search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    • வாலிபர் மற்றும் இளம்பெண் ஹெல்மெட் அணியாமலும், விதிமுறைகளை மதிக்காமலும் மோட்டார்சைக்கிளில் வலம் வந்தது தெரியவந்தது.

    பெங்களூரு:

    பெங்களூரு விமான நிலைய ரோட்டில் விபத்துகளை தடுக்க வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலமாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விமான நிலைய ரோட்டில் உள்ள எலகங்கா மேம்பாலத்தில் கடந்த 17-ந்தேதி ஒரு வாலிபர் தன்னுடைய காதலியை மடியில் அமர வைத்து ஆபத்தான முறையில் எலகங்கா- ஹெப்பலை இணைக்கும் கொடிகேஹள்ளி மேம்பாலத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டி சென்றார். அதாவது பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்த இளம்பெண், தனது காதலனின் தொடை மீது ஏறி அமர்ந்து கட்டியணைத்தப்படி இருந்தார். இதனை வாலிபருக்கு பின்னால் வந்த ஒரு வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோ எடுத்திருந்தார்.

    அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி எலகங்கா போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் வந்தது. அந்த வாலிபர் மற்றும் இளம்பெண் ஹெல்மெட் அணியாமலும், விதிமுறைகளை மதிக்காமலும் மோட்டார்சைக்கிளில் வலம் வந்தது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளின் பதிவு எண் மற்றும் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

    விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் சாம்புரா எம்.வி.லே-அவுட்டை சேர்ந்த சிலம்பரசன் (வயது 21) என்பதும், வாடகை கார் டிரைவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 279 (அதிகமாக அல்லது அலட்சியமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 189 (பொது சாலையில் பந்தயம் அல்லது வேகமாக ஓட்டுதல்), மோட்டார் வாகன சட்டம் 177 போக்குவரத்து விதிகளை பின்பற்றாதது, வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாதது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

    • வெவ்வேறு சமுதாயம் என்பதால் 2 குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்தனர்.
    • திருமணம் செய்தால் பெற்றோர் சம்மதத்துடன் தான் செய்ய வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி பகுதியை சேர்ந்தவர்கள் மோகன்குமார் (வயது 52) மற்றும் சுதா (54). இவர்கள் இருவரும் சிறு வயதிலேயே கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தனர். பல போராட்டங்கள், இயக்கங்களில் பங்கேற்றனர்.

    கடந்த 2004- 2005-ம் ஆண்டு மைசூரில் முன்னாள் மந்திரி அப்துல் நசீர்சாப் நடத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் பயிற்சி மையத்தில் இருவரும் பயிற்சி பெற வந்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதை தங்களின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமுதாயம் என்பதால் 2 குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்தனர். திருமணம் செய்தால் பெற்றோர் சம்மதத்துடன் தான் செய்ய வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர். காலங்கள் உருண்டோடின. இருவருடைய பெற்றோருக்கும் வயதாகி விட்டது. தங்கள் பேரக்குழந்தையை பார்க்க முடியுமா? என ஏங்கினர். இதனால் அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து மோகன்குமார்- சுதா திருமணம் தரிகெரே அமிர்தபூரில் உள்ள அமிர்தேஸ்வரர் சாமி கோவிலில் நேற்று எளிய முறையில் நடந்தது. இதில் இரு தரப்பு பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். 20 ஆண்டுகளாக காத்திருந்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்த மோகன்குமார்-சுதா ஆகியோரை அனைவரும் வாழ்த்தினர். பெற்றோர் ஆசீர்வாதத்துடன் நடந்த திருமணம் அனைவருடைய மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • என்னை பொறுத்தவரை ஆட்டம் மாறியது டோனி அடித்த 110 மீட்டர் தூர சிக்சரால்தான்.
    • மைதானத்திற்கு வெளியில் பந்து சென்றதால் யாஷ் தயாள் வீசுவதற்கு புதிய பந்து கிடைத்தது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

    முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், போட்டி முடிந்ததும் வீரர்களின் ஓய்வறையில் தினேஷ் கார்த்திக் பேசியதாவது:

    இந்தப் போட்டியின் சிறப்பான விஷயமே எம்.எஸ்.டோனி அந்த பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்தது தான். அதனால்தான் நனைந்து ஊறிய பந்திற்கு பதிலாக புதிய பந்து கிடைத்தது. நன்றாக வீச முடிந்தது.

    பழைய பந்து ஈரமாக இருந்ததால், திட்டமிட்ட பகுதியில் பவுலிங் செய்ய முடியவில்லை. முதல் பந்திற்கு பின் யாஷ் தயாள் அசத்திவிட்டார். அப்படி ஒரு வெற்றியையும், கம்பேக்கையும் ஆர்சிபி அணி செய்துள்ளது.

