உணவுகளை எடுத்துக் கொள்ளவும். சூரிய வெப்பத்தினால் தோலில் சிவப்பு நிற தடுப்புகள், கண்கள் சிவப்பு நிறமாதல், முகத்தில் சிவப்பு நிற தடுப்புகள் ஏற்படலாம். அவற்றை தடுக்க படிகார நீர் கொண்டு கண்களை கழுவ வேண்டும். கற்றாழை அல்லது சந்தன பூச்சிகளை தோல் மற்றும் முகத்தில் பூசலாம். மூக்கு துவாரங்கள் வறண்டு விடுவதால் ரத்தம் வழிய நேரிடும். அருகம்புல் சாறு குடிப்பதன் மூலம் மூக்கில் வடியும் ரத்தம் நிற்கும்.

    கோடைகாலத்தில் குளிர்ச்சியை தக்க வைக்க விரும்பினால் உங்களுக்கு ஏற்றது ரோஜா குல்கந்து. இதில் இயற்கையாகவே கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது இரைப்பை அழற்சி, தோல் பராமரிப்பு, அசீரணம், மன அழுத்தம் போன்றவைகளுக்கு நன்மை அளிக்கக் கூடியது. வெயில் காலத்தில் மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், தலைச்சுற்றல் போன்றவற்றை சரி செய்யும். குழந்தைகளுக்கு வெயில் நேரத்தில் வயிற்று வலி பிரச்சனை வராமல் இருக்க குழந்தையின் தொப்புளில் விளக்கெண்ணெய் தடவி வரலாம். இதனை பெரியவர்களும் பின்பற்றலாம்.

    * இவ்வழிமுறைகளை பின்பற்ற கோடை காலத்தில் வரும் நோய்களை தவிர்த்து நலம் பெறலாம்.

    • வலங்கைமானில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் காதக்கவுண்டர், கோவிந்தம்மாள் என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர்.
    • பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் 2 தடவை இந்த ஆலயத்தில் பாடை கட்டும் திருவிழா நடத்தப்படுகிறது.

    கும்பகோணத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வலங்கைமானில் மாரியம்மன் ஆலயம் உள்ளது. நீடாமங்கலம் செல்லும் சாலை ஓரத்திலேயே இந்த ஆலயம் அமைந்து இருக்கிறது. இந்த ஆலயத்தில் தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் வித்தியாசமான ஒரு வழிபாடு நடத்தப்படுகிறது.

    அதாவது இந்த அம்மனிடம் வேண்டிக்கொண்டு பலன் பெறுபவர்கள் பாடையில் படுத்து வித்தியாசமான முறையில் அம்மனுக்கு நன்றி செலுத்துகிறார்கள். இதனால் இந்த அம்மனுக்கு பாடைக்கட்டி அம்மன் என்ற பெயர் வந்தது.

    இந்த அம்மன் உருவான வரலாறு வித்தியாசமானது. அதை தெரிந்துக்கொண்டால் கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் நிச்சயம் இந்த ஆலயத்துக்கு சென்று வருவார்கள். இந்த ஆலய வரலாறு வருமாறு:-

    வலங்கைமானில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் காதக்கவுண்டர், கோவிந்தம்மாள் என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். எல்லா செல்வங்களும் பெற்றிருந்தாலும் கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையே என்பது மட்டுமே இந்தத் தம்பதிகளின் ஒரே குறையாக இருந்து வந்தது.

    வலங்கைமானுக்குத் தெற்கில் உள்ள புங்கஞ்சேரி என்னும் கிராமத்தில்தான் கோவிந்தம்மாள் தினமும் சென்று வியாபாரம் செய்வது வாடிக்கை. வழக்கம் போல ஒரு வெள்ளிக்கிழமை கோவிந்தம்மாள் வியாபாரம் முடிந்து அந்த ஊர்க்குளத்தில் குளித்து விட்டுக் கரையேறியபோது குழந்தை அழும் குரல் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள். சத்தம் எங்கு இருந்து வருகிறது என்று பார்த்தாள். ஐயனார் கோவில் வாசலில் ஒரு குழந்தை அழும் குரல் கேட்பதை அறிந்தாள். அந்த குழந்தை சத்தம் வந்த திசை நோக்கி ஓடினாள். ஊர்க்காரர்களும் ஓடி வந்தனர்.

    அழுது கொண்டிருந்த குழந்தையை கோவிந்தம்மாள் வாரி எடுத்தாள். உடனே அழுகையை நிறுத்திய அந்தப் பெண் குழந்தை, அவளைப் பார்த்துச் சிரித்தது. குழந்தையைக் கொண்டு வந்து அங்கு விட்டுச் சென்றது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஊரார் அனைவரும் சேர்ந்து அந்த குழந்தையை விட்டவர்களைத் தேடிப் பார்த்தனர். யாரும் தென்படவில்லை. அதன் அழகில் மயங்கினர் ஊர்க்காரர்கள்.

    இறுதியில் குழந்தையை ஊர் நாட்டாண்மைக்காரரே எடுத்து வளர்க்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தனக்கே கிடைக்கும் என்று எதிர்பார்த்த கோவிந்தம்மாளுக்கு இது கடும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. அவளுக்கு ஏற்பட்ட வருத்தமும், ஏக்கமும் வார்த்தைகளால் சொல்லி மாளாது.

