search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    • வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து ஓய்வு பெறுவதாக பி.ஆர் ஸ்ரீஜேஷ் அறிவித்தார்.
    • முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

    33-வது ஒலிம்பிக் தொடரில் நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இதில், ஹாக்கி இந்தியா அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் சிங் அடுத்தடுத்து 2 கோல் அடிக்கவே இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்று வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.

    இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அணியின் கோல் கீப்பர் ஓய்வு பெறுவதாக பி.ஆர் ஸ்ரீஜேஷ் அறிவித்தார்.

    இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது.

    முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் வழங்கும் முடிவு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஓய்வுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணியில் இளம் வீரர்களை இணைக்கும் இலக்கை நோக்கி இளைஞர்களுக்கு ஸ்ரீஜேஷ் ஹாக்கி பயிற்சி அளித்து வருகிறார்.

    இந்நிலையில், இந்திய ஹாக்கியில் அவர் அளித்த பங்களிப்பை பாராட்டும் வகையில் கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
    • தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.

    இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.

    தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தீர்ப்பு தேதி 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    இந்த முடிவால் வினேஷ் போகத்தின் வெள்ளி பதக்க கனவு பறிபோயுள்ளது.

    • பிரிஜ் பூசனின் நண்பரும் ஆர்எஸ்எஸ் புள்ளியுமான சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளன தலைவர் ஆனார்.
    • 'இந்த வருட ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்தியா 6 பதகங்களுக்கும் மேல் வென்றிருக்கும்.. ஆனால்'

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் - ஒரு இந்தியக் கனவு

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப்போட்டியில் உடல் எடை அதிகரித்த காரணத்துக்காக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது.

     

    பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். ஆனால் வினேஷ் போகத் உடல் எடை 50 கிலோவுக்கு 100 கிராம்கள் அதிகமாக இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.

     

    இதையடுத்து வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரி வினேஷ் போகத்தின் முறையீட்டை விளாயாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான தீர்ப்பு வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரும் என எதிர்பார்க்கலாம். இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் [57 கிலோ எடைப்பிரிவில்] அமன் சேராவத் மட்டுமே பதக்கம் [வெண்கலம்] வென்றுள்ளார்.

     

    அதிகாரத்தோடு நடக்கும் மல்யுத்தம்

    வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் முக்கியத்துவம் பெறுவதற்கு மற்றோரு காரணமும் உள்ளது. அதாவது இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜக முன்னாள் எம்.பியுமான பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்தது. இதனால் பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு நியாயம் கேட்டு சக மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் கடந்த வருட தொடக்கத்திலிருந்து டெல்லியில் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    அரசியல் விளையாட்டு 

    இந்த போராட்டத்தின் முக்கிய முகமாக அறியப்பட்டவர் வினேஷ் போகத். அவர் மீதும் மற்றைய வீரர் வீராங்கனைகள் மீதும் மத்திய அரசானது அவர்கள் மீது கடுமையான அடக்குமுறையைப் பிரயோகித்தது. ஆனால் மாதக்கணக்கில் அவர்கள் நடத்திய போரட்டம் ஓரளவு வெற்றி அடைந்தது என்றே கூற வேண்டும். அதாவது, பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலகிய பின் தேர்தல் நடத்தப்பட்டு அவரது நண்பரும் ஆர்எஸ் எஸ் பின்னணி கொண்ட புள்ளியான சஞ்சய் சிங் நியமிக்கப்பட்டார்.  

    இடையில் சில காலம் மல்யுத்த சம்மேளனம் செயலிழந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் சஞ்சய் சிங் தலைமையில் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் வினேஷ் போகத்தின் தற்போதைய தகுதி நீக்கத்தில் அரசியல் சதி ஒளிந்துள்ளதாகப் பலர் சந்தேகிக்கின்றனர். வினேஷ் போகத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக மற்ற விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

     

    கைவிரித்த இந்திய ஒலிம்பிக் சங்கம் 

    இதற்கிடையே வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பொறுப்பல்ல என்று அதன் தலைவர் பி.டி.உஷா கைவிரித்தது அனைவரிடையேயும் கோபத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி , அதிக செலவு செய்தும், திறமையான வீரர் வீராங்கனைகள் இருந்தும் பாரீஸ் ஒலிம்பிக்சில் இந்தியா 6 பதக்கங்களை மட்டுமே பெற்று பதக்கப்பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ள ஆதங்கமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது மத்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அக்கறையின்மையினாலேயே நடந்துள்ளது என்ற பொதுக்கருத்தும் மக்களிடையே நிலவி வருகிறது.

