தமிழ்நாடு

பா.ஜனதா நடத்தும் முழு அடைப்புக்கு தடை விதிக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2022-10-28 09:15 GMT   |   Update On 2022-10-28 09:15 GMT
  • வரும் திங்கட்கிழமை பா.ஜ.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பந்த்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  • வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.

சென்னை:

கார் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ள பந்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவையை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. பந்த் அன்று கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைத்து வியாபாரிகள் ஆதரவு தருமாறு பா.ஜ.க. நிர்வாகிகள் அழுத்தம் தருகின்றனர்.

இந்த விவகாரம் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் மாநில அரசை குற்றம்சாட்டி பந்த் நடத்துவது தேவையற்றது.

எனவே வரும் திங்கட்கிழமை பா.ஜ.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பந்த்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வு இன்று பிற்பகல் விசாரிப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News