இந்தியா

திருப்பதி மலையில் மலிவு விலை உணவகங்கள்- விரைவில் திறக்க முடிவு

Published On 2024-06-29 04:20 GMT   |   Update On 2024-06-29 04:20 GMT
  • திருப்பதி மலையில் உள்ள ஓட்டல்களில் விலை கட்டுப்பாடுகளை விதிக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
  • திருப்பதி கோவிலில் நேற்று 72,294 பேர் தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதி கோவிலில் அடிப்படை வசதிகள் மற்றும் பக்தர்களின் தேவைகளை கண்டறிந்து மேம்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக திருப்பதி மலையில் தேவஸ்தானம் சார்பில் மலிவு விலை உணவகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.

இங்கு வழங்கப்படும் உணவு தரமானதாகவும் சுவையானதாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஓட்டல்களில் உள்ள சமையல் நிபுணர்களை அழைத்து ஆலோசனை நடத்தினர்.

கீழ் திருப்பதியில் உள்ள பிரபல ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஜனதா கேண்டினில் வழங்கப்படும் உணவுகளின் பட்டியலை சேகரித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி மலையில் உள்ள ஓட்டல்களில் விலை கட்டுப்பாடுகளை விதிக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மலிவு விலை உணவகங்கள் திறப்பதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வழங்கப்படும் லட்டின் தரத்தை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக மாதிரி லட்டுகள் தயாரிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

திருப்பதி கோவிலில் நேற்று 72,294 பேர் தரிசனம் செய்தனர். 31,855 பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.3.39 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News