     

    அவர்தான் பொறுப்பு.. 

    இந்த நிலையில்தான் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங், பாரீஸ் ஒலிம்பிக்சில் மல்யுத்தத்தில் ஒரே ஒரு பதக்கம் மட்டுமே பெற்று இந்தியா பிந்தங்கியுள்ளதற்கு கடந்த வருடம் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் நடத்திய போராட்டமே காரணம் என்ற கருத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

     

    'இந்த வருட ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்தியா 6 பதகங்களுக்கும் மேல் வென்றிருக்கும். ஆனால் கடந்த 15-16 மாதங்களாக ஏற்பட்ட தொந்தரவுகளால் நாம் பாதகங்களை இழந்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.மேலும் வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து பேசியபோது, தகுதி நீக்கத்திற்கு 'அவர்தான் [வினேஷ் போகத்தான்] பொறுப்பு. தீர்ப்பு சரியாக வந்தால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கும்' என்று தெரிவித்துள்ளார். 

    • ஹாரி பாட்டர் நாவல் தொடர்களை எழுதிய பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் பெயர் இடம்பெற்றுள்ளன.
    • 'சிவப்பு பனியன் அணிந்த அந்த ஏமாற்றுக்காரரை அனுமதித்தது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் தவறு'

    இமானே கெலிஃப் புகாரில் ஹாரி பாட்டர் எழுத்தாளரும் எலான் மஸ்க்க்கும் இடம்பெற்றுள்ளனர்

    ரத்தத்தில் முடிந்த குத்துச்சண்டை 

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்துமுடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் -பின் பாலினம் குறித்த சர்ச்சை விவாதங்களுக்கு வழிவகுத்தது.

    66 கிலோ உடல் எடைப்பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிப்புடன் மோதினார். இதில் இமானே விட்ட குத்தில் கரினியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.

    முதல் சுற்றில் 46 வினாடிகள் மட்டும் ஆட்டம் நடந்த நிலையில் கரினி, தொடர்ந்து விளையாட மறுத்தார்.தனது விளையாட்டு வாழ்க்கையில் இவ்வளவு கடினமான குத்துகளை யாரிடமும் வாங்கியதில்லை என்று கண்ணீர் மல்க கூறி வெளியேறினார். இதைத்தொடர்ந்து இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது. ஆனால் ஒலிம்பிக் கமிட்டி அவருக்கு துணை நின்றது. உலகம் முழுவதும் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்தது.

     

    இதற்கிடையே இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்றார் இமானே கெலிஃப். அனைவரையும் போல் தானும் ஒரு முழுமையான பெண்தான் என்று வெற்றிக்குப் பிறகு அவர் தெரிவித்திருந்தார்.

    இமானேவின் சட்டப் போராட்டம் 

    அதைத்தொடர்ந்து , பாலின ரீதியாக சமூக வலைதளங்களில் தன்மீது அவதூறு பரப்பியவர்களை சட்டரீதியாக தண்டிக்க வலியுறுத்தி பிரான்ஸில் இமானே புகார் அளித்தார். மேலும் இமானே கெலிஃப் பாலின கேலி புகாரில் ஹாரி பாட்டர் எழுத்தாளரும் எலான் மஸ்க்க்கும்!.. சொன்னது என்ன?

    வழக்கு தொடர்ந்து வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வமான போராட்டத்தை முன்னெடுப்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

    இந்நிலையில் இமானே அளித்துள்ள புகாரில் தொழிலதிபர் மற்றும் எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கின் பெயரும் ஹாரி பாட்டர் நாவல் தொடர்களை எழுதிய பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

     

    மஸ்க் -ரௌலிங் சொன்னது என்ன?

