என் மலர்
பொது மருத்துவம்
- எல்லா வகை பிஸ்கெட்டுகளிலும் சர்க்கரை அளவு அதிகமாகத் தான் இருக்கும்.
- நேரம் கெட்ட நேரத்தில் பசியை தூண்டிவிடும்.
அதிகாலையில் பசித்தால், அவசரத்துக்கு பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அதுவே பழக்கமாகிவிடக் கூடாது. சிலபேர் காலையில் காபியுடன் ஒன்று அல்லது இரண்டு பிஸ்கெட் சாப்பிடுவார்கள். பரவாயில்லை. ஆனால் சிலபேர் ஒரு பாக்கெட் பிஸ்கெட்டையே காலி பண்ணிவிடுவார்கள். அது மிகப்பெரிய தவறு.

பிஸ்கெட்டில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துப் பொருட்கள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். அநேகமாக எல்லா வகை பிஸ்கெட்டுகளிலும் சர்க்கரை அளவு அதிகமாகத் தான் இருக்கும்.
உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும். தினமும் தொடர்ந்து பிஸ்கெட் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலை உண்டுபண்ணிவிடும். நேரம் கெட்ட நேரத்தில் பசியை தூண்டிவிடும்.
பிஸ்கெட்டில் அதிக கலோரி இருப்பதால் தினமும் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடையை கூட்டிவிடும். பிஸ்கெட்டில் 'ட்ரான்ஸ்ஃபேட்' என்று சொல்லக்கூடிய மாறுபட்ட கொழுப்பு இருக்கும். இந்த மாறுபட்ட கொழுப்பு தீய கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகமாக்கியும் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்தும்விடும்.

அதிக கலோரி, அதிக மாவுச்சத்து, அதிக கொழுப்பு, அதிக அளவில் சோடியம் உப்பு, அதிக சர்க்கரை ஆகியவை இருப்பதால் அன்றாடம் பிஸ்கெட் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன், அஜீரணம், மந்தம், மலச்சிக்கல், சில சமயங்களில் இதயக் கோளாறைக் கூட உண்டுபண்ணிவிடும்.
வைட்டமின் சத்து இல்லாத, சத்துப் பொருட்கள் இல்லாத, நார்ச்சத்து இல்லாத சில பிஸ்கெட்டுகளை தவிர்ப்பது நல்லது. ஆனால் பார்த்தவுடனே சாப்பிடத் தூண்டும் சில அழகழகான, கவர்ச்சியான, ருசியான பிஸ்கெட்டுகளை வேண்டாம் என்று யார் சொல்வார்கள்?
அனைத்து உலக மக்களும் விரும்பி சாப்பிடும் ஒரே உணவாகிய பிஸ்கெட்டை எப்பொழுதாவது சாப்பிடுங்கள். வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம். இரவு நேரங்களில் பசிக்கும் போதும் சரி, ரத்த சர்க்கரை அளவு குறைந்துவிட்ட போதும் சரி பயணங்களின் போதும் சரி சாப்பிட உணவே கிடைக்காத இடத்தில் சிக்கி அவஸ்தைப்படும்போதும் சரி பிஸ்கெட் மாதிரி ஒரு சிறப்பான உணவு வேறெதுவும் இல்லை.
- பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் ஆகும்.
- தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும்.
பித்தப்பை என்பது கல்லீரலுக்கு கீழே பித்த நீர் சேமிக்கப்படும் ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். பித்த நீரில் உள்ள கொலஸ்ட்ரால், பிலுருபின் மற்றும் பித்த உப்புகள் கெட்டியாகும் போது பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.

