என் மலர்
பெண்கள் உலகம்
- அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.
- விட்டமின் பி-12 ஊட்டச்சத்து சரியான அளவு உணவில் இருக்க வேண்டும்.
ஒரு பெண்ணின் வாழ்க்கையை முழுமை செய்யும் விஷயம் தாய்மைப்பேறு அடைவதாகும். குழந்தையை கருவில் தாங்கி அதை சீராக போற்றி வளர்த்து, பெற்றெடுத்து, சீரும் சிறப்புமாக வளர்க்கும் பொறுப்பு தாய்க்கே உரியது.
குழந்தைப்பேறுக்குப் பின்னர் உடலில் உள்ள காயங்களை ஆற்றும் வகையில் மஞ்சள் செயல்படுகிறது. மஞ்சளில் விட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் அடங்கியிருப்பதால் உடலின் உட்புற மற்றும் வெளிப்புற காயங்களை அது விரைவாக குணப்படுத்துவதோடு, உடல் வீக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வருகிறது. அதனால் ஒரு டம்ளர் பசும்பாலுடன் சிறிதளவு நல்ல மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.
குழந்தை பேற்றுக்குப்பின் பின்னர் தாயின் உடலில் பல்வேறு சத்துக்களின் இழப்பு ஏற்பட்டு, உடல் பலவீனமும் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டிய பெரும் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும். அதனால், அவர்களுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.
குழந்தை பெற்றெடுத்த பின்னர் தாயின் உடல் நிலையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. உடல் மற்றும் மனநிலையில் அந்த தாய் பல சிக்கல்களை சந்திக்கிறாள். அந்த சிக்கல்களை தாங்கும் அளவுக்கு அவள் தன்னை உடல் ரீதியாக தகுதியுள்ளவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று தாய்-சேய் நல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அந்த வகையில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்பது அந்த தாய்க்கு மட்டுமல்லாமல், குழந்தைக்கும் உடல் நலனை ஏற்படுத்தும். அத்துடன் பிரசவத்தால் ஏற்பட்ட உடல் வலி, காயங்கள் ஆகியவை விரைவில் குணமடையும் விதத்திலும் அந்த உணவு சத்துள்ளதாக இருக்க வேண்டும். தேவையான அளவிற்கு தாய்ப்பால் சுரக்க உதவுவதாகவும் அந்த உணவு அமைவதும் அவசியம்.
ஒரு நாளைக்கு 3 முதல் 4 அவுன்ஸ் புரதச்சத்து அடங்கிய உணவுகளை அந்த தாய் எடுத்துக் கொள்வது நல்லது. அத்துடன் 4 அல்லது 5 முறை பால் மற்றும் பால் பொருட்களை உண்ணலாம். அதன் மூலம் உடலுக்கு தேவைப்படும் புரதம், கால்சியம் ஆகியவை ஈடுகட்டப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன், முட்டை, பன்றி இறைச்சி, பருப்புகள், பல்வேறு விதைகள் ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
விட்டமின் பி-12 ஊட்டச்சத்து சரியான அளவு உணவில் இருக்க வேண்டும். அதன் மூலம் உடல் சோர்வு, எடை குறைதல், வாந்தி வருதல் ஆகிய சிக்கல்கள் விலகும். பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உடல் சோர்வை அகற்றும் விதமாக இரும்புச்சத்து, விட்டமின்-சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் தக்காளி, சிட்ரஸ் பழங்கள், உருளைக்கிழங்கு, பிரக்கோலி ஆகியவற்றை உண்ணலாம். அத்துடன் கீரை வகைகள், எள் சேர்த்த தின்பண்டங்களையும் உட்கொள்ளலாம்.
- மார்ச் 8-ந் தேதி ஒரு மாபெரும் பேரணியை பெண்கள் நடத்தினார்.
- பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக அறிவிப்பு
சர்வதேச பெண்கள் தினம் இந்த வாரம் (மார்ச் 8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த தினம் தோன்றியது, கொண்டாட்டத்தில் அல்ல, போராட்டத்தில்.
பெண்கள் தினத்துக்கும், அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷியப் புரட்சி இயக்கத்துக்கும் பங்கு உண்டு என்றால் ஆச்சரியமாக இருக்கும்.
1975-ம் ஆண்டுதான் இந்த நாளை சர்வதேச பெண்கள் தினமாக ஐ.நா. சபை அங்கீகரித்தது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது.