    இந்த சம்பவத்துக்கு பிறகு புங்கஞ்சேரியில் கோழிகளும், ஆடு மாடுகளும் மர்மமான முறையில் இறக்கத் தொடங்கின. ஊர் மக்கள் பலருக்கு அம்மை போட்டது.

    ஐயனார் கோவிலில் கிடைக்கப்பெற்ற அந்தப் பெண் குழந்தைக்கும் அம்மை நோய் வார்த்து விட்டது. அப்போது ஊர்க்காரர் ஒருவர் மீது அருள் வந்து, அந்தப் பெண் குழந்தையை கோவிந்தம்மாளிடம் கொடுத்துவிட வேண்டும்... அப்போது தான் ஊர் நலம் பெறும் என்ற வாக்கு வெளிப்பட்டது.

    இதனால் ஊர்க்காரர்கள் பயந்து போனார்கள். குழந்தையால் எந்த கெட்டதும் நடந்து விடக் கூடாதே என்று நினைத்தனர். எனவே அந்த குழந்தையை கோவிந்தம்மாளிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

    அதன்படி அந்த குழந்தை கோவிந்தம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. சீதளா என அதற்குப் பெயரிட்டு கோவிந்தம்மாள் அகமகிழ்ந்தாள், ஆனால் கடுமையான அம்மை நோய் காரணமாக, மூன்றாம் நாளே அந்தக் குழந்தை இறந்து விட்டது. ஆறாத் துயரமடைந்த கோவிந்தம்மாளும் அவள் கணவரும் இறுதிச் சடங்குகளைச் செய்து, குழந்தையின் உடலைத் தம் வீட்டு பின்புறத்தில் அடக்கம் செய்து விட்டனர்.

    அதன் பின்னர்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது குடமுருட்டி ஆற்றில் நீராடிவிட்டு வருவோரில் சிலர் கோவிந்தம்மாள் வீட்டு பின்புறத்தின் அருகே வந்தபோது, அவர்களில் ஒருவர் மீது அருள் வந்து, "நான் குழந்தை வடிவில் வந்த மாரியம்மன். எனக்கு உடல் இல்லையே தவிர உயிர் உள்ளது. என்னை வழிபடுவோர்க்கு அருள் புரிவேன்" என்று குழந்தை சீதளா சொன்னாள்.

    அதன்படி குழந்தையை சமாதி செய்த இடத்தில் கீற்றுக்கொட்டகை போடப்பட்டது. அங்கு தினமும் மக்கள் வழிபடத் தொடங்கினர். இதனால் அந்த இடத்தில் கோவிலும் எழுப்பப்பட்டது. சீதளாதேவி மகாமாரியம்மன் கோவிலாகப் பெயர் கொண்டு வரம் தரும் தெய்வமான அன்னை பராசக்தி அங்கே விளங்கலானாள்.

    உடல் இன்றிப் போனாலும் உயிரோடு உள்ளேன்' என்று அம்மன் அருள்வாக்கு வழங்கியதால் இந்த அம்மனிடம் குறைதீர்க்கக் கோரி வரும் பக்தர்கள், தம் உடலையே காணிக்கையாக அளிக்கும் பாடைக்காவடி பிரார்த்தனையை நிறைவேற்ற ஆரம்பித்தனர். இதனை, 'பாடைக்கட்டித் திருவிழா' என்றும் சொல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் இந்த விழா நடைபெறும். அன்னை பராசக்தியே உலகின் வெப்பம் நீக்கி உயிர்களைக் காக்கும் மழையைப் பொழிய வைக்கும் மாரியம்மனாக இங்கு தோற்றம் கொண்டிருக்கிறாள்.

    வலங்கைமான வளம் செறிந்த ஊர். குடமுருட்டி ஆற்றின் தென்திசையில் உள்ளது. ஊரின் ஈசான்ய திசையில் மகா மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆலய முகப்பின் முன் மண்டபம் அடைப்புச் சுவர் ஏதுமின்றி திறந்த அரங்கமாக அமைந்து உள்ளது. பக்தர்கள் பகலில் ஓய்வெடுக்கவும், இரவில் தங்கவும் வசதியாகக் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தின் தூண்களில் அஷ்ட லட்சுமிகளின் சுதைச் சிற்பங்கள் உள்ளன. தலவிருட்சமாக வேல்பி மரம் கோவிலின் பின்னால் அமைந்து உள்ளது.

    முன்மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் மகா மண்டபம். இதன் தென்புறத்தில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். வடபுறத்தில் இருளன், பேச்சியம்மன், வீரன், வீரனின் தேவியர் இருவர் என கிராம தேவதைகள் சுருங்கல் திருவுருவங்களாக அருள்கின்றனர், முன்மண்டபத்தை அடுத்து அம்மன் துலங்கும் அர்த்த மண்டபம் உள்ளது. இதையடுத்து பிரதானமான கருவறை இருக்கிறது. கருவறையில் மின்னும் விளக்கொளியில் மகாமாரியம்மன் அமர்ந்த நிலையில் கொலுவிருக்கிறாள்.