    போட்டிகளின் போது இமானேவின் பாலினம் குறித்த சர்ச்சை எழுந்தபோது, எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில், ஆண்களுக்கு பெண்களின் விளையாட்டில் இடமில்லை என்று இமானேவை விமர்சித்த பதிவை ரீபோஸ்ட் செய்து கண்டிப்பாக என்று மஸ்க் தெரிவித்திருந்தார்.

    மேலும் ஜே .கே ரவுலிங் தனது எக்ஸ் பதிவில், 'இமானே குத்துச்சண்டை களத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, இதை பார்த்துவிட்டு, உங்களின் பொழுதுபோக்குக்காக ஒரு பெண்ணை ஆண் அடிப்பதை பற்றி விளக்கம் கொடுங்கள். சிவப்பு பனியன் அணிந்த அந்த ஏமாற்றுக்காரரை அனுமதித்தது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் தவறு, இது பெண்களுக்கு எதிராக ஆண்கள் தங்களின் சக்தியைக் காட்டிக்கொள்ளும் செயல்' என்று தெரிவித்துருந்தார். 

    எலான் மஸ்க் மற்றும் ஜெ.கே.ரௌலிங் ஆகிய இருவரும் தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட lgbtq  சமூகத்தினருக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது  குறிப்பிடத்ததக்கது .  

    • இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து தகவல் வெளியாகி இருந்தது.
    • அஸ்வினி மறுத்துள்ளார். யார் ரூ.1.5 கோடி வழங்கியது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பேட்மின்டன் ஆட்டத்தில் 7 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாமல் போனது ஏமாற்றமே.

    இதில் லக்ஷயா சென் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி வரை வந்து தோற்றார். சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதியில் வெளியேறியது. இதே போல பி.வி.சிந்துவும் கால் இறுதியில் தோற்றார்.

    பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி 3 ஆட்டத்திலும் தோற்று தொடக்க சுற்றிலேயே வெளியேறியது.

    இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து தகவல் வெளியாகி இருந்தது. பிரணாய்க்கு ரூ.1.8 கோடி வழங்கப்பட்டதாகவும், அஸ்வினி பொன்பப்பா-தனிஷா கிரஸ்டோ இருவருக்கும் தலா ரூ.1.5 கோடி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

    இதை அஸ்வினி மறுத்துள்ளார். யார் ரூ.1.5 கோடி வழங்கியது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    உண்மையை சரியாக பெறாமல் எப்படி அந்த தகவலை வெளியிட முடியும்? இப்படி ஒரு பொய்யை எவ்வாறு கூறலாம். தலா ரூ.1.5 கோடியா? யாரிடமிருந்து? எதற்காக? எனக்கு இந்த தொகை வழங்கப்படவில்லை.

    நிதியுதவிக்காக எந்த அமைப்பிலோ அல்லது ஒலிம்பிக் பதக்க இலக்க திட்டத்தின் ஒரு பகுதியாகவோ நான் இருக்கவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் வரை நான் கலந்து கொண்ட போட்டிகளுக்கு எனக்கு நானே நிதியுதவி செய்தேன். அணியில் இணைவதற்கான தகுதியை அடைந்த பிறகுதான் இந்திய அணியுடன் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டேன்.

    பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற பிறகுதான் நான் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டேன், அவ்வளவுதான். எங்களுடைய பயிற்சியாளரும் எங்களோடு பயணம் செய்ய வேண்டும் என்று நாங்கள் முன்வைத்த கோரிக்கை கூட நிராகரிக்கப்பட்டது".

    இவ்வாறு அஸ்வினி பொன்னப்பா கூறியுள்ளார்.