இந்த நாளின் வரலாறு தெரியுமா?
மார்ச் 8-ந் தேதி ஒரு மாபெரும் பேரணியை பெண்கள் நடத்தினார். வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தியும், வாக்களிக்கும் உரிமை கோரியும் சுமார் 15 ஆயிரம் உழைக்கும் பெண்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி.
இந்த நாளை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர். பெண்ணுரிமைப் போராளி கிளாரா ஜெட்கின்.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா, அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டனர்.
அதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
ஆனால் 1975-ம் ஆண்டில்தான் ஐ.நா. சபை, மார்ச் 8-ந் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது.
அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக் கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்துவருகிறது. இதன்படி ஐ.நா.சபை அறிவிப்புக்குப் பின் வந்த முதல் பெண்கள் தினத்தின் முழக்கம், 'சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு, மாற்றத்துக்காக புதுமை யாக சிந்தி.
சமூகம், அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது.
ஆனால், பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள்தான் இந்த நாளின் பின்னணியில் இருக்கின்றன .
முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது 1917-ஆண்டு, ரஷியாவில் போர் வேண் டாம். 'அமைதியும் ரொட்டியும்' தான் தேவை என்று வலியுறுத்தி மார்ச் 8-ந் தேதி பெண்கள் போராட்டத்தை தொடங்கினர். நான்குநாள்கள் நடந்த இந்த போராட்டம், சர்வ தேசமகளிர் தினம் என்ற கருத்துக்கு உறுதியான ஒரு வடிவத்தைக் கொடுத்தது.
நான்கு நாள்கள் நீடித்த இந்த போராட்டம் கடைசியில் ரஷிய மன்னரான ஜார், அரியணை துறப்பதற்கு காரணமாக அமைந்தது. மன்னராட்சி முடிவுக்கு வந்த நிலை யில், அதற்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம், பெண்களுக்கு வாக்குரிமையும் அளித்தது.
இந்த மாற்றம்தான், 1917-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த புகழ்பெற்ற ரஷியப் புரட்சிக்கு காரணமாக அமைந்தது. அப்படி புரட்சியின் பின்புலமாக இருந்த மகளிர் தினம், பெண்களின் பெருமை போற்றும் நாளாக உருவெடுத்துள்ளது.
- காற்றோட்டமான அறைகளுக்கு வாசனை ‘ஸ்ப்ரே’வைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.
- நாணல் எரிகருவியைப் படுக்கையறையில் பயன்படுத்துவதற்குச் சிறந்தது.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் புத்துணர்ச்சி மணம் கமழ, என்னென்ன வழிவகைகள் இருக்கின்றன என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்.
* மெழுகுவர்த்திகள்
வீட்டின் நறுமணத்துக்காக இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுபவை வாசனை மெழுகுவர்த்திகள்தாம். வாசனைப் பொருட்களில் மெழுகுவர்த்திகள் பிரபலமாக இருக்கின்றன. அவை வாசனையை அழகாக அறையில் பரவவைப்பதோடு, அறைக்கு புத்துணர்ச்சி தரும் வெளிச்சத்தையும் வழங்குவதுதான் அதற்குக் காரணம். வீட்டில் அதிகமான நேரத்தை எந்த அறையில் செலவிடுகிறோமோ, அந்த அறையில் வாசனை மெழுவர்த்திகளைப் பயன்படுத்துவது சிறந்தது.
வரவேற்பறை, சமையலறை ஆகிய இரண்டு அறைகளும் வாசனை மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவதற்குச் சிறந்தவை. நீண்ட நேரம் அறையில் வாசம் தங்க வேண்டுமென விரும்பினால், வாசனை மெழுகுவர்த்தியைக் குறைந்தது மூன்று மணி நேரமாவது எரியவிட வேண்டும். மெழுகுவர்த்தி உருக உருக அறையில் வாசனை பரவத் தொடங்கும். இந்த வாசனை மெழுகுவர்த்திகள் அறையை அலங்கரிக்கவும் சிறந்தவை.

* ஸ்ப்ரே
காற்றோட்டமான அறைகளுக்கு வாசனை 'ஸ்ப்ரே'வைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். உணவு, செல்லப்பிராணிகளின் வாசத்தைப் போக்குவதற்குச் சிறந்தது வாசனை 'ஸ்ப்ரே'. உடனடியாக, அறையின் வாசத்தை மாற்றுவதற்குச் சரியானது வாசனை 'ஸ்ப்ரே'தான். வாசனைப் பொருட்களைப் பொறுத்தவரை, அறையில் முதலில் ஸ்ப்ரேவைப் பயன்படுத்திய பிறகு, வாசனை மெழுகுவர்த்திகள், எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
* எண்ணெய் எரிகருவி
எண்ணெய் எரிகருவி (Oil Burner), சிறிய மெழுகுவர்த்தி பரப்புவான் (Tea light diffuser) ஆகிய இரண்டு வாசனைப் பொருட்களைப் பெரிய அறைகளில் பயன்படுத்தலாம். 10-15 நிமிடங்களில் அறையின் வாசத்தை அடியோடு மாற்றக்கூடிய இந்தச் சிறிய மெழுகுவர்த்திகள், வரவேற்பறையில் பயன்படுத்துவதற்கு உகந்தவை. ஆனால், இந்த எண்ணெய் எரிகருவியில் இருக்கும் எண்ணெய்யை அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கும். அறையின் அழகை மெருகேற்றுவதற்கும் இந்தச் சிறிய மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தலாம்.
* நாணல் எரிகருவி
கண்ணாடிக் குடுவையில் வைக்கப்படும் நாணல் எரிகருவி (Reed Diffuser) இயற்கை எண்ணெய்யை உறிஞ்சிய பிறகு, அதை அறையில் வாசமாகப் பரப்பும். சிறந்த நாணல் எரிகருவி, ஓர் அறையில் ஒரு மணி நேரம் வெளியிடும் வாசமானது பல நாட்களுக்கு நீடிக்கும். காற்றோட்டம் இருக்கும் இடத்தில் இதை அமைக்கும்போது இதன் வாசம் கூடுதலாக அறையில் நீடிக்கும். இந்த நாணல் எரிகருவியைப் படுக்கையறையில் பயன்படுத்துவதற்குச் சிறந்தது.
* காற்றோட்டம், வெளிச்சம் அவசியம்
நீங்கள் எப்படிப்பட்ட வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், அந்த இடத்தில் காற்றோட்டம், வெளிச்சம் இருக்க வேண்டியது அவசியம். எவ்வளவு சிறப்பான நறுமணப் பொருளாக இருந்தாலும், இயற்கையான வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லாத இடத்தில் பயன்படுத்தினால் எந்தப் பலனும் இருக்காது. அத்துடன், இந்த நறுமணப் பொருட்கள் அறையில் இருக்கும் கிருமிகளை அழிக்கவும் உதவும்.
- கர்ப்பத்தின்போது உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பு.
- நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது.
ஆபரேஷனுக்கு பிறகு 5 முதல் 10 ஆண்டுகள் கழித்து இடுப்பு வலி வருகிறது என்றால் அது இடுப்பு எலும்பு, குருத்தெலும்புகளின் தேய்மானம், அதிக உடல் எடை, கடின உழைப்பு, வயதுக்கு ஒவ்வாத உடற்பயிற்சிகள் போன்றவை கூட இடுப்பு வலியை ஏற்படுத்தலாம்.
கர்ப்பத்தின்போது உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பு. ஆனால் இந்த அதிகரிக்கும் உடல் எடை உங்கள் தோற்ற நிலையை மாற்றி முதுகு பக்கம் வளைந்து உங்களது வயிற்றுப்பகுதி தசைகளை வலுவிழந்ததாக ஆக்கிவிடுகிறது.

