என் மலர்tooltip icon

    டெல்லி

    • அனைவருக்கும் அமைதி, இரக்கம், நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
    • இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்,

    அனைவருக்கும் அமைதி, இரக்கம், நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கர்நாடகா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

    கர்நாடகா மாநிலத்தில் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    கர்நாடகா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உலகம் முழுவதும் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி, உற்சாகத்தின் பண்டிகை என ஜனாதிபதி முர்மு தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அத்துடன், புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியது.

    இந்நிலையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

    நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் பண்டிகை. அது அன்பு மற்றும் கருணையின் செய்தியை உலகிற்கு சொல்கிறது. மனித குலத்தின் நன்மைக்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தை கிறிஸ்துமஸ் நினைவுபடுத்துகிறது.

    இந்தப் புனிதமான பண்டிகை அமைதி, சமத்துவம், சமாதானம் மற்றும் சேவையின் மதிப்புகளை பறைசாற்றி, நம்மை ஊக்கப்படுத்துகிறது.

    இயேசு கிறிஸ்து நமக்கு காட்டிய பாதையைப் பின்பற்றி அன்பு மற்றும் பரஸ்பர சமாதானம் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்காக உழைக்க வேண்டும் என அனைவரும் உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.

    • ஒடிசா அணியின் ஸ்வஸ்திக் சமல் இரட்டை சதமடித்து 202 ரன்கள் எடுத்தார்.
    • பீகார் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி 190 ரன் எடுத்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் ஜனவரி 18-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.

    நேற்று நடந்த பல்வேறு போட்டிகளில் நட்சத்திர வீரர்கள் உள்பட இளம் வீரர்களும் சதமடித்து அசத்தியுள்ளனர்.

    நேற்று ஒரே நாளில் 22 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

    பீகார் அணியின் சூர்யவன்ஷி 190 ரன்னும், சகிபுல் கனி 128 ரன்னும், ஆயுஷ் லோஹருகா 116 ரன்னும் அடித்தனர்.

    ஒடிசா அணியின் ஸ்வஸ்திக் சமல் 202 ரன்னும், பிப்லாப் சமந்த்ரே 100 ரன்னும் எடுத்தனர்.

    விதர்பா அணியின் துருவ் ஷோரே 136 ரன்னும், அமன் மோகடே 110 ரன்னும் எடுத்தனர்.

    மேகாலயா அணியின் கிஷான் லிங்டோ 106 ரன்னும், அர்பித் படேவரா 104 ரன்னும் அடித்தனர்.

    மும்பை அணியின் ரோகித் சர்மா 155 ரன்னும், கர்நாடகா அணியின் தேவ்தத் படிக்கல் 147 ரன்னும், சவுராஷ்டிரா அணியின் சம்மார் கஜ்ஜார் 132 ரன்னும் எடுத்தனர்.

    டெல்லி அணியின் விராட் கோலி 131 ரன்னும், ஜம்மு காஷ்மீர் அணியின் ஷுபம் கஜுரியா 129 ரன்னும், அரியானா அணியின் ஹிமான்ஷு ரானா 126 ரன்னும் அடித்தனர்.

    ஜார்க்கண்ட் அணியின் இஷான் கிஷன் 125 ரன்னும், ஆந்திரா அணியின் ரிக்கி புய் 122 ரன்னும் எடுத்தனர்.

    ரயில்வேஸ் அணியின் ரவி சிங் 109 ரன்னும், கோவா அணியின் ஸ்நேஹல் கவுதன்கர் 107 ரன்னும், மத்திய பிரதேச அணியின் யாஷ் துபே 103 ரன்னும், கேரளா அணியின் விஷ்ணு வினோத் 102 ரன்னும், மணிப்பூர் அணியின் ஜோடின் பெய்ரோஜியாம் 101 ரன்னும் அடித்தனர்.

    • ஆரவல்லி மலைத்தொடர் பூகம்பம், நில அரிப்பு, காலநிலை மாற்றங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும்.
    • இங்கு புதிய சுரங்க பணிக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    புதுடெல்லி:

    ஆரவல்லி மலை குஜராத், ராஜஸ்தான், அரியானா மற்றும் டெல்லி முழுவதும் பரவியுள்ளது. 34 மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீத பகுதியில் பரவியுள்ளது. புலிகள் காப்பகங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் உள்பட பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன.

    மிகப் பெரிய பூகம்பங்கள், அரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் என அனைத்தையும் தாங்கி நிலைத்தும், உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகவும் உள்ளது இந்த மலைத்தொடர்.

