search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் தினந்தோறும் நோயாளிகள் இங்கு ஏராளமானோர் வருகிறார்கள்.
    • கருவி பொருத்தப்பட்டதும் தினந்தோறும் கூடுதலாக 100 புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரி செயல்படுகிறது. இங்கு புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் தினந்தோறும் நோயாளிகள் இங்கு ஏராளமானோர் வருகிறார்கள்.

    இதற்கிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஏற்கனவே அதிநவீன கதிரியக்க கருவி உள்ளது. ஆனால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் இருந்து வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு ஜிப்மரில் புற்று நோயாளிகளுக்கு விரைந்து கதிரியக்க சிகிச்சை அளித்திடும் வகையில் ரூ.30 கோடியில் அதிநவீன கருவி வாங்க மத்திய சுகாதாரத்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

    இந்த கருவி பொருத்தப்பட்டதும் தினந்தோறும் கூடுதலாக 100 புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கவும் மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

    • டி.என்.ஏ. மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
    • திருத்தங்கள் மேற் கொண்டு உடனே போக்சோ விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, முத்தியால் பேட்டை, சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மாதம் 2-ந் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தால் புதுவை முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த படுகொலை தொடர் பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த கஞ்சா ஆசாமிகளான விவேகானந்தன் (57) மற்றும் கருணாஸ் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இவ்வழக்கில் தடவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தில் சேகரித்த தடயங்கள், குற்றவாளிகளின் கைரேகைகள் மற்றும் ரத்த பரிசோதனை அறிக்கை, தடயவியல் ஆய்வு பரிசோதனை, டி.என்.ஏ. மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

    போக்சோ வழக்குகளில் 60 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். எனவெ சிறுமி பாலியல் கொலை வழக்கில் சிறப்பு விசாரணை குழு வினரும், கிழக்கு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் லட்சுமி தலைமையில் முத் தியால்பேட்டை போலீ சாரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் சிறுமி கொலை வழக்கு குற்றப்பத்திரிகையை போலீசார் தயாரித்து முடித்துள்ளனர்.

    இவ்வழக்கு விசாரணையை டி.ஜி.பி.ஸ்ரீனிவாஸ் நேரடியாக கவனித்து வரும் நிலையில் சுமார், 600 பக்க விசாரணை அறிக்கை டி.ஜி.பி. மற்றும் சட்டத்துறையின் ஆலோசனை பெற அனுப்பி வைக்கப்பட்டது.

    அவர்கள் ஆலோசனை பெற்றவுடன் திருத்தங்கள் ஏதேனும் வந்தால், அதன்படி திருத்தங்கள் மேற் கொண்டு உடனே போக்சோ விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர்.

    • ஆளும்கட்சியினர் ஏனாம் போன்ற தொகுதிகளை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த வாக்கும் பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ளது என கூறுகின்றனர்.
    • சில இடங்களில் பா.ஜனதாவினர் காங்கிரசாரை பணி செய்யாமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி முடிவடைந்தது. புதுவை பாராளுமன்ற தொகுதியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயத்துக்கும், இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். அதோடு நேரடியாக பா.ஜனதா இந்த முறை களத்தில் இறங்கியதால் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோரின் சுமார் 2 லட்சம் வாக்குகள் பா.ஜனதாவுக்கு கிடைக்காது என காங்கிரசார் கருதினர்.

    இதனால் தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே பா.ஜனதாவின் வாக்கு ஒன்று என ஆரம்பிப்பதை, காங்கிரசார் 2 லட்சத்து ஒன்று என ஆரம்பிப்போம் என தெரிவித்தனர். தற்போது தேர்தல் முடிவு வெளியாக 45 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு ஒரு தகவல்கள் உலா வருகிறது. சில தொகுதிகளில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீதான எதிர்ப்பால் வாக்குகள் காங்கிரசுக்கு விழுந்துள்ளதாக கூறுகின்றனர்.

