என் மலர்
ஆசிரியர் தேர்வு
- அனைத்து வகையான தட்கல் முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய வசதி பொருந்தும்.
- 5 ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளது.
சென்னை:
நீண்டதூர பயணத்தை மேற்கொள்ளும் நபர்களின் முதல் தேர்வாக ரெயில் சேவை உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் பயணிப்போர் அதிகளவில் ரெயில்களிலேயே பயணிக்கின்றனர். ரெயில்களில் பயணம் செய்வோரில் 85 சதவீதம் பேர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து, ரெயில் டிக்கெட் முன்பதிவுகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க ஆதார் அட்டை இணைப்பு முறையை ரெயில்வே வாரியம் அமல்படுத்தியது.
இதேபோல, பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும் என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், மொபைல் செயலி மற்றும் ரெயில்வே கவுண்ட்டர் உட்பட அனைத்து வகையான தட்கல் முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய வசதி பொருந்தும். தட்கல் முன்பதிவுகளை உறுதிசெய்வதும், உண்மையான பயணிகளுக்கு தட்கல் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான சிறந்த அணுகலை வழங்கும் நோக்கத்துடன் இது கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது 5 ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து அகமதாபாத் செல்லும் நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12656), சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (12842), சென்னை எழும்பூரில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), சென்னை சென்டிரலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22160), ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158) ஆகிய 5 ரெயில்களில் கடந்த 23-ந்தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கடவுச்சொல் சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஆரவல்லி மலைத்தொடர் பூகம்பம், நில அரிப்பு, காலநிலை மாற்றங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும்.
- இங்கு புதிய சுரங்க பணிக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
புதுடெல்லி:
ஆரவல்லி மலை குஜராத், ராஜஸ்தான், அரியானா மற்றும் டெல்லி முழுவதும் பரவியுள்ளது. 34 மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீத பகுதியில் பரவியுள்ளது. புலிகள் காப்பகங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் உள்பட பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன.
மிகப் பெரிய பூகம்பங்கள், அரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் என அனைத்தையும் தாங்கி நிலைத்தும், உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகவும் உள்ளது இந்த மலைத்தொடர்.
இதற்கிடையே, ஆரவல்லி மலை தொடரின் மொத்த பரப்பளவான 1.44 லட்சம் சதுர கிலோமீட்டரில் 0.19 சதவீத பகுதிகளில் மட்டுமே சுரங்கப் பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளோம் என மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ் தெரிவித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக அரசு இயற்கை வளங்களை விற்று வருகின்றன என கண்டனம் தெரிவித்தன.
இதேபோல் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி புதிய நிலையான சுரங்கத் திட்டங்கள் தயாரிக்கப்படும் வரை, ஆரவல்லி மலைத்தொடரில் எந்தவொரு புதிய சுரங்கக் குத்தகைகளையும் வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
- சுவீடனைச் சேர்ந்த கிரெட்டா தன்பெர்க் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்காக அறியப்படுபவர்.
- பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கும் பதாகையை கைகளில் வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
லண்டன்:
இங்கிலாந்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீன ஆக்சன் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக கூறி அந்நாட்டு அரசு தடை செய்தது.
இதற்கிடையே, நாடு முழுவதும் நடந்த முந்தைய போராட்டங்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணைக்காக காத்திருக்கும் நிலையில், ஜாமீன் இன்றி தடுத்து வைக்கப்பட்டதைக் கண்டித்து பாலஸ்தீன ஆக்சன் அமைப்பைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் 52 நாட்களாக பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கும் பதாகையை கைகளில் வைத்திருந்ததற்காக கிரெட்டா தன்பெர்க் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
'பிரிசனர்ஸ் ஃபார் பாலஸ்தீன்' என்ற போராட்டக் குழுவானது கிரெட்டா பதாகை வைத்திருக்கும் புகைப்படத்தை ஊடகங்களில் பகிர்ந்தது.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரெட்டா தன்பெர்க் ஒரு இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர். காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்காக உலகம் முழுவதும் அறியப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒடிசா அணியின் ஸ்வஸ்திக் சமல் இரட்டை சதமடித்து 202 ரன்கள் எடுத்தார்.
- பீகார் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி 190 ரன் எடுத்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.
புதுடெல்லி:
இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் ஜனவரி 18-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.
நேற்று நடந்த பல்வேறு போட்டிகளில் நட்சத்திர வீரர்கள் உள்பட இளம் வீரர்களும் சதமடித்து அசத்தியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 22 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
பீகார் அணியின் சூர்யவன்ஷி 190 ரன்னும், சகிபுல் கனி 128 ரன்னும், ஆயுஷ் லோஹருகா 116 ரன்னும் அடித்தனர்.
ஒடிசா அணியின் ஸ்வஸ்திக் சமல் 202 ரன்னும், பிப்லாப் சமந்த்ரே 100 ரன்னும் எடுத்தனர்.
விதர்பா அணியின் துருவ் ஷோரே 136 ரன்னும், அமன் மோகடே 110 ரன்னும் எடுத்தனர்.