    இதற்கிடையே, ஆரவல்லி மலை தொடரின் மொத்த பரப்பளவான 1.44 லட்சம் சதுர கிலோமீட்டரில் 0.19 சதவீத பகுதிகளில் மட்டுமே சுரங்கப் பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளோம் என மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ் தெரிவித்தார்.

    இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக அரசு இயற்கை வளங்களை விற்று வருகின்றன என கண்டனம் தெரிவித்தன.

    இதேபோல் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி புதிய நிலையான சுரங்கத் திட்டங்கள் தயாரிக்கப்படும் வரை, ஆரவல்லி மலைத்தொடரில் எந்தவொரு புதிய சுரங்கக் குத்தகைகளையும் வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    • 16 வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
    • 2019 ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    கடந்த 2017-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி உத்தர பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கை உ.பி.யில் இருந்து டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2019-ம் ஆண்டு எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இதற்கிடையே, குல்தீப் சிங் செங்கார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதற்கு பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயார் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவரை கையாளும் முறை இதுதானா?

    நீதிக்காக குரல் எழுப்பும் துணிச்சல் அவருக்கு இருப்பதுதான் அவருடைய குற்றமா?

    குறிப்பாக பாதிக்கப்பட்டவர் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டு பயத்தின் நிழலில் வாழ்ந்து வரும் குற்றவாளிக்கு ஜாமின் வழங்கப்பட்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. வெட்கக் கேடானது.

    பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்குவதும், பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்துவதும் என்ன வகையான நீதி.

    நாம் ஒரு இறந்த பொருளாதாரமாக மாறுவது மட்டுமல்லாமல், இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களால் ஒரு இறந்த சமூகமாகவும் மாறிக் கொண்டிருக்கிறோம்.

    மக்களாட்சியில் குரல் எழுப்புவது உரிமை, அதை ஒடுக்குவது குற்றம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என தெரிவித்தார்.

    • கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன.

    புதுடெல்லி:

    பாரி என்றால் கொட்டு முழக்கத்துடன் செய்யும் இரவுக் காவலைக் குறிக்கும். காட்டு விலங்குகளின் தொல்லைகளில் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக இரவில் காவல் இருக்கும் பண்டைய பழக்கமே பாரி வேட்டையாக நிலவுகிறது. பாரி வேட்டை தற்போது தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவாக நடைபெறுகிறது. மாசி மாதத்தில் சிவராத்திரிக்கு மறுநாள் பாரி வேட்டைக்குச் செல்வது வழக்கம்.

    இந்தப் பாரி வேட்டையை நினைவுபடுத்துவதுபோல் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.

    ஆபரேஷன் சிந்தூர் ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து இந்திய வரலாற்றில் முதன்முறையாக, மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை குறித்து இரண்டு பெண் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.


    பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

    இதுதொடர்பாக இந்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தான்மீது தாக்குதல் நடத்தியது குறித்து விவரித்தார்.

    அதன்பின், அவரைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, இந்திய விமானப் படையைச் சேர்ந்த விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது, முதலில் எந்த பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, என்ன நடந்தது, ராணுவம் என்ன செய்தது, விமானப்படை என்ன செய்தது என விரிவாக வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தனர்.

    இதனால் கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இணைய தளங்களிலும் இருவரும் வைரலாகினர்.

    யார் இந்த சோபியா குரேஷி?

    கர்னல் சோபியா குரேஷி குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தின் சிக்னல்ஸ் படைப்பிரிவு அதிகாரியான கர்னல் சோபியா குரேஷி, வலுவான ராணுவப் பின்னணியை கொண்டவர். ஐ.நா. அமைதிப் பணிக்கான இந்தியப் படைக்கு தலைமையேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமைக்கு உரியவர். புனேவில் நடந்த பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவப் பிரிவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி.


    பயோகெமிஸ்ட்ரி முதுகலை பட்டதாரியான இவர் கடந்த 1999-ல் அதிகாரிகள் பயிற்சி அகாடமி மூலம் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வுகள் பெற்றார்.

    யார் இந்த வியோமிகா சிங்?

    'வியோமிகா' என்ற அவரது பெயரின் அர்த்தம் 'வானத்தில் வசிப்பவள்' என்பது. தனது 6 ஆம் வகுப்பு முதலே விமானப் படையில் சேரும் ஆர்வம் கொண்டவர். விமானப் படையில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்பதில் வியோமிகா தீர்மானமாக இருந்தார்.

    இந்திய விமானப் படையில் கடந்த 2019 டிசம்பர் 18-ம் தேதி விமானியாக சேர்ந்தார். இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் உயரமான மற்றும் மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் சேட்டக், சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளார். 2500-க்கும் மேற்பட்ட மணி நேரங்களை பறக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளார். மேலும் பல்வேறு மீட்புப் பணிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

    பெண்களை சக்தியாகக் கொண்டாடும் நாடு இந்தியா என்பதை நிரூபிக்கும் வகையில், மகாசக்திகளாக தலைமை தாங்கி விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் பாகிஸ்தானில் நடத்திய ஆக்ரோஷ தாக்குதல் உலகையே வியக்க வைத்துள்ளது.

    எனவே தான் சோபியா குரேஷியும் வியோமிகா சிங்கும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு அதிகளவு பேசப்பட்டு வருகின்றனர்.

    • மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தல்.
    • மசோதாவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்புதல்.

    2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மாநில ஆளுநர்களின் மசோதா அதிகாரம் மற்றும் அவர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

    இந்த தீர்ப்பில் சட்டப்பிரிவு 200க்கின் கீழ் ஆளுநருக்கான வாய்ப்புகள் குறித்து கூறப்பட்டது. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


    மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தல். இதில், மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தல். மசோதாவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்புதல் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் அவற்றை நீண்ட காலம் கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று நீதிமன்றம் கண்டித்துள்ளது.

    ஒரு மாநிலத்தில் ஆளுநர் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என இரண்டு தனித்தனி அதிகார மையங்கள் இருக்க முடியாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே இறுதி அதிகாரம் உள்ளது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க நிச்சயமான காலக்கெடுவை நீதிமன்றம் விதிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவ்வாறு காலக்கெடு நிர்ணயிப்பது ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனக் கோட்பாடுகளுக்கு எதிரானது என நீதிபதிகள் தெரிவித்தனர். 

    ஆளுநர் ஒரு மசோதா மீது எந்தக் காரணமும் இன்றி நீண்ட காலம் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தினால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்று இந்தத் தீர்ப்பு அனுமதி அளித்துள்ளது.

    ஆளுநரின் கையொப்பம் அல்லது ஒப்புதல் இல்லாமல், மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய ஒரு மசோதா நடைமுறைக்கு வந்த சட்டமாகக் கருதப்படாது என்பதையும் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

    இந்தத் தீர்ப்பு, மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மசோதாக்கள் தொடர்பாக நிலவி வந்த நீண்ட கால மோதல்களுக்கு ஒரு சட்டரீதியான தீர்வை வழங்கியுள்ளது.

    • டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.
    • காற்று சுத்திகரிப்பான அவசியம் என்ற நிலையில் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் வசூலிப்பதாக மனு.

    டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் காற்று சுத்திகரிப்பானை மருத்துவ உபகரணம் கீழ் கொண்டு வந்து, அதற்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அவசரமான சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியில் இருந்து காற்று சுத்திகரிப்பானுக்கு விலக்கு அளிக்காதது மகிழ்ச்சி அளிக்கவில்லை என தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.

    மேலும், முன்னதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு, ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அத்துடன், கூட்டத்தை முன்னதாக கூட்டுவது குறித்து அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வருகிற 26-ந்தேதி (நாளை மறுதினம்) தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    • ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
    • இந்தி கற்கவில்லை என்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் என பாஜக கவுன்சிலர் மிரட்டினார்.

    டெல்லியில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில், உள்ளூர் குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார். அவர் அதற்கு பதிலளிக்காததால், நான் சொல்வதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை? ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்.

    இல்லையென்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இங்கே பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், இந்தியும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்" எனப் பேசியுள்ளார். மேலும் மற்றொருவரிடம் (பூங்கா காவலாளியா என்பது சரியாக தெரியவில்லை) நான் உங்களுக்குச் சொல்கிறேன், பூங்கா இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும். இல்லையெனில் ஏதேனும் குற்றச் செயல் நடந்தால், நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்,.

    இந்த வீடியோ வைரலாக ரேணு சவுத்ரிக்கு பெரும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து வீடியோ தொடர்பாக விளக்கமளித்த அவர், பூங்காவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் தொடர்பாக தனக்குப் பலமுறை புகார் வந்தது. அதனால்தான் தான் பூங்காவிற்கு வருகை தந்தேன். ஆனால், யாரையும் அச்சுறுத்தும் நோக்கம் தனக்கு இல்லை. தகவல்தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்" என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, பாஜக மேலிடத்தின் வற்புறுத்தலின் பேரில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். 


    • ஜெர்மனிக்கு 42 ஆயிரத்து 997 இந்திய மாணவர்கள் சென்றனர்.
    • வெளிநாடுகளில் அதிக அளவில் படிப்பவர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் 'நிதி ஆயோக்' அமைப்பு, இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி படிப்பது குறித்து ஒரு அறிக்கை தயாரித்துள்ளது.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த ஆண்டு, இந்திய மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்விக்காக சென்ற நாடுகளில் கனடா முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 4 லட்சத்து 27 ஆயிரம் இந்திய மாணவர்கள் சென்றனர்.

    அடுத்த இடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு 3 லட்சத்து 37 ஆயிரத்து 630 மாணவர்கள் சென்றனர். இங்கிலாந்துக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் மாணவர்களும், ஆஸ்திரேலியாவுக்கு 1 லட்சத்து 22 ஆயிரத்து 202 மாணவர்களும் சென்றனர். ஜெர்மனிக்கு 42 ஆயிரத்து 997 இந்திய மாணவர்கள் சென்றனர். இதற்காக இந்திய மாணவர்கள் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கோடி செலவிட்டனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு நிலவரப்படி, வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களில் ஆந்திராவை சேர்ந்தவர்கள்தான் அதிகம். அவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 614 ஆகும். பஞ்சாப், மராட்டியம் மாநில மாணவர்கள் அடுத்த இடங்களில் உள்ளனர்.

    வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்காக இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பணத்தின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.975 கோடியில் இருந்து ரூ.29 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

    அதுபோல், வெளிநாடுகளில் அதிக அளவில் படிப்பவர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவை சேர்ந்த 13 லட்சத்து 35 ஆயிரம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகிறார்கள். உயர்கல்வி படிக்கும் வயதினரை (18 முதல் 23 வயது வரை) அதிகமாக கொண்ட நாடும் இந்தியா ஆகும். இங்கு அந்த வயதில் 15 கோடியே 50 லட்சம் பேர் உள்ளனர்.

    கடந்த ஆண்டு, ஒரு வெளிநாட்டு மாணவர் உயர்கல்வி படிக்க இந்தியா வந்தார் என்றால், பதிலுக்கு 28 இந்திய மாணவர்கள் உயர்கல்வி படிக்க வெளிநாடு சென்றனர். எனவே, இங்கிருந்து வெளிநாடு செல்பவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.

    கடந்த 2021-2022 ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் நேபாளம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேற்கு வங்காள மாநிலத்துக்கு மட்டும் இன்னும் தீர்க்கப்படவில்லை.
    • 2024-2025-ம் நிதியாண்டில், ஊதியக்கூறுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5,984.03 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மாற்றி புதிய திட்டத்தை 125 வேலை நாட்களுடன் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகள் கடுமையான நடந்து கொண்டன. மசோதாவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிழித்து எறிந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

    ஆனாலும் ஆளும் கட்சி கூட்டணி எம்.பி.க்கள் ஆதரவோடு அதனை நிறைவேற்றிவிட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலும் அளித்து விட்டார். விரைவில் அது சட்டமாக இருக்கிறது.

    இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பல மாநிலங்களுக்கு மத்திய அரசு இன்னும் நிதி பாக்கி வைத்திருப்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டுக்கும் நிதி பாக்கி உள்ளது.

    இது தொடர்பான விவரங்கள் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் கேட்ட கேள்விகள் மூலம் பதிலாக கிடைத்து உள்ளன.

    அந்த எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை மந்திரி கமலேஷ் பஸ்வான் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும், முந்தைய ஆண்டுகளின் ஏற்கத்தக்க நிலுவை பொறுப்புகள் ஏதேனும் இருந்தால், அவை மத்திய அரசாங்கத்தால் முறையாக ஈடு செய்யப்படுகின்றன.

    அதன்படி, 2024-2025 நிதியாண்டு வரையில் செலுத்தப்பட வேண்டிய மற்றும் ஏற்கத்தக்க அனைத்து நிலுவை ஊதிய பொறுப்புகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டன. மேற்கு வங்காள மாநிலத்துக்கு மட்டும் இன்னும் தீர்க்கப்படவில்லை.

    2024-2025-ம் நிதியாண்டில், ஊதியக்கூறுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5,984.03 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. 2025-2026 நடப்பு நிதியாண்டில் (11-12-2025 நிலவரப்படி), தமிழ்நாட்டுக்கு ரூ.6,497.06 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் ஊதியக் கூறுக்காக ரூ.5,836.20 கோடியும், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ரூ.660.86 கோடியும் வழங்கப்பட்டு உள்ளது.

    10-12-2025 நிலவரப்படி, தமிழ்நாட்டுக்கு ஊதியப்பணம் தொடர்பான மொத்த நிலுவைத்தொகை ரூ.304.80 கோடி ஆகும். மேலும், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.622.21 கோடியாக உள்ளது. நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்ட இந்த நிலுவைத் தொகையை மாநிலத்துக்கு விடுவிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

    இவ்வாறு மந்திரி பதில் தெரிவித்து உள்ளார்.

    ×