பொதுவாக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது பித்த நீர் பித்த நாளம் வழியாக குடலுக்குள் சென்று செரிமானத்திற்கு உதவி புரிகிறது. இந்தியாவில் பித்தப்பை கற்கள் நோயினால் 4 முதல் 9 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களை விட பெண்களுக்கு இது அதிகம் ஏற்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் ஆகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பித்தப்பை கற்கள் ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணிகளாகும்:
உடல் பருமன், கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் அதிக அளவு டிரைகிளிசரைட் மற்றும் கொலஸ்ட்ரால், கூடுதலாக உள்ள குடல் மற்றும் கல்லீரல் நோய்கள், தன்னியக்க நரம்பியல் குறைபாடு, குடல் அசைவின்மை, உட்கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் மரபணு காரணங்கள்.
பித்தப்பை கற்கள் பெரும்பாலும் தற்செயலாகக் கண்டறியப்படுகிறது. இவை அறிகுறிகளை ஏற்படுத்தினால் மட்டுமே அதற்கான சிகிச்சை அவசியம்.
வலியற்ற, பக்கவிளைவுகள் இல்லாத பித்தப்பை கற்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய தேவையில்லை. பித்தப்பை கற்களை கரைக்க மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை பயன்படுத்தலாம். இம்முயற்சி பலன் அளிக்காவிடில் பித்தப்பையை அகற்றஅறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பித்தப்பை கற்களை தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும், பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவு முறை பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
கொழுப்பு மற்றும் எண்ணெய்யில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி விரதம் இருத்தல் கூடாது. ஏனெனில் விரதம் இருப்பது பித்தப்பை இயக்கத்தைக் குறைப்பதால், பித்த நீரில் கொழுப்பு அதிகமாக செரிவூட்டப்பட்டு கற்கள் உருவாக வழிவகுக்கிறது. புகை பழக்கம் மற்றும் மது பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். பதப்படுத்தபட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
- உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன.
- ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா 10 லட்சம் நெப்ரான்கள் ரத்த நுண் சுத்திகரிப்பான்கள் உள்ளன.
கோடை வெயில் தீவிரமடைந்து வருகிறது. எனவே பகல் வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கோடை வெயிலில் அலைந்தால் சின்னம்மை, உயர் ரத்த அழுத்தம், நீர்ச்சத்து இழப்பு, சரும பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்படும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். பொது நல மருத்துவ நிபுணர் டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது:-
உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா 10 லட்சம் நெப்ரான்கள் ரத்த நுண் சுத்திகரிப்பான்கள் உள்ளன.
அங்கிருந்து உருவாகும் கழிவுகள் யூரிடர் எனப்படும் குழாய்கள் மூலம் சிறுநீர்ப் பையில் சேருகின்றன. அவை யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறுநீராக வெளியேறுகிறது. இந்தக் கட்டமைப்பைத்தான் சிறுநீர்ப்பாதை என அழைக்கிறோம்.
இதில் ஏதேனும் கிருமித்தொற்று ஏற்படும்போது சிறுநீர் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும்.
இதை அலட்சியப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களைத் தாக்கி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கோடைக் காலத்தில் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாவிடில் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சமீப காலமாக அத்தகைய பிரச்சனைகள் பலருக்கு ஏற்படுகிறது. அதிலும், பெண்களில் பலர் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவர்களில் பெரும்பாலானோருக்கு கிருமித் தொற்று ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க நாளொன்றுக்கு குறைந்தது 4 லிட்டர் தண்ணீர், இளநீர், மோர், எலுமிச்சை சாறை அருந்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
