search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உடுமலை அமராவதி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    உடுமலை அமராவதி அணை நிரம்பி கடல் போல் காட்சியளிப்பதையும், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதையும் காணலாம்.

    உடுமலை அமராவதி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    • கொடைக்கானல் மேற்கு பகுதி மலைகளில் பெய்யும் கன மழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் மூணாறு, மறையூர், கோவில்கடவு மற்றும் வால்பாறை கிழக்கு பகுதி மலைத்தொடர், கொடைக்கானல் மேற்கு பகுதி மலைகளில் பெய்யும் கன மழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இந்தநிலையில் நேற்றிரவு 5 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வரத்து இருந்ததால் அணையில் இருந்து உபரி நீர் முழுமையாக ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    90 அடி உயரமுள்ள அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 87.87 அடியாக உள்ளது‌. அணையில் தற்போது 3.88 டிஎம்சி., நீர் இருப்பு உள்ளது. மேலும் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் அமராவதி ஆற்றில் எந்நேரமும் உபரி நீர் திறப்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதையடுத்து கரையோர பகுதிகளை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்

    உடுமலை அருகே புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை உள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோவிலில் தரிசனம் செய்யவும், மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் அன்றாடம் வந்து செல்கின்றனா். சனி, ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    இந்நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பக்தா்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×