இதனால் உங்கள் இடுப்பெலும்புக்கும், குருத்தெலும்புக்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் உடலின் பின்பக்கமுள்ள தசைகளும், எலும்பு இணைப்புகளும் அதிக எடையினால், அதிக பளுவை பல மாதங்கள் சுமக்க நேரிடுகிறது.
பிரசவத்துக்குப் பிறகு சில பேருக்கு சில காலங்களுக்கு இடுப்பு வலி வந்து பின்பு பூரண குணமாகிவிடுகிறது. ஆனால் சில பேருக்கு இந்த இடுப்பு வலி ஓரிரு ஆண்டுகள் இருந்து பின் சரியாகிவிடுகிறது.
இடுப்பு தசைப்பிடிப்பு, தசை பிறழ்தல், ஜவ்வு இறுக்கம், குருத்தெலும்பு வரிசை சீராக இல்லாமலிருப்பது, கீல் வாத நோய், எலும்பு வலு இழப்பு நோய், மடங்காநிலை முதுகெலும்பு வீக்கம், விபத்து, சதைப்பிடிப்பு, இடுப்பு எலும்பைச் சுற்றியுள்ள தசைகள் பிறழ்தல், நீண்டு, கிழிந்து போதல் போன்றவைகளினாலும் இடுப்பு வலி ஏற்படலாம்.

அதிக எடை தூக்காமல் இருப்பது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல் அடிக்கடி எழுந்து நடப்பது, முறையாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது போன்றவற்றை கடைப்பிடித்து வருவது நல்லது.

