என் மலர்
தமிழ்நாடு

கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு: பள்ளி தாளாளர்-முதல்வருக்கு நிபந்தனை ஜாமின்

- வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
- பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற எல்.கே.ஜி. மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக அவரது தந்தை புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், சந்தேகம் மரணம், பணியில் அஜாக்கிரதையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல், ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி மூவரும் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் விழுப்புரத்தில் பெய்த கனமழையின் காரணமாக தொட்டி பராமரிக்கப்படாமல் இருந்ததால் குழந்தை வழி மாறி சென்றதன் காரணமாக இந்த நிகழ்வு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளியின் தாளாளர், முதல்வர், வகுப்பு ஆசிரியர் ஆகிய 3 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிபதி, மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார்.
மேலும், பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.