    • தொடர்ச்சியாக 3 முறை பிரமோத் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைத்தார்.
    • ஆகஸ்ட் 23 ஆம் தேதி பாரீசில் தொடங்க உள்ள பாராலிம்பிக்சில் பிரமோத் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது

    ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதாக கடந்த பாரா ஒலிம்பிக்சில் தங்கம் வென்ற இந்திய பாட்மிட்டான் வீரர் பிரமோத் பகத்துக்கு சர்வதேச பாட்மிட்டன் சம்மேளனம் 18 மாத தடை விதித்துள்ளது. இதன்படி அடுத்த 18 மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளில் பிரமோத் பங்கேற்க முடியாது. எனவே விரைவில் தொடங்க உள்ள பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பிரமோத் இழந்துள்ளார்.

     

    12 மாதங்களில் தொடர்ச்சியாக 3 முறை பிரமோத் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைத்தார். இதனால் அவர் ஊக்கமருந்து தடை விதிகளை மீறியதை உறுதி செய்து விளையட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் ஊக்க மருந்து தடுப்புப்பிரிவு அதிகாரிகள் [Court of Arbitration of Sport (CAS) Anti-Doping Division] உறுதி செய்தனர்.

    ஆனால் இதை எதிர்த்து அன்றைய தினம் பிரமோத் தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூலை 29ஆம் தேதி நிராகரித்தது. இந்த நிலையில் தான் தற்போது இந்த 18 மாத தடையானது சர்வதேச பாட்மிட்டன் சமேலானதால் விடிக்கப்பட்டுள்ளது.

    எனவே வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி பாரீசில் தொடங்க உள்ள பாராலிம்பிக்சில் பிரமோத் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் பிரமோத் பகத் தங்கம் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • 17 நாட்கள் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 9 பிரபோசல்கள் நடைபெற்றுள்ளன.
    • ஜஸ்டின் பெஸ்ட் தனது காதலியான லைனி டங்கனுக்கு 2,700 மஞ்சள் நிற ரோஜாக்களுடன் பிரபோஸ் செய்தார்.

    காதல் நகரத்தில் ஒரு சாதனை

    வீரர்களால் அதிக காதல் பிரபோசல்கள் செய்யப்பட்ட ஒலிம்பிக் தொடர் என்ற சாதனையை படைத்துள்ளது பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தொடர்.

    17 நாட்கள் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 9 பிரபோசல்கள் நடைபெற்றுள்ளன.

     

    * பிரான்ஸ் தடகள வீராங்கனை ஆலிஸ் ஃபினோட் 3000மீ ஸ்டீபிள்சேஸ் சாதனையை முறியடித்து, போட்டிக்கு பிறகு தனது காதலனிடம் பிரபோஸ் செய்து கொண்டாடினார்.

     

    * சீன பேட்மிண்டன் வீரர் லியு யு சென் தங்கம் வென்ற பிறகு ஹுவாங் யா கியோங்கிற்கு பிரபோஸ் செய்தார்.

     

    * பிரெஞ்சு பெண்கள் ஸ்கிஃப் மாலுமிகளான சாரா ஸ்டெயார்ட் மற்றும் சார்லின் பிகோன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று கரை திரும்பியபோது அவர்களது பாட்னர்கள் திருமணத்திற்கு முன்மொழிந்தனர்.

     

    * அமெரிக்க ஒலிம்பியன் ஜஸ்டின் பெஸ்ட், தனது நாட்டிற்காக ரோயிங்கில் முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். அவர் தனது காதலியான லைனி டங்கனுக்கு 2,700 மஞ்சள் நிற ரோஜாக்களுடன் பிரபோஸ் செய்தார்.

     

    * அர்ஜென்டினா ஆண்கள் ஹேண்ட்பால் அணியை சேர்ந்த பாப்லோ சிமோனெட், தனது நீண்டகால காதலியும் ஹாக்கி வீரருமான மரியா பிலார் காம்பாய்க்கு பிரபோஸ் செய்தார்.

     

    * அமெரிக்காவின் ஷாட் புட்டர் பேட்டன் ஓட்டர்டால் தனது காதலி மேடி நில்லஸுடன் ஈபிள் கோபுரத்திற்கு முன்பாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

     

    * பிரேசிலின் டிரிபிள் ஜம்பர், அல்மிர் டோஸ் சாண்டோஸ் தனது காதலி தலிதா ராமோஸ்-க்கு பிரபோஸ் செய்தார்.