மேலும் இடுப்பு வலி மறைய மருத்துவர் மற்றும் பிசியோதெரபி நிபுணர் ஆலோசனையின் பேரில் அவர்கள் அளிக்கும் மருத்துவம் மற்றும் உடல் இயக்க பயிற்சிகளை செய்வது பலன் தரும்.
- தினசரி காலை, மாலை இருவேளையும் ரோஜா எண்ணெய்யை உதடுகளில் பூசி வரலாம்.
- உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயரிக்கப்பட்ட ‘லிப் பாம்' பூசவும்.
சுற்றுச்சூழலில் உள்ள மாசு, பருவநிலை மாறுபாடு, ரசாயனங்களின் பயன்பாடு, உடலில் நீர்ச்சத்து குறைவது போன்ற பல்வேறு காரணங்களால் உதடுகள் வறட்சி அடைவது, உதட்டில் தோல் உரிவது போன்ற பாதிப்புகள் உண்டாகும். உதடுகள் மென்மையாகவும், பொலிவோடும் இருக்க அவற்றை தினசரி பராமரிப்பது அவசியமாகும். அதற்கான குறிப்புகள் இங்கே...
* உதடுகள் அதிகமாக கருமை அடைவது ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறியாகும். புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் கருமையை போக்க முடியும்.
* உதட்டுச்சாயம் பூசிய பிறகு அடிக்கடி கைகளால் உதடுகளை தொட்டுப்பார்ப்பதை தவிர்க்கவும். உதட்டுச் சாயத்தில் எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களும் இருக்காது. நீங்கள் உதடுகளை தொடும்போது கைகளில் உள்ள கிருமிகள் உதடுகளில் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும்.
* உதடுகள் வறட்சி அடையும்போது அடிக்கடி நாக்கினால் ஈரப்படுத்துவதைத் தவிர்க்கவும். உமிழ்நீர் உலர்ந்தவுடன் உதடுகள் மேலும் அதிகமாக வறட்சி அடையும். உமிழ்நீரில் உள்ள நொதிகள் உதடுகளின் மென்மையான தோலில் பாதிப்புகளை உண்டாக்கும்.
* தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றத்தோடு வைத்திருப்பதோடு, உதடுகளையும் ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.
* இரவு நேரத்தில் ஆழ்ந்து தூங்குவது முழு உடலுக்கும் தேவையான ஓய்வு அளித்து புத்துணர்ச்சியாக்கும். தூங்க செல்வதற்கு முன்பு உதடுகளில் பூசியுள்ள உதட்டுச்சாயத்தை நீக்குவது முக்கியமானது.
* உதடுகளை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க அவற்றில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும். இதற்கு இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மென்மையான லிப் ஸ்கிரப்பர்களை பயன்படுத்துவது நல்லது.
* தோல் உரிவதால் உதடுகளில் உண்டாகும் காயங்களை குணப்படுத்த தேன் மெழுகு உதவும். சிறிதளவு தேன் மெழுகை உதட்டில் சீராக பூசவும். அது உலர்ந்த பின்பு மீண்டும் ஒரு படலமாக தேன் மெழுகை பூசவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து அதைக்கொண்டு உதடுகளை சுத்தமாக துடைக்கவும். தேன் மெழுகில் உள்ள ஊட்டச்சத்துகள் உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைத்து, தோல் உரிவதால் ஏற்பட்ட காயங்களை எளிதில் குணமாக்கும்.
* தினசரி காலை, மாலை இருவேளையும் ரோஜா எண்ணெய்யை உதடுகளில் பூசி வரலாம். இது உதட்டில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்துவதோடு, உதடுகள் விரைவில் வறட்சி அடைவதில் இருந்து பாதுகாக்கும்.
* சிறிதளவு கோகோ, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து உதட்டில் பூசவும். இது கடினமான உதட்டின் தோலை மென்மையாக்கி, உதடுகள் வறட்சி அடைவதைத் தடுக்கும்.
* உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட 'லிப் பாம்' பூசவும். வெளியில் செல்லும்போது புறஊதாக்கதிர் தாக்கத்தை தடுக்கும் மூலக்கூறுகள் சேர்க்கப்பட்ட லிப் மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தவும்.
* உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயரிக்கப்பட்ட 'லிப் பாம்' பூசவும்.
- மாதவிடாய் சுழற்சியுடன் மாறிக்கொண்டே இருக்கும்.
- எண்டோமெட்ரியத்தின் தடிமனை சரிபார்க்க வேண்டியது அவசியம்.
எண்டோமெட்ரியம் என்பது பெண்ணின் கருப்பையின் உட்புற பகுதி ஆகும். ஒரு பெண்ணின் சாதாரண நாட்களில் இதன் வளர்ச்சி மாறிக்கொண்டே இருக்கும் உறுப்புகளில் இதுவும் ஒன்று.

ஒவ்வொரு மாதமும் இந்த எண்டோமெட்ரியல் லைனிங் மாதவிடாய் சுழற்சியுடன் மாறிக்கொண்டே இருக்கும். இது இனப்பெருக்க ஹார்மோன்களான புரோஸ்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் ஆகியவற்றுக்கு ஏற்ப அதன் தடிமன் மாறுபடும்.
சிலநேரங்களில் எண்டோமெட்ரியல் லைனிங் தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ இருக்கும் போது மாதவிடாய் காலங்களில் ஒழுங்கற்ற ரத்தப்போக்கு ஏற்படுகிறது.
எண்டோமெட்ரியத்தின் பயன்பாடு:
ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஆரோக்கியமான எண்டோமெட்ரியம் மிகவும் முக்கியமானது. வெற்றிகரமான கர்ப்பத்திற்கு இது மிகவும் மெல்லியதாகவோ அல்லது மிகவும் தடிமனாகவோ இருக்கக்கூடாது.
ஒரு வெற்றிகரமான கர்ப்பத்திற்கு, உங்கள் ஃபோலிகுலர் ஆய்வின் போது 7 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட எண்டோமெட்ரியல் தடிமன் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த அளவு தடிமன் கருவை உள்வைப்பதற்கும் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதற்கும் போதுமானதாக இருக்கும்.
எண்டோமெட்ரியத்தின் முதன்மை செயல்பாடு ஒரு பெண்ணின் இனப்பெருக்க நாட்களில் ஆகும்.