- மூக்குக் கண்ணாடியை கழற்றும் போது இரண்டு கைகளாலும் கண்ணாடியின் விளிம்பில் இணையும் இடத்தில் பிடித்து கழற்ற வேண்டும்.
- மூக்குக் கண்ணாடியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் யுகத்தில் கண் கண்ணாடி, அவசியமான ஒன்றாகிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை... எல்லோரும் கண் கண்ணாடிகளை உபயோகித்து வரும் நிலையில், அதை பராமரிக்க சில யோசனைகள்...
* மூக்குக் கண்ணாடிகளை உபயோகப்படுத்தாத நேரங்களில் அதன் உறையில் போட்டு வைத்திருக்க வேண்டும். அது முடியாவிடில் கண்ணாடி பாகம் மேசை மீது படாதவாறு வைக்க வேண்டும்.
* மூக்குக் கண்ணாடியை கழற்றும் போது இரண்டு கைகளாலும் கண்ணாடியின் விளிம்பில் இணையும் இடத்தில் பிடித்து கழற்ற வேண்டும். ஒரு கையால் கழற்றும்போது மெல்லிய கண்ணாடி பிரேம்கள் வளைந்து போகவும், உடைந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன.
* மூக்குக் கண்ணாடியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உபயோகப்படுத்தும் முன் ஒவ்வொரு முறையும் மென்மையான துணியால் நன்கு துடைக்க வேண்டும்.
* மூக்குக் கண்ணாடிகளை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இணைப்புகள் தளர்ந்துவிடாமல் முகத்தில் சரியாக பொருந்தும்படி செய்து உபயோகித்துக் கொள்ள வேண்டும்.
* ஒருவரது மூக்குக் கண்ணாடியை மற்றவர் உபயோகப்படுத்தக் கூடாது. இதனால் அளவுகள் மாறி உரியவர் அணியும்போது பொருந்தாமல் அசவுகரியம் ஏற்படுத்தும்.
- நடனம் உடலை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல் சமநிலையையும் பராமரிக்கிறது.
- மன வலிமையும் உற்சாகமும் அதிகரிக்கும்.
நடனம்...வேகமாக மாறும் முகபாவனைகள் இசைக்கு ஏற்ப கால்கள் மற்றும் கைகளின் தாள அசைவுகளால் கவரப்படுகிறது.
எந்த வகையான நடனமும் ஒரு அற்புதமான கலை. இது உடலை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல் அதன் சமநிலையையும் பராமரிக்கிறது.
இருப்பினும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைப் போக்க நடனம் ஒரு மருந்தாக செயல்பட முடியும் என்று சர்வதேச விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் முடிவு செய்துள்ளது. இது மன வலிமையை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மன அழுத்தத்தில் நடனத்தின் விளைவைக் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர். நடனம் மற்றும் மன அழுத்த மேலாண்மைக்கு இடையிலான உறவு ஆராயப்பட்டது.
நடனத்தால் உளவியல் ரீதியான நன்மைகள் உள்ளன. மன வலிமையும் உற்சாகமும் அதிகரிக்கும். நடனக் கலைஞர்களில் உணர்ச்சி வெளிப்பாடு மேம்படுகிறது.
நடனம் ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின்கள் போன்ற ஹார்மோன்களை வெளியிட உதவுகின்றன.
இசையுடன் இசைந்து நிகழ்த்தப்படும் நடன அசைவுகள் மன அழுத்தம், பயம் சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்கின்றன. கார்டிசோல் என்ற ஹார்மோன் உற்பத்தி செய்யப்பட்டு இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
உடலின் இயற்கையான மன அழுத்த நிவாரண வழிமுறைகளை திறம்பட பயன்படுத்துவதற்கு நடனம் ஒரு அற்புதமான கருவியாகும்.
தினசரி மன அழுத்தங்களை திறம்பட சமாளிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. வழக்கமான பயிற்சிகளைப் போல் இல்லாமல் நடனம் இசை மற்றும் தாளத்தை உள்ளடக்கியது.
நடனத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படும் படிகள் அடிக்கடி மாறுகின்றன. இவற்றை நினைவில் வைத்துக் கொண்டு தகுந்த முறையில் மாற்ற வேண்டும்.