     

    * அமெரிக்காவின் அலெவ் கெல்டர் சக ரக்பி வீரருமான கேத்ரின் ட்ரெடரை பிரபோஸ் செய்தார்.

     

    * இத்தாலிய ரிதம் ஜிம்னாஸ்ட் அலெசியா மவுரெல்லிக்கு மாசிமோ பெர்டெல்லோனி பிரபோஸ் செய்தார்.

    நிறைவு விழாவின்போது பேசிய பாரீஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டு குழுத் தலைவர் டோனி எஸ்டன்குட், அன்பின் இந்த உணர்வுகள் என்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தார். 

    • வினேஷ் போகத்தின் மனுவுக்கு எதிராக சர்வதேச மல்யுத்த சம்மேளனம் முறையிட்டு உள்ளது.
    • கிரிக்கெட் வீரர்கள் வினேஷ் வெள்ளி பதக்கத்துக்கு தகுதியானவர் என்று கூறி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது பதக்கம் பறிபோனது.

    இதை தொடர்ந்து தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரி சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இந்த அப்பீல் மனு வழக்கில் இன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா? என்று நாடே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

    தெண்டுல்கர், கங்குலி, உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் வினேஷ் போகத் வெள்ளி பதக்கத்துக்கு தகுதியானவர் என்று கூறி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

    இந்த நிலையில் வினேஷ் போகத்தின் மனுவுக்கு எதிராக சர்வதேச மல்யுத்த சம்மேளனம் முறையிட்டு உள்ளது. அடிப்படை விதிமுறைப்படிதான் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளது.

    இதற்கிடையே இந்த வழக்கில் நடுவரான ஆஸ்திரேலியாவின் டாக்டர் அன்னாபெல் பென்னட் முன்பு வினேஷ் போகத் வக்கீல்கள் ஹரீஷ் சால்வே, விதுஷ்பத்சிங்கானியா ஆகியோர் அளித்த வாதங்கள் விவரம் வெளியாகி உள்ளது. அவர்கள் கூறியதாவது:-

    ஒலிம்பிக் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ். அவர் ஒரேநாளில் மூன்று போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் உலகின் நம்பர் 1 மற்றும் நடப்பு சாம்பியனான ஜப்பானின் யுய் சுசாகியை வென்றார். போட்டிக்கு முன் அவர் அனுமதிக்கப்பட்ட எடைக்குள்தான் இருந்தார். செவ்வாய்க் கிழமை இரவுக்குள் அவரது எடை கிட்டத்தட்ட 3 கிலோ அதிகரித்தது.

    போட்டி நடைபெறும் இடத்திற்கும், வீராங்கனைகள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்திற்கும் இடைப்பட்ட தூரம் அதிகமாக இருந்தது. இதனால் அவரது எடைக் குறைப்பிற்கான நேரம் கிடைக்கவில்லை. மேலும் ஒரேநாளில் 3 போட்டி காரணமாக சரியான எடையை வைத்திருக்க முடியவில்லை.

    அடுத்தடுத்த போட்டிகளில் கலந்துகொள்ள அவர் உணவு எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. மேலும் ஒருவர் தொடர் போட்டிகளில் விளையாடுவதால் அவரது தசையின் எடை அதிகரிக்கும்.

    வினேஷ் இறுதிப் போட்டிக்கு முன், இரவு முழுவதும் விழித்திருந்தார். உடல் எடையைக் குறைக்க ஓடுதல், ஸ்கிப்பிங் செய்தார். மேலும், முடியை வெட்டி ரத்தத்தை வெளியேற்றும் அளவிற்கு முயற்சி செய்தார். இருப்பினும் அவரது எடை 100 கிராம் அதிகரித்து இருந்தது.

    100 கிராம் கூடுதல் எடை அவருக்கு எந்தவிதமான திறமையும் அளித்திருக்காது. இந்த அளவு மிகக் குறைவானது. இது தடகளத்தில் 0.1 முதல் 0.2 சதவிகிதம்தான்.