ஒரு பெண்ணின் ஃபலோபியன் குழாயிலிருந்து முட்டையை வெளியிடுவதற்கு சற்று முன்பு, எண்டோமெட்ரியத்தின் செயல்பாட்டு அடுக்கு குறிப்பிட்ட மாற்றங்களுக்கு உட்படுகிறது.
கருப்பையின் உட்புறப் புறணி தடிமனாகத் தொடங்குகிறது மற்றும் கருவை மற்றும் நஞ்சுக்கொடியை ஆதரிக்க தன்னை தயார்படுத்துகிறது.
மாதவிடாய் சுழற்சிக்கு பின்னர் கருத்தரித்தல் நடக்கவில்லை என்றால் இந்த எண்டோமெட்ரியல் லைனிங் மாதவிடாய் எனப்படும் செயல்பாட்டில் தன்னைத்தானே உதிர்த்துவிடும்.
எனவே எண்டோமெட்ரியத்தின் தடிமனை சரிபார்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் கருப்பையின் புறணி கர்ப்பத்தை ஏற்றுக்கொள்வதற்கு நுண்ணறை அளவுடன் பொருந்த வேண்டும்.
எண்டோமெட்ரியத்தின் தடிமன் மெல்லியதாக இருந்தால் அது கர்ப்பம் தரிக்க சாதகமாக இருக்காது.
- ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் சராசரியாக அருந்த வேண்டும்.
- பச்சைக் காய்கறிகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
டீன் ஏஜ் என்பது பல்வேறு ஹார்மோன் மாற்றங்களை கடந்து வருகிற பருவம். நம்முடைய உடலில் மட்டுமல்லாது, தோற்றத்திலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பருவம். சிலருக்கு பருக்கள் நிறைய வரும். சிலருக்கு வேறு சில சருமப் பிரச்சனைகள் உண்டாகும். இதுபோன்ற விஷயங்களைத் தவிர்த்து, சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள என்ன மாதிரியான விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
* ஆழ்ந்த உறக்கம்
நல்ல ஆரோக்கியமான சருமத்திற்கு நீங்கள் இரவில் சீக்கிரம் தூங்கச் செல்வது அவசியம். நல்ல தரமான தூக்கம் உங்களுக்கு முகப்பொலிவினைக் கொடுக்கும். அதேசமயம் அதிகாலையில் சீக்கிரமாக எழுவதும் அவசியம். ஒருவர் ஆரோக்கியமாக வாழ்வதற்கு குறைந்தது 8 மணி நேர தூக்கம் அவசியம் என்பது நாம் அறிந்ததே. இரவு நேரத்தில் தேவையில்லாமல் கண் விழித்து சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுவதை விட்டுவிட்டு நிம்மதியான உறக்கத்தை பெற்றால் உங்கள் சருமத்திற்கு எந்த விதமான கேடும் வராது.

* தண்ணீரும், முகப்பருவும்
ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் சராசரியாக அருந்த வேண்டும். நாம் குடிக்கும் தண்ணீர் உடலிலுள்ள அசுத்தங்களை சுத்திகரித்து வெளியேற்றுகிறது. அதனால் சரும அழுக்குகளும் வெளியேறி முகம் பொலிவாகக் காட்சியளிக்கும். போதுமான அளவு தண்ணீர் அருந்தாதபோது நமது உடலில் உள்ள அசுத்தங்கள் வெளியேறாமல் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது.
* சன் ஸ்கிரீன்
வெயில் காலம் மட்டுமல்ல, எல்லா காலத்துக்கும் சன் ஸ்கிரீன் மிக அவசியம். வீட்டை விட்டு வெளியே சென்றாலே மறக்காமல் செய்யக்கூடிய ஒரு விஷயம், சன் ஸ்கிரீனை உங்களுடன் எடுத்துச் செல்வதுதான். பருவ நிலைகளுக்கு ஏற்ப நல்ல தரமான சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுத்து பயன்படுத்தத் தொடங்குங்கள். இது சூரிய வெப்பத்தில் இருந்து மட்டுமல்ல, காற்று, மாசுக்கள் போன்றவற்றில் இருந்தும் உங்களுடைய சருமத்தைப் பாதுகாக்க உதவும்.
* ஆரோக்கிய டயட்
பச்சைக் காய்கறிகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சருமம் வறண்டு போகும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே இதுபோன்ற காலகட்டங்களில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அவை நீரேற்றத்துடன் வைத்திருக்கச் செய்வதோடு, சருமத்திற்கு கூடுதல் பொலிவும் சேர்க்கும்.
அதேபோல சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகள், சோடா ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, இயற்கையாக நமக்குக் கிடைக்கும் பழங்களை அப்படியே சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
காரணம்..?
டீன் ஏஜ் காலகட்டங்களில் இளைஞர்களுக்கு வரும் பருக்கள் மற்றும் சருமத் தடிப்புகள், கருந்திட்டுக்கள் போன்றவை நீண்ட நாட்கள் வரை சருமத்தில் அப்படியே நிலைத்திருக்கும். அந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு, சருமப் பிரச்சனைகளை வரும் முன்பே தடுப்பது தான் சிறந்த வழியாக இருக்கும்.
- சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும்.
- ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும்.
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாய்மை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் பல நேரங்களில் இந்த மகிழ்ச்சி எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. சில காரணங்களால் கர்ப்பம் தரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரோக்கியமான உடல் எடை
ஆரோக்கியமான உடல் எடை இல்லாமல் இருந்தால் அவை முட்டைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் கர்ப்பமடையும் சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக எடை கொண்ட பெண்கள் தான் குறிப்பாக கர்ப்பம் அடைய மிகவும் சிரமம் அடைகிறர்கள்.
அதேபோல் ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியமான உணவுமுறையுடன் தொடர்ந்து உடல் எடையை பராமரிக்கலாம்.

சரியான மாதவிடாய் சுழற்சி
சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும். உங்களின் அதிகபட்ச மாதவிடாய் நாட்கள் 3 நாட்கள் ஆகும்.
தைராய்டு பிரச்சனைகள்
தைராய்டு ஹார்மோன்களில், T3 மற்றும் T4 ஆகியவையே இனபெருக்கத்துடன் தொடர்புடையவை. உணவு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதம் ஆகியவற்றின் மீது இவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
தைராய்டு ஹார்மோன் சமநிலையற்று இருந்தால் கருத்தரிப்பதில் பிரச்சினைகள் ஏற்படலாம். கர்ப்பங்கள் மற்றும் கருச்சிதைவுகளுக்கு வழிவகுக்கும்.

