search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் மட்டக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • சந்தேகத்திற்கு இடமாக 3 இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த 6 பேரை பிடித்து சோதனை செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி நகருக்குள் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் தூத்துக்குடி நகரில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதில் தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் மட்டக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக 3 இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த 6 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அவர்கள் விருதுநகர் மாவட்டம் கம்பம்பட்டி தெருவை சேர்ந்த விஜய் என்ற கருப்பசாமி (வயது 23), முத்தழகு என்ற அருள்(30), விருதுநகர் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த சந்தனபாண்டி (21), விருதுநகர் ரோசன்பட்டி அரண்மனை தெருவை சேர்ந்த சக்திவேல் (25), அம்பேத்கர் நகரை சேர்ந்த வல்லரசு (25), தூத்துக்குடி தாளமுத்துநகர் கோமாஸ்புரம் ராஜீவ்காந்தி குடியிருப்பை சேர்ந்த ராஜா (38) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதாகி ஜாமீனில் வெளிவந்திருப்பவர்கள் என்பதும், இவர்கள் சதி திட்டத்துடன் சுற்றித்திரிந்ததும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அந்த 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இ-பாஸ் நடைமுறைகளை வகுப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
    • ஊட்டி-கொடைக்கானலுக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு 7-ந்தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஓரிரு நாளில் வெளியிட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    இதற்காக வருவாய் துறை, சுற்றுலா, வனத்துறை, காவல்துறை, போக்குவரத்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து இ-பாஸ் நடைமுறைகளை வகுப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    கொரோனா காலத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இ-பாஸ் விண்ணப்பித்தது போன்று ஊட்டி-கொடைக்கானலுக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தலைமைச் செயலாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பில் வருவாய்த்துறை மூலமாக இ-பாஸ் நடைமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும்.
    • தற்போது வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 500 நாட்களே உள்ளன. நாம் அனைவரும் களத்தில் முன்கூட்டியே பணிபுரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இவை அனைத்திற்கும் அடிப்படை களப்பணி தேவை. நம் தொண்டர்கள் ஒவ்வொருவரும் களத்தில் இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். விடுபட்டவர்களை இணைக்க வேண்டும். முகவரி மாறியவர்களை கண்டறிந்து பட்டியலில் சேர்க்க வேண்டும். இறந்தவர்களை நீக்க வேண்டும். ஓட்டு இல்லாதவர்களுக்கு ஓட்டு பெற்றுத்தர வேண்டும். பூத் லெவல் கமிட்டிகளை பலமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும். ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள், எதிர்பார்ப்பாளர்கள் என்று மூன்று விதமாக பிரித்து களப்பணி மேற்கொள்ள வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது அவசியம். மத்திய அரசு திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேர வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தான் உள்ளது. அதை கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வது அவசியம் ஆகும்.

    தற்போது வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் கோவை நிர்வாகிகளும் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக அங்கு களப்பணி எப்படி மேற்கொள்ளப்படுகிறது. எந்தெந்த நடைமுறைகளை, எப்படியெல்லாம் பின்பற்றுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரன் ரூ.53,920-க்கு விற்கப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் விட்டு விட்டு பெய்த சாரல் மழை காரணமாக கடுமையான வெப்பத்தில் தவித்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
    • பல்வேறு பகுதிகளிலும் மாலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    சுமார் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் கொளுத்திய நிலையில் பொதுமக்கள் பகல் பொழுதில் வெளியே வரவே மிகுந்த அச்சம் கொண்டனர்.

    வயதான முதியவர்கள், குழந்தைகள் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    பல்வேறு இடங்களில் மலைப்பகுதிகளில் காட்டுத் தீயும் பற்றி எரிந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கிய பின்னர் சாரல் மழையாக பெய்ய தொடங்கியது.

    சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் விட்டு விட்டு பெய்த சாரல் மழை காரணமாக கடுமையான வெப்பத்தில் தவித்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து இது போல் மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைய வேண்டும் என்று எதிர்நோக்கி உள்ளனர்.

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. ஆனால் மழை பெய்யவில்லை. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.15 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 105 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1754 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 57.22 அடி. நீர் திறப்பு 72 கன அடி. இருப்பு 3092 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 102.53 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 3.2, போடி 10.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் இருந்து பேரணி புறப்பட்டது.
    • உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளி வந்தே மாதரம் என முழக்கமிட்டனர்.

    வேதாரணயம்:

    இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக 93-வது நினைவு பேரணி திருச்சியில் உப்பு சத்தியாகிரக ராஜன் நினைவு இல்லம் அருகே இருந்து உப்பு சத்தியகிரக யாத்திரை கமிட்டி தலைவர் சக்திசெல்வ கணபதி தலைமையில் தொடங்கியது.

