search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது
    X

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

    • நாடு முழுவதும் 102 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை என எச்சரிக்கை.

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19-ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது.

    நாடு முழுவதும் மொத்தம் 21 மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இந்த 102 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணியில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

    அ.தி.மு.க. தலைமையிலான அணியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

    பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா, அ.ம.மு.க., முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்குழு, புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே., தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் அனல் பறக்கும் பிரசாரம் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

    இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளநிலையில் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×