பி.சி.ஓ.ஸ் பரிசோதனை
பி.சி.ஓ.எஸ் என்பது சினைப்பை நீர்க்கட்டி ஆகும். இதனால் ஹார்மோன் குறைபாடு, கருத்தரித்தலில் பிரச்சனை, மாதவிடாய் சுழற்சியில் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை கொண்டு வரும்.
பி.சி.ஒ.எஸ் இருந்தால் உங்கள் சினைப்பையில் சிறிது சிறிதாக நீர்கட்டிகள் உருவாகும். அப்படி நடந்தால் கருமுட்டை உருவாவதில் சிக்கல் ஏற்படும். இதனால் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படும். சரியான சிகிச்சை எடுப்பதன் மூலம் இதனை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.
ஹார்மோன் குறைபாடு
பெண்களின் ஹார்மோன் அளவுகளில் மிகக் குறைந்த அளவில் மாறுதல் ஏற்பட்டால் கூட எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
விந்தணுக்கள் பரிசோதனை
தம்பதிகள் கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கும்போது விந்து பகுப்பாய்வு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பகுப்பாய்வு குறைந்த விந்தணு எண்ணிக்கை அல்லது விந்தணு செயலிழப்பு கருவுறாமைக்கு காரணமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. மேலும் இந்த சோதனை செய்து கொள்வதன் மூலம் உங்கள் குறைகளை கண்டறிந்து அதனை சரிசெய்து விடலாம்.

ஃபோலிக் அமிலம்
கருவுற்ற முதலில் குழந்தையின் முதுகெலும்பு மூளை, மற்றும் நரம்புக் குழாய் போன்றவைகள் உருவாகும். அதற்கு இந்த ஃபோலிக் அமிலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நரம்புக் குழாய் குறைபாடுகளிலிருந்து குழந்தையின் அதிகபட்ச பாதுகாப்பிற்காக ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் சோதனை
நீங்கள் 35 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருந்து கர்ப்பத்தை திட்டமிட்டால், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். கர்ப்பம் தரிப்பதற்கு முன் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.

உடற்பயிற்சி
கர்ப்பம் தரிக்க செய்ய வேண்டியவை உடற்பயிற்சி செய்தல் தான். லேசானது முதல் மிதமான உடற்பயிற்சி மாதவிடாய் சுழற்சியை சரிசெய்து, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டத்தை சீராக்கும்.
- 40 வயதிலும் பல பெண்கள் கருவுற்றிருக்கிறார்கள்.
- குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி உள்ளது.
முதல் குழந்தைக்கு பிறகு உடனடியாக அடுத்த குழந்தையா அல்லது சில வருடங்கள் காத்திருக்க வேண்டுமா? நீண்ட வருடங்கள் ஆகிவிட்டால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி தம்பதிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதோடு உடல்நலம், பொருளாதார சூழ்நிலை போன்ற பல காரணங்கள் இதில் அடங்கும்.
ஆனால் 40 வயதிலும் பல பெண்கள் கருவுற்றிருக்கிறார்கள். சில பெண்களுக்கு குடும்ப அரவணைப்பு முழுமையாக கிடைக்கும் போது இரண்டு குழந்தைகளை வெற்றிகரமாக வளர்க்க முடியும்.
முதல் குழந்தைக்கு பிறகு மீண்டும் இரண்டாவது கர்ப்பம் தரிக்க விரும்பினால் பின்வரும் காரணங்களை கவனித்து முடிவு செய்யலாம்.

உடல் ஆரோக்கியம்:
முதல் கர்ப்பம் சிக்கல் இல்லாமல் ஆரோக்கியமானதா அல்லது சிக்கல் நிறைந்ததா என்பதை யோசிக்க வேண்டும். முதல் குழந்தைக்கு எடைகுறைப்பு, வேறு குறைபாடுகள் இருந்தால் 2-வது குழந்தைக்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் திட்டமிடலாம்.
வயது:
கருத்தரிக்க பெண்களின் வயது மிகவும் முக்கியம். 2-வது குழந்தை பெற்றுக்கொள்வதிலும் வயது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் பெண்கள் வளர வளர அவர்களின் மாதவிடாய் சுழற்சி முறையிலும், கருமுட்டை உற்பத்தி அடிப்படையிலும் மாற்றங்கள் ஏற்படும்.
மேலும் கருத்தரிக்க பெண்ணின் வயது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஆண்களின் வயதும் மிகவும் முக்கியம். ஏனென்றால் 35 வயதை கடந்தவுடன் ஆண்களுக்கு விந்தணுக்களின் தரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்.

திட்டமிடுதல்:
இன்றைய சூழலில் 2-வது குழந்தைக்கு திட்டமிடுவதற்கு நிதியும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் செலவுகள் இரட்டிப்பாகும். நீங்களும், உங்கள் துணையும் பொருள் ஈட்டினாலும் இரண்டு குழந்தைகளின் கல்வி, மருத்துவம் போன்ற இதர செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
கணவன் -மனைவி இருவரும் இணைந்து பரஸ்பரமாக ஒருவருக்கொருவர் பேசிய பிறகு இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கலாம். இல்லை என்றால் கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
குழந்தை பராமரிப்பு:
குழந்தையை பராமரிப்பதில் முதல் குழந்தைக்கு நேரத்தை ஒதுக்குவது மற்றும் குழந்தையை கவனிக்க குடும்ப உறுப்பினர்கள் உள்ளனரா என்பதையும் கவனிக்க வேண்டும். இல்லை என்றால் இரண்டு குழந்தைகளை பராமரிப்பதிலும் சிரமம் ஏற்படும்.
வயது இடைவெளி என்பது முதல் குழந்தைக்கும் 2-வது குழந்தைக்கும் இடையே உள்ள வயது இடைவெளியை கவனிக்க வேண்டும்.

