search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விசாகப்பட்டினம்-கோபால்பூர் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு கரையை கடக்கிறது
    X

    விசாகப்பட்டினம்-கோபால்பூர் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு கரையை கடக்கிறது

    • 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று காலையில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.

    இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

    இது மேலும் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து இன்று நள்ளிரவு களிங்கப்பட்டிணம் அருகே விசாகப்பட்டினம்-கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும. மேலும் வலுவான தரைக்காற்று 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் 3-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரி கடல் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடைஇடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×