    அந்த பேரணி கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு , தஞ்சை, பாபநாசம், ஆலங்குடி மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தகட்டூர் ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் வழியாக நேற்று வேதாரண்யத்திற்கு வந்தடைந்தது.

    வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் யாத்திரை குழுவினர் உபவாசம் (உண்ணாவிரதம்) இருந்தனர்.

    இன்று வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் இருந்து பேரணி புறப்பட்டது.

    வேதாரண்யம் வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்திலிருந்து பாதயாத்திரையாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள அகஸ்தியன்பள்ளிக்கு நடந்து சென்றனர்.

    தொடர்ந்து உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளி வந்தே மாதரம் என முழக்கமிட்டனர். பின்னர் உப்பு சத்தியாகிரக நினைவு நினைவு ஸ்தூபியில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி தேசபக்தி பாடல்களை பாடினர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், சுதந்திரப் போராட்ட தியாகி சர்தார் பேரன் வேதரத்தினம், கேடிலியப்பன்உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம் நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.
    • நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தொழிலாளர் சமுதாயம் 8 மணி வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி ரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப் பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள்! திராவிட முன்னேற்றக் கழகம், தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம்.

    தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம் நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.

    நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம்.

    கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்துப் பணியாளர்களும் அமர்வதற்கு, பணிபுரியும் இடங்களில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தருதல் குடிநீர், கழிப்பிடம், ஓய்வு அறை, உணவருந்தும் அறை மற்றும் முதலுதவி வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் 1947 ஆம் ஆண்டைய தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு தொழிலாளர் நலன்கள் இந்த அரசினால் பாதுகாக்கப்பட்டுள்ளன.

    தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் காத்து வரும் திராவிட மாடல் அரசின் சார்பில் தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட என் நெஞ்சம் நிறைந்த "மே" தின நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • காணிக்கையாக செலுத்திய 300 ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • விழாக்குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அசைவ உணவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கோம்பையட்டிகிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், பழமை வாய்த்த பிரசித்தி பெற்ற பெரியதுரையான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள விநாயகர், கருப்பண்ணசாமி, மூலவர், நவகிரக சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக காணிக்கையாக செலுத்திய 300 ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் கோழிகளையும் பக்தர்கள் கருப்பண்ணசாமிக்கு பலியிட்டனர். இதைத்தொடர்ந்து அருகிலேயே ஆடுகள் உறிக்கப்பட்டு இறைச்சியாக்கப்பட்டது. கோழி இறைச்சியும் தயாரானது. அதன்பிறகு கோவில் வளாகத்திலேயே சமையல் செய்யும் பணியும் நடந்தது. இதற்காக விழாக்குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அசைவ உணவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அங்கு சாப்பாடு சமைக்கப்பட்டு மலை போல் குவித்து வைக்கப்பட்டது. ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி குழம்பும் தயாரானது. இதைத்தொடர்ந்து அன்னதானம் தொடங்கியது. மதியம் தொடங்கிய அன்னதானம் மாலை வரை நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து கோம்பைப்பட்டி பகுதியை சேர்ந்த துரைச்சாமி என்பவர் கூறுகையில், சித்திரை திருவிழா அன்று மழை வேண்டி 100க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்படும். இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது நேற்று மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் கோம்பைப்பட்டி பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்றார்.

    • 14 மாவட்டங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்யும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துவதால் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    குறிப்பாக வடதமிழக உள் மாவட்டங்களில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே வெப்ப அலை வீசி வருகிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் படிப்படியாக பெரும்பாலான மாவட்டங்களிலும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளிலும் வெப்பம் அதிகரித்தது.

    ஈரோடு, கரூர், சேலம், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது.

    தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் நேற்று பதிவானது.

    இந்த நிலையில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். வெப்ப அலையின் தாக்கம் வட உள் மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசை விட அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை கடுமையாக வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று முதல் 3-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட வெப்ப நிலை அதிகமாக இருக்கும். 109 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தக் கூடும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடலோரம் இல்லாத இந்த மாவட்டங்களில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இதனால் அசவுகரியமான சூழல் ஏற்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

    கோடை வெயிலின் தாக்கம் வருகிற 3 நாட்கள் கடுமையாக இருக்கும். இன்று வெப்ப அலை கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. மே 1 முதல் 3-ந்தேதி வரை வட உள் மாவட்டங்களில் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் இருக்கும். அதாவது இயல்பைவிட 5 செல்சியஸ் அதிகமாகக் கூடும். 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.

    மே 4-ந்தேதி முதல் கோடை மழை பெய்யக்கூடும். கடலோரப் பகுதிகள் தவிர வட மாவட்டங்கள் உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கோடை மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    கோடை மழை மே 2-வது வாரம் வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பெய்யக்கூடும் என்பதால் வெப்பத்தின் தாக்கம் குறையும். சென்னையில் 50 சதவீதம் தான் மழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடுமையான வெயிலால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.
    • அதிகபட்சமாக மாஞ்சோலையில் 32 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே கடுமையான வெப்ப அலை வீசி வருவதோடு வெயில் சுட்டெரிக்கிறது.

