search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் ஜி20 கூட்டம் தொடங்கியது- அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து விவாதம்
    X

    ஜி20 மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு பிரதிநிதிகளை படத்தில் காணலாம்.

    புதுவையில் ஜி20 கூட்டம் தொடங்கியது- அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து விவாதம்

    • ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டல், ரிசார்ட்டிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    புதுச்சேரி:

    இந்தியா ஜி20 நாடுகளுக்கு தலைமை பொறுப்பேற்றுள்ளது. இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால் நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடந்து வருகிறது.

    இதையொட்டி புதுவை மாநிலத்தில் எஸ்20 எனப்படும் அறிவியல்-20 தொடக்கநிலை கூட்டம் இன்று நடந்தது. புதுவை மரப்பாலம் 100 அடி சாலையில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பிலான இக்கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் அசுதோஷ் சர்மா தலைமை வகித்தார். ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், கொரியா, ரஷியா, அமெரிக்கா, டர்கி, இங்கிலாந்து, இந்தோனேஷியா ஆகிய 11 நாடுகளில் இருந்து 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    மேலும் இந்தியாவில் உள்ள பல ஆராய்ச்சி, கல்வி நிறுவனங்களை சேர்ந்த 50 வல்லுநர்களும் பங்கேற்றனர். மாற்று எரிசக்தி, உலகளாவிய சுகாதார வசதிகள், அறிவியலுடன் சமுதாயம், கலாச்சாரத்தை இணைப்பதற்கான திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

    அறிவியலில் ஒருங்கிணைந்த நிரந்தர வளர்ச்சிக்கு வழி நெறிமுறை, திட்டங்களை வகுப்பது குறித்தும் ஆராயப்பட்டது. மாலை 3.30 மணியுடன் மாநாடு நிறைவு பெறுகிறது. தொடர்ந்து மாநாட்டு விவாதங்கள், தீர்மானங்கள் குறித்து நிருபர்களிடம் விளக்குகின்றனர்.

    கூட்டம் நடைபெறும் மரப்பாலம் சுகன்யா கன்வென்சன் சென்டரை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், சுகன்யா கன்வென்சன் சென்டரை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டல், ரிசார்ட்டிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நகர் பகுதி முழுவதும் போலீசார் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாநிலத்தின் எல்லை பகுதியிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். புதுவைக்கு வந்துள்ள ஜி20 பிரதிநிதிகள் நாளை ஆரோவில் செல்கின்றனர். ஆரோவில்லை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

    Next Story
    ×