    நான்கு திருக்கரங்கள் கொண்ட இத்தேவி வலது மேற்கரத்தில் உடுக்கையும், இடது மேற்கரத்தில் சூலமும், வலது கீழ்க்கரத்தில் கத்தியும், இடது கீழ்க்கரத்தில் கபாலமும் தாங்கி அருள்கிறாள். இடது காலை மடித்து, வலது காலைத் தொங்க விட்டு அன்னை வீர சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளாள். இரு தோள்களின் மீதும் இரு நாகங்கள் உள்ளன. அன்னையின் முகத்தில் மாறாத புன்னகை தவழ்கிறது. எத்தனை முறை பார்த்து வழிபட்டாலும் அதில் சலிப்பே வராது. எத்தனையோ உயிர்களை மீட்டுத் தந்த அம்மன் என்பதால் அவள் முன்னிலையில் நிற்கும்போது நம் நோய், நொடி, குறைகள் எல்லாம் நம்மை விட்டு உருகி ஓடுவதை சிலிர்ப்புடன் உணர முடியும். ஏராளமான பக்தர்கள் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர்.

    பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் 2 தடவை இந்த ஆலயத்தில் பாடை கட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. பங்குனி மாதம் முதல் ஞாயிறன்று திருவிழா தொடங்கி, ஒன்பது நாட்களுக்கு நடைபெறுகிறது. எட்டாம் நாளான அடுத்த ஞாயிறன்று பாடைகட்டித் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவின்போது வலங்கைமானே மக்கள் வெள்ளத்தில் மூழ்கி விடும். அன்று தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் அங்கு திரண்டு வருவார்கள்.

     

    இத்திருத்தலத்தின் மகிமையே பாடைக்காவடித் திருவிழாதான். மருத்துவரால் கைவிடப்பட்டு எந்த பக்தன் அன்னையிடம் 'எனக்கு உயிர்ப்பிச்சை தா. உனக்கு பாடைக்காவடி எடுக்கிறேன்' என்று வேண்டிக் கொள்கிறானோ, அவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்து நல்வழியில் வாழ வைக்கிறாள் அன்னை. வேண்டுதல் நிறைவேறிய பிறகு, பக்தர்கள் இங்கு வந்து பாடைக்காவடி எடுத்துத் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.

    பாடைக்காவடி எடுக்க இருக்கும் பக்தர்கள் ஒரு வாரம் அல்லது இரு வாரங்கள் அன்னையை வேண்டி விரதம் இருப்பர்.

    காவடி எடுக்கும் நாளன்று, ஒருவர் இறந்தால் எவ்வாறு அவருக்குப் பாடை கட்டி இறுதிச் சடங்கு செய்கிறோமோ அதுபோல நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தரை ஆற்றில் குளிக்க வைத்து, பாடையில் படுக்கச் செய்து, அவரை நான்கு பேர் தூக்கிக் கொண்டு திருக்கோவிலை மூன்று முறை வலம் வருவர். பின் கோவிலின் முகப்பில் பாடையை இறக்குவர்.

    கோவிலில் பூசாரி வேண்டிக்கொண்டு பிணம் போலக் கிடக்கும் பக்தர் மேல் அபிஷேக நீர் தெளித்து அன்னையின் பிரசாதமான விபூதியைப் பூசி அவரை எழச் செய்வார். இதனாலேயே மக்கள் அன்னையை 'பாடைக்காவடி மாரியம்மன்' என்றும் போற்றுகின்றனர்.

    ஆலயம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    • கை, கால், மூட்டு, உடல், முதுகுத்தண்டுவட வலிகளுக்கு அமுக்கரா சூரண மருந்தை பாலில் கலந்து எடுக்கலாம்.
    • சிரிப்பு, தூக்கம் , மன மகிழ்ச்சி இவை மூன்றும் முதுமைக்கு மிகவும் அவசியம்.

    'முதியோர் நலனில் சித்த மருத்துவம்' என்ற நலத்திற்கான பயணத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடம் நெருங்கிவிட்டது. அநேகமாக பல்வேறு முக்கிய நோய்நிலைகளைப் பற்றியும், அதற்கான தீர்வுகளைப் பற்றியும் குறிப்பிட்டு எழுதியது முதுமையில் பலருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். இருப்பினும் முதுமையில் நலமாய் வாழ முடியுமா? என்ற ஐயப்பாடு பலருக்கு உண்டு.

    முதுமை என்பது எண்ணற்ற மாற்றங்களும், சவால்களும் நிறைந்தது. அத்தகைய மாற்றங்கள் மற்றும் சவால்களை கடந்து ஆரோக்கியத்தை உறுதியாக்க வேண்டியது முதுமைக்கு அத்தியாவசியமான ஒன்று. ஆரோக்கியம் என்பது உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் இருக்க வேண்டியது முதுமைக்கு மட்டுமல்ல அனைத்து வயதினருக்கும் பொதுவானதே. அத்தகைய ஆரோக்கியம் முதுமைக்கு கூடுதல் சவாலாக உள்ளது.

    முதுமையில் சிலருக்கு பல்வேறு உடல் வியாதிகள். சிலருக்கு ஒரு சில நோய்நிலைகள் மட்டுமே. ஏன் இவ்வளவு மாற்றம்? முதுமை அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும் துன்பங்களும், துயரங்களும் நபருக்கு நபர் மாறுபடுகிறது என்ற எண்ணம் பலருக்கு உண்டு.