    மேலும் கோடை காலத்தில் வெப்ப நிலை காரணமாக தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கலாம். ஒரேநாளில் 3 போட்டிகளில் இருந்ததால் அவரது உடல் ஆரோக்கியத்திற்காக அவர் கூடுதல் தண்ணீர் எடுத்திருக்கலாம்.

    எனவே எந்த ஒரு மோசடியிலும், பதக்கத்தைப் பெறுவதற்கு தவறான முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. கடின உழைப்பால் அவர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். எனவே அவருக்கான வெள்ளி பதக்கத்தை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் வாதங்களை முன் வைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற மொத்த நாடுகளில், 184 நாடுகளை விட அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் லியான் மர்ச்சண்ட்.
    • 22 வயதே ஆகும் லியான் மர்ச்சண்ட் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக்சே இந்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தான்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இந்த வருடம் நடைபெற்றுவந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் நிறைவு பெற்றது. சுவாரஸ்யமான தருணங்கள் பல நிறைந்ததாக இந்த வருட ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அமைந்தன.

    அந்த வகையில் அனைவரையும் வாயடைக்க வைக்கும் வகையில் பிரான்ஸ் நீச்சல் வீரர் லியான் மர்ச்சண்ட் அதிரடியான சாதனைக்குச் சொந்தக்காரராக உள்ளார்.

     

    அதாவது, பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற மொத்த நாடுகளில், 184 நாடுகளை விட அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் லியான் மர்ச்சண்ட்.

    இந்த வருட ஒலிம்பிக்சில், 200 Ľ Breaststroke, 200 L Butterfly, 200 LLi Individual Medley, 400 மீட்டர் Individual Medley ஆகிய போட்டிகளில் லியான் மர்ச்சண்ட் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் 4x400 மீட்டர் Medley Relay-வில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.

     

    22 வயதே ஆகும் லியான் மர்ச்சண்ட் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக்சே இந்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வினேஷ் போகத் மேல் முறையீட்டு மனு வழக்கில் நாளை தீர்ப்பு.
    • இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த மருத்துவக் குழு பொறுப்பாகாது.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டது.

    இதற்கிடையே தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் அப்பீல் செய்தார். அவர் தொடர்ந்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    வினேஷ் போகத் மேல் முறையீட்டு மனு வழக்கில் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.

    வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்த இந்திய ரசிகர்கள், மருத்துவக் குழுவினர் தான் இதற்கு பொறுப்பு என்றும், ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகளில், வீரர்களின் எடை விவ காரத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பி வரு கிறார்கள்.

    இந்த நிலைிய்ல வினேஷ் போகத் எடை பிரச்சினைக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பொறுப்பல்ல என்று அதன் தலைவர் பி.டி.உஷா ஆவேசமாக கூறி உள்ளார். இது தொடர்ந்து அவர் கூறியதாவது:-

    மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை, ஜூடோ போன்ற விளையாட்டுகளில் போட்டியாளர்களின் எடை விவகாரத்தில் அந்தந்த போட்டியாளரும், பயிற்சியாளர்களும் தான் பொறுப்பு. இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த மருத்துவக் குழு பொறுப்பாகாது.

    ஒவ்வொரு விளை யாட்டுகளிலும் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உதவுவதற்கு என்று தனிக்குழு இருப்பார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக இணைந்து செயல்படுவார்கள்.

     ஆனால் இந்திய ஒலிம் பிக் குழு, ஒலிம்பிக் தொடங்குவதற்கு இரு மாதங்களுக்கு முன்புதான், வீரர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். அதுவும் போட்டியின் போதோ அல்லது போட்டிக்குப் பிறகோ வீரருக்கு ஏற்படும் காயம் உள்ளிட்ட பிரச்சனைகளை கவனித்துக் கொள்வார்கள்.

    மேலும் ஊட்டச்சத்து நிபுணர், பிஸியோ தெரபிஸ்ட் இல்லாத வீரர்களுக்கு, அந்த பணிகளையும் கூடுதலாக இந்த மருத்துவக் குழு செய்யும்.

    எனவே வினேஷ் போகத் விவகாரத்தில் தின்ஷா பர்தி வாலா தலைமையிலான மருத்துவக் குழுவை குறை சொல்வது நியாயமல்ல.

