search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடிச் செவ்வாய் தேடிக்குளி
    X

    ஆடிச் செவ்வாய் தேடிக்குளி

    • புருவத்தின் மத்தியிலிருந்து வகிடு வரை பல்வேறு நிறங்களில் குங்குமத் திலகங்கள் இட்டுக் கொள்வார்கள்.
    • வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், இருபத்தைந்து காசு வைத்து கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    ஒவ்வொரு ஆடி மாத செவ்வாய்க்கிழமையையும் ஒரு திருநாளாகக் கொண்டாடுவது தென்பாண்டி நாட்டின் தனிச்சிறப்பு.

    அன்று கன்னிப் பெண்கள் கூடி ஊர்வலமாய் நதிக்கோ, வாய்க்காலுக்கோ, குளத்திற்கோ சென்று தெய்வ வழிபாடு செய்வார்கள்.

    கண் நிறைந்த கணவனைப் பெறுவதற்குச் செய்யப்படும் நோன்பு இது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

    பொழுது விடியுமுன்பே மணமாகாத பல பெண்கள் எல்லோரும் தெருக்கோடியில் கூடுவார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பனைநார் ஓலைப்பெட்டி அல்லது பிரம்புப் பெட்டி இருக்கும். இப்பெட்டியை பொடகாப் பொட்டி என்று பாண்டி நாட்டில் கூறுவார்கள்.

    அதில் மாற்றுப் பாவாடை, சட்டை, மஞ்சள், பல்வேறு நிறங்களில் குங்குமம், நாவற்பழம், வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவை இருக்கும். இவை தவிர நல்லெண்ணெய், திரிநூல், சூடம், தீப்பெட்டியும் கூட இருப்பதுண்டு.

    எல்லோரும் சேர்ந்தவுடன் வரிசையாய் தெரு அடைக்க நின்று கொண்டு, ஒரு பாட்டைப் பாடிக் கொண்டு நதிக்கரைக்கோ, வாய்க்காலுக்கோ அல்லது குளக்கரைக்கோ செல்வார்கள்.

    எளிய தமிழில் பாடப்படும் அந்தப் பாட்டு அவ்வவ்வூர் தெய்வங்கள், நதிகளின் பேர்களையும் சேர்த்து அமைந்திருக்கும். எல்லோரும் ஒன்று கூடிச் சொல்லும்போது மிக அழகாயிருக்கும்.

    ஆற்றங்கரையை அடைந்ததும் கன்னிப்பெண்கள் எல்லோரும் நன்றாய்ப் பச்சை மஞ்சளைத் தேய்த்துக் குளித்து விட்டுப் புத்தாடை புனைவார்கள்.

    புருவத்தின் மத்தியிலிருந்து வகிடு வரை பல்வேறு நிறங்களில் குங்குமத் திலகங்கள் இட்டுக் கொள்வார்கள். பாதங்களில் நலுங்கு மஞ்சளைப் பூசிக் கொண்டு பின் அருகிலுள்ள அரசடிப் பிள்ளையாரையோ அல்லது ஆலயத்திலுள்ள மூர்த்தியையோ கண்டு, நல்ல கணவனை அளிக்குமாறு பிரார்த்தித்து வழிபடுவார்கள்.

    பின்பு தாங்கள் கொண்டு வந்த வாசனை மலர்களால் அர்ச்சித்து விட்டு, நாகப்பழத்தை நிவேதனம் செய்வார்கள். சூடத்தைக் கொளுத்தி வழிபட்டு நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள்.

    மீண்டும் எல்லோரும் ஒன்று கூடி வரிசையாய் நின்று பாடலைப் பாடிக் கொண்டு திரும்புவார்கள்.

    வீட்டிற்குச் சென்றதும் மஞ்சப் பொங்கல் தாளகம் கலந்து சாப்பிடுவது வழக்கம். துருவிய தேங்காயும் வெல்லமும் கூடச் சேர்த்துக் கொள்வதுண்டு. சில வீடுகளில் பலவித வடாம் பொரித்துப் போடுவதும் உண்டு.

    கடைசி ஆடிச் செவ்வாய் அன்று வருடத்திற்கொருமுறை கிராமத்தில் உள்ள வசதி படைத்த வீட்டார்கள் முறைப்படி ஒவ்வொருவராக எல்லாக் குழந்தைகளையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று அவர்களை தெய்வமாக வழிபட்டு வடை, பாயாசத்துடன் விருந்தளிப்பர். சிலர் புதிய பாவாடை, சட்டைகள் வாங்கிக் கொடுப்பதுண்டு. அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், இருபத்தைந்து காசு வைத்து கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    Next Story
    ×