    இது எனக்கு மட்டும் ஏன் ஏற்பட்டது? என்று புலம்பும் சூழலும் உண்டாகிவிடும். முதுமையில் நோய்கள் என்பது சாதாரணம் தான். நோய்நிலைகள் எவ்வாறு இருப்பினும், எதையும் தாங்கும் மன தைரியம் முதுமையில் இருந்தால், வாழும் வரை ஆரோக்கியமாக வாழலாம்.

    முதுமையில் நலமாய் வாழ, சில வழிமுறைகளை தெரிந்துகொள்வது மிக மிக அவசியம். அதன்படி முதலில் நோய் பாதிப்புள்ளவர்கள் தங்களுக்கான மருந்துகளை பட்டியலிட்டு அவ்வப்போது மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மருந்துகளை ஒரு போதும் தவற விடக்கூடாது. அதிலும் குறிப்பாக சர்க்கரை நோய், இதய நோய், ரத்த அழுத்தம் சார்ந்த மருந்துகளை மறவாமல் எடுத்துக்கொள்வது அவசியம். 'நோய் வந்தது வந்துவிட்டது, பிறகு என்ன ஒரு கை பார்த்துவிடலாம்' என்ற மனதிடம் அவசியம் வேண்டும். நோய் வந்து விட்டதே என்று அதையே எண்ணி புலம்புவதால் கெடப்போவது தனது ஆரோக்கியம் தான் என்பதை உணர வேண்டும்.

    முதுமையில் நோயால் பாதிக்கப்படுவது என்பது சாதாரணம் என்ற எண்ணமும், மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் சரியாகி விடும் என்ற எண்ணமும் உருவாக வேண்டும். சில சமயங்களில் தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைகளும், மருந்து மாத்திரைகளும் மன சலிப்பை உண்டாக்கக்கூடும். இருப்பினும் அதை அனைத்தையும் புறந்தள்ளி வாழ்க்கையில் தன்னம்பிக்கை நடைப்பயணத்தை தொடர வேண்டும். அவ்வப்போது நடைப்பயிற்சியும், தியானப்பயிற்சியும், யோகாசனப்பயிற்சியும் முதுமையின் தன்னம்பிக்கையை கூட்ட உதவும்.

    முதுமையில் பல்வேறு மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் சூழலில், சித்த மருந்துகளை தாங்கள் ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளலாமா? என்ற ஐயப்பாடும் பலருக்கு ஏற்படும். அந்த ஐயத்தைப் போக்க எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளை சித்த மருத்துவரிடம் காட்டி ஆலோசனைப் பெற்று எடுத்துக்கொள்வதும் நல்லது.

     

    முக்கியமாக தலைவலி, உடல் வலி, மூட்டு வலி போன்ற தொந்தரவுகளுக்கு முதுமையில் பலர் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. ஆனால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இச்செயல் முதுமையில் செயல் குறைந்த முக்கிய உள்ளுறுப்புகளை மேலும் பாதிக்கும்.

    சித்த மருந்துகளில் சில மருந்துகளை முதியோர்கள் அனைவரும் கைவசம் வைத்துக்கொள்வது நல்லது. அமுக்கரா கிழங்கு சூரணம், திரிபலை சூரணம், திரிகடுகு சூரணம், தாளிசாதி சூரணம், நிலாவாரை சூரணம், ஏலாதி சூரணம், பிண்ட தைலம், அருகன் தைலம் ஆகியன அவற்றில் சில. மேற்கூறிய மருந்துகளை சாதாரண உடல் உபாதைகளுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

    கை, கால், மூட்டு, உடல், முதுகுத்தண்டுவட வலிகளுக்கு அமுக்கரா சூரண மருந்தை பாலில் கலந்து எடுக்கலாம். இது தூக்கமின்மை நிலையிலும் பலன் தரும். திரிபலா சூரணத்தை ஐம்பது வயதைக் கடக்கும் அனைவரும் எடுத்துக்கொள்ள பழக வேண்டும். இரவில் திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது ஐம்பது வயதுக்கு பின்னர் வரும் பெரும்பாலான நோய்நிலைகளில் பலன் தரும். அதோடு என்றும் பதினாறு மார்கண்டேயனைப் போல் இருக்க வழிவகை செய்யும். சாதாரண சுவாசப்பாதை தொற்றுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை நாடுவதைக் குறைத்து திரிகடுகு சூரணம், தாளிசாதி சூரணம் ஆகிய மருந்துகளை நாடலாம். இவற்றில் ஒன்றை தேனில் கலந்து எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாரம் தொடர்ந்து ஆன்டி பயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதால் பாதிக்கப்படும் குடல் மீண்டும் சீராக ஒரு ஆண்டு கூட ஆகலாம் என்கின்றன நவீன அறிவியல் ஆய்வுகள். ஆகவே ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்பாட்டைக் குறைப்பது நல்லது.

    அத்துடன் இருமல், சளி தொந்தரவுக்கு ஆடாதோடை மணப்பாகும், பித்தம் கூடின வெயில் காலத்தில் மாதுளை மணப்பாகும், நன்னாரி மணப்பாகும் நற்பலன் தரும். மலச்சிக்கல் தீரவும், குடல் சுத்தம் பேணவும் அவ்வப்போது நிலாவாரை சூரணம் இரவில் வெந்நீரில் கலந்து எடுக்கலாம். இது இன்ன பிற நோய்நிலைகளையும் தடுக்க உதவும்.

    சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள எளிய மருந்துகளை நாடுவதால், தேவையின்றி ஏற்படும் மருந்துகளின் பக்கவிளைவுகளை குறைக்க முடியும். இதுவும் ஒருவகையில் ஆயுளை நீட்டிக்க உதவும். அஞ்சறைப்பெட்டி சரக்குகளையும் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்தாய் பயன்படுத்துவது நல்லது.

    உணவைக் குறைப்பது முதுமைக்கு நல்லது. மூன்று வேளை உண்பவன் ரோகி (நோயாளி) என்பதால் முதுமையில் உணவைக் குறைத்து உடல் எடையை பேணிக்காப்பது நோய்களை வராமல் தடுக்கும் எளிய யுக்தி முறை.

    தேரையர் சித்தர் கூறும் பிணியணுகாமல் தடுக்கும் விதிமுறைகளை கடைபிடித்து வருவது முதுமைக்கு நல்லது. "நீர் சுருக்கி, மோர் பெருக்கி, நெய் உருக்கி உண்பவர் தம் பேருரைக்கிற் போமே பிணி" என்கிறது தேரையர் சித்தரின் பாடல். அதன்படி எக்காலத்தும் குடிக்கும் நீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடித்து வருவதும், அன்றாட உணவில் நெய் சேர்த்து வருவதும், மோரினை நீர் அதிகம் சேர்த்து பயன்படுத்துவதும் உடலுக்கு நல்லது.

    மேலும் அதில் கருணைக்கிழங்கை தவிர பிற கிழங்குகளை தவிர்ப்பது நல்லது என்றும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் பிற கிழங்குகள் சர்க்கரை சத்து அதிகம் உள்ளதாகவும், வாதத்தைக் கூட்டி எல்லா நோய்நிலைகளையும் அதிகரிப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றை கடைபிடிக்கும் இடத்தில் எமனுக்கு வேலை இல்லை என்கிறது தேரையர் சித்தரின் பாடல் வரிகள். எனவே முதுமையில் ஆயுளை நீட்டிக்க அனைவரும் இவற்றை பின்பற்ற வேண்டும்.

    சரியான உணவு, பசித்த பின் புசித்தல், அத்துடன் மருந்து மாத்திரைகள், அளவான தூக்கம், அவ்வப்போது உடற்பயிற்சி மற்றும் மனப்பயிற்சி இவையே முதுமைக்கு அத்தியாவசியம். இவற்றை பின்பற்றுவது முதுமையின் ஆயுளுக்கு பக்க பலம். 

    சிரிப்பு, தூக்கம் , மன மகிழ்ச்சி இவை மூன்றும் முதுமைக்கு மிகவும் அவசியம். இவற்றை யாருக்காகவும் விட்டுத்தராமல் இருப்பது நல்லது. நல்ல தூக்கமே ஒரு வகையில் புத்துணர்ச்சியோடு மன மகிழ்ச்சி தரும். மதிய நேரத்தில் சற்று ஓய்வு, இரவு நேரங்களில் குறைந்தது 7 மணிநேரம் ஆழ்ந்த தூக்கம் பல வியாதிகளை ஓட்ட உதவும். இவை இரண்டும் இல்லாவிட்டால் மருத்துவமனை வாசலை தேடி ஓட வேண்டி இருக்கும். ஆக, எவையெல்லாம் முதுமைக்கு அவசியம் என்பதை பட்டியலிட்டு பின்பற்றுவது சிறந்தது.

    இவ்வாறு ஆரோக்கியத்திற்கான பாதையில் தான் நடப்பதோடு மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுதலும் முதுமைக்கான கூடுதல் பொறுப்பு. ஆகவே தனது வாழ்க்கை அனுபவங்களையும், சமூக பொறுப்புகளையும், ஆரோக்கியத்துடன் சேர்த்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது முதுமையின் கடமை. தன் காலம் முடிந்து விட்டது, இனி நம்மால் எந்த பயனும் இல்லை என்று தங்களாவே நினைத்துக்கொண்டு மனம் உடைவது சரியல்ல. ஏனெனில் முதியவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தூண்கள். ஆகவே முதுமையை பாரமாய் நினைக்காமல் முதியோர்களை அடுத்த தலைமுறையினரின் வழிகாட்டியாய் நினைத்து பாவித்து அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது சமூகத்தின் கடமை.

     

    மருத்துவர் சோ.தில்லைவாணன், 8056040768

    மருத்துவர் சோ.தில்லைவாணன், 8056040768

    சுருக்கமாக, முதுமையில் நாட்பட்ட நோய்களை நிர்வகிப்பது, அதற்கான மருந்துகளை கையாள்வது, அடுத்து வரப்போகும் நோய்களை தடுப்பது, வாழ்வியல் முறை ஆதரவு, முற்றிலும் இயலாத நிலையில் பிறரின் உதவி, ஆகிய ஐந்தும் மிக மிக அவசியமாகின்றன.