பரிசோதனை:
முதல் குழந்தை சிசேரியனாக இருந்தால் குறைந்தது 2 வருடங்களாவது இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்க வேண்டும். ஏனெனில் சிசேரியனுக்கு பிறகு மருத்துவரின் அறிவுரையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வழக்கமான பரிசோதனையை கணவன் - மனைவி இருவரும் செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே இரும்புச்சத்து குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஏனெனில் பிரசவித்த பின்னர் ஏராளமான பெண்கள் ரத்த சோகை சிக்கலை சந்திக்கிறார்கள்.
- பெண்களுக்கு மெனரோஜியா என்னும் நிலை காரணமாக இருக்கலாம்.
- மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு கட்டிகளாக வெளியேறுவது.
ஒவ்வொரு பெண்ணும் தங்கள் மாதவிடாய்காலம் இயல்பானதாகத்தான் இருக்கிறதா அல்லது அதிக உதிரபோக்கை வெளியேற்றுகிறதா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் சராசரியாக 30 முதல் 40 மில்லி லிட்டர் வரை ரத்தத்தை இழக்கிறார்கள்.
உதிரபோக்கை சந்திக்கும் பெண்களுக்கு மெனரோஜியா என்னும் நிலை காரணமாக இருக்கலாம். இந்த நிலை பெண்ணுக்கு அதிக கனமான ரத்த போக்கை உண்டாக்குகிறது. இந்த அதிக உதிரபோக்கு இருக்கும் பெண்கள் இதை சமாளிக்க ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கூட நாப்கின், டேம்பன் மாற்றுகிறார்கள். சிலர் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 நாப்கின்கள் வரை மாற்றுகிறார்கள்.

அதிக ரத்தப்போக்கிற்கான அறிகுறிகள்:
* ஒரு பெண் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக நாப்கின் பயன்படுத்துவது. அல்லது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நாப்கீனை பயன்படுத்துவது.
* மாதவிடாய் நாட்கள் வழக்கத்தை விட அதிக நாட்கள் நீண்டு இருப்பது.
* மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு கட்டிகளாக வெளியேறுவது.
* அன்றாட பணிகளை செய்ய முடியாமல் வழக்கத்தை விட அதிக உடல் சோர்வு.

அதிக ரத்தப்போக்கிற்கான காரணங்கள்:
இளம் வயதில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, ஈஸ்ட்ரோஜெனுக்கும், புரோஸ்ட்ரோஜென்னுக்கும் இடையில் உண்டாகும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.
இளம் பருவத்தில் கருப்பை செயலிழப்பு, ஹார்மோன் பிரச்சனை போன்றவற்றால் அதிக உதிரப்போக்கை உண்டாக்குகிறது.
கருப்பை நோய் இருந்தாலும் அல்லது அதிக உடல் எடை கொண்டிருந்தாலும் அதிக ரத்தப்போக்கு உண்டாகலாம்.
மேலும் ஹைப்போதைராய்டிசம் தைராய்டு பிரச்சனைகள் இருந்தாலும் உதிரபோக்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
- ஆழ்ந்த தூக்கம் கட்டாயம் தேவை.
- வெந்நீர் அருந்துவதிலும் கவனம் வேண்டும்.
பெண்கள் தங்களின் ஸ்பெஷல் தினமான திருமண நாளில் தேவதை போன்று தோன்ற விரும்புவார்கள்.
மணப்பெண்ணுக்கு என்று விசேஷ அலங்காரம் உண்டு என்றாலும், எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து ஒப்பனை செய்து கொண்டாலும், அவர்களுக்குள் இருந்து வெளிப்படும் அழகுதான் கல்யாண நாளில் பிரகாசமாய் ஒளிரும்.
அந்த இயற்கையான பொலிவுக்கு, திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பே மணப்பெண் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தமது உணவுப் பழக்கங்களிலும் சில மாற்றங்களை செய்துகொள்வது, அவர்களது உடலும் முகமும் பொலிவு பெற உதவும்.
திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்து நாள் தோறும் குங்குமப்பூ, மஞ்சள் ஆகியவை கலந்த பாலை குடிப்பதால் முகத்தில் பளபளப்பு ஏற்படும். வெந்நீர் குடிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். ஒரு நாளுக்கு இரண்டரை லிட்டர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும். இளநீர், பழரசம் பருகலாம். இதனால் இயற்கையாகவே முகம் பொலிவு பெறத் தொடங்கும். அதேநேரம், துரித உணவுகள் உண்பதை அறவே தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.
மேலும், ஆழ்ந்த தூக்கம் கட்டாயம் தேவை. அதனால் நாள்தோறும் 8 மணி நேரத்துக்கு குறையாமல் தூங்க வேண்டும். சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது உடலின் ஆரோக்கியத்துக்கு அவசியமானது. ஆனால், எவ்வளவுதான் கவனமாக சாப்பிட்டாலும் மனஅழுத்தம் இருந்தால் அது முகத்தில் தெரியும். இதனால், அழகான முகத்தில் பருக்கள் கூட வரலாம். மனம் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், முகம் வாடிய மலரை போல மந்தமாக காணப்படும்.
மாறாக, நன்றாக தூங்கி, சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டால் மனஅழுத்தம் நீங்கும்.