இந்த பயிற்சி மூளைக்கு ஒரு வகையான உடற்பயிற்சி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தச் சூழலில்தான் சமூக சுகாதாரத் திட்டங்களில் நடனத்தை ஒருங்கிணைக்க விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.
திட்டங்களில் நடனத்தை ஒருங்கிணைக்க விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.நடனமாடும்போது செரோடோனின் என்ற ஹார்மோனின் அளவு அதிகரிப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.
நடனம் உடலில் உள்ள அனைத்து தசைகளையும் ஈடுபடுத்துகிறது. நம் உடல்களை சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- கம்பங்கூழில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றது.
- கம்பு ரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி உடல் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
கோடைவெயிலில் இருந்து நமது உடலை குளிர்ச்சியாக வைக்க கம்பங்கூழை அருந்தலாம். கம்பங்கூழ் என்பது நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகவே உள்ளது.
கம்பு, கேப்பை உள்ளிட்ட தானிய வகைகளை நமது முன்னோர்கள் பாரம்பரியமாக கூழ் கஞ்சி போல செய்து தங்களின் பிரதான உணவாகவே சாப்பிட்டு வந்தனர்.

20 வருடங்களுக்கு முன்பு தினசரி தமிழகத்தில் உள்ள அனைவரது வீட்டிலும் இந்த கம்பங்கூழை சாதாரணமாக தயாரித்து சாப்பிட்டு வந்தனர். இன்னும் அம்மன் கோவில் திருவிழாக்களில் திருவிழா நிறைவு பெறும் நாளிலும், ஆடி மாதம் முழுவதும் கோவில்களில் கம்பங்கூழ், கேப்பைகூழை அம்மனுக்கு பிரசாதமாக படைத்து ஊர் மக்களுக்கு அதனை பருகி வருகின்றனர்.
இந்த கம்பங்கூழில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றது. சுட்டெரிக்கும் கோடை காலம் வந்துவிட்டது. இந்த கோடை காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது வழக்கம்.
மிக முக்கியமாக உடல் சூட்டின் காரணமாக இளம் வயது வாலிபர்கள் முதல் முதியவர்கள் வரை பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அவர்களுக்கான பாரம்பரியமான அற்புத பானம் தான் இந்த கம்பங்கூழ். இது எங்கு கிடைத்தாலும் நாம் தாராளமாக வாங்கி சாப்பிடலாம். அந்த அளவிற்கு ஆரோக்கியமானது இது.
உடல் சூட்டை தணிப்பதாக நினைத்து சாலையோரங்களில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர்பானங்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதே சாலையோரங்களில் விற்கப்படும் பாரம்பரிய உணவான கம்பங்கூழ் வாங்கி சாப்பிட்டால் நமது உடல் சூடு முழுவதுமாக குறையும்.
பாரம்பரிய தானிய வகைகளில் ஒன்றான கம்பு ரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி உடல் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
கம்பில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வு உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். கம்பில் அதிகளவு புரதம், இரும்புச்சத்து நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவைகள் நிறைந்துள்ளது.
வைட்டமின் ஈ, பி மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கனிம சக்திகள் பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை கம்பில் நிறைந்துள்ளது.
தினமும் காலை மோர் கலந்த குளிர்ச்சியான கம்பங்கூழ் குடிக்கும்போது உடல் சூடு குறைந்து நாள் முழுவதும் பசி உணர்வு இல்லாமல் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். கம்பங்கூழ் உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் வழங்கும்.
கம்பை தினமும் உணவில் நீங்கள் சேர்த்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல், ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும். கம்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சினையையும் இது போக்க உதவுகிறது.
கம்பங்கூழில் உள்ள ட்ரிப்டோ பேன் என்ற அமினோ அமிலம் நம் பசி உணர்வை குறைத்து உடல் எடையை நிர்வகிக்க உதவும். கம்பங்கூழை தினமும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை கட்டுக்குள் வரும்.
இதேபோல கோடைவெயில் காலத்தை பொருத்தவரை தாகம் தணிப்பதில் தர்பூசணி முக்கிய இடத்தை பெறுகிறது. விலையும் மலிவு என்பதால் சாலையோர தர்பூசணி கடைகளில் விற்பனை தற்போது களைகட்டி வருகிறது.

அங்கு தற்போது ஒரு பிளேட் அல்லது ஒரு சிறு துண்டு தர்பூசணி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முழு பழமாக வாங்கினால் கிலோ ரூ.25-க்கு தருகின்றனர்.
மேலும் சாலையோர பகுதிகளில் கரும்பு மற்றும் சாத்துக்குடி சாறு பிழியும் விற்பனை கடைகளையும் அதிகளவில் பார்க்க முடிகிறது. அங்கு இளைஞர்களில் பலர் ஐஸ் கட்டி போட்ட கரும்பு ஜூஸை அதிகம் விரும்பி பருகுகின்றனர். பெண்கள் பெரும்பாலும் சாத்துக்குடி ஜூஸை விரும்பி குடித்து செல்கின்றனர்.
அதுவும்தவிர சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் நன்னாரி சர்பத், ஐஸ் மோரின் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

நன்னாரி சர்பத்தின் சுவை பலருக்கும் பிடிக்கும் என்பதால், மதிய நேரங்களில் தள்ளு வண்டி குளிர்பான சர்பத் கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது.
அதே போல நீர்மோர் விற்பனையும் களைகட்டத் தொடங்கி உள்ளது. அங்கு ஒரு டம்ளர் சர்பத் ரூ.25-க்கும், மோர் ரூ.20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சாலையோர கடைகளில் இளநீர் எல்லா நாட்களில் கிடைக்கிறது.
ஆனால் பதநீரும், நுங்கும் கோடை சீசனில் மட்டுமே கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் பதனீர் கடைகளை பார்த்தவுடன் வாகனங்களை நிறுத்தி விட்டு பதனீர் குடித்து செல்கின்றனர். அங்கு ஒரு டம்ளர் பதநீர் ரூ.30-க்கும், நுங்கு கலந்த பதநீர் ரூ.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- அதிகப்படியான டீ பதட்டத்தை அதிகரிக்கும்.
- வெறும் வயிற்றில் அதிகமாக டீ குடிப்பது வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
டீ குடிப்பது உற்சாகமாக உணர வைக்கிறது. உடலில் ஏற்படும் சோர்வைக் குறைக்க பலர் டீ அருந்துகிறார்கள். அவர்கள் பலமுறை டீ பருகுவதை ரசிக்கிறார்கள்.
ஆனால் அதிகமாக டீ குடிப்பதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகமாக டீ, காபி குடித்தால் பிரச்சனைகள் உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு 2-3 கப் டீ, காபி (200-300 மிலி) குடிப்பது பாதுகாப்பானது. ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் ஆக்ஸிஜனேற்றிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த அளவை பரிந்துரைக்கிறது.
தேசிய சுகாதார நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 4-5 கப், 400 மி.கி.க்கு மேல் டீ உட்கொண்டால் தூக்கத்தைக் கெடுக்கும் என்று கூறுகிறது. அதிகப்படியான டீ பதட்டத்தை அதிகரிக்கும்.