    முடிவாக "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி" ஆகிய தத்துவப் பாடல்களை எல்லாம் முதுமையில் ஓரம்கட்டிவிட்டு, "இளமை எனும் பூங்காற்று" எனும் பாடலை மனதில் நிறுத்தி, மன தைரியத்துடன் அன்பினை கைகோர்த்து, அக்கறையோடு பெயரன் பெயர்த்திகளோடு கொஞ்சி விளையாடி, நண்பர்களுடன் பேசி மகிழ்ந்து, மனதிற்கு இதமான பழங்கால நினைவுகளோடு நாட்களைக் கழித்தால், முதுமையில் இளமையோடு நலமாய் வாழ முடியும். முதுமை என்பது சாபம் அல்ல. முதுமை என்பது நிச்சயம் வரம் தான்.

    -முற்றும்-

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    • மருத்துவக் கருவிகளைத் தயாரிக்க ஆரம்பித்தார் கோத்ரெஜ்.
    • சிறிது காலத்தில் ஆர்வமின்றி நிறுவனத்தில் இருந்து விலகி விட்டார் பாய்ஸ்.

    என்ன வீட்டை பத்திரமா பூட்டியாச்சா?

    வீட்டை விட்டு வெளியூர் செல்லும் போது குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உறுதி செய்து கொள்வது "வீட்டை நல்லா பூட்டியாச்சா?", கோத்ரெஜ் பூட்டு தானே? என்பது தான்!

    பாடுபட்டு உழைத்து நகைகளை வாங்கி திருமணம் நடத்தத் தயாராக இருக்கும் குடும்பத்தினர், "நகையெல்லாம் பத்திரமா ?", கோத்ரெஜ் லாக்கரில் தானே வச்சிருக்கே?" என்று கேட்கும் போது, பெருமையுடன் பதில் இப்படி வரும்: "கவலையே பட வேண்டாம். கோத்ரெஜ் லாக்கர் தான், சுவரோடு பதிக்கப்பட்டது, யாரும் தூக்கிக் கொண்டு போக மூடியாது. டிஜிடல் லாக் கொண்டது" என்று பதில் வரும்.

    ஆம். நமது சொத்துக்களையும் பத்திரங்களையும் விலை உயர்ந்ததாக நாம் கருதுவதையும் பத்திரமாகப் பாதுகாப்பது கோத்ரெஜ் நிறுவனத்தின் தயாரிப்புகளே.

    இதை நிறுவியவர் வணிக நிறுவனத்தில் உயர்ந்த நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உயரிய கோட்பாட்டைக் கொண்ட சிறந்த தேசபக்தி கொண்ட தேசபக்தரான அர்தேஷிர் கோத்ரெஜ் ஆவார்.

    பிறப்பும் இளமையும்: பாரம்பரியம் மிக்க பார்சி குடும்பத்தில் 1868-ம் ஆண்டு புரி

    யோர்ஜிக்கும் தோஷிபாய் கூத்தராஜிக்கும் ஆறு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தார் அர்தேஷிர் கோத்ரெஜ். அவரது தந்தையார் வீடு, நில உடமைகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். 1871-ல் அவர் குடும்பப் பெயரை கோத்ரெஜ் என்று மாற்றிக் கொண்டார்.

    திருமணமும் பேரிழப்பும்: 1890-ல் பதினெட்டே வயதான ஆர்தேஷிருக்கும் பச்சுபாய் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்தைத் தொடர்ந்து ஒரு பெரிய சோக நிகழ்வு அவர் வாழ்வில் நடைபெற்றது.

    1891, ஏப்ரல் மாதம் 25-ம் நாள் பச்சுபாயும் அவரது நெருங்கிய உறவினரான பிரோஜ்பாய் ஷொராப்ஜி கம்டினும் ராஜாபாயும் கோபுரத்தில் ஏறிப் பார்ப்பது என்று தீர்மானித்தனர். அந்த கோபுரம் 279 அடி உயரம் கொண்ட பெரிய கோபுரம். அதில் இருவரும் ஏறி உச்சிக்குச் சென்ற போது இரண்டு பொல்லாத போக்கிரிகளான அழகிகள் அவர்களை அணுகி தவறாக நடக்க முயற்சித்தனர். உடனே இருவரும் அந்த கோபுரத்தில் இருந்து கீழே குதித்தனர். மரணமடைந்தனர். இது பெரிய அதிர்ச்சியையும் இழப்பையும் அர்தேஷிர் கோத்ரெஜுக்குத் தந்தது. தன் வாழ்நாள் முழுவதும் அவர் மறுமணம் செய்து கொள்ளவே இல்லை.


    வக்கீல் படிப்பு: 1894-ல் வக்கீல் படிப்பை முடித்த அவருக்கு நல்ல கேஸ்கள் வந்தன. ஜான்ஜிபாரில் ஒருவருக்கு வக்காலத்து வாங்க ஒத்துக்கொண்ட கோத்ரெஜ் அந்த கேசில் உண்மைக்கு அல்லாதவற்றைச் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார். இது அவருக்குப் பிடிக்கவில்லை. தனது மனசாட்சியின் படி நடந்து கொள்ளத் தீர்மானித்த அவர் கேசிலிருந்து விலகினார். "கேசில் எனது பக்கத்தை மட்டும் நான் பார்க்கவில்லை, இரண்டு பக்க உண்மைகளையும் பார்த்தேன், விலகினேன்" என்று பின்னால் அவர் கூறினார்.