வெந்நீர் அருந்துவதிலும் கவனம் வேண்டும். மிதமான சூடுள்ள வெந்நீரைத்தான் அருந்த வேண்டும். அதிக சூடான நீரை அருந்துவதால் உங்களுடைய முகத் தசைகள் தளர்ந்து, வயதான தோற்றம் ஏற்படலாம்.
மேற்கண்ட விஷயங்களுடன், மணப்பெண்ணாக போகிறவர், பின்வரும் விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும்...
சரியான உணவுப்பழக்கத்தை கொண்டிருப்பது மட்டும் போதாது. சரியான நேரத்துக்கு சாப்பிடுவதும் அவசியம். எப்போதும் உணவை சூடாக சாப்பிடுவது நல்லது. துரித உணவுகளை மறந்தும் உண்ணக்கூடாது. இப்படி ஆரோக்கியமான உணவுகளை உண்பதால் உடலில் நச்சுகள் சேராது, முகமும் பளபளப்பாக காணப்படும்.
நாள்தோறும் குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை வாக்கிங் செல்லலாம். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை 30 நிமிடங்கள் செய்வது உடலை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்க உதவும். மனஅழுத்தத்தை குறைத்து உடலை நல்ல வடிவத்துக்கு கொண்டு வரவும் உடற்பயிற்சிகள் உதவுகின்றன.
தேவையற்ற பிரச்சனைகளை மனதில் போட்டு குழப்பக் கூடாது. திருமணம் தொடர்பான விஷயங்கள், வேலைகளை குடும்பத்தினர் கவனித்துக்கொள்வார்கள் என்று விட்டுவிட்டு, மணப்பெண் தனது அழகு, ஆரோக்கியம், மனநலத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
நல்ல பழக்கங்களுடன், மனதை அமைதியாக வைத்திருக்கும்போது, மணமகளின் முகமும் நிலவு போல ஜொலிக்கத் தொடங்கும்.
- கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரத்தை முழுமையாகக் கவனிக்க வேண்டும்.
- நெரிசலான பகுதிக்கு செல்லும் போதெல்லாம் முககவசம் அணியுங்கள்.
HMPV நேரடியாக கர்ப்பத்திற்குத் தீங்கு விளைவிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், HMPV நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் கடுமையான சுவாச சிக்கல்களை அனுபவிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது தாயின் ஆரோக்கியம் மற்றும் கருவின் வளர்ச்சி இரண்டையும் பாதிக்கலாம். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் HMPV நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதுதவிர, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் அல்லது சில தீவிர நோய்களால் பாதிக்கப்படக்கூடியவர்களும் உள்ளனர். கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த அச்சம் ஏற்படலாம்.
HMPV வயிற்றில் உள்ள குழந்தையை எவ்வாறு பாதிக்கும்?
கர்ப்பிணிப் பெண்களுக்கு எப்போதுமே சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகம். உண்மையில், கர்ப்ப காலத்தில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது.
எனவே அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது மட்டுமின்றி, கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு HMPV இருந்தால், அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் HMPV இருப்பது கர்ப்பகால வயதிற்கு சிறிய குழந்தை பிறக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதுவரை போதிய ஆதாரங்கள் இல்லாததால், பெண்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

HMPV கர்ப்பத்தை எவ்வாறு பாதிக்கிறது?
HMPV காரணமாக, கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு சுவாச பிரச்சனைகள் இருக்கும். இந்த வகையான பிரச்சனை தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.
கர்ப்ப காலத்தில் தாய்க்கு HMPV இருந்தால், தாய்க்கு சுவாசிப்பதில் சிரமம் இருக்கும். குழந்தைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படலாம்.
HMPV காரணமாக, பிறக்கும் போது குழந்தையின் எடை குறைவாக இருக்கலாம் அல்லது அவரது உயரம் சாதாரண மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளை விட சிறியதாக இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் HMPVக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது நிமோனியா போன்ற தீவிர நோயாக மாறும்.
இதன் காரணமாக குறைப்பிரசவம், குழந்தையின் எடைக் குறைவான பிறப்பு மற்றும் குழந்தைக்கும் தொற்று ஏற்படும் அபாயம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

* HMPV ஐத் தவிர்க்க, கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரத்தை முழுமையாகக் கவனிக்க வேண்டும். எதையும் தொட்டவுடன் உங்கள் முகம் மற்றும் கண்களைத் தொடாதீர்கள்.
* HMPV தடுக்க, ஆல்கஹால் அல்லாத சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தப்படுத்தவும்.
* HMPV -ன் அறிகுறிகள் தோன்றினால், வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
* நீங்கள் நெரிசலான பகுதிக்கு செல்லும் போதெல்லாம், எப்போதும் முககவசம் அணியுங்கள்.
* கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி, தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.