search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூரில் சூடு பிடிக்கும் தேசிய கொடிகள் விற்பனை- வீடுகளில் ஏற்ற ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள்
    X

    திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தையல் தொழிலாளியை காணலாம்

    திருப்பூரில் சூடு பிடிக்கும் தேசிய கொடிகள் விற்பனை- வீடுகளில் ஏற்ற ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள்

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன.
    • சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    திருப்பூர்:

    நாட்டின் 76-வது சுதந்திர தினம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியேற்றி நாட்டு மக்களின் இணைப்பை மேலும் வலுவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணிகள் மற்றும் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பனியன் நகரமான திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் தேசிய கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    தற்போது 76வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து பொதுமக்கள் தேசிய கொடிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சில நிறுவனங்களில் மட்டும் தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகின்றன.

    வட மாநிலங்களில் இருந்து காகிதம் மற்றும் பாலியஸ்டர் துணி கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இருப்பினும் காட்டன் துணி கொடிகள் உற்பத்தி திருப்பூர்-கோவையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் வரப்பெற்று திருப்பூர், கோவை நிறுவனங்களில் உற்பத்தி மும்முரமாக நடக்கிறது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன. ஆர்டர்கள் கொடுத்தவர்களுக்கு தேசிய கொடிகளை தயாரித்து கொடுக்க தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். ஆர்டர்களின் பேரில் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகள் உடனுக்குடன் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தேசிய கொடிகள் இன்னும் 2 நாட்களில் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதுவரை 20 லட்சம் கொடிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

    திருப்பூர் பழைய பேருந்துநிலையத்தை சேர்ந்த கொடி உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-

    நாங்கள் 30 ஆண்டு காலமாக கொடி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம். கட்சிக்கொடி, தேசியக்கொடி, பதாகைகள், பேட்ஜ், தொப்பி, டீசர்ட் மற்றும் சின்னம் பொறித்த மப்ளர் உள்ளிட்டவைகளை தயாரித்து வழங்குகிறோம். கடந்த ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் 3 நாட்கள் தேசிய கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    இதனால் கடந்த ஆண்டு தேசியக்கொடிக்கான ஆர்டர்கள் பல மடங்கு வந்தது. எப்போதும் பிரதானமாக நாங்கள் இதனை செய்வோம். ஆனால் எங்களுக்கு பல லட்சம் எண்ணிக்கையில் கடந்த ஆண்டுதான் ஆர்டர்கள் வந்தன. இதனால் பின்னலாடை நிறுவனங்களும் கொடி உற்பத்தியில் ஈடுபட்டன. அனைவரும் தன்னெழுச்சியாக தேசிய கொடிகள் தயாரிக்க ஆர்டர் வழங்கினர். அது போல் இந்த ஆண்டும் சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் இந்த ஆண்டும் ஆர்டர்கள் வந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட குறைவுதான். பெரும்பாலான பொதுமக்கள் கடந்த ஆண்டே தேசிய கொடிகளை வாங்கினர். 3 நாட்கள் ஏற்றிய பிறகு அதனை அவிழ்த்து பத்திரமாக வீட்டில் வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் பலர் 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்றி விட்டு அதனை அவிழ்த்து வீட்டில் பத்திரமாக வைத்தனர்.

    சிலர் வீடுகளில் கழற்றாமல் அப்படியே விட்டனர். இதனால் அவர்கள் தேசிய கொடிகளை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அது போல் தேசிய கொடிகள் அழுக்கு படிந்து இருக்கக்கூடாது என்பதால் இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் இருந்து புதிய கொடிகளுக்கான ஆர்டர்கள் வந்துள்ளன. அவற்றை தயாரித்து கொடுத்து வருகிறோம். 16க்கு 20, 12க்கு 18, 18க்கு 27 இன்ச் நீளம் ஆகிய அளவுகளில் தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகிறது. அரசு விதிமுறையின்படி ஒவ்வொருவர் விரும்பும் அளவுகளில் ரூ.20 முதல் ரூ.200 வரை கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிலர் கூறும்போது, கொரோனா தொற்றின்போது, முகக்கவசம் உள்ளிட்டவை செய்வதற்கு ஆர்டர் குவிந்தது போல் கடந்த ஆண்டு 75-வது சுதந்திர தினம் மூலம் தேசிய கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் குவிந்தன. பல பின்னலாடை நிறுவனங்கள் 30 லட்சம் வரை தேசியகொடிகள் தயாரிக்க ஆர்டர் பெற்று தயாரித்து அனுப்பப்பட்டன.

    பெரும்பாலான பொதுமக்கள் கடந்த ஆண்டே தேசிய கொடிகள் வாங்கி விட்டதால் இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே தேசிய கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் வந்துள்ளன. இதனால் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன என்றார். பனியன் நிறுவனங்கள் மட்டுமின்றி தபால் நிலையங்கள், மகளிர் சுய உதவிக்குழுவின் விற்பனை மையங்கள் மற்றும் கடைகள், சாலையோர கடைகள் என பல இடங்களிலும் தேசியக்கொடி விற்பனை நடந்து வருவதால் திருப்பூரில் தேசிய கொடிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    Next Story
    ×