    இவ்வாறு பி.டி. உஷா கூறியுள்ளார்.

    • ஒலிம்பிக்கில் கடைசி நேரத்தில் சீனாவை பின்னுக்குத் தள்ளியது அமெரிக்கா.
    • ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் சீனாவை கடைசி நேரத்தில் பின்னுக்கு தள்ளிய அமெரிக்கா 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. இதில் 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் அடங்கும். சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்களோடு இரண்டாவது இடம் பிடித்தது.

    அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 45 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் நிறைவு செய்தது. இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் 71 ஆவது இடத்தில் இருந்தது.


     

    33 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் 26 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அவர்கள் 32 விளையாட்டுகளில் மொத்தம் 329 தங்கப்பதக்கத்துக்கு முட்டி மோதினர்.

    உலகின் கவனத்தை ஈர்த்த பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா நேற்றிரவு கோலாகலமாக நிறைவடைந்தது. ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் இசை வெள்ளத்துக்கு மத்தியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், கலைஞர்களின் சாகசங்கள், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்புடன் ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றது.

    நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.  



    அதன் பிறகு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மேடையில் தோன்றினார். அவர் மேற்கூரையில் இருந்து அந்தரத்தில் சாகசத்துடன் ஸ்டேடியத்திற்குள் என்ட்ரி கொடுத்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரிடம் இருந்து ஒலிம்பிக் கொடியை பெற்று அவர் மோட்டார்சைக்கிளில் சென்றார். 

    'மிஷன் இம்பாசிபிள்' படம் போல் அவர் தன்னுடைய செயலை வெளிப்படுத்தினார். சில நிமிடங்கள் தோன்றிய டாம் குரூஸ் தன்னுடைய அபாரமான சாகசத்தால் பார்வையாளர்கள், விளையாட்டு வீரர்கள் கவனத்தை ஈர்த்தார். இதைத் தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

     


    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய நிறைவு விழா 3.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது. 34-வது ஒலிம்பிக் போட்டி லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் 2028 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி துவங்கி 30 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.

    117 வீரர், வீராங்கனைகளுடன் பாரீசுக்கு படையெடுத்த இந்தியா இந்த முறை 6 பதக்கங்களுடன் (ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) முடித்துக் கொண்டது. இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் 8 வீரர், வீராங்கைகள் நெருங்கி வந்து பதக்கத்தை நழுவ விட்டனர்.

    இதனால் அவர்கள் 4 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக பதக்கப்பட்டியலில் இரட்டை இலக்கத்தை அடைய வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு நிறைவடையவில்லை. 

    • ஒலிம்பிக்கில் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும்.
    • கடைசிப் போட்டியில் தங்கம் வென்ற அமெரிக்கா பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தினர்.

    ஒலிம்பிக் தொடரின் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அடுத்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில், பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு சீனா இடையே கடும் போட்டியை தந்தது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பதக்க பட்டியல் விவரம் வருமாறு:

    40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

    40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களுடன் சீனா 2-வது இடம் பிடித்தது.

    20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 45 பதக்கங்களுடன் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது.

    18 தங்கம், 19 வெள்ளி, 16 வெண்கலம் என 54 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4வது இடம் பிடித்துள்ளது.

    16 தங்கம், 26 வெள்ளி, 22 வெண்கலம் என 64 பதக்கங்களுடன் பிரான்ஸ் 5வது இடத்தில் உள்ளது.

    பாகிஸ்தான் ஒரே ஒரு தங்க பதக்கம் வென்று 62-வது இடத்தில் உள்ளது.

    இந்திய அணி ஒரு வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் 71-வது இடத்தை பிடித்துள்ளது.

    இந்தியா 5 வெண்கல பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒரு வெள்ளி பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றது. ஆண்கள் ஹாக்கியில் மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மல்யுத்தத்தில் ஒரு வெண்கலம் கிடைத்தது. இதையடுத்து, 6 பதக்கங்களுடன் இந்தியா 71-வது இடத்தில் உள்ளது.

    ×