search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க களமிறங்கிய ராணுவம்
    X

    தெலுங்கானா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க களமிறங்கிய ராணுவம்

    • பேரிடர் மீட்பு படை குழுவினர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
    • சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்திற்கு குடிநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.

    இந்த பணி கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஸ்ரீசைலம் இடது புற கால்வாய் என அழைக்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை உலகிலேயே மிகவும் நீளமான அதாவது 44 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

    சுரங்கப்பாதை பணிக்காக இருபுறமும் இருந்து துளையிடும் எந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வந்தன. ஒரு பக்கத்தில் 20 கிலோ மீட்டர் மறுபுறம் 14 கிலோ மீட்டர் நீளத்திற்கு தோண்டப்பட்டது.

    இந்த பணியில் உத்தர பிரதேசம், ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று 60 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.

    அப்போது சுரங்க பாதையில் 14-வது கிலோமீட்டர் தொலைவில் திடீரென நீர்க்கசிவு ஏற்பட்டது. இதனை சரி செய்ய சில தொழிலாளர்கள் முயன்றனர். அப்போது சுரங்க பாதையில் இடிபாடு ஏற்பட்டது.

    சுரங்கத்திற்குள் பயங்கர சத்தம் கேட்டதும் அங்கிருந்த தொழிலாளர்கள் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதில் சிலர் காயம் அடைந்தனர். அவர்களில் 52 பேர் பாதுகாப்பாக வெளியே வர முடிந்தது.

    உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஜெய் பிரகாஷ், பொறியாளர் மனோஜ் குமார், களப்பொறியாளர் ஸ்ரீநிவாஸ், ஜார்கண்ட்மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் சாஹு, ஜாதக்ஸ், சந்தோஷ் சாஹு மற்றும் அனுஜ் சாஹு மற்றும் ராபின்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2 எந்திர ஆப்ரேட்டர்களான சன்னி சிங் பஞ்சாப்பைச் சேர்ந்த குர்ப்ரீத் சிங் ஆகிய 8 பேர் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்டனர்.

    அவர்களை மற்ற தொழிலாளர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    நிலைமை குறித்து தகவலறிந்த முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பணிகளை துரிதபடுத்த உத்தரவிட்டார்.

    பிரதமர் நரேந்திர மோடி ரேவந்த் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொழிலாளர்களை மீட்பதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

    இதைத் தொடர்ந்து தெலுங்கானா நீர்ப்பாசன மந்திரி உத்தமகுமார் ரெட்டி தலைமையில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன.

    இந்திய ராணுவத்தின் ஒரு குழு செகந்திராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

    மேலும் பேரிடர் மீட்பு படை குழுவினர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் சிறப்பு என்ஜினினீயர் குழுக்கள் வந்து மீட்பு பணிக்கான ஆய்வு தொடங்கினர்.

    ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுடன் மருத்துவ குழுவினர் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    கனரக என்ஜின்கள் மூலம் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    சுரங்கபாதையில் பெரிய கல்பாறைகள் சரிந்து மூடி உள்ளது. இதனால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளன.

    நேற்று பணி தொடங்கிய 30 நிமிடத்துக்குள் இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது.

    8 தொழிலாளர்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    என்ஞ்சின் ஆபரேட்டர் ஒருவர் எச்சரிக்கை விடுத்ததால் தான் தொழிலாளர்கள் பலர் தப்பமுடிந்தது. அதற்குள் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டதால் 8 பேர் சிக்கி கொண்டனர்.

    தொழிலாளர்களை மீட்க உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்ட ராணுவ குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    தொழிலாளர்களை உயிருடன் கொண்டு வரும் முயற்சியில் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என மந்திரி உத்தம குமார் ரெட்டி தெரிவித்தார்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×