search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிபா வைரசுக்கு சிறுவன் உயிரிழப்பு: மத்திய சுகாதாரக்குழு கேரளா விரைவு
    X

    நிபா வைரசுக்கு சிறுவன் உயிரிழப்பு: மத்திய சுகாதாரக்குழு கேரளா விரைவு

    • பருவமழை பெய்ய தொடங்கிய பிறகு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்களின் பரவல் மேலும் அதிகரித்தது.
    • முதியவர் ஒருவருக்கும் நிபா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு தொற்று நோய்கள் மற்றும் டெங்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட ஏராளமான வைரஸ் காய்ச்சல்கள் பரவின.

    பருவமழை பெய்ய தொடங்கிய பிறகு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்களின் பரவல் மேலும் அதிகரித்தது. அங்கு சாதாரண காயச்சல்கள் மட்டுமின்றி அமீபிக் மூளைக்காய்ச்சல், வெஸ்ட் நைல், ஷிகல்லா வைரஸ் உள்ளிட்ட அரிய வகை காய்ச்சல்களும் பரவின.

    இந்த காய்ச்சல்களுக்கு உயிர்பலியும் ஏற்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. இருந்தபோதிலும் தொற்று பரவல் கட்டுக்குள் வரவில்லை.

    இந்நிலையில் நிபா வைரசுக்கு 14 வயது சிறுவன் ஒருவன் பலியானான். மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியை சேர்ந்த அந்த சிறுவனுக்கு முதலில் காய்ச்சல் பாதித்தது. கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுவனிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டது.

    இதில் அந்த சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சிறப்பு தனி வார்டில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்ற அந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இதையடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சுகாதாரத்துறையினர் தயார் செய்தனர்.

    அந்த பட்டியலில் சிறுவனின் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் என 330 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் சுகாதாரத் துறையினரின் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களில் 101 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    இந்நிலையில் மலப்புரத்தை சேர்நத 68 வயது முதியவர் ஒருவருக்கும் நிபா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. அந்த முதியவர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். நிபா வைரஸ் பரவலை முன்னிட்டு மலப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் சுகாதாரப்பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள நிலையை ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறையின் மருத்துவ குழு கேரள விரைந்துள்ளது. அந்த குழுவினர் தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய இருக்கின்றனர்.

    கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதன்முதலாக நிபா வைரஸ் பரவ தொடங்கியது. அந்த ஆண்டில் நிபா வைரசுக்கு 17 பேர் பலியாகினர். அதன்பிறகு 2021-ம் ஆண்டில் ஒருவரும், 2023-ம் ஆண்டில் 2 பேரும் நிபா வைரசுக்கு பலியாகினர். கேரள மாநிலத்தில் நிபா வைரசுக்கு இதுவரை 21 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×