    அதேநேரத்தில் ஆளும்கட்சியினர் ஏனாம் போன்ற தொகுதிகளை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த வாக்கும் பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ளது என கூறுகின்றனர். சில இடங்களில் பா.ஜனதாவினர் காங்கிரசாரை பணி செய்யாமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இதனால் மாறி, மாறி நாள்தோறும் உலா வரும் தகவல்கள் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள வயிற்றில் நெருப்போடு இருதரப்பினரும் காத்திருக்கின்றனர்.

    • மத்திய பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கு கியூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
    • மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இதற்கிடையே புதிய கல்வி கொள்கையின்படி மத்திய பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கு கியூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

    அதன்படி இந்த கல்வியாண்டிற்கான (2024-25) பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புக்கான கியூட் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வு முடிவு கடந்த 13-ந் தேதி வெளியானது. இதன்படி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டிற்கான பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான சேர்க்கைக்கு மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது.

    இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கு மாணவர்கள் மத்திய பல்கலைக்கழக இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்க முடியவில்லை. இணைய தளம் முடங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்கலைக்கழக உதவி எண்களை தொடர்பு கொண்டால் யாரும் பதிலளிக்கவில்லை. இதனால் மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    • ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
    • உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது.

    புதுச்சேரி:

    கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கெட் சாப்பிட்டு சிறுவன் துடிதுடித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ஸ்மோக் பிஸ்கெட்டை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம். அது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என, தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்து, அதனை தடுக்க, தனிப்படை களம் இறக்கியுள்ளது.

    புதுச்சேரியிலும் இந்த வகை ஸ்மோக் பிஸ்கெட்டுகள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திருமண விழாக்கள், பொருட்காட்சிகள் போன்ற இடங்களிலும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி செய்யப்படும் ஸ்மோக் உணவு கிடைக்கிறது.

    திரவ நைட்ரஜன் தான் தற்போது வித்தியாசமான உணவு என்ற பெயரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. காக்டெய்ல், மிட்டாய்கள், பிஸ்கெட்டுகள் அல்லது திரவ நைட்ரஜன் கலந்து செய்யப்படும் எந்த உணவாக இருந்தாலும் அது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு அதனை வாங்கி கொடுக்கிறார்கள்.

    உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது. இந்த டிரை ஐஸ்களை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.

    இதுதொடர்பாக, தமிழக அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஸ்மோக் பிஸ்கெட் விஷயத்தில் புதுச்சேரி அரசும், உணவு பாதுகாப்பு துறையும் மவுனமாக உள்ளது.

    இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • ஏன் சீட் பெல்ட் அணியவில்லை? காரில் ஏன் சன் ஸ்கிரின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு அபராதம் விதிக்கின்றனர்.
    • போலீஸ் உயர் அதிகாரிகள் கண்காணித்து உரிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து போலீசாருக்கு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் மாநில வருவாய் சுற்றுலா துறையை நம்பி உள்ளது.

    வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்தால் தான் வியாபாரம் அதிகரிக்கும். தங்கும் விடுதிகள், ரெஸ்டாரண்ட், மதுபான விற்பனை அனைத்தும் வெளிமாநில சுற்றுலா பயணிகளையே நம்பி உள்ளது.

    தற்போது கோடை விடுமுறையொட்டி, புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    அப்படி வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.

    குறிப்பாக சிக்னல்களில் நிற்கும் போக்குவரத்து போலீசார், சிக்னலை கடக்க வரும் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநில கார்களை உடனே நிறுத்தி விடுகின்றனர். அவர்களிடம், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் ஆவணங்களை கேட்கின்றனர்.

    அனைத்தும் இருந்தாலும் கூட, ஏன் சீட் பெல்ட் அணியவில்லை? காரில் ஏன் சன் ஸ்கிரின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு அபராதம் விதிக்கின்றனர்.

    அதேபோன்று, கடலுார் சாலையில் மாநில எல்லையான முள்ளோடையில், வாகன சோதனை என்ற பெயரில் புதுச்சேரி போலீசார் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை மட்டும் நிறுத்தி சோதனை நடத்தி அபராதம் விதித்தும் வருகின்றனர்.

    போக்குவரத்து சட்டப்படி விதிமீறலில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிப்பது தவறில்லை.

