இந்தியா

வெள்ளத்தில் சிக்கிய யானை குட்டியை கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்- வீடியோ

Published On 2024-07-13 09:20 GMT   |   Update On 2024-07-13 09:20 GMT
  • யானை குட்டி ஆற்றின் நடுவே வெள்ளத்தில் தத்தளிப்பதை பார்த்த ஒருவர் பாலத்தின் மேல் இருந்து கீழே பெரிய கயிற்றுடன் இறங்குகிறார்.
  • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் யானை குட்டியை மீட்ட பொதுமக்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஒரு ஆற்றின் நடுவே யானை குட்டி ஒன்று சிக்கியதும், அதனை வாலிபர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து கயிறு கட்டி மீட்ட காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

அங்குள்ள ஒரு ஆற்றை 6 வார வயது கொண்ட குட்டி யானை ஒன்று கடக்க முயன்ற போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றை ஒட்டிய பாலத்தை கடக்க யானை குட்டி முயன்ற நிலையில் வெள்ளத்தில் சிக்கி உள்ளது. இதனால் யானை குட்டி ஆற்றின் நடுவே வெள்ளத்தில் தத்தளிப்பதை பார்த்த ஒருவர் பாலத்தின் மேல் இருந்து கீழே பெரிய கயிற்றுடன் இறங்குகிறார்.

பின்னர் வெள்ளத்தில் மெதுவாக நடந்து சென்று யானை குட்டியை நெருங்கிய அவர், அதன் இடுப்பில் கயிற்றை சுற்றிக்கட்ட முயற்சிக்கிறார். முதலில் யானை குட்டி அங்கும், இங்குமாக சென்ற நிலையில், அந்த வாலிபர் போராடி யானையின் இடுப்பு முழுவதும் கயிற்றை கட்டுகிறார். பின்னர் பாலத்தின் மேல் இருந்து பொதுமக்கள் அந்த கயிற்றை மேலே இழுக்க யானை குட்டி பத்திரமாக மீட்கப்படுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் யானை குட்டியை மீட்ட பொதுமக்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News