search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டி.என்.ஏ., பரிசோதனையில் சிக்காமல் இருக்க 2 வயது குழந்தை கொலை: தாயுடன் சேர்ந்து கள்ளக்காதலன் வெறிச்செயல்
    X

    டி.என்.ஏ., பரிசோதனையில் சிக்காமல் இருக்க 2 வயது குழந்தை கொலை: தாயுடன் சேர்ந்து கள்ளக்காதலன் வெறிச்செயல்

    • கடந்த 19-ந்தேதி 2 வயதான குழந்தை தினேஷ் அங்குள்ள அண்டா தண்ணீரில் திடீரென்று பிணமாக மிதந்தான்.
    • தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரித்தபோது, தினேஷ் அண்டாவுக்குள் தவறி விழுந்து இறந்து விட்டதாக அனிதா கூறியுள்ளார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடத்தை அடுத்த முண்டுவேலம்பட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 22). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அனிதா (20) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதனால் அனிதா கர்ப்பமானார்.

    அதன்பின்னர் அனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது அனிதாவுக்கு வயது 17 என்பதால் போலீசார் விசாரித்து மோகன்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தை பிறந்த பின்னர் அந்த குழந்தைக்கு தினேஷ் என்று பெயர் வைத்து அனிதா வளர்த்து வந்தார்.

    கடந்த 19-ந்தேதி 2 வயதான குழந்தை தினேஷ் அங்குள்ள அண்டா தண்ணீரில் திடீரென்று பிணமாக மிதந்தான். தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரித்தபோது, தினேஷ் அண்டாவுக்குள் தவறி விழுந்து இறந்து விட்டதாக அனிதா கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் குழந்தை தினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அனிதா குடியிருந்த வீட்டின் அருகில் வசித்த ஒருவர், குழந்தை தினேஷ் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அனிதாவுக்கும், அவளுடைய கள்ளக்காதலன் மோகன்ராஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது (பொறுப்பு) அனிதாவையும், கள்ளக்காதலன் மோகன்ராஜையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தார். விசாரணையில் 2பேரும் சேர்ந்து குழந்தை தினேசை கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் குழந்தையை கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-

    மோகன்ராஜூடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக அனிதா கர்ப்பமான நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தினேஷ் என்று பெயர் வைத்து அனிதா வளர்த்து வந்தார்.

    இந்தநிலையில் தனது குழந்தையுடன் அடிக்கடி அனிதா உடுமலை பகுதிக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவருடன் அனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. அதன்பின்னர் அனிதா, அவரிடம் தனக்கு குழந்தை இருப்பதை கூறி அவரை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பின்னர் அனிதா தனது குழந்தை தினேசுடன் உடுமலையில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அனிதா 2-வதாக கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து பிரவசத்திற்காக முண்டுவேலம்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் அவர் உடுமலை போகாமல் முண்டுவேலம்பட்டியில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அப்போது மறுபடியும் தனது காதலன் மோகன்ராஜூடன் அனிதாவுக்கு தொடர்பு ஏற்பட்டு ஒன்றாக இருந்துள்ளனர்.

    இந்தநிலையில் மோகன்ராஜ் மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் அனிதாவும், மோகன்ராஜூம் அச்சத்தில் இருந்துள்ளனர். குழந்தை தினேசிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து, குழந்தையை கொல்ல அனிதாவும், மோகன்ராஜூம் முடிவு செய்துள்ளனர். அந்த திட்டத்தை நிறைவேற்ற கள்ளக்காதலன் மோகன்ராஜை தான் தங்கி இருந்த வீட்டிற்கு அனிதா வரவழைத்துள்ளார். அங்கு அவர் வந்ததும் குழந்தை தினேசை கழுத்தை நெரித்து கொன்று, உடலை அண்டாவுக்குள் போட்டு விட்டு, குழந்தை அண்டாவில் தவறி விழுந்து இறந்ததாக நாடகம் ஆடியது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து அனிதா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்ததுடன், தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×