    ஆனால், வெளி மாநில வாகனங்களை மட்டும் குறி வைத்து அபராதம் விதிப்பதும், அவர்களை விரட்டுவதும், புதுச்சேரி அரசு மீது அவப்பெயரை ஏற்படுத்தும்.

    சுற்றுலா பயணிகளின் வருகையும் குறையும். எனவே, போலீஸ் உயர் அதிகாரிகள் கண்காணித்து உரிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து போலீசா ருக்கு வழங்க வேண்டும் என வெளிமாநில சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள்.

    • புதுச்சேரி கடற்கரை சாலையில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வருபவர் அருண்.
    • சேவை தொடர வேண்டும் என்று காவல் துறையினர் வாழ்த்தி கைகுலுக்கி அனுப்பி வைக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொது மக்கள் வெயிலுக்கு பயந்து வீட்டிலே முடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வருபவர் அருண்.

    சமூக ஆர்வலரான இவர் சில நாட்களாக தன்னுடைய வாகனத்தில் ஐஸ் பெட்டியை பின்புறம் கட்டி அதில் மோர், நன்னாரி சர்பத், இளநீர், குடிநீர், லெமன் ஜூஸ் ஆகியவற்றுடன் புதுச்சேரி நகர பகுதியில் வலம் வருகிறார்.

    இதனை கடும் வெயிலில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், போக்குவரத்தை சீரமைக்கும் போலீசார் ஆகியோருக்கு அவர்கள் பணிபுரியும் இடத்துக்கே சென்று வெப்பத்தை தணிக்கும் வகையில் அவர்கள் விரும்பிய குளிர்பானங்களை கொடுத்து வருகிறார்.

    இவருடைய சேவை தொடர வேண்டும் என்று காவல் துறையினர் வாழ்த்தி கைகுலுக்கி அனுப்பி வைக்கின்றனர்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • மர்ம நபர் போன் செய்து, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் விமான நிலையங்களில் குண்டு வெடிக்கப்போகிறது என மிரட்டல் விடுத்திருந்தார்.
    • விமான நிலையத்தை சுற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு மர்ம நபர் போன் செய்து, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் விமான நிலையங்களில் குண்டு வெடிக்கப்போகிறது என மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதையடுத்து இந்திய விமான ஆணையம் உடனடியாக அனைத்து விமானநிலையங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சோதனை நடத்த உத்தரவிட்டது.

    இதன்படி புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விமான நிலையத்தை சுற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • சடலங்களை பாதுகாக்க முடியாமல் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    • குளிர் சாதன வசதி இல்லாததால் இந்த சடலங்கள் அழுகிப்போய் துர்நாற்றம் வீசுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிணவறை உள்ளது. இங்கு விபத்து, கொலை, தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் உடல்களை பிணவறையில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து காவல் துறை விசாரணை முடிந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பது வழக்கம்.

    அதன்படி புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நேரத்தில் 24 சடலங்களை குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்து பாதுகாக்க வசதி உள்ளது. இதுபோன்ற சூழல்களில் தற்போது அடிக்கும் வெயிலில் பிணவறையில் அமைக்கப்பட்ட குளிர்சாதன எந்திரங்கள் திணறுவதால், குளிரூட்டப்படுவது குறைகிறது.

    இதனால் சடலங்களை பாதுகாக்க முடியாமல் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து சடலங்கள் அழுகுவது, துர்நாற்றம் வீசுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்குள்ள 3 குளிர்சாதன எந்திரங்களை சரி பார்க்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு குளிர்சாதன எந்திரங்கள் பழுது பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் நிலைமை சீராக வில்லை. குறிப்பாக புதுச்சேரிக்கு வந்து ஆதரவற்றவர்களாக இறந்து கிடப்போரின் சடலங்களை உறவினர்கள் உரிமை கோருவதற்கு வசதியாக 15 நாட்கள் வரை வைத்திருக்க வேண்டியுள்ளது.

