என் மலர்


துரிதம்
ஒருதலையாக காதலிக்கும் கதாநாயகன் காதலியிடம் தன்னுடைய காதலை சொல்ல தவிக்கும் கதை.
கதைக்களம்
வாடகை கார் ஓட்டுனராக சென்னையில் வேலை செய்து வருகிறார் ஜெகன். தினமும் ஜெகனின் காரில் அலுவலகத்திற்கு செல்வதற்காக ஈடன் பயணிக்கிறார். அவரை ஜெகன் ஒரு தலையாக காதலிக்கிறார்.
ஒரு கட்டத்தில் தந்தையின் நிர்ப்பந்தத்தினால் ஈடன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு கிளம்ப தயாராகிறார்.எப்படியாவது ஈடனிடம் தனது காதலை சொல்லி விட வேண்டும் என்று ஜெகன் முயற்சிக்கிறார். ஆனால் இவரது முயற்சி தோல்வியில் முடிகிறது.
இந்நிலையில் ஊருக்கு செல்லும் ரயிலை ஈடன் தவற விடுகிறார். பிறகு ஜெகனின் உதவியால் அவருடன் பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டு ஊருக்கு செல்கிறார்.வழியில் பைக் பழுதாகி நிற்க, அந்த வழியாக காரை ஓட்டிக்கொண்டு வரும் ராம்ஸிடம் இருவரும் லிப்ட் கேட்கின்றனர். திடீரென காரை நிறுத்திய ராம்ஸ், ஈடனை கடத்தி விடுகிறார். கடத்திய ஈடனை ஜெகன் தேடி அலைகிறார்.
இறுதியில் ஜெகன், ஈடனை கண்டுபிடித்தாரா? இல்லையா? தனது காதலை ஈடனிடம் தெரிவித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கார் ஓட்டுனராக வரும் ஜெகன், அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது ஒரு தலை காதலை வெளிப்படுத்த நினைக்கும் இடங்களில் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.நாயகியின் பார்வைக்காக ஏங்குவது, காதல் தோல்வியில் உடைவது, நாயகியை கடத்தியதும் பதறுவது என எதார்த்தமாக நடித்துள்ளார்.
காதலியாக நடித்துள்ள ஈடன் சிறப்பாக நடித்துள்ளார். இவரை கடத்திய பின்னர் தப்பிக்க போராடும் இடங்களில் பதற்றமடைய செய்துள்ளார்.
பால சரவணனின் நகைச்சுவை ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார். தந்தையாக வரும் வெங்கடேஷ் கவனம் பெறுகிறார். தோழிகளாக வரும் வைஷாலி, ஸ்ரீ நிகிலா, ஐஸ்வர்யா மற்றும் பூ ராமு, ராம்ஸ் ஆகியோர் அவர்களின் பணியை சரியாக செய்துள்ளனர்.
இயக்கம்
எதார்த்தக் கதையை திரைக்கதையின் மூலம் விறுவிறுப்பாக முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் சீனிவாசன். ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் போகப்போக கதைக்குள் இழுத்துக் கொள்கிறது.
ரெயிலில் வருவதாக பொய் சொல்லி விட்டு பைக்கில் பயணிக்கும் ஈடன், வெங்கடேஷிடம் சிக்கி விடுவாரோ என்ற படப்படப்பை ஏற்படுத்தும் பிற்பகுதி திரைக்கதை படத்திற்கு பலம். கிளைமாக்ஸ் காட்சிகள் மனதில் நிற்கிறது.
இசை
நரேஷின் பின்னணி இசை படத்தின் நீரோட்டத்தில் பயணிக்க வைத்துள்ளது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவின் மூலம் அழகுப்படுத்தியுள்ளனர் வாசன் மற்றும் அன்பு.
படத்தொகுப்பு
நாகூரன் படத்தொகுப்பில் கலக்கியிருக்கிறார்.
புரொடக்ஷன்
ட்ரீம் ஃபோகஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ‘துரிதம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.









