search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விரைவில் நான் தமிழில் பேசுவேன்... கவர்னர் ஆர்.என்.ரவி
    X

    விரைவில் நான் தமிழில் பேசுவேன்... கவர்னர் ஆர்.என்.ரவி

    • உலகத்தின் மிக முக்கியமான முடிவுகளில் இந்தியாவின் பங்கு முக்கியமாக உள்ளது.
    • உலகின் வேகமாக வளர்ந்துவரக்கூடிய பொருளாதாரம் நாடுகளில் இந்திய முன்னணியில் இருக்கின்றது.

    சென்னை:

    தமிழ்நாடு, இந்தி சாகித்ய அகாடமி மற்றும் டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி இணைந்து ஒருநாள் தேசிய கருத்தரங்கு மற்றும் விருது வழங்கும் விழாவை நடத்தியது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி அரங்கில் விழா நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசியதாவது:-

    "தமிழ் பழமையான மொழி, தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும். அதுவே எனது விருப்பமாகும். ஒரு நாள் அதுபோல பேசுவேன்" என தமிழில் பேசினார். மேலும் அவர் பேசியதாவது:-

    தமிழ் இனிமையான மொழி, தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் தொடர்பு கொண்டுள்ளேன், தமிழ் பட்டய படிப்பை பல்கலையில் தொடங்கவேண்டுமென கேட்டுள்ளேன்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழை கற்றுக்கொள்கிறேன். நான் தொடக்க நிலையில் தான் இருக்கின்றேன். தமிழ் செய்தித்தாள்களை படிக்கின்றேன். தமிழில் பேசினால் புரிகிறது. பேசுவது சிரமமாக உள்ளது. ஒரு நாள் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன். என் காது கேட்கும் தூரத்தில் யாராவது தமிழில் பேசினால் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    சுதந்திரத்திற்கு பின்பாக நாம் போதுமானதை செய்யவில்லை, அப்போது இந்தியா 6-வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. அதை தொடர்ந்து 60 ஆண்டுகளில் 11-வது இடத்திற்கு வந்து விட்டோம். 65 ஆண்டுகளாக பின்னோக்கி சென்று விட்டோம். நமது நாட்டின் பலம் தவிர்க்கப்பட்டது. நாம் வறுமை ஒழிப்பை குறித்து பேசினோம். கல்வியை பரப்பினோம். ஆனால் இன்னும் படிக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள்.

    உலகம் மாறி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது நாட்டை பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. பொருளாதாரத்தையும் நிர்வாகத்தையும் எப்படி சரி செய்ய வேண்டும் என்று பலரும் நமக்கு பாடம் எடுத்தார்கள். ஆனால் இன்று உலகம் நம்மை பார்க்கிறது.

    உலகத்தின் மிக முக்கியமான முடிவுகளில் இந்தியாவின் பங்கு முக்கியமாக உள்ளது. உலகின் வேகமாக வளர்ந்துவரக்கூடிய பொருளாதாரம் நாடுகளில் இந்திய முன்னணியில் இருக்கின்றது. இந்தியா 7 சதவீதம் வளர்ந்து இருக்கின்றது.

    300, 400 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்தது. இன்றோ 1,25,000 புத்தாக்க நிறுவனங்கள் இருக்கிறது. அவற்றில் 20 சதவீத நிறுவனங்கள் யூனிகான் நிறுவனங்கள். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.

    இரண்டாம் உலகப் போருக்கு பின்பு ராணுவ பலம் மற்றும் வளங்களை கொண்டு நாடுகள் வளர்ச்சியடைந்தது. ரஷியா மற்றும் உக்ரைனில் மட்டும் போர் நடைபெறவில்லை. சிறு சிறு போர்கள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று உலகம் அச்சத்தில் வாழுகின்றது. அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. உலகம் வெப்பமயமாதலால் பாதிக்கப்பட்டுள்ளது.



    பல மில்லியன் மக்கள் இன்றும் உலகில் வெறும் வயிற்றுடன் உறங்க செல்கின்றனர். கடந்த ஆண்டு ஜி20 நாடுகள் கூட்டத்தை நாம் தலைமை தாங்கினோம். 85 சதவீத உலக ஜி.டி.பி. வைத்திருக்கக்கூடிய இந்த நாடுகள் பட்டியலில் மிகப்பெரிய அளவிலாக உள்ள ஆப்பிரிக்க கண்டமே இடம்பெறவில்லை. நாம் தான் ஆப்பிரிக்காவை ஜி20 அமைப்பிற்குள் கொண்டு வந்தோம்.

    நாம் மரங்களையும் விலங்குகளையும் வணங்குகின்றோம். மற்றவர்கள் அதை கேட்பார்கள். ஆனால் நாம் அதனை ஆத்மாவாக பார்க்கின்றோம். எப்படி இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே குடும்பம். அனைத்து உயிரினங்களும் ஒன்று.

    இந்த ஒருங்கிணைந்த தத்துவமே ஒருங்கிணைந்த பார்வையே நம் பாரதத்தின் பாரம்பரியம். ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வோம்.

    'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லித் தந்தனர். ஆனால் அதை நாம் வெளியே கொண்டு செல்லவில்லை. ராணுவ பலம், ஆன்மீக பலம் அனைத்தும் மூலமாக வெளியே கொண்டு செல்ல வேண்டும்.

    மாணவர்கள் பல்வேறு துறைகளை தேர்வு செய்திருக்கலாம். உங்களுக்காக உங்கள் குடும்பத்திற்காக மட்டுமல்லாமல் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் பாடுபடுங்கள். உங்கள் துறையில் சிறந்து விளங்குகள். இதுவே சரியான நேரம்.

    பெண்கள் முன்னுக்கு வராமல் நாடு வளர்ச்சி அடையாது. வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன, யாரும் தேங்கி விட வேண்டாம். முன்னேறிச் செல்லுங்கள். இந்த நாட்டுக்காக என்ன செய்தேன் என்று யோசித்துப் பாருங்கள்.

    எதிர்மறை எண்ணங்கள் வருவதை தவிருங்கள். பலர் மொழிகளாலும் மதங்களாலும் பிரிவினை உண்டாக்குவார்கள். நாம் அதில் பாதிக்கப்படக்கூடாது. அந்த எதிர்மறை எண்ணங்களுக்கு எதிராக போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தமிழ்நாடு இந்திய சாகித்ய அகாடமி செயலாளர் ஜவகர் காரூண், முன்னாள் துணைவேந்தர் நிர்மலா மவுரியா, வைஷ்ணவ் கல்லூரி முதல்வர் சந்தோஷ்பாபு, செயலாளர் அசோக்குமார் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×