வெறும் வயிற்றில் அதிகமாக டீ குடிப்பது வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
டீ, காபியில் உள்ள டானின்கள் இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கின்றன. ஒரு நாளைக்கு 5 கப் அளவுக்கு மேல் குடிப்பது இரத்த சோகை அபாயத்தை அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
அதிகப்படியான டீ உட்கொள்வது ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளை ஏற்படுத்தும். அமெரிக்க இதய சங்கம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
உணவுக்கு பிறகு டீ, காபி குடிக்கவும், ஒரு நாளைக்கு 3 கப் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம். அது அதிகமாக இருந்தால், மூலிகை டீக்களுக்கு மாறுங்கள். இது ஆரோக்கியத்தை பேணுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளனர்.
- டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.
- மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது.
அமெரிக்காவில் நடத்திய ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கு இளம் வயதில் அதிக அளவில் இனிப்பு கலந்த உணவுகளை உண்ண தருவது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் இனிப்புகளை தொடர்ந்து தரும்போது அதிக உடல் பருமன், இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்க குழந்தைகள் சராசரியாக 17 தேக்கரண்டி சர்க்கரையை தினமும் உட்கொள்வதாக அந்த நாட்டின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்காலத்தில் மிக மோசமான உடல் பாதிப்புகளை கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் என்று உணவு துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
அதிகப்படியான சர்க்கரை உணவில் தொடரும்போது சிறுமிகள் முந்தைய பருவம் அடைதல் மற்றும் டைப்-2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. சிறுவயதில் அதிக அளவில் இனிப்புகளை உட்கொள்வதால் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படுவதுடன், மூளையின் செயல்பாட்டையும் பாதித்து அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாக, இனிப்பு என்பது சீனி, சர்க்கரை மட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட தானியங்கள் முதல் பழச்சாறுகள் வரை அனைத்திலும் கலந்திருப்பதால் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை குறைத்துக்கொள்வது உடல் நலனுக்கு நல்லது என்று அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க உதவி செய்யும்.
- பெருங்குடல், சிறுகுடல் என ஒட்டுமொத்த வயிறும் சுத்தமாகும்.
உடல் ஆரோக்கியம் சார்ந்த பழக்கவழக்கங்கள் நவீனமாகி வரும் நிலையில், 'டயட்' முறைகளும் நாளுக்கு நாள் புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், உணவுப் பழக்கத்துடன், பருகும் தண்ணீர் வகைகளிலும் பலவிதமான டயட் முறைகள் வந்துள்ளன. குறிப்பாக, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த டீடாக்ஸ் தண்ணீர் பழக்கம் அதிகரித்திருக்கிறது.

'டீடாக்ஸ் டயட்' என்றால் என்ன?
டீடாக்ஸ் என்பது, தண்ணீர் மூலம் உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை, கொழுப்புகளை வியர்வையாக, சிறுநீர் வாயிலாக வெளியேற்றும் முறை. இந்த டீடாக்ஸ் டயட் தண்ணீரின் மூலமாக, உடலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

'டீடாக்ஸ் டயட்' எப்படி இருக்க வேண்டும்?
டீடாக்ஸ் டயட் என்பது மென்மையாக ஜீரணித்து, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு ஏதுவானதாக இருக்க வேண்டும். ஜீரண செயல்பாடு சீராக இருக்கும்போது கல்லீரலின் செயல்திறனும் அதிகரிக்கும். அதனால் கூடுதலாக உடலில் உள்ள 'டாக்சின்'களை வெளியேற்ற முடியும். டீடாக்ஸ் டயட் இருக்கையில், மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
எப்படி தயாராவது?
உடலை சுத்தம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் டீடாக்ஸ் டயட்டை தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே உடலை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் வழக்கமாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவுகள், உணவுகள் அனைத்தும் மாறும் என்பதால் அதற்கு உடலை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆல்கஹால், சிகரெட், காபி, சர்க்கரை, சாச்சுரேட்டட் கொழுப்பு உணவுகள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