    மருந்து தயாரிப்புகள்: அடுத்து என்ன செய்வது? மெர்வான்ஜி முன்செஞ்சர்ஜி என்பவர் ஒரு சிறந்த வணிகர். அவரிடம் சென்று கோத்ரெஜ் தொழில் தொடங்க 3000ரூபாய் கடனாகக் கேட்டார். இதனால் வியந்து போன அவர் எதற்காக என்று கேட்டார். சர்ஜிகல் கருவிகள் செய்வதற்காக என்று பதில் வந்தது. "இதை உங்கள் தந்தையாரே சந்தோஷமாகத் தருவாரே, என்னிடம் எதற்கு வர வேண்டும்" என்று வியப்புடன் அவர் கேட்டார்.

    "என் தந்தையாரிடம் நான் கேட்டால் அவர் அதை இனாமாகத் தந்து விடுவார். எனக்குத் திருப்பிக் கொடுக்கும்படியான கடன் தான் வேண்டும்" என்றார் கோத்ரெஜ்..

    மனம் மகிழ்ந்த மெர்வான்ஜி 3000 ரூபாயைக் கொடுத்தார். மருத்துவக் கருவிகளைத் தயாரிக்க ஆரம்பித்தார் கோத்ரெஜ். தயாரிப்புகள் தரத்துடன் பிரமாதமாக அமைந்தன. அவர் தான் வேலை பார்த்த கம்பெனி உரிமையாளரிடம் அவற்றைக் காட்டவே அவர் பிரமித்தார். ஆனால் அவர், "இதை 'மேட் இன் இண்டியா' என்று போடக் கூடாது என்று நிபந்தனை விதித்தார்.

    இதை உடனே மறுத்த தேசபக்தரான கோத்ரெஜ் இந்தத் தொழிலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் அவர் ஆழ்ந்தார்.

    போலீஸ் கமிஷனரின் அறிவிப்பு: அப்போது பம்பாய் போலீஸ் கமிஷனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஏராளமான வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருட்டுப் போகின்றன. நல்ல பாதுகாப்பை அளிக்க அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்பதே அவர் அறிவிப்பு.

    சிந்தனையில் ஆழ்ந்தார் கோத்ரெஜ்: நேராக மெர்வான்ஜியிடம் சென்றார். தனக்கு நல்ல பாதுகாப்பான பூட்டைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருப்பதாகக் கூறினார்.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    'இதற்கு முன்னர் யாருமே பூட்டு செய்யவில்லையா என்ன?' என்று கேட்டார் மெர்வான்ஜி.

    அதற்கு பதிலாக, "நான் சிறந்த நல்ல பூட்டைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார் அவர்.

    உடனே தேவையான பண உதவியைச் செய்தார் மெர்வான்ஜி.

    215 சதுர அடியே கொண்ட ஒரு சிறிய ஷெட்டில் தன் தொழிற்சாலையை ஆரம்பித்தார் கோத்ரெஜ்.

    மிகுந்த உழைப்பின் பேரில் தினசரி ஆராய்ச்சி செய்து யாரும் திறக்க முடியாத நான்கு லீவர் கொண்ட பூட்டு ஒன்றை அவர் தயாரித்தார்.

    சந்தையில் அது நல்ல வரவேற்பைப் பெற்றது. உடனே அடுத்தபடியாக இரண்டு சாவிகள் கொண்ட ஒரு பூட்டைத் தயாரித்த அவர் இரண்டாவது சாவி தேவையான மாற்றங்களை பூட்டின் உள்ளே செய்யக் கூடிய வகையில் புதுமையாக வடிவமைப்பைச் செய்தார்.

    இதைத் தொடர்ந்து யாருமே எளிதில் திறக்க முடியாத பாதுகாப்பைக் கொண்ட பல வடிவமைப்புகளைக் கொண்ட பூட்டுகளை அவர் தயாரிக்க ஆரம்பித்தார்,

    ஒவ்வொரு பூட்டுக்கும் ஒரு சிறப்பான பெயர் சூட்டப்பட்டது. ஒன்றின் பெயர் கார்டியன் லாக். இன்னொன்றின் பெயர் டிடெக்டர் லாக்.

    நிறுவனம் படிப்படியாக உயர்ந்தது. பலர் வேலையில் அமர்த்தப்பட்டனர்.

    சேப் தயாரிப்பு: 1901-ல் கோத்ரெஜ் பாதுகாப்பான 'சேப்' (SAFE) பக்கம் தன் பார்வையைத் திருப்பினார்.

    அப்போது சான்பிரான்சிஸ்கோவில் ஒரு பூகம்பம் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு பெரிய தீ விபத்தும் ஏற்பட்டது. அனைத்து சேப்களும் அழிந்து போயின.

    இதைக் கவனத்தில் கொண்ட கோத்ரெஜ் அருமையான ஒரு சேபை வடிவமைத்தார்.

    இந்த அனைத்திலும் அவருக்கு உதவி செய்தது அவரது சகோதரரான பிரோஜ் ஷா.