மேகாலயா அணியின் கிஷான் லிங்டோ 106 ரன்னும், அர்பித் படேவரா 104 ரன்னும் அடித்தனர்.
மும்பை அணியின் ரோகித் சர்மா 155 ரன்னும், கர்நாடகா அணியின் தேவ்தத் படிக்கல் 147 ரன்னும், சவுராஷ்டிரா அணியின் சம்மார் கஜ்ஜார் 132 ரன்னும் எடுத்தனர்.
டெல்லி அணியின் விராட் கோலி 131 ரன்னும், ஜம்மு காஷ்மீர் அணியின் ஷுபம் கஜுரியா 129 ரன்னும், அரியானா அணியின் ஹிமான்ஷு ரானா 126 ரன்னும் அடித்தனர்.
ஜார்க்கண்ட் அணியின் இஷான் கிஷன் 125 ரன்னும், ஆந்திரா அணியின் ரிக்கி புய் 122 ரன்னும் எடுத்தனர்.
ரயில்வேஸ் அணியின் ரவி சிங் 109 ரன்னும், கோவா அணியின் ஸ்நேஹல் கவுதன்கர் 107 ரன்னும், மத்திய பிரதேச அணியின் யாஷ் துபே 103 ரன்னும், கேரளா அணியின் விஷ்ணு வினோத் 102 ரன்னும், மணிப்பூர் அணியின் ஜோடின் பெய்ரோஜியாம் 101 ரன்னும் அடித்தனர்.
- இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
- இந்த திரைப்படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'பராசக்தி'. இந்தப் படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா முரளி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த படம் 'சென்சார் போர்டு' ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. படத்தில் சில காட்சிகளுக்கு 'சென்சார் போர்டு' எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை படக்குழுவினர் ஏற்க தயாராக இல்லை என்பதால் படம் தற்போது மறு தணிக்கைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
- அரசின் முடிவை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- 2024ம் ஆண்டு மட்டும் 1,693 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்த ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர். மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கும் படிப்படியாக பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் முடிவை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.2024ம் ஆண்டு மட்டும் 1,693 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் 4 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.14,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுவிட்டது என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
- டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.
- காற்று சுத்திகரிப்பான அவசியம் என்ற நிலையில் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் வசூலிப்பதாக மனு.
டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் காற்று சுத்திகரிப்பானை மருத்துவ உபகரணம் கீழ் கொண்டு வந்து, அதற்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அவசரமான சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியில் இருந்து காற்று சுத்திகரிப்பானுக்கு விலக்கு அளிக்காதது மகிழ்ச்சி அளிக்கவில்லை என தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.
மேலும், முன்னதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு, ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அத்துடன், கூட்டத்தை முன்னதாக கூட்டுவது குறித்து அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வருகிற 26-ந்தேதி (நாளை மறுதினம்) தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன் வெளியான டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர். திரைப்படத்தின் வெற்றியின் மூலம் பல ரசிகர் கூட்டத்தை இவர் உருவாக்கினார். இப்படத்தின் வெற்றியின் மூலம் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
கயாடு லோஹர் முதன் முதலில் கடந்த 2021 ஆம் ஆண்டு முகில்பெட் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கயாடு லோஹர் இதயம் முரளி மற்றும் STR 49 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை மாரியப்பன் சின்னா இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. படத்திற்கு இம்மார்டல் என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படம் ஒரு மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. படத்தின் இசையில் சாம் சி.எஸ் மேற்கொள்ள அருண்குமார் தனசேகரன் படத்தை தயாரிக்கிறார்.
ஜிவி பிரகாஷ் அவரது 25-வது படமான கிங்ஸ்டன் திரைப்படத்தை தொடர்ந்து இடிமுழக்கம், 13 மற்றும் பிளாக்மெயில் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இம்மார்ட்டல் படத்தின் திகிலூட்டும் டீசர் வெளியானது.
- உக்ரைன் பிராந்தியங்களை விட்டுக்கொடுக்க ஜெலன்ஸ்கி தொடர்ந்து மறுத்து வருகிறார்.
- மற்ற முக்கிய பிரச்சினைகளையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.
ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது. இந்த போர் தொடங்கி 4 வருடங்கள் முடிய உள்ளன. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க அதிகாரிகள் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
உக்ரைனின் சில பகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என ரஷிய அதிபர் உறுதியாக உள்ளார். அதேவேளையில் தங்களது நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க மாட்டோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார்.
இதனைத் தவிர்த்து பல்வேறு விசயங்கள் குறித்து உக்ரைனுடன் அமெரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளுக்கும் இடையில் பல பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
20 அம்சங்கள் கொண்டு திட்டத்தை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து மாரத்தான் பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. புளோரிடாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் அதிபர், ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். ரஷியா இது குறித்து இன்னும் பதில் ஏதும் அளிக்கவில்லை.
டான்பாசில் உள்ள மீதமுள்ள கைப்பற்றப்படாத பகுதிகளை உக்ரைன் விட்டுத்தர வேண்டும் என்பது ரஷியாவின் அதிகப்பட்ச கோரிக்கையாகும். இதை உக்ரைன் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. லுகான்ஸ்க் பிராந்தியத்தின் பெரும் பகுதியையும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் 70 சதவீத பகுதியையும் ரஷியா ஆக்கிரமித்துள்ளது.
- கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
- இந்த முறை கிரிக்கெட் வீரர்கள் யாரும் இதில் இடம் பெறவில்லை.
ஆண்டுதோறும் விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் வகையில் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது வழங்கப்பட்டு வருகிறது.
கேல் ரத்னா விருது என்பது இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதாகும். இது அதிகாரப்பூர்வமாக மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படுகிறது.
மற்றொரு விருதான அர்ஜுனா விருது என்பது இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் 2-வது உயரிய விருதாகும்.
இந்த விருது விளையாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. விருதுடன் ரூ.15 லட்சம் பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் அர்ஜுனா சிலை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் அர்ஜூனா விருதுக்கு தடகளம், ஹாக்கி, செஸ், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், பேட்மிண்டன், கபடி ஆகிய போட்டிகளில் சாதித்த 24 பேர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இல்லை.
மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா: ஹர்திக் சிங் (ஹாக்கி)
அர்ஜுனா விருதுகள்:
தேஜஸ்வின் சங்கர் (தடகளம்), பிரியங்கா (தடகளம்), நரேந்தர் (குத்துச்சண்டை), விதித் குஜ்ராத்தி (செஸ்), திவ்யா தேஷ்முக் (செஸ்), தனுஷ் ஸ்ரீகாந்த் (காதுகேளாதோர் துப்பாக்கி சுடுதல்), பிரணதி நாயக் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ராஜ்குமார் பால் (ஹாக்கி), சுர்ஜித்ரான்ஹோக்கி கண்டேல்வால் (பாரா-ஷூட்டிங்), ஏக்தா பியான் (பாரா தடகளம்), பத்மநாப் சிங் (போலோ), அரவிந்த் சிங் (ரோயிங்), அகில் ஷியோரன் (துப்பாக்கிச் சுடுதல்), மெஹுலி கோஷ் (துப்பாக்கிச் சுடுதல்), சுதிர்தா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), சோனம் மாலிக் (மல்யுத்தம்), டிமிண்டோன், அராட்டி கோபிசந்த் (பேட்மிண்டன்), லால்ரெம்சியாமி (ஹாக்கி), முகமது அப்சல் (தடகளம்), பூஜா (கபடி).
- அவரது நடிப்பில் வெளியான படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
- பிளாக் காபியில் நெய் கலந்து சாப்பிடும் யுக்தி, அவர் மூலமாகவே ‘டிரெண்ட்' ஆகி போயிருக்கிறது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சரத்குமார், 71 வயதிலும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார். '3 பி.எச்.கே.', 'டியூட்', 'கொம்புசீவி' என வரிசையாக அவரது நடிப்பில் வெளியான படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
நடிப்பு தாண்டி கட்டுடலுக்கும் சொந்தக்காரரான சரத்குமார், உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்கங்களை (டயட்) கடைபிடித்து உடலை பேணிக்காத்து வருகிறார். பிளாக் காபியில் நெய் கலந்து சாப்பிடும் யுக்தி, அவர் மூலமாகவே 'டிரெண்ட்' ஆகி போயிருக்கிறது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சரத்குமாரிடம் '71 வயதிலும் இப்படி உடற்கட்டுடன் இருக்க என்ன காரணம்?' என கேட்கப்பட்டது. அதற்கு, "71 வயதில் நான் இப்படி இருக்கிறேன் என்றால் நான் புகைப்பிடிப்பதில்லை, குடிப்பழக்கமும் கிடையாது. என்னிடம் நல்ல பழக்க வழக்கங்களே உள்ளன. அதுதான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்" என சரத்குமார் கூறியுள்ளார்.
- இந்த ஆண்டில் நடந்த நீட் தேர்வின் போது டெல்லியில் உள்ள சில மையங்களில் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டது.
- தேர்வரின் முக அடையாளம், புகைப்படம் உள்ளிட்டவை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.
புதுடெல்லி:
மருத்துவ மாணவர் சேர்க்கை, மத்திய அரசு அதிகாரி பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு, மருத்துவ பணியிடங்கள் உள்ளிட்டவற்றுக்கு நுழைவுத் தேர்வுகளும், எழுத்து தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற தேர்வுகளில் அடிக்கடி முறைகேடுகள் நடைபெறுகின்றன. வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்றவை முக்கிய பிரச்சனைகளாக உருவெடுத்துள்ளன.
ஆள்மாறாட்ட முறைகேடுகளை களைய 'பயோ மெட்ரிக்' சோதனை முறையை தேர்வு மையங்களில் அறிமுகப்படுத்த தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) திட்டமிட்டு உள்ளது. இந்த ஆண்டில் நடந்த நீட் தேர்வின் போது டெல்லியில் உள்ள சில மையங்களில் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டது. தேர்வரின் முக அடையாளம், புகைப்படம் உள்ளிட்டவை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.
இதில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்ததால், வருகிற 2026-ம் ஆண்டில் இருந்து முக்கிய நுழைவுத் தேர்வுகளில் முகம் சரிபார்க்கும் பயோ மெட்ரிக் சோதனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.