    இதனால் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பகல் நேரங்களில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைப் பகுதிகளில் நேற்று திடீரென கோடை மழை பெய்தது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 2 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 2.40 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    கடுமையான வெயிலால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 76 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 58 அடியாக குறைந்துவிட்டது. அந்த அணைக்கு வினாடிக்கு 59 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையில் 70 அடி நீர் இருப்பு உள்ளது. 22 அடி கொண்ட நம்பியாறு அணையின் நீர்மட்டம் 13 அடியாகவும், 52 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு நீர்மட்டம் 9 அடியாகவும் உள்ளது.

    மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று மதியத்திற்கு மேல் சுமார் 1 மணிநேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் அங்குள்ள தேயிலை தோட்டங்கள், சாலைகளில் தண்ணீர் ஓடியது. பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.

    கடந்த சில நாட்களாகவே அங்கு அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வரும் நிலையில் இந்த திடீர் மழையால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தற்போது கோடை விடுமுறையின் காரணமாக நெல்லை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் மணிமுத்தாறு அருவிக்கு படையெடுத்து வரும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் மாஞ்சோலைக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்கின்றனர்.

    நேற்று மாலையில் அதிகபட்சமாக மாஞ்சோலையில் 32 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. காக்காச்சியில் 23 மில்லிமீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 21 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 90.40 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • பவானி ஆற்றில் தண்ணீர் வற்றியதால் ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
    • தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ஆலாங்கொம்பு பகுதியில் காலை 6 மணியில் இருந்து போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சி மக்களுக்கு மூலையூர் குடிநீர்த் திட்டத்தின் மூலமும், ஜடையம்பாளையம் தனி குடிநீர்த் திட்டத்தின் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே திருப்பூர் 2-ஆவது கூட்டு குடிநீர்த் திட்டத்துக்காக கடந்த 2 மாதங்களாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடுப்பணை ஏற்படுத்தப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் மற்ற குடிநீர்த் திட்டங்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

    இதனிடையே பவானி ஆற்றில் தண்ணீர் வற்றியதால் ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. குடிநீர் வழங்காததைக் கண்டித்து ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஆலாங்கொம்பு, தண்ணீர்தடம், வீராசாமி நகர், காந்திபுரம், கோழிப்பண்ணை, சவுடேஸ்வரி நகர், பழையூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மேட்டுப்பாளையம்- சிறுமுகை சாலையில் ஆலாங்கொம்பு பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் திருப்பூர் 2-ஆவது குடிநீர் திட்டத்தில் மீதமாகும் 27 எம்.எல்.டி தண்ணீரில் 1 எம்.எல்.டி தண்ணீரை ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு வழங்க வேண்டுமென தெரிவித்தனர்.குடிநீர் வழங்கக்கோரி நள்ளிரவிலும் தொடர்ந்து பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ஆலாங்கொம்பு பகுதியில் காலை 6 மணியில் இருந்து போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ், காரமடை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் டி.கே.வி பழனிசாமி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனால் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் 2-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி வந்த வாகனங்கள் வெள்ளிக்குப்பம் பாளையம், குமரன் குன்று வழியாக திருப்பி விடப்பட்டன. இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை நோக்கி சென்ற வாகனங்கள் ஓடந்துறை வச்சினாம்பாளையம் வழியாக திருப்பி அனுப்பப்பட்டன.

    • இ-பாஸ் திட்டத்தின் மூலமாக உள்ளூர் வாகனங்களுக்கு நெருக்கடிகள் உருவாகும்.
    • உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்படும் சூழல் உள்ளது.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வருடத்தில், ஓரிரு மாதங்கள் மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் குவியும் இடங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகள் அம்மலைவாழ் மக்களின் பெரும் பொருளாதார நம்பிக்கையாக உள்ளது.

    ஆனால், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி அங்குச் செல்லும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள திட்டம் இப்பொழுது செயல்படுத்தப்பட்டால், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பி வாழக்கூடிய மக்கள் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாவர்கள்.

    இதனால் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திப்பார்கள். அது அவர்களுக்குப் பேரிழப்பாக அமையும். மேலும் இ-பாஸ் திட்டத்தின் மூலமாக உள்ளூர் வாகனங்களுக்கு நெருக்கடிகள் உருவாகும். இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்படும் சூழல் உள்ளது.

    ஆகவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து இந்த புதிய கட்டுப்பாட்டினை ரத்து செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இரு மலைத் தலங்களுக்கும் செல்லும் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தக் கூடுதல் காவலர்களை காவல்துறை பணியில் அமர்த்தி இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×