டீடாக்ஸ் டயட்டின் நன்மைகள் என்ன?
* திட உணவுகள் தவிர்க்கப்பட்டு திரவ உணவுகளாக எடுக்கும்போது மிக எளிதில் ஜீரணமடைந்து சிறுநீர், வியர்வை வழியே கழிவுகள் முழுக்க வெளியேறும். நம்முடைய பெருங்குடல், சிறுகுடல் என ஒட்டுமொத்த வயிறும் சுத்தமாகும்.
* வயிற்றுப் பகுதியில் குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க உதவி செய்யும்.
* உடலில் உள்ள கழிவுகள் முழுவதுமாக வெளியேற்றப்படுவதால் சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் மாறும்.
* கடினமான மூலக்கூறுகள் கொண்ட கார்போஹைட்ரேட் உள்ளிட்ட திட உணவுகளை இந்த டயட்டில் தவிர்ப்பதால் மற்ற உணவுகள் மிக எளிதில் ஜீரணமாகும்.
* டீடாக்ஸ் டயட்டில் ஊட்டச்சத்துக்கள் செறிவாக உள்ள உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

எப்படி மேற்கொள்வது?
எலுமிச்சை, வெள்ளரிக்காய், புதினா, இஞ்சி, பெர்ரி பழ வகைகள் அல்லது ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள் மற்றும் அன்னாசி பழம் இவற்றுடன் லவங்கபட்டை, துளசி விதை அல்லது ரோஸ்மெரி ஆகியவற்றை 4 முதல் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, வடிகட்டி அந்த தண்ணீரை 7 முதல் 10 நாட்கள் குடித்து வரலாம்.
சிலர், வெந்நீரில் பழங்களை போட்டும் தண்ணீர் பருகுவார்கள். விருப்பத்திற்கு ஏற்ப பழம், மூலிகை வகைகளை கலந்து சூடாக பருகும் டீடாக்ஸ் குடிநீர் வகைகளும் நிறைய இருக்கிறது.
- செல்கள் கட்டுப்பாட்டை மீறி அசாதாரணமாக வளரும்போது ரத்த புற்றுநோய் ஏற்படுகிறது.
- பிளேட்லெட்டுகள் ரத்தம் உறைவதற்கு உதவுகின்றன.
ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்கள் உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவுகின்றன. வெள்ளை ரத்த அணுக்கள் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. பிளேட்லெட்டுகள் ரத்தம் உறைவதற்கு உதவுகின்றன. இதில் ரத்தத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி அசாதாரணமாக வளரும்போது ரத்த புற்றுநோய் ஏற்படுகிறது. இது மூன்று வகைப்படும்.

லுகேமியா:
எலும்புகளுக்குள் இருக்கும் பஞ்சுபோன்ற திசுக்களான எலும்பு மஜ்ஜையில் உள்ள ரத்தத்தை உருவாக்கும் செல்களில் லுகேமியா தொடங்குகிறது.

லிம்போமா:
இது நிணநீர் மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் லிம்போசைட்டுகள், வெள்ளை ரத்த அணுக்களில் தொடங்குகிறது. நிணநீர் மண்டலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மல்டிபிள் மைலோமா:
இது எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்களைப் பாதிக்கிறது. பிளாஸ்மா செல்கள் நோயெதிர்ப்பு அமைப்பு தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன.
அறிகுறிகள்
லுகேமியாவின் அறிகுறிகள் அந்த நோயின் வகையைப் பொறுத்து நபருக்கு நபர் வேறுபடும். எளிதில் சிராய்ப்பு அல்லது ரத்தப்போக்கு, அதிகப்படியான வியர்வை, இரவில் சோர்வு அல்லது பலவீனம், காய்ச்சல் மற்றும் குளிர், அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றுகள், பசியின்மை, குமட்டல் மற்றும் எடை இழப்பு, எலும்புகள் அல்லது மூட்டுகளில் வலி, வீங்கிய நிணநீர் சுரப்பிகள், குறிப்பாக கழுத்து, அக்குள் அல்லது இடுப்புப் பகுதிகளில் வீங்குதல், கல்லீரல் அல்லது மண்ணீரல் வீக்கம், தோலில் சிறிய சிவப்பு புள்ளிகள் தோன்றுதல் போன்றவை இதற்கான அறிகுறியாகும்.

