வழிபாடு

'மதுர காளியம்மன்' பெயர்க்காரணம் என்ன?

Published On 2024-06-22 09:12 GMT   |   Update On 2024-06-22 09:12 GMT
  • அழகான முன் மண்டபத்தைக் கடந்து இடதுபுறம் திரும்பியதும் அன்னையின் கருவறையைக் காணலாம்.
  • அன்னையின் தலையில் அழகிய கிரீடம்.

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு தெற்குப் பகுதியில் சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது மதுர காளி அம்மன் ஆலயம். சென்னையில் இருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த கிராமம்.

அங்கு, இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் சூழலில் அன்னை மதுர காளியம்மன் அமர்ந்து அருளாட்சி புரிகிறாள்.

அன்னைக்கு நான்கு கரங்கள். இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அன்னையின் காலடியில் ஒரு சிம்மம் வாலை உயர்த்திக்கொண்டு பற்கள் எல்லாம் தெரிய கர்ஜித்த நிலையில் ஒரு காலைத் தூக்கி அறையக் காத்திருக்கிறது.

அன்னையின் தலையில் அழகிய கிரீடம். அன்னையின் முகத்தில் புன்னகை இல்லை. கண்களிலும் புன்னகையின் பிரதிபலிப்பைக் காண முடியவில்லை.

தல புராணம் :

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி.தன் கணவனுக்கு அநியாயமாக இழைக்கப்பட்ட கொடுமையை எண்ணி வெகுண்டு புயலாக மாறினாள். மன்னனிடம் தன் கணவன் கோவலன் குற்றமற்றவன் என நிரூபித்தாள். தவறு செய்த மன்னன் இறந்தான். அவள் கோபம் குறையவில்லை. மதுரையை தன் கற்பின் வலிமையால் எரித்தாள். அப்போதும் அவள் சினம் தீரவில்லை. இந்த கண்ணகியே சிறுவாச்சூர் மதுர காளியம்மன் என கோவில் புராணம் கூறுகிறது.

மன அமைதியை இழந்த கண்ணகி வடக்கு நோக்கி இரவு பகலாக நடக்கத் தொடங்கினாள். ஒருநாள் இரவு சிறுவாச்சூர் வந்தடைந்தாள். சிறுவாச்சூரின் வழிபாட்டு தெய்வம் செல்லியம்மன். அந்த ஊரில் இருந்த செல்லியம்மன் ஆலயத்தில் அன்றைய இரவை கழிக்க எண்ணிய கண்ணகி அந்த ஆலயத்தில் தங்கினாள். அவள் அங்கு தங்க வேண்டாம் என செல்லியம்மன் கூற, காரணம் கேட்டாள் கண்ணகி.

தன்னை ஒரு மந்திரவாதி ஆட்டிப்படைப்பதாகவும் அவன் வரும் நேரத்தில் கண்ணகி அங்கிருந்தால் அவளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனக் கூறினாள்.அந்த மந்திரவாதியை தான் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்த கண்ணகி, அன்று இரவு அங்கு தங்கினாள்.

செல்லியம்மன் சொன்னபடியே இரவு பெருத்த ஆரவாரத்துடன் கோவிலின் உள்ளே நுழைந்தான் மந்திரவாதி. அவனை வதம் செய்து, செல்லியம்மனைக் காப்பாற்றினாள் கண்ணகி.

தன்னை பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றிய கண்ணகியை அதே கோவிலில் நிரந்தரமாகத் தங்கும்படி கேட்டுக் கொண்ட செல்லியம்மன் தான் அருகில் உள்ள மலையில் வசிக்கும் தன் அண்ணனான பெரியசாமி கோவிலில் போய்த் தங்கிக் கொள்வதாகக் கூறினாள்.

சொன்னபடியே தனது கோவிலை கண்ணகியிடம் விட்டுவிட்டு மலைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டாள் செல்லியம்மன்.

மதுரையிலிருந்து வந்த கண்ணகியிடம் கோவிலை விட்டுச் சென்றதால் அது முதல் அந்தக் கோவில் மதுரை காளியம்மன் கோவில் என அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், அப்பெயர் மருவி 'மதுர காளியம்மன்' கோவில் ஆனது.

தன்னை வேண்டுபவர்களுக்கு மதுரமான (இனிமையான) பலன்களைத் தருவதால் இந்த அம்மனுக்கு மதுர காளியம்மன் என்ற பெயர் வெகு பொருத்தமே என பக்தர்கள் கூறுகின்றனர்.

சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுர காளியம்மன் பக்தர்களுக்கு திங்கட்கிழமை தான் காட்சி தருகிறாள். எனவே, இந்த ஆலயம் வாரத்தில் திங்கள், வெள்ளி என இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதுர காளியம்மன் செல்லியம்மனுடன் தங்குவதற்காக மலைக்கு சென்றுவிடுவதாக ஐதீகம். இந்த இரு நாட்கள் தவிர ஆலய சிறப்பு திருநாட்கள், திருவிழாக் காலங்களில் ஆலயம் திறந்திருக்கும்.

Tags:    

Similar News