    தற்போது பிணவறையில் ஆதரவற்றவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு போதுமான குளிர் சாதன வசதி இல்லாததால் இந்த சடலங்கள் அழுகிப்போய் துர்நாற்றம் வீசுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி கூறியதாவது:-

    தற்போது கடும் வெயிலால் பிணவறையில் குளிர் சாதன எந்திரங்கள் திணறுகிறது. மேலும் வெளிப்புற வெப்பமும் பிணவறைகளில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் சீதோஷ்ண நிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    தொழில் நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, எந்திரங்களை சர்வீஸ் செய்துள்ளோம். தற்போது ஓரளவு நிலைமை சீராகியுள்ளது. இருப்பினும் சடலங்கள் அழுகுவது என்பது, ஆதரவற்றவர்களின் சடலங்களால்தான் நிகழ்கிறது.

    இத்தகைய சடலங்கள் இறந்து, 10 நாட்கள் அல்லது அதற்கு மேல்தான் கண்டுபிடிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஏற்கனவே அழுகிய நிலையில், ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் இத்தகைய சடலங்களை உறவினர்கள் உரிமை கோருவதற்கு வசதியாக விதிப்படி 15 நாட்களுக்கு பாதுகாக்க வேண்டும்.

    அப்படி நீண்ட நாட்கள் பாதுகாக்கப்படும்போது சடலங்கள் மேலும் அழுகி விடுகிறது. இருப்பினும் வெளிப்புற சீதோஷ்ண நிலை உள்ளே பாதிக்காத வகையில் உள் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றார்.

    • தேர்தலின் போது வாக்குகளை பெற சாதி அல்லது மதவகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிடக்கூடாது.
    • தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் புதுச்சேரி சமூக அமைப்பினர் புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேர்தலின் போது வாக்குகளை பெற சாதி அல்லது மதவகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிடக்கூடாது. ஆனால் பிரதமர் மோடி ராஜஸ்தான் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். அவரது பேச்சின் தாக்கம் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இருவரது மனங்களிலும் எத்தகைய தாக்கம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டியுள்ளது.

    தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக திட்டமிட்டு இந்தியாவில் மத வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அவரது தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்கவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வெளியீடு.
    • அரசு, தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் 29.04.2024 முதல் தொடங்கும்.

    கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மேற்குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய குறிப்புடன், புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இயக்குநரால் வெளியிடப்பட்ட தீவிர வெப்பம் / வெப்ப அலைக்கான பொது சுகாதார ஆலோசனையின் தொடர்ச்சியாக, அனைத்து அரசுகளுக்கும்/தனியார்/சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் 29.04.2024 முதல் தொடங்கும்.

    இதேபோல், கோவை விடுமுறை முடிந்து 06.06.2024 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




     


    • லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் புலி உலாவுவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.
    • புலி வேட நாய் கடந்த 2 நாட்களாக குறிஞ்சி நகர் பகுதியில் உலாவி வருகிறது.

    புதுச்சேரி:

    புலியை பார்த்து பூனை சூடுபோட்ட விடுகதை மாதிரி நாயை புலியாக மாற்ற அதை புலிபோல் பெயிண்ட் அடித்து வீதியில் உலாவவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.

    புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் புலி உலாவுவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.

    மலைவனப்பகுதியாக இருந்தால் புலி வரும் இங்கு எப்படி புலி வந்தது என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்தது. உண்மையிலேயே புலி தான் வருகிறதா? அதனை பார்த்துவிட வேண்டும் என்று இளைஞர்கள் திட்டமிட்டனர்.

    அப்போது புலி வருகிறது என்று சிலர் அங்கு கூச்சலிட்டவாறு சென்றனர்.

    இதனை கேட்ட இளைஞர்கள் சிலர் அங்கு திரண்டு சென்றனர். அவர்கள் புலி என்று சொன்ன விலங்கை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஏனென்றால் அது புலி அல்ல புலி வேஷத்தில் இருந்த நாய்.

    அந்தப் பகுதியை சேர்ந்த சில விஷமிகள் தெரு நாய் உடலில் புலியைப் போல கோடுகளை பெயிண்டில் வரைந்து நாயை வீதிகளில் உலாவ விட்டுள்ளனர்.

    இந்த புலி வேட நாய் கடந்த 2 நாட்களாக குறிஞ்சி நகர் பகுதியில் உலாவி வருகிறது. இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    நாய்க்கு புலிவேஷ மிட்ட விஷமிகள் யார்? என்று அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×