பரிசோதனைகள்
ரத்த சோகையால் வெளிறிய தோல், நிணநீர் கணுக்களின் வீக்கம் மற்றும் கல்லீரல், மண்ணீரலின் வீக்கம் இவற்றின் மூலம் இந்த நோயை அறியலாம். ரத்த பரிசோதனையில் அசாதாரண சிவப்பு அல்லது வெள்ளை ரத்த அணுக்கள் அல்லது பிளேட்லெட்டுகள் உள்ளதா என்பதை பார்க்கலாம். இடுப்பு எலும்பில் இருந்து எலும்பு மஜ்ஜையின் மாதிரியை எடுத்து லுகேமியா செல்களைக் கண்டறியலாம்.
சித்த மருத்துவம்

நித்திய கல்யாணி:
இது எல்லா இடங்களிலும் வளரக் கூடிய தாவரம். இந்த தாவரத்திலிருந்து எடுக்கப்படும் வின்கிரிஸ்டின் மற்றும் வின்பிளாஸ்டைன் மருந்துகள் ரத்த புற்று நோய்க்கு மருந்தாக நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் கொடிவேலி மாத்திரை, சேராங்கொட்டை நெய் போன்ற மருந்துகள் ரத்தப்புற்றுநோய் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன.
துளசி
இதன் இலைகளில் உள்ள தைமோல் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இயற்கையிலேயே புற்றுநோய் எதிர்ப்புச் செயல்பாட்டைக் கொண்டுள்ளன. இவை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது.
மஞ்சள்:
இதில் உள்ள குர்குமின் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது.
பூண்டு:
இதில் உள்ள அலிசின், டைஅலைல் சல்பைடுகள் அசாதாரண செல் பிரிவைத் தடுத்து புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டை செய்கிறது.
இஞ்சி:
இதில் உள்ள ஜிஞ்சிரால், புற்றுநோய்க்கு எதிரான செயல்பாடுகளை கொண்டுள்ளது.

முள்சீத்தாப்பழம்:
இதில் உள்ள ரெட்டிகுலின், கோரெக்சிமைசின் போன்றவை புற்றுநோய் எதிர்ப்பில் சிறந்த பங்காற்றுகிறது.
கருஞ்சீரகம்:
இது முழுமையாக புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. இதன் உயிர்வேதியியல் கலவையான தைமோகுவினோன் புற்றுநோய் செல்களை தடுக்கிறது, மற்றும் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
வாழ்வியல் முறை
தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது செய்ய முடிந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் நீங்க இறை பிரார்த்தனை, தியானம் செய்ய வேண்டும்.
நவீன மருத்துவத்தில் புற்று நோய்களுக்கு விரிவான சிகிச்சைகள் உள்ளன. நோயாளிகள் அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
எனவே புற்றுநோய் என்ற உடன் நோயாளிகள் பயப்பட வேண்டாம். குணப்படுத்தக் கூடிய புற்று நோய்களும் உண்டு. எனவே நோயாளிகள் மனம் தளராமல் சிகிச்சை பெறுவது நல்லது.
- உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நரம்புகளின் தூண்டுதலால் ஏற்படுகிறது.
- ஆசனவாய்ப் பகுதியிலும் நோய் இருந்தால் பிரச்சனை கண்டிப்பாக இருக்கும்.
மலஜலம் கழிக்கும் வயிற்று உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நரம்புகளின் தூண்டுதலால் இந்த பிரச்சினை உங்களுக்கு ஏற்படுகிறது.
மலக்குடலில் ஒன்றும் இல்லாதபோதும் கூட, மலக்குடலிலுள்ள நரம்புகளை தொந்தரவு பண்ண ஆரம்பிக்கும். உடனே நரம்புகள் மூளைக்கு செய்தியை அனுப்பி மலக்குடலில் உள்ள தசைகளை சுருங்கி விரியச் செய்து மலத்தை வெளியேற்று என்று தெரிவிக்கிறது.

