என் மலர்


துடிக்கும் கரங்கள்
யூடியூப்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணர்த்தும் கதை.
யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் விமல். இவர் மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தன் வீடியோவில் பதிவிட்டு நியாயம் கேட்டு வருகிறார்.

இந்நிலையில் சங்கிலி முருகன், தன் மகன் சமீரை தேடி சென்னைக்கு வருகிறார். அதே சமயம் போலீஸ் அதிகாரி சுரேஷ் மேனனின் மகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். இதில் சங்கிலி முருகன் மகனுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் சவுந்தரராஜா சந்தேகிக்கிறார்.

இந்த சூழ்நிலையில் சங்கிலி முருகனின் வீடியோவை தன் யூடியூப்பில் பதிவிடுகிறார் விமல். இதனால் போலீஸ் கவனம் விமல் பக்கம் திரும்புகிறது.

இறுதியில் சுரேஷ் மேனன் மகள் கடத்தலுக்கும் சங்கிலி முருகன் மகனுக்கும் என்ன தொடர்பு? விமல் வெளியிட்ட வீடியோவால் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விமல், கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் இருந்து மாறி வித்தியாசமான வேடத்தில் நடித்து இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷனில் கவனிக்க வைத்து இருக்கிறார். நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருக்கிறார் சவுந்தரராஜா.

சதீஷின் காமெடி பெரியதாக எடுபடவில்லை. நாயகி மிஷாவும் வழக்கமான கதாநாயகி போல் வந்து சென்றிருக்கிறார். டிராபிக் போலீஸ் ஆக வரும் ஜெயச்சந்திரன் இடைவேளை வரை தன் நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார் பில்லி முரளி.

மீடியாக்களை போல தனி நபர் நடத்தும் யூடியூப்களுக்கும் பொறுப்பு உள்ளது. எனவே அவர்களும் பொறுப்புடன் நடந்து கொண்டு சமூகத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை செய்யலாம் என சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் வேலுதாஸ்.

ராகவ் பிரசாத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ரம்மி ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் துடிக்கும் கரங்கள் - துடிப்பு குறைவு.









