search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Latest World News"

    • இஸ்மாயில் ஹனியே சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவது எங்கள் கடமை.
    • கடுமையான தண்டனையை பெறுவதற்கு இஸ்ரேல் களம் அமைத்துள்ளது என்றார்.

    தெக்ரான்:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்து உள்ளது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள வீட்டில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.

    அவரை இஸ்ரேல் கொலை செய்துள்ளது என்று ஈரான், ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளன. ஈரான் நாட்டுக்குள்ளே ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது. அந்நாட்டு அரசை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. இதற்கு இஸ்ரேலை பழி வாங்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி காமேனி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும் படி ராணுவ படைகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் அயோதுல்லா அலி காமேனி தலைமையில் நடந்தது. இதில் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

    போர் விரிவடையும் பட்சத்தில், இஸ்ரேல் தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகிய இரண்டிற்கும் திட்டங்களை தயாரிக்குமாறு ஈரானின் புரட்சிகர காவலர்கள் மற்றும் ராணுவ தளபதிகளை அறிவுறுத்தினார். மேலும் அயோதுல்லா அலி காமேனி வெளியிட்ட அறிக்கையில், இஸ்மாயில் ஹனியே சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவது எங்கள் கடமை. ஏனென்றால் இது எங்கள் நாட்டில் நடந்தது. கடுமையான தண்டனையை பெறுவதற்கு இஸ்ரேல் களம் அமைத்துள்ளது என்றார்.

    இது குறித்து ஈரான் அதிகாரிகள் கூறும்போது, இஸ்ரேல் மீது ஈரான் எவ்வளவு வலிமையுடன் தாக்குதல் நடத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஹைபாவிற்கு அருகிலுள்ள ராணுவ இலக்குகள் மீது டிரோன்கள், ஏவுகணைகளின் கூட்டுத் தாக்குதலை நடத்த ராணுவத் தளபதிகள் பரிசீலித்து வருகின்றனர்.

    அதே வேளையில் பொதுமக்கள் மீது தாக்குதலை தவிர்ப்பது எங்களது குறிக்கோளாக இருக்கும். மேலும் ஈரான்,ஏமன், சிரியா, ஈராக் உள்ளிட்ட நட்பு நாட்டுப் படைகளுடன் இணைந்து மற்ற முனைகளில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை நடத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    ஈரான் மீது இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ தாக்குதல் நடத்தினால் போரை விரிவுப்படுத்தும் படியும், அதற்கேற்ப தயாராகும்படியும் படைகளுக்கு காமினி உத்தரவிட்டு உள்ளார் என்றார்.

    ×