    தொழிலில் நன்கு புதிய உத்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 1910-ல் அவர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றார். புதிய உத்திகளைப் பார்த்தறிந்தார்.

    கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ்: ஒருநாள் அவருக்கு மெர்வான்ஜியிடம் தான் வாங்கிய கடன் தொகை 3000 ரூபாய் ஞாபகத்திற்கு வரவே ஓடோடிச் சென்று அவரிடம் தொகையைத் திருப்பித் தந்தார். நோய்வாய் படுக்கையில் இருந்த அவர் அதை வாங்க மறுத்தார். ஆனால், 'ஒரு உதவி செய்ய முடியுமா?' என்று கேட்டார்.

    'எது வேண்டுமானாலும் செய்கிறேன்' என்று வாக்களித்தார் கோத்ரெஜ்.

    எனது உறவினாரான பாய்சிற்கு ஒரு வேலை போட்டுத் தர முடியுமா என்பதே அவர் கேட்ட உதவி.

    நெகிழ்ந்து போன கோத்ரெஜ். அவரை எனது நிறுவனத்தில் கூட்டாளியாகவே ஆக்குகிறேன் என்றார்.

    அப்படித் தோன்றியது தான கோத்ரெஜ். அண்ட் பாய்ஸ் (GODREJ & BOYCE) கம்பெனி.

    ஆனால் சிறிது காலத்தில் ஆர்வமின்றி நிறுவனத்தில் இருந்து விலகி விட்டார் பாய்ஸ். என்றாலும் பெயர் தொடர்ந்தது.

    சோப் தயாரிப்பு: 1928 மே முதல் நாள் தனது நிறுவனத்தை தனது தம்பி பெயருக்கு மாற்றினார் கோத்ரெஜ். நேராக நாசிக்கிற்குச் சென்று அங்கு விவசாயத்தை மேற்கொண்டார்.

    ஆனால் இயல்பான அவரது "எதையாவது புதிதாகக் கண்டுபிடிக்கும் ஆர்வம்" அவரை உந்த அவர் சோப் தயாரிப்பதில் ஈடுபட்டார். சோப்பை மிருகக் கொழுப்பின்றி சைவ முறையில் தயாரிப்பதே அவர் எண்ணம். தாவர எண்ணெய்களை வைத்து மிருகக் கொழுப்புகளைத் தவிர்த்து அவர் தயாரித்த சோப்புகள் பிரபலமாயின. நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த சோப்பை நோபல் பரிசு பெற்ற கவிஞரான ரவீந்திரநாத் தாகூரும் அன்னிபெசண்ட் அம்மையாரும் பெரிதும் போற்றி வரவேற்றனர்.

    இந்திய விடுதலை இயக்கம் கோத்ரெஜை ஈர்க்கவே அவர் தாதாபாய் நவுரோஜியின் உரையால் ஈர்க்கப்பட்டார். நம் நாடு எதிலும் தனித்து சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பதே அவரது கருத்து.

    ஆனால் சுதேசித் தயாரிப்புகள் நிச்சயமாக உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

    சாதாரண 215 சதுர அடி ஷெட்டில் ஆரம்பிக்கப்பட்ட் கோத்ரெஜ் நிறுவனம் இன்று 28000 பணியாளர்களைக் கொண்டு பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. 5.7 பில்லியன் கோடி ரூபாய் வருமானத்தைக் கொண்டுள்ளது. (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி)

    எலிசபத் மகாராணியாரே ஒரு முறை கோத்ரெஜ் தயாரிப்புகளைப் பகிரங்கமாகப் போற்றிப் புகழ்ந்தார்.

    ஆதி கோத்ரெஜ்: இன்று இந்த நிறுவனத்தின் தலைமையில் இருப்பவர் ஆதி கோத்ரெஜ். அவருக்கு வயது 82 . இப்போது இந்த நிறுவனம் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து இந்தியாவின் பெருமையை உலககெங்கும் பறை சாற்றி வருகிறது.

    சமீபத்தில் விண்ணில் பறந்த சாட்டிலைட்டில் விகாஸ் எஞ்ஜினை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தது கோத்ரெஜ் நிறுவனம்.

    வீட்டில் உபயோகிக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் உலகில் பெரும்பகுதியில் வசிக்கும் நாடுகளின் மக்கள் ஏதோ ஒரு கோத்ரெஜ் தயாரிப்பைப் பயன்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.

    இந்தியாவிலோ கேட்கவே வேண்டாம் - சிந்தால் சோப், ஹிட், குட் க்னைட், நூபுர் ஹென்னா, ஹேர் கேர், கோத்ரஜ் பர்னிச்சர், கோத்ரஜ் கட்டும் வீடுகள், சிசிடிவி, ரெப்ரிஜரேட்டர், குளிர்சாதனப்பெட்டிகள், எலக்ட்ரிக் ஓவன்,- மிக மிக நீண்ட கோத்ரெஜ் என்று தொழில்துறையின் பட்டியல் தொடரும்.

    கோத்ரெஜ் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் என்ன?

    மிக சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் அது விளக்கப்படுகிறது.

    ENTERPRISE AND ETHICS

    - THE TWO PILLARS OF THE EMPIRE!

    வணிகம் - நன்னெறி இவை

    சாம்ராஜ்யத்தின் இரு தூண்கள்!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    ×