    அகமதாபாத் மைதானத்தில் ஒரு பணி காத்திருக்கிறது. அதனை வென்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவோம் என தெரிவித்தார்.

    • 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
    • ஆட்ட நாயகன் விருதை கேப்டன் பாப் டூ பிளசிஸ் வென்றார்.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை கேப்டன் பாப் டூ பிளசிஸ் வென்றார்.

    இந்நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விஜய் மல்லையா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, மல்லையான எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதல் நான்கு இடங்களுக்குள் தகுதிபெற்று ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்.சி.பி. அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏமாற்றமளிக்கும் தொடக்கத்திற்குப் பிறகு சிறந்த உறுதியும் திறமையும் வெற்றிகரமான வேகத்தை உருவாக்கியுள்ளன. கோப்பையை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • முதலில் ஆடிய பெங்களூரு 218 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய சென்னை 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை யாஷ் தயாள் வீசினார். அதில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து தோனியின் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். கடைசி ஓவரில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது.

    இந்தப் போட்டியில் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அப்போது அவர் கூறியதாவது:

    லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. முதலாவதாக பேட் செய்ய நான் ஆடிய ஆடுகளங்களில் மிகவும் கடினமானதாக இந்த ஆடுகளம் இருந்தது. கடந்த 6 போட்டிகளாக எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். ஸ்ட்ரைக் ரேட்டும் சிறப்பாக இருந்தது.

    இலக்கு சற்று நெருக்கமாக இருந்தபோது தோனி களத்தில் இருந்தார். பலமுறை வெற்றிகரமாக அதை அவர் செய்துள்ளார் என எண்ணினேன். ஈரமான பந்தில் எங்களது பந்துவீச்சை மாற்ற முயற்சித்தோம். ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு வழங்க விரும்புகிறேன். அவர் பந்துவீசிய விதம் நம்ப முடியாததாக இருந்தது. அதற்கு அவர் தகுதியானவர்.

    கடைசி ஓவர் வீசுவதற்கு முன் பந்தில் அதிகம் பேஸ் வேண்டாம் என அவரிடம் சொன்னேன். அவரது திறனை நம்புமாறு சொன்னேன். முதல் பந்தில் யார்க்கர் முயற்சித்தார். அடுத்தடுத்த பந்துகளில் வேகத்தை மட்டுப்படுத்தினார். அது பலன் தந்தது.

    எங்களுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி. எங்களது முதல் இலக்கு நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைவது. இதை இந்த நேரத்தில் அனுபவிப்பது அவசியம் என தெரிவித்தார்.

    • விமானம் அவசரமாக பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
    • விமானத்தில் இருந்த 179 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 179 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நேற்று இரவு கொச்சி நோக்கி புறப்பட்டனர்.

    அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது பக்க எந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

    பின்னர் விமானத்தில் இருந்த 179 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • சென்னையைப் பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
    • நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

    பெங்களூரு:

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்து 7-வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளை எட்டியது. புள்ளிகளில் சம அளவில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

    சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வீரர் விராட்கோலி 47 ரன்கள் எடுத்தார். ஐ.பி.எல். தொடரில் இந்த மைதானத்தில் 89 ஆட்டங்களில் ஆடி இருக்கும் அவர் 3,005 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரே மைதானத்தில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    மேலும், விராட் கோலி 33 ரன்னை தொட்டபோது ஒட்டுமொத்த டி20 போட்டியில் இந்திய மண்ணில் 9,000 ரன் மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்திய மண்ணில் விராட் கோலி மொத்தம் 268 டி20 போட்டிகளில் ஆடி 9,014 ரன்கள் எடுத்துள்ளார்.

    நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 37 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    • சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச படம் வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. இந்த வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள பிரஜ்வலை கைது செய்ய சர்வதேச அளவில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பிரஜ்வல் ஆபாச வீடியோவை வெளியிட்டது தொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் பா.ஜ.க. பிரமுகர் வக்கீல் தேவராஜ கவுடா ஆகியோர் மீது சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தேவராஜ கவுடா கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஆபாச படங்கள் வெளியான இணையதளங்கள் குறித்த பட்டியலை சேகரித்து அவற்றை நீக்க சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த ஆபாச படங்கள் இருந்தால் அழிக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரஜ்வல் கர்நாடகாவில் யார், யாருடன் தொடர்பில் இருந்து வருகிறார் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில்,பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஐந்து முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஏற்கனவே ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • போட்டி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.

    இந்நிலையில், பெங்களூரு அணியின் ஜெர்ஸியில் இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிவராஜ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இன்னைக்கு ஜெயிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

    • ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90% வாய்ப்பு
    • மழையால் போட்டி ரத்தானால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

    இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உள்ள கேண்டீனில் வழங்கப்பட்ட உணவினால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாக 23 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து விரிவான நடத்த நடத்த வேண்டுமென்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கேன்டீனில் உள்ள உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்றும் 14 நாட்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சின்னசாமி மைதானத்தில் உள்ள கேண்டீனில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக பல புகார்கள் வந்ததாகவும், அதனால் தான் போட்டிக்கு முன்பே உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
    • டிரைவர், கண்டக்டர் மற்றும் 6 பயணிகள் காயம் அடைந்தனர்.

    கர்நாடகாவில் அரசு பேருந்து ஒன்று துமகுரு சாலையில் நெலமங்களா அருகே மதநாயக்கனஹள்ளி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூருவில் இருந்து சோம்வார்பேட்டைக்கு கர்நாடக அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 20 பயணிகள் பயணித்துள்ளனர்.

    துமகுரு சாலையில் நெலமங்களா அருகே மதநாயக்கனஹள்ளி என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் பஸ் சென்றுகொண்டிருந்த போது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் முட்டி விபத்துக்குள்ளானது.

    இதில் டிரைவர், கண்டக்டர் மற்றும் 6 பயணிகள் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நெலமங்களா போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஆபாச வீடியோக்களை வெளியிட 4 மந்திரிகள் குழுவாக செயல்பட்டனர்.
    • ரூ.100 கோடி கொடுப்பதாக என்னிடம் பேரம் பேசினார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச படங்களை வெளியிட்டதாக அவரது முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் மற்றும் பா.ஜனதா பிரமுகர் வக்கீல் தேவராஜ்கவுடா ஆகியோர் மீது சிறப்பு விசாரணைக்குழுவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் ஒரு பெண் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் பா.ஜனதா பிரமுகர் வக்கீல் தேவராஜ் கவுடா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நேற்று போலீசார் கோர்ட்டுக்கு கொண்டு சென்று ஆஜர்படுத்தி மீண்டும் சிறைக்கு கொண்டு வந்தனர்.

    அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்தபடி வக்கீல் தேவராஜ்கவுடா பரபரப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    ஆபாச வீடியோ வெளியானதில் மூளையாக செயல்பட்டதே கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் தான். ஆபாச வீடியோக்களை வெளியிட டி.கே.சிவக்குமார் தலைமையில் மந்திரிகள் கிருஷ்ண பைரேகவுடா, செலுவராயசாமி, பிரியங்க் கார்கே உள்பட 4 மந்திரிகள் குழுவாக செயல்பட்டனர்.

    ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை வெளியிட ரூ.100 கோடி கொடுப்பதாக என்னிடம் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமேகவுடா பேரம் பேசினார். மேலும் பவுரிங் கிளப்பில் ரூ.5 கோடி முன் பணமாக கொடுக்க வந்தனர். இதில் டி.கே.சிவக்குமாருக்கு தொடர்பு இருப்பதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

    ஆபாச வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக டி.கே.சிவக்குமார் என்னை அழைத்து பேசினார். அதில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் குமாரசாமியை குற்றம் சாட்டும் திட்டத்துடன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். மேலும் நான் குமாரசாமி மீது இந்த விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

    பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக்கிடம் பென் டிரைவ் பெறுவதற்கு டி.கே.சிவக்குமார்தான் காரணம். மேலும் பிரதமர் மோடிக்கு கெட்ட பெயர் கொண்டு வரவேண்டும் என்பதற்காக டி.கே.சிவக்குமார் சார்பில் என்னை அணுகி ரூ.100 கோடி பேரம் பேசினார்.

    டி.கே.சிவக்குமார் என்னிடம் பேசிய ஆடியோ உரையாடல் உள்ளது. நான் வெளியே வந்தால் என்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவேன். நான் வெளியே வந்தால் காங்கிரஸ் ஆட்சியே இருக்காது. இதனால் தான் என் மீது பொய்யான வழக்கை போட்டு சிறையில் வைத்துள்ளனர்.

    ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரதமர் மோடியின் பெயரை கலங்கப்படுத்த வேண்டும், குமாரசாமிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் டி.கே.சிவக்குமாரின் நோக்கம். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். காங்கிரஸ் ஆட்சி கண்டிப்பாக கூடிய விரைவில் கவிழும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×