இதனால் தான் இந்த வயித்தைக் கலக்குவது, உடனே பாத்ரூம் ஓடுவது எல்லாமே. இது வயிற்றில் உணவுப் பாதையில் ஏதாவதொரு நாள்பட்ட நோயினால் ஏற்படும் பிரச்சனை ஆகும். இது குணப்படுத்தக் கூடிய நோய்தான்.
மொத்த ஜனத்தொகையில் சுமார் 30 சதவீதம் பேருக்கு பெருங்குடலின் கடைசி பாகத்திலும், ஆசனவாய்ப் பகுதியிலும் நோய் இருந்தால் மேலே கூறிய பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். அதீத அமிலச் சுரப்பு இந்த பிரச்சனையை உண்டாக்கும் என்பது மிகமிகக் குறைவே.
மருந்துகளின் பக்கவிளைவுகள், செரிமானப் பிரச்சனைகள், உணவு ஒத்துக்கொள்ளாமல் போகுதல், உணவுக் குடலில் நோய்கள், உணவுப் பழக்க வழக்க மாற்றங்கள், உடலில் இருக்கும் மற்ற நோய்களினால் ஏற்படும் மன அழுத்தம், திடீரென்று ஒரு குறிப்பிட்ட உணவை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல், அதிக கொழுப்பு நிறைந்த உணவைத் தொடர்ந்து பல நாட்கள் உண்ணுதல், அதிக காரம், அதிக மசாலா நிறைந்த உணவுகளை அடிக்கடி உண்ணுதல், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாமல் போகுதல், ஹைப்பர் தைராயிடிசம் பிரச்சனை உள்ளவர்கள், நாள்பட்ட சர்க்கரை வியாதி உள்ளவர்கள், பெருங்குடல் நோய்கள், மலக்குடலில் கட்டி, திசு வளர்ச்சி, திசு திரட்சி, மூலம், ஆசன வாயிலுள்ள ரத்தக் குழாய்களில் வீக்கம், மலக்குடல் புற்றுநோய் இன்னும் பல பெருங்குடல் சம்பந்தப்பட்ட ஏதாவதொரு நோய்களினால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த பிரச்சனையால் மன இறுக்கம், கவலை, பதற்றம், எளிதில் எரிச்சலடைதல் அல்லது கோபமடைதல், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை முதலியவைகளை உண்டாக்கும்.
வேளாவேளைக்கு சாப்பிடுதல், வெளியில் சாப்பிடுவதை அறவே தவிர்த்தல், அதிக காரம் மசாலா உள்ள உணவுகளை தவிர்த்தல், உணவில் அளவுக்கட்டுப்பாடு, உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிடுதல், மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், அதிக அளவில் தண்ணீர் அருந்துதல், பதற்றம், டென்ஷன், கவலை இல்லாமலிருத்தல் போன்றவைகளை கடைப்பிடித்தால் பாத்ரூமுக்கு அவசர அவசரமாக ஓடும் பிரச்சனை இல்லாமல் வாழலாம்.
பிரச்சனைக்கு மூல காரணம் என்ன என்பதை உணவு மண்டல சிகிச்சை நிபுணரை (கேஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட்) உடனடியாக சந்தித்து சிகிச்சை பெறுவது சிறந்தது.
- கரோனரி ரத்த நாளங்கள் குறுகுவதால் ஏற்படும் இதய பாதிப்பாகும்.
- உடனடியாக கவனிக்காவிடில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும்.
'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' என்பது இதயத்திற்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் கரோனரி ரத்த நாளங்கள் குறுகுவதால் ஏற்படும் இதய பாதிப்பாகும். இதை உடனடியாக கவனிக்காவிடில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும்.

உலகளவில் ஏற்படும் மாரடைப்புகளில் 22 முதல் 60 சதவிகிதம் சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சுவலி அல்லது இடது தோள்பட்டை, கழுத்து, முதுகு, தாடை போன்ற இடங்களில் வலியையும், வயிறு எரிச்சல், குமட்டல், வாந்தி, வியர்த்தல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம்.
ஆனால் மேற்கூறிய எந்த ஒரு அறிகுறியும் இல்லாமலோ அல்லது மிக குறைவான அறிகுறிகளுடன் மாரடைப்பு ஏற்படுவது சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும் சைலன்ட் ஹார்ட் அட்டாக் வேறு காரணங்களுக்காக சில நாட்கள் கழித்து மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகள் செய்யும் போது தான் தற்செயலாக கண்டறியப்படுகிறது.
இது ஏற்பட ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, உடல் பருமன், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், அதிக தூக்க மாத்திரை உட்கொள்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, மன அழுத்தம், பரம்பரை இதய நோய்கள் போன்றவை முக்கிய காரணிகளாகும்.

சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்பட முதன்மைக் காரணம் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் கரோனரி ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் கட்டிகளால் ஏற்படும் அடைப்பு.
சில சமயங்களில் கரோனரி ரத்த நாளங்களின் இறுக்கத்தால் கூட சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக இதயம் மற்றும் மார்பு பகுதிகளுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் சில சமயங்களில் மாரடைப்பின் அறிகுறிகளை அவர்களால் உணர முடியாமல் போகிறது. இவர்களுக்கு சோர்வு, வயிறு எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் அப்போது ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிகளின் அலட்சியத்தால் சில சமயங்களில் கண்டறிய தவறிய சைலன்ட் ஹார்ட் அட்டாக் தீவிர சிக